வெள்ளி, 23 நவம்பர், 2018

இன்றைய உற்பத்தி முறையில்
சாதி உற்பத்தியின் அடித்தளமாக இருக்கிறதா?
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
சாதி பற்றிய தமது கருத்தில் எஃகு போன்று
உறுதியாக இருக்கிறார் அண்ணன் தியாகு அவர்கள்.
1) சாதி என்பது கருத்து மட்டுமன்று; பொருளும் ஆகும்.
2) சாதிக்கு பொருளியல் அடிப்படை உண்டு.
3) சாதியே பொருண்மிய அடிப்படையாக உள்ளது.
என்ற அண்ணன் தியாகு அவர்களின் கருத்துடன்
முற்றிலுமாக முரண்படுகிறேன்.

1980களில் பின்நவீனத்துவம் இந்திய சிந்தனைப்
பரப்பை பெரும் ஆரவாரத்துடன் ஆக்கிரமித்தது.
சகல தத்துவங்களும் கோட்பாடுகளும்
மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
என்றது. மார்க்சியம் ,பெரியாரியம், சாதியம்
ஆகியவற்றை பின்நவீனத்துவம் மறுவாசிப்புச்
செய்தது. அவர்களின் மொழியில், கட்டுடைத்தது.

இதன் நிகர விளைவாக சாதி என்பது வெல்லற்கரியது
என்ற பிம்பத்தை பின்நவீனத்துவம் கட்டி அமைத்தது.
சாதியை அதன் உள்ளார்ந்த வலிமையை விட, ஆயிரம்
மடங்கு வலிமை மிகுந்த ஒன்றாக உருப்பெருக்கிக்
காட்டியது பின்நவீனத்துவம்.

குட்டி முதலாளித்துவச் சிந்தனையாளர்கள்
மட்டுமின்றி, மார்க்சிய லெனினியச்
சிந்தனையாளர்களும் இதன் தாக்கத்தில் இருந்து
தப்பவில்லை.பின்நவீனத்துவம் கட்டுடைத்துக்
காட்டிய, சாதி பற்றிய மிகை மதிப்பீட்டையே
தங்களின் புதிய புரிதலாகக் காட்டினர்  லிபரேஷன்
குழுவின் தலைவரான வினோத் மிஸ்ரா,
மார்க்சிஸ்ட் தலைவர் யெச்சூரி ஆகியோர்..

இதைத் தொடர்ந்து சாதி என்பது மேற்கட்டுமானம்
என்ற மரபான மார்க்சியப் புரிதல் செல்வாக்கிழந்தது.
அ) சாதி வலுவான பொருண்மிய அடிப்படை உடையது
ஆ) சாதி என்பது மேற்கட்டுமானம் அல்ல, அடித்தளம்
இ) காரல் மார்க்ஸ் கூறிய வர்க்கம் என்பது
இந்தியாவில் சாதிதான்
ஈ) மார்க்சியத்தால் இதுவரை  சாதியை வெல்ல
முடியவில்லை; இனிமேலும் முடியாது
ஆகிய கருத்துக்கள் மார்க்சியம் மற்றும் பிற
சிந்தனைத் தளங்களிலும் செல்வாக்குப் பெற்றன.
சமூகத்தின் இன்றைய பொதுப்புத்தியையும் 
சாதி குறித்த மிகையான பிம்பமே ஆட்கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில்தான் முதிர்ந்த மார்க்சிய
சிந்தனையாளர் அண்ணன் தியாகு அவர்களுடன்
இந்த விவாதம் நடைபெறுகிறது.

தற்போது இந்த 2018ஆம் ஆண்டில் இந்திய சமூகத்தில்
நிலவும் உற்பத்தி முறை ஏகாதிபத்தியச் சார்பு
முதலாளித்துவ உற்பத்திமுறை. இந்த முறையிலான
பொருள் உற்பத்தியில், சாதி என்ன பாத்திரம்
வகிக்கிறது? ஒன்றும் இல்லை என்பது கண்கூடு.
இன்றைய உற்பத்தி முறையின் அடித்தளமாக
சாதி இருக்கிறது என்போர், அது எங்ஙனம் உற்பத்தியின்
அடித்தளமாக இருக்கிறது என்பதைக் கூற வேண்டும்.

இன்று சகல தொழில்களுக்கும் மின்சாரமே அடிப்படை.
ஆனால் மார்க்ஸ் (1818-1883) எங்கல்ஸ் (1820-1895) காலத்தில்
மின்சார விளக்குகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மார்க்சும்
எங்கல்சும் வாழ்ந்த லண்டன் மாநகரில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மின்சார விளக்குகள் நடைமுறைக்கு
வரவில்லை.

எடுத்துக்காட்டாக மின்சார உற்பத்தித்  துறையை
எடுத்துக் கொள்வோம். பாரத மிகுமின் நிறுவனம்
எனப்படும் BHEL நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுவோம்.
இந்நிறுவனம் மேற்கொள்ளும் மின்சார உற்பத்தியில்
சாதியானது எவ்வாறு உற்பத்தியின் அடித்தளமாக
உள்ளது என்பதை அண்ணன் தியாகு அவர்கள்
விளக்க வேண்டும். (வேறு எடுத்துக்காட்டு மூலமும்
விளக்கலாம்).

சாதி என்பது ஒரு சமூகக் கட்டுமானம் என்பதன்
பொருள் சமூகத்தில் உயிர்ப்புடன் இருக்கும்
கட்டுமானம் என்று பொருள். சமூகக் கட்டுமானம்
என்றாலே வலுவான பொருளியல் அடிப்படை
கொண்டது என்று பொருள் கொள்ளக் கூடாது.
பொருளியல் அடித்தளம் இல்லாமலும் வெறும்
மேற்கட்டுமானத் தளத்தில் பண்பாட்டுத் தளத்தில்
ஒரு சமூகம் தேவைக்கேற்ற ஒரு கட்டுமானத்தை
எழுப்பிக் கொள்ளும். அப்படித்தான் நிலவுடைமைச்
சமூகக் காலத்தில், அன்றைய ஆளும் வர்க்கம்
சாதியத்தைக் கட்டமைத்தது.

பல்வேறு பழங்குடி இன அரசுகளை வெற்றி கொண்டே
நிலவுடைமைச் சமூகம் கட்டப்பட்டது. அப்போது
நிலவுடைமைப் பேரரசில் இணைக்கப்பட்ட
பழங்குடிகளின் பண்பாட்டை  இயன்ற அளவு
தக்க வைக்க வேண்டிய அவசியம் அன்றைய
ஆளும் வர்க்கத்திற்கு இருந்தது. அத்தோடு பேரரசில்
இணைக்கப்பட்ட பழங்குடிச் சமூகங்களின்
ஒப்பீட்டு அந்தஸ்தை (relative superiority) உறுதி செய்யவுமே
தொடக்க காலத்தில் சாதியம் தோற்றுவிக்கப்பட்டது.
இதற்கு பொருளியல் அடித்தளம் தேவைப்படவில்லை.
காலப்போக்கில் சாதியம் சமூகத்தில் தீமைகளின்
திரட்சியாய் மாறியது.நிற்க.

மார்க்சும் எங்கல்சும் கூறிய பொருளியல் அடித்தளமே
மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் என்பது
ஒரு சமூகவியல் விதி (sociological law). சமூகவியல்
விதிகள்  இயற்பியல் விதிகள் போன்று மிகவும்
கறாராகப் பொருந்துபவை அல்ல. பைனாமியல்
தேற்றம் போன்றோ, பாயில் விதி, சார்லஸ் விதி
போன்றோ சமூகவியல் விதிகளைப் பொருத்திப்
பார்ப்பது யாந்திரிகமான புரிதல் ஆகும். எனவே
சாதிக்கு ஒரு பொருளியல் அடிப்படை இருக்க
வேண்டிய அவசியமில்லை. அது வெறும் பண்பாடு
சார்ந்த மேற்கட்டுமானம்தான்.

எனவே சாதியை மிகைமதிப்பீடு (over estimate)
செய்வதைத் தவிர்ப்போம். இதன் பொருள் சாதியை
ஒரு மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல
நசுக்கி விடலாம் என்பதல்ல.
*****************************************************       
தோழர் பாஸ்கர் விசுவநாதன் முத்து அவர்களுக்கு,
---------------------------------------------------------------------------------------
தங்களின் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்து
தங்களின் பிறழ்புரிதலைச் சுட்டிக்காட்டுகிறது
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய
தத்துவங்களைப் போன்றதன்று மார்க்சியம்.
இந்தியத் தத்துவஞான வரையறைப்படி மார்க்சியம்
என்பது ஒரு தரிசனம் ஆகும். இங்கு தரிசனம்
என்பதற்கு சுவாமி தரிசனம் என்பது போலப்
பொருள் கொள்ளக் கூடாது. தரிசனம் என்றால் 
மக்களுக்கு விடுதலை தரும் தத்துவம் என்று பொருள்.

நியூட்டனின் இயற்பியலை உலகம் என்றோ கடந்து
விட்டது. மார்க்ஸ் எங்கல்சின் படைப்புகளில்
குறிப்பாக பொருள்முதல்வாதத்தில் நியூட்டனின்
இயற்பியல் வரை மட்டுமே  உள்வாங்கப் பட்டுள்ளது.
அதையும் தாண்டி 20,21ஆம் நூற்றாண்டின் இயற்பியலை
மார்க்சியத்தில் இணைத்து மார்க்சியத்தைச் செழுமைப்
படுத்தவும், காலத்திற்கு ஏற்றவாறு அதைப் புதுப்பிக்கும்
பணியிலுமே நியூட்டன் அறிவியல் மன்றம் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. எனவே எமது
முன்வைப்புகள் அறிவியல்வாதம் ஆகாது. மேலும்
அவை நியூட்டனின் இயற்பியலும் ஆகாது. அருள்கூர்ந்து
பிறழ்புரிதலைத் தவிர்க்கவும்.     

சாதி என்பது மேற்கட்டுமானம்தான் தோழரே.
இதில் தங்களுக்கு ஒத்த கருத்து இருக்கிறது
என்பதில் மகிழ்ச்சி.

விவசாயம் பெரிதும் முதலாளித்துவமயம்  ஆக்கப்பட்டு
விட்டது. விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், மரபணு
மாற்றப்பட்ட பயிர்கள், வீரிய வித்து ரகங்கள் என
அனைத்து வேளாண்மை இடுபொருட்களும் பன்னாட்டு
நிறுவனங்களின் தயவில் வேளாண்மையை வைத்துள்ளன.
வேளாண்மையே முதலாளித்துவமயம் ஆக்கப்பட்ட
பின்னால், அரைநிலப் பிரபுத்துவ உற்பத்திமுறை
தேய்ந்து கொண்டே வந்து விட்டது. எனினும்
மலைப்பாங்கான இடங்கள், பழங்குடிகள் ஆதிவாசிகள்
வசிக்கும் வனப்பகுதிகள் ஆகியவற்றில் மட்டும் இன்னும்
 பின்தங்கிய உற்பத்திமுறையான அரைநிலப்பிரபுத்துவ
முறை குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளது.
பொதுநீரோட்ட உற்பத்தி முறை என்பது ஏகாதிபத்தியச்
சார்பு முதலாளிய உற்பத்திமுறையே.

சூழலுக்கு ஏற்ப ஏகாதிபத்தியம் தனது
செயல்தந்திரத்தை மாற்றிக் கொள்ளும். இன்று உலக
அளவில் ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்த
நாட்டம் ஆக்கிரமித்து, அதன் பிறகு அந்நாட்டின்
வளங்களைச்  சுரண்ட வேண்டிய நிலை இன்று
காலனியாதிக்க சக்திகளுக்கு இல்லை. வேறு
வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு எஜமான்
மாறியதாலேயே மக்களின் அடிமைத்தனம் நீங்கி
விட்டதாக அர்த்தம் இல்லை. எனவே சுதந்திரம்
என்பது இன்றைய ஏகாதிபத்தியத்தை முறியடித்தால்
மட்டுமே பெற முடியும்.


    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக