ஞாயிறு, 23 மே, 2021

 அறுவைச் சிகிச்சைகளில் மயக்க மருந்தாகப் பயன்படும் குளோராஃபார்ம் 1830 ல் கண்டு பிடிக்கப்பட்டு விட்டாலும் அதை அறுவைச் சிகிச்சைகளின் போது மனிதர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று 1847 ல் உலகுக்கு அறிவித்தவர் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த ஜேம்ஸ் சிம்சன்தான் . குறிப்பாக பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க பெண்களுக்குப் பயன்படுத்தலாம் என்று அவர் அறிவித்ததும் கிறித்துவ மத அமைப்புகளில் இருந்து பெரும் எதிர்ப்பு உருவாகிவிட்டது .

ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியதற்காக பெண் இனத்தின் மீது கடவுள் உருவாக்கியதே பிரசவவலி . அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று கொந்தளித்து விட்டார்கள் . சிம்சன் பலவிதங்களில் அந்த எதிர்ப்பைச் சமாளிக்க முயற்சி செய்தார் .
“ ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஒன்றை உருவி ஏவாளை உருவாக்குவதற்காக கடவுள் செய்த முதல் அறுவைச் சிகிட்சையில் வலி தெரியாமல் இருக்க கடவுளே ஆதாமை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திதான் அந்த செயலைச் செய்து முடித்தார் “ என மதநூல்களில் உள்ளதையே கூறிக் கூடப் பார்த்தார் . கொஞ்சம் ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகள் கூடிக் கொண்டேதான் போயின . சிம்சன் பரிதவித்தார் .
அந்த சூழலில் விக்டோரியா மகாராணி ஓர் அறிவிப்பை வெளியிட்டார் – “ எனது அடுத்த பிரசவத்தில் நான் குளோராஃபார்ம் பயன்படுத்தப் போகிறேன் . “ அவ்வளவுதான் எதிர்ப்புகள் அடங்கிப் போய்விட்டன . மகாராணி வாய் திறந்தார் ; சிம்சனுக்கும் க்ளோரோஃபார்முக்கும் வெற்றி வந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக