ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் 
கடவுள் பற்றிய கொள்கைப் பிரகடனம்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம்,
சீக்கிய மதம், புத்த மதம், சமண மதம் உள்ளிட்ட
உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் கூறுகிற,
மக்களால் வணங்கப்படுகிற கடவுள்
என்பது மொத்தப் பிரபஞ்சத்திலும் இல்லை.
கடவுள் என்பது முற்றிலும் கற்பனையான
ஒன்றே தவிர, உண்மையில் இருப்பது அல்ல.

எல்லா மதங்களிலும் கடவுள் பற்றிய வர்ணனை
அநேகமாக ஒன்றுபோலத்தான் உள்ளது.
கடவுள் எங்கும் நிறைந்து இருப்பவர் (omnipresent),
சர்வ வல்லமை வாய்ந்தவர் (omnipotent), அனைத்தும்
அறிந்தவர் (omniscient), இந்த உலகை, பிரபஞ்சத்தை,
சகல உயிரினங்களையும் படைத்தவர், படைத்தல்
காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும்
புரிபவர், நன்மைக்கு வெகுமதியும் தீமைக்கு
தண்டனையும் தருபவர், அவரே அனைத்தும்
என்பதால்  அவரன்றி ஓரணுவும் அசையாது
என்று சொல்லத் தக்கவர், இம்மை மறுமை
இரண்டையும் படைத்து, மறுமையில் வாழும்
வாழ்க்கையை இம்மையினும்
மேலானதாகப் படைத்தவர். என்று
இவ்வாறாகவும் இன்னும் பலவிதமாகவும்
விதந்து ஓதப்படுகிறவர் கடவுள் என்பதாக
மதங்கள் கூறுகின்றன. அதாவது கடவுளை
மதங்கள் இவ்வாறு வரையறுக்கின்றன.     

இந்த வரையறைக்கு உட்பட்ட கடவுள் என்பது
மொத்தப் பிரபஞ்சத்திலும் எங்கும் இல்லை.
இந்த வரையறைகள் கூறும்  ஆற்றல்கள்
கொண்ட கடவுள் உண்மையில் இல்லாதவர்;
கற்பனையில் உருவாக்கப் பட்டவர். கடவுளின்
செயல்கள் என்று கூறப்படுகிறவை எவற்றையும்
செய்யத்தக்க கடவுள் என்று எவரும் இல்லை.

இந்த உலகையோ பிரபஞ்சத்தையோ
உயிர்களையோ கடவுள் படைக்கவில்லை.
மாறாக மனிதன்தான் கடவுளைத்  தன்
கற்பனையில் படைத்தான்.

கடவுளே இல்லை என்னும்போது, கடவுளின்
மனைவியர், கடவுளின் மகன், மகள். உறவினர்,
கடவுளின் தூதர் ஆகியவையும் கற்பிதங்களே.

பிரபஞ்சத்தின் இயக்கத்திலோ உயிர்களின்
இயக்கத்திலோ கடவுளுக்கு எவ்விதப் பங்கும்
இல்லை. ஏனெனில் இல்லாத கடவுள் எந்த
இயக்கத்திலும் பங்கெடுக்க இயலாது.

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் கடவுளுக்கு
ஒரு பௌதிகத் தன்மை வாய்ந்த இருப்பு
(physical existence) என்பது இல்லவே இல்லை.

சொர்க்கம் நரகம் போன்ற இடங்கள், இம்மை மறுமை
ஆகிய உலகங்கள் மொத்தப் பிரபஞ்சத்திலும்
எங்கும் இல்லை. கோள்கள்,நட்சத்திரங்கள்
மற்றும் பிற வான்பொருட்களின்
சஞ்சாரம்  மனித வாழ்க்கையில் பாதிப்பை
ஏற்படுத்துகிறது என்ற அடிப்படையில் அமைந்த
சோதிடம் முழுவதும் பொய்யே.

பேய் பிசாசுகளும் மொத்தப் பிரபஞ்சத்தில்
எங்கும் இல்லை.

மறுபிறவி, மரணத்திற்குப் பிந்திய வாழ்வு என்பவை
முற்றிலும் பொய்யானவை. உயிர்களின் இறப்போடு
உயிரியல் செயல்பாடுகள் நிரந்தரமாக முடிவடைந்து
விடுகின்றன.

சுருங்கக் கூறின், கடவுள் குறித்து மதங்கள் கூறும்  
எதுவும் உண்மையல்ல  கடவுள் என்று ஒருவர் 
எக்காலத்திலும் இல்லாதபோது, இல்லாத ஒருவரை 
நம்புவது அறிவுடைமை ஆகாது என்று நியூட்டன் 
அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.
**********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக