செவ்வாய், 11 ஜூலை, 2023

 சந்திரயான்-2: உயிருடன் இருக்கும் விக்ரம்

------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன்

நியூட்டன் அறிவியல் மன்றம் 

(அறிவியல் ஒளி அக்டோபர் 2019 இதழில் வெளியானது) 

---------------------------------------------------------------------

அந்த செப்டம்பர் வெள்ளியன்று இரவு உலகமே 

விழித்துக் கொண்டிருந்து சந்திரயான் நிலவில் 

தரைஇறங்குவதைக் காணக் காத்திருந்தது. 

ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில்

தரையிஏங்கும் முன்பே, அதில் இருந்து 

சமிக்ஞைகள் வருவது நின்று விட்டது. 

மென்தரையிறக்கம் (soft landing) நிகழவில்லை, 

விக்ரம் திட்டமிட்ட பாதையை விட்டு 

விலகி விட்டது.     


விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் 

நிகழ்வு 15 நிமிட நிகழ்வு ஆகும். இதை 

15 நிமிட பயங்கரம் என்று இஸ்ரோ தலைவர் 

சிவன் குறிப்பிட்டார்.


நமது பூமிக்கு வளிமண்டலம் (atmosphere) உண்டு. 

ஆனால் சந்திரனுக்கு வளிமண்டலம் எதுவும் 

கிடையாது. அதாவது சந்திரனில் காற்று 

கிடையாது. பொருட்களை எரிய வைக்கும் 

ஆக்சிஜன் கிடையாது. வளிமண்டலம்

உள்ள கோள்களில் இறங்கும் முறை வேறு; 

வளிமண்டலமே இல்லாத சந்திரனில் 

இறங்கும் முறை வேறு.


எதிர்த்திசையில் இயக்கப்படும் ராக்கெட்

(retro rocket firing) என்ற முறையில்தான் 

உயரத்தில் இருந்து கீழே தரையில் 

இறங்க வேண்டும்.


நாம் எந்த திசையில் செல்ல வேண்டுமோ 

அதற்கு எதிர்த்திசையில் ராக்கெட்டை இயக்க 

வேண்டும். அதாவது கீழே இறங்க 

வேண்டுமென்றால் மேல் நோக்கி

ராக்கெட்டை இயக்க வேண்டும்.


தரையிறங்கும் நிகழ்வின் திட்டம் இதுதான்.

விக்ரம் லேண்டர் 30 கிமீ உயரத்தில் இருந்து 

நிலவில் தரையிறங்க வேண்டும்.  

திட்டமிட்டபடி, முதல் 10 நிமிடங்களில்

இது நிகழ்ந்து, உயரம் 7.4 கிமீ ஆகக் குறைந்து 

விட்டது. லேண்டரின் வேகம் இப்போது 

526 கிமீ/மணி.


11 நிமிடம் 8 வினாடிகளில் உயரம் மேலும் 

குறைந்து 5  கிமீ ஆகி விட்டது. இப்போது 

லேண்டரின்  வேகம் 331.2 கிமீ/மணி.


அடுத்த 2 நிமிடத்திற்குள் உயரம் 400 மீட்டராகக்

குறைய வேண்டும். அதன் பிறகு 100 மீட்டராகக் 

குறைந்து, இறுதிக் கட்டத்தில் 10 மீட்டர் 

உயரத்தில் இருந்து கொண்டு கிடைமட்ட 

திசைவேகத்தை பூஜ்யமாக ஆக்கிக் கொண்டு

மென்மையாகத் தரையிறங்க வேண்டும். 

ஆனால் 400 மீட்டர் என்ற கட்டத்தையே

லேண்டர் அடையவில்லை. மாறாக 5 கிமீ   

உயரத்தில் இருந்து 2.1 கிமீ உயரத்துக்கு 

குறைந்து விட்டபோது   விக்ரமில் இருந்து 

சமிக்ஞைகள் வருவது நின்று விட்டது.


ஆக, 15 நிமிடங்களில், 12 நிமிட நேரம் வரை 

எல்லாம் சரியாக இருந்து, அதன் பிறகு 

சிக்கல் நேரிட்டு உள்ளது. அதாவது கடைசி 

மூன்று நிமிடங்களில் எல்லாம்

கைமீறிப் போய் உள்ளது.


ஆயின், லேண்டருக்கு என்ன நேர்ந்திருக்கும்?

ஈர்ப்பு விசைக் கோட்பாட்டின்படி, நிலவின் 

தரையில் இருந்து .2.1 கிமீ உயரத்தில் உள்ள 

லேண்டரை நிலவானது தன்னை நோக்கி ஈர்க்கும்.


லேண்டரின் நிறை  = 1498 கிலோகிராம்

நிலவின் நிறை = 7.342 x 10^22 கிலோகிராம்

இரண்டுக்கும் இடையிலான தூரம் = 2.1 km

நியூட்டனின் எதிர்மறை வர்க்க விதிப்படி

(inverse square law of gravitation), விக்ரமை தன்னை 

நோக்கி இழுக்கும் நிலவின் ஈர்ப்பு விசையை

GMm/r^2 என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடலாம்.


விக்ரமுக்கும் நிலவுக்கும் இடையில் ஈர்ப்பு 

விசை தவிர வேறெந்த விசையும் செயல்பட 

வாய்ப்பில்லை. ஏனெனில் நிலவில் வளிமண்டலம் 

இல்லை. எனவே 1498 கிகி என்ற அற்ப நிறையுள்ள 

விக்ரமை, 10^22 என்ற அளவில் நிறையுள்ள

நிலவானது தன்னைநோக்கி இழுப்பதில் வெற்றி 

அடைந்திருக்கும். எனவே விக்ரமானது நிலவில் 

தரையிறங்குவதைத் தவிர அதாவது 

நிலவின் தரையில் விழுவதைத் தவிர வேறு 

வழியில்லை.


திட்டமிட்டபடி மென்மையான தரையிறக்கம் 

நிகழவில்லை. ஆனாலும் விக்ரம் நிலவின் 

தரையில் விழுந்து கிடக்கிறது.


நாற்காலிக்கு நான்கு கால்கள் இருப்பது போல

விக்ரமுக்கும் நான்கு கால்கள் உண்டு.

ஒரு நாற்காலி தரையில் இருப்பது போல,

அந்த நிலையில் விக்ரம் நிலவின் தரையில்

இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை.


அப்படியானால் தலைகீழாக, நான்கு கால்களும்

மேலே தூக்கிய நிலையில் விக்ரம் விழுந்து 

கிடக்கிறதா?


இல்லை. 180 டிகிரி கோண மாற்றத்துடன் விக்ரம்

விழுந்தால் மட்டுமே கால்கள் மேல்நோக்கிய 

நிலையில் விழ முடியும். அப்படி விழவில்லை 

என்று அனுமானிக்கலாம்.


ஒரு டிரப்பீசியத்தின் வடிவில் விக்ரமின்

உடல் அமைந்துள்ளது. 90 டிகிரிக்குக் குறைவான

ஒரு குறுங்கோணத்தை அது நிலவின் தரையுடன்

ஏற்படுத்திய நிலையில் விழுந்து கிடக்கக் கூடும்.

இஸ்ரோ கூறுவதன்படி, விக்ரம் எந்த நொறுங்கலும்

இல்லாமல், உடையாமல், முழுசாக இருக்கிறது

என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்த நிலையில் விக்ரம் தொடர்ந்து இயங்கத்

(either partially or wholly) தேவையான மின்சக்தி 

கிடைக்க வாய்ப்பு உள்ளது. விக்ரமில் அதன் 

உடலில் பாட்டரி (inbuilt battery) உள்ளது. மேலும் 

அதில் உள்ள சூரியத் தகடுகள்

சூரிய ஒளியைப் பெற வாய்ப்பு உள்ளது. 

எனவே விக்ரம் . உயிருடன் இருக்கும். 

தொடர்ந்து இயங்கும்.


விக்ரம் பிறழ்ந்த நிலையில் இருப்பதால், அதில்

இருந்து ரோவர் வெளிவருவது கடினம். விக்ரமில்

உள்ள சரிவுப் பாதை (ramp) தடங்கலுக்கு

உள்ளாகி இருப்பதால், அது முறையாகத் 

திறக்கப்பட்டு பிரக்யான் ரோவர் வெளியே 

வரும் வாய்ப்பு குறைவு.

 

இப்படி விக்ரம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்

அதிலிருந்து சமிக்ஞைகள் வராவிட்டால், நமக்கு

எந்தப் பயனும் இல்லை. விக்ரமின் ஆயுள்காலம்

பூமிக் கணக்குப்படி 14 நாள்தான். அதன் பிறகு

நிலவில் இருளும் குளிரும் வரத் தொடங்கும்.

சூரியத் தகடுகள் வேலை செய்யாது.விக்ரமின்

ஆயுள் முடிந்து விடும்.


எனவே 14 நாளுக்குள் தகவல் தொடர்பைக்

சீரமைக்க முடிந்தால் நல்லது. இல்லையேல்

லேண்டர் மற்றும் ரோவரால் பயன் இல்லாமல்

போகும்.


நிலவின் தரையில் கிடக்கும் விக்ரம் லேண்டரின்

தெர்மல் இமேஜ் கிடைத்துள்ளது என்கிறார் டாக்டர் சிவன்.

தெர்மல் இமேஜ் (thermal image) என்றால் என்ன?

உங்களிடம் உள்ள காமிராவைக் கொண்டு

தெர்மல் இமேஜ் படங்களை எடுக்க முடியாது.

அதற்கு அகச்சிவப்பு காமிரா (infra red) வேண்டும்.

நம்மிடம் உள்ள வழக்கமான காமிரா (optical camera)

காணத்தக்க ஒளியைப்  (visible light)

பயன்படுத்திப் படம் எடுக்கிறது.

அகச்சிவப்பு (Infra red) காமிராவானது அகச்சிவப்புக் 

கதிர்களைப் பயன்படுத்திப் படங்களை எடுக்கிறது.

காணத்தக்க ஒளி (visible light) என்பது 400 முதல் 700

நானோமீட்டர் என்ற அலைநீளத்தில் இருக்கும்.

அகச்சிவப்பு ஒளி என்பது 700 நானோ மீட்டர் முதல்

1 மில்லி மீட்டர் வரையிலான அலைநீளம் 

கொண்டிருக்கும்.


ஹெர்ஸ்ச்செல் (William Herschel) என்னும் பிரிட்டிஷ் 

வானியலாளர்தான்  அகச்சிவப்புக் கதிர்களைக் 

கண்டு பிடித்தவர்.

ஒரு அகச்சிவப்புப் படம் என்பது பல

வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும்.

வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள் வேறுபடும்.

இவ்வாறு வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள்

வேறுபட்ட படமே அகச்சிவப்புப் படம் ஆகும்.

இதைத்தான் டாக்டர் சிவன் தெர்மல் இமேஜ் என்கிறார்.

நிலவை வெற்றிகரமாகச் சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்த 

படமான தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் 

நிலவின் தரையில் விழுந்து கிடப்பது உறுதி செய்யப் 

பட்டுள்ளது.


தரையிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும் 

மொத்தத்தில் சந்திரயான் திட்டம் வெற்றியே! 

யானை படுத்தாலும்  குதிரை மட்டம் அல்லவா! 

ஆர்பிட்டரின்  ஆயுளை மேலும் ஓராண்டு நீடிக்கச் 

செய்வதன் மூலம்  இந்தப் பின்னடைவை ஈடு கட்டலாம்.

***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக