திங்கள், 12 மார்ச், 2018

ஜெய்னுலாபிதீனுக்கு மறுப்பு!
பெரியார் பரம்பரைப் பணக்காரர்!
அவர் நாத்திகம் பேசி வயிறு வளர்க்கவில்லை!
தலையங்க விமர்சனக் கூட்டத்தில் பேசியது (பகுதி 1)
-----------------------------------------------------------------------------------------------
பெரும் பணக்காரன் என்பதைக் குறிக்க தமிழில்
கோடீஸ்வரன் என்ற சொல் மட்டுமே உள்ளது.
பெரியார் ஒரு கோடீஸ்வரர் என்று சொன்னால் அது
முட்டாள்தனமான ஒரு குறைமதிப்பீடாகவே
(foolish under estimate) இருக்கும்.

ஏனெனில் பெரியார் ஒரு கோடிக்கு மட்டுமல்ல
பல கோடிக்கு அதிபர். நூறு வருஷத்துக்கு முன்பு
1920களில் இருந்த நிலைமை இது. நிலம், நீச்சு,
தோப்பு, துரவு,வீடுகள், மனைகள், கட்டிடங்கள்,
கால்நடைகள், தொழில், வியாபாரம், தங்கம் வெள்ளி,
நகை நட்டு, ரொக்கம் என்று பெருங்கோடீஸ்வரராக
இருந்தவர் பெரியார்.

பெரியார் வாழ்ந்த அக்காலத்தில் தமிழ்நாட்டில்
பெரியாரைப் போன்று பெரும் பணக்காரர்கள்
மிகவும் குறைவே. மொத்தத் தமிழ்நாட்டிலும்
பத்துப்பேர் பரம்பரைப் பணக்காரர்கள் என்று
எடுத்துக் கொண்டால், அந்தப் பத்துப்பேரில்
(Top Ten) பெரியாரும் ஒருவர்.

இதுதான் உண்மை. நிரூபிக்கப்பட்ட உண்மை.
அந்தக் காலத்தில் ஃ போர்பஸ் போன்ற (Forbes)
பத்திரிகையெல்லாம் கிடையாது. இருந்திருந்தால்
ஆண்டு தோறும் பெரும் பணக்காரர்களின் பெயர்களை
வெளியிட்டு அவர்களின் சொத்து மதிப்பையும்
வெளியிட்டு இருக்க வாய்ப்பு உண்டு. அப்போது
பெரியாரின் பெயரும் அந்தப்பட்டியலில் இடம்
பெற்றிருக்கும்.

இவையெல்லாம் இல்லாத காரணத்தால் ஜெய்னுலாபிதீன்
போன்றவர்கள், பெரியார் நாத்திகம் பேசி வயிறு
வளர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யைக்
கூறி வருகின்றனர்.

"கல்யாணத்திற்கு காசு வாங்கினார் பெரியார்,
கருமாதிக்கும் காசு வாங்கினார் பெரியார்" என்று
கூறுகிறார் ஜெய்னுலாபிதீன். இவ்வாறு காசு வாங்கி
அந்தக் காசில் சுகபோக வாழ்வு வாழ்ந்தாரா பெரியார்
என்ற கேள்விக்கும் ஜெய்னுலாபிதீன் பதில் கூற
வேண்டும்.

பெரியார் மிகக் கடுமையான நுகர்வு மறுப்பாளர்.
தம் சொந்த வாழ்வில், சிக்கனத்தை மட்டுமல்ல
கஞ்சத் தனத்தையும்  கடைப்பிடித்தவர் பெரியார்.
நுகர்வு மறுப்பு என்பதில் மகாத்மா காந்திக்கு
நிகரானவர் பெரியார். இதற்கு ஆயிரம் உதாரணங்கள்
அவரின் வாழ்வில் உண்டு.

ஒருமுறை கப்பலில் பயணம் மேற்கொண்ட பெரியார்
மூன்றாம் வகுப்பு டிக்கட் வாங்கி பயணம் செய்தார்.
பெரியாரிடம் உள்ள பணத்துக்கு அவரால் முதல்
வகுப்பில் எக்சிக்யூட்டிவ் பிரிவில் பயணம் செய்ய
முடியும். ஆனால் கடுமையான நுகர்வு மறுப்பாளரான
பெரியார் கூட்டத்தோடு கூட்டமாக மூன்றாம் வகுப்பில்
பயணம் செய்தாரே அன்றி, சுகபோகத்தை நாடவில்லை.

எனவே நாத்திகம் பேசி வயிறு வளர்த்தார் பெரியார்
என்றும் உஞ்ச விருத்திப் பாப்பானைப் போன்றவர்
பெரியார் என்றும் ஜெய்னுலாபிதீன் கூறியது
அப்பட்டமான பொய் மட்டுமல்ல இழிந்த அவதூறும்
ஆகும்.

பெரியார் கடவுள் அல்லர். அவர் விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டவரும் அல்லர். பெரியாரை விமர்சிக்க
ஆயிரம் இடங்கள் உண்டு. ஆனால் ஜெய்னுலாபிதீன்
கூறிய பொய் இகழ்ச்சியுடன் நிராகரிக்கத் தக்கது.
---------------------------------------------------------------------------------------
தொடரும்
அடுத்த பகுதி: ஜெய்னுலாபிதீனைக் கண்டிக்க
மறுக்கும் பெரியாரியக் கோழைகள்!
*********************************************************

ஜெய்னுலாபிதீன் சொல்வது இதைத்தான்:
பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்றெல்லாம்
சொல்வது தவறு.  அவருடைய சர்வீஸ் என்பது
வெறும் PAID SERVICEதான். அவருடைய வேலைக்கு
அவர்  உரிய  காசு வாங்கிக் கொண்டார் என்பதுதான் ஜெய்னுலாபிதீன்
சொல்ல வருவது. இதை மறுக்க ஒரு பெரியாரிஸ்டுக்கும்
துப்பில்லை. பெரியாரிஸ்ட் அல்லாத நான்தான் இதை
மறுக்க வேண்டி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக