திங்கள், 26 மார்ச், 2018

நூல் மதிப்புரை
----------------------------------------------------------------------
நூல்: மார்க்சியப் பார்வையில் அத்வைதம்:
ஓர் எளிய அறிமுகம்.
நூலாசிரியர்: பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------
அத்வைதம் பற்றிப் பல நூல்கள் உள்ளன. ஆனால்
அத்வைதத்தை மார்க்சிய நோக்கில் நின்று
திறனாய்வு செய்யும் நூல் இதுவரை
தமிழிலும் இல்லை, ஆங்கிலத்திலும் இல்லை.
இக்குறையை இந்நூல் போக்கி விடுகிறது.
மார்க்சியப் பார்வையில் அமைந்த அத்வைதத்
திறனாய்வில் முதல் நூல் இதுவே!

கடினமான நீண்ட வாக்கியங்கள், திருகலான
மொழிநடை இவையே தத்துவ நூல்களின்
சாபக்கேடு. அதற்கு மாறாக இந்நூல் தெளிந்த
நீரோடை சலசலத்துச் செல்வது போன்ற
மொழிநடையைக் கொண்டுள்ளது.
நூலை வாசிக்கும் எளிய வாசகர் கூட நூலின் எந்த ஒரு
இடத்திலும் இடறவோ, மீண்டும் மீண்டும்
வாசிக்க வேண்டிய தேவையோ ஏற்படாத ஒரு நூல் இது.


யாரும் பார்க்காதபோது ஆகாசம் நீல நிறமாக
இருக்காது என்ற ஆதிசங்கரரின் புகழ்பெற்ற
முடிவு அறிவியல் ரீதியாகத் தவறானது என்று
இந்நூல் நிரூபித்துள்ளது. நீல நிறம் குறைந்த
அலைநீளம் உள்ளதால் அதிகமாகச்  சிதறும் என்னும்  
ஒளியியல் நிகழ்வின் காரணமாகவே ஆகாயம்
நீல நிறமாக இருக்கிறது என்றும் இதற்கும்
எவர் ஒருவர் ஆகாயத்தைப் பார்ப்பதற்கும்
எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்நூல்
கூறுகிறது. எனவே பொருளின் விதிகளாலேயே
இப்பிரபஞ்சம் இயங்குகிறதேயன்றி, சிந்தனையின்
விதிகளால் அல்ல என்று இந்நூல் தெளிவுறுத்துகிறது.

புறவுலகம் மாயை என்னும் அத்வைதக் கருத்தை
இந்நூல் எளிதாக முறியடித்து விடுகிறது. பூனை
கண்ணை மூடிக்கொண்டாள் பூலோகம் இருண்டு
போகுமா என்ற பழமொழி வெறும் பழமொழி மட்டுமல்ல.
அது மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின்
அனுபவத்தில் கண்டுணர்ந்த அத்வைத எதிர்ப்பு
மகாவாக்கியம் என்று இந்நூல்  சரியாகவே சுட்டுகிறது.

உலகில் வேறு எந்தத் தத்துவஞானியும்  அளிக்காத
சிறப்பை சிந்தனைக்கு அளித்தார் ஆதிசங்கரர்.இதன்
மூலம் அத்வைதம் கருத்துமுதல்வாதத்தின் உச்சம்
என்ற புகழைப் பெற்றது என்று இந்நூல் குறிப்பிடுகிறது.

அத்வைதம் குறித்த நவீனப் பார்வையை இந்நூல்
முன்வைக்கிறது. பெர்க்லி பாதிரியார், ஓஷோ
ஆகியோரின் தத்துவங்களுடன் அத்வைதம் ஒப்பிடப்
படுகிறது. பின்நவீனத்துடன் அத்வைதம்
முரண்படுவதையும், அமெரிக்க நாவலாசிரியை
அயன் ராண்டின் தத்துவமான புறவயவாதம்
அத்வைதத்தை ஈவிரக்கமின்றி முறியடித்து
விடுவதையும் இந்நூல் விவரிக்கிறது. மேலும்
அத்வைதம் குறித்து வாசகர்கள் அறிய வேண்டிய
ஏராளமான  செய்திகளும் இந்நூலில்  தரப்பட்டுள்ளன.
இதன் மூலம் சிறிய நூலாக இருந்த போதிலும்
நெடிய வீச்சு கொண்டதாக இந்நூல் திகழ்கிறது.
**************************************************  
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக