ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

விண்ணும் மண்ணும் அதிர வருகிறது 5G!
-------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------- 
எதிர்வரும் தீபாவளியன்று அக்டோபர் 24ல் ரிலையன்ஸ் ஜியோ 
நிறுவனத்தின் 5G சேவை இந்தியாவில் தொடங்கும் என்று 
அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். முதலில் 
இச்சேவை டெல்லி, மும்பை, கொல்கொத்தா, சென்னை ஆகிய 
நான்கு பெருநகரங்களில் மட்டும் அறிமுகம் ஆகும். இந்தியா 
முழுமைக்குமான (Pan India) 5G சேவை இன்றிலிருந்து 
ஒன்றேகால் ஆண்டு கழித்து, டிசம்பர் 2023ல் தொடங்கும் 
என்றும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ஏர்டெல்லும் சளைக்கவில்லை! நடப்பாண்டின் இறுதிக்குள் 
பெருநகரங்களில் 5G சேவை தொடங்கும் என்றும், 
நகர்ப்புற இந்தியாவில் 5G சேவை 2023 டிசம்பரில் 
தொடங்கி, 2024 டிசம்பருக்குள் இந்தியாவின் 5000 நகரங்களில் 
வழங்கப்பட்டு விடும் என்றும் ஏர்டெல்லின் தலைமை அதிகாரி 
(CEO = Chief Executive Officer) கோபால் விட்டல் அறிவித்துள்ளார்.       

தொடக்கத்தில் 4Gயை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் 
5G செயல்படும் என்றும் காலப்போக்கில் வேகம் அதிகரிக்கும் 
என்றும் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இத்தகைய 
அறிவிப்புகள் கேட்போரை உற்சாகம் கொள்ளச் செய்கின்றன.


வாயுவேகம் மனோவேகம்!
------------------------------------------
முற்காலத்தில் அதிக வேகத்துக்கு உவமையாக 
வாயுவேகம் மனோவேகம் என்று காற்றின் வேகத்தையும்
மனத்தின் வேகத்தையும் குறிப்பிடுவர். இன்றைய 5Gயின்     
வேகம் என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. 
என்றபோதிலும், பொதுவாக 4G யின் வேகம் நொடிக்கு 1 Gbps 
ஆகும்.  5Gயானது இதை விட 20 மடங்கு அதிகமான வேகம் 
கொண்டது. அதாவது இதன் பதிவிறக்க வேகம்  (download speed) 
20 Gbps ஆகும். பதிவேற்ற வேகம் (upload speed) 10 Gbps ஆகும்.
இங்கு வேகம் bits என்ற அலகில் தரப்பட்டு உள்ளது.   

மேற்கூறிய 20 Gbps வேகம் என்பது கோட்பாட்டு ரீதியான 
உச்ச வேகம் (theoretical peak speed) ஆகும். கோட்பாட்டு வேகம் என்பது 
ஆய்வுக்கூட வேகம் என்பதும் அது ஆகச்சிறந்த 
சூழ்நிலைகளில் (ideal conditions) அளக்கப்படுவது என்றும் 
நாம் அறிவோம். ஆனால் நடைமுறை உலகில் இந்த 
வேகம் (real world speed) பல்வேறு காரணிகளால் கட்டுப்படுத்தப் 
படுவதால் கோட்பாட்டு வேகத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

வேகத்தைக் குறிப்பிடுகையில் bits அலகையும் bytes அலகையும்
ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. சமயத்தில் இரண்டையும் 
குழப்பிக் கொள்கின்றன. எனவே  இரண்டிற்கும் உள்ள 
வேறுபாட்டைத் துல்லியமாக அறிந்து கொள்வது அவசியம்.

இப்போது 5Gயின் வேகத்தை bits அலகிலும் (b) 
bytes அலகிலும் (B) எப்படிக் குறிப்பிடுவது என்று பார்ப்போம்.
bitsல் உள்ள வேகத்தை 8ஆல் வகுத்தால் bytesல் வேகம் கிடைக்கும்.            
8 bits என்பது 1 byteக்குச் சமம் என்ற உண்மையை நினைவு 
கூர்க.

5G பதிவிறக்க வேகம் bitsல் = 20 Gbps (b is small). 
5G பதிவிறக்க வேகம் bytesல் = 2.5 GBps.(B is capital). 
5G  பதிவேற்ற வேகம் bitsல் = 10 Gbps (b is small). 
5G  பதிவேற்ற வேகம் bytesல் = 1.25 GBps (B is capital).  

மேலே கூறிய அறிவியல் துல்லியம் மிக்க எண்களைக் 
கொண்டு சராசரியான மக்களால் 5Gயின் வேகம் 
எவ்வளவு என்று புரிந்து கொள்ள இயலாது. எனவே 
ஒரு கட்டை விரல் விதியை (thumb rule) பயன்படுத்துவோம்.
நடிகர் மாதவன் இயக்கிய விஞ்ஞானி நம்பி நாராயணன் 
பற்றிய ராக்கெட்ரி என்ற திரைப்படத்தைப் பதிவிறக்கம் 
செய்வோம். இது முழுநீளத் திரைப்படம் ஆகும். இரண்டரை 
மணி நேரம் ஓடும் படம் இது. இதன் HD அல்லாத, குறைவான 
பிக்சல்களால் ஆன சாதாரணப் பதிப்பை பதிவிறக்கம் 
செய்து பார்ப்போம். இதன் அளவு 3 GBக்கு உட்பட்டது என்று 
கொள்வோம்.  

இதை 4G மூலம் பதிவிறக்கம் செய்தால், அதற்கு 30 நிமிடங்கள்  
ஆகும். இதையே 5G மூலம் பதிவிறக்கம் செய்தால் 
100 வினாடிகள் மட்டுமே ஆகும். 5Gயின் முழுமையான வேகமான 
20 Gbps கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம். பொதுவாக 
4G என்றால் நிமிடக் கணக்கில் ஆகிற விஷயம், 5G என்றால் 
வினாடிகளில் முடிந்து விடும்.இது ஒரு பரவலான மதிப்பீடு. 

வேகம் பகிரப் படுகிறது!
----------------------------------------
5Gயின் வேகத்தை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு 
இந்தக் கட்டை விரல் விதி உதவும்.  நடைமுறை உலகில் 
வேகமும் நேரமும் பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

எடுத்துக் காட்டாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் 
ஒருவர் மட்டுமே 5G வயர்லெஸ் இணையத்தைப் 
பயன்படுத்துவதாக கற்பனை செய்வோம் 
(கற்பனையில்தான் இது சாத்தியம்). அப்போது
5G வழங்கும் 20 Gbps வேகம் முழுவதையும் நீங்கள் 
பெற இயலும். மாறாக, நீங்கள் பயன்படுத்தும் அந்தத் 
தருணத்தில் உங்களுடன் சேர்த்து 100 பேர் அந்த 
இணையத்தைப் பயன்படுத்தினால், அது வழங்கும் 
20 Gbps வேகத்தை நீங்கள் 100 பேரும் பகிர்ந்து கொள்ள 
வேண்டும். அப்போது உங்களுக்கு 0.2 Gbps வேகம் 
மட்டுமே கிடைக்கும். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் 
உள்ள நிலவரம் இதுதான். இது ஒரு பிரபஞ்சப் பேருண்மை 
(universal truth) என்று உணர்தல் வேண்டும்.

அகண்ட அலைக்கற்றை (broadband) மூலமாக இணையம் 
பயன்படுத்துவோர் அவ்வப்போது வேகச்சோதனை 
(Global broadband speed test) மேற்கொள்ள வேண்டும்.
இதற்கென உள்ள இணையதளங்களில் இச்சோதனைகள் 
இலவசம்.  

குறைவான நுண்தாமதம்!
----------------------------------------
வேகத்தை நிர்ணயிக்கும் இன்னொரு காரணி நுண்தாமதம் 
எனப்படும் லேட்டன்சி (latency) ஆகும். லேட்டன்சி என்றால்
என்ன? ஒரு குழந்தையை தொடையில் கிள்ளுகிறீர்கள்.
அது வீல் என்று கத்துகிறது. நீங்கள் கிள்ளுவதற்கும் குழந்தை 
கத்துவதற்கும் இடையில் உள்ள நுட்பமான நேரமே 
நுண்தாமதம் என்னும் லேட்டன்சி ஆகும். ஒரு வினாடிக்கும்  
குறைவான நேரத்தில், almost instantaneously குழந்தை கத்தி விடும்.
இந்தக் குறைவான நேரம் மில்லி விநாடியாக (milli second)
அல்லது மைக்ரோ விநாடியாக (micro second) இருக்கக் கூடும்.        

இதைப்போல தரவுப் பரிமாற்றத்தில், தரவுகள் வந்து 
சேர்வதற்கும் அது இன்னொரு இடத்திற்கு அனுப்பப் 
படுவதற்குமான கால இடைவெளியே நுண்தாமதம் 
ஆகும். இதில் 4Gயின் நுண்தாமதம், ஒரு கட்டை விரல் 
விதிப்படி, சராசரியாக 50 மில்லி வினாடியாக இருக்கிறது.
பல்வேறு வேகச்சோதனைகளை (speed test) நடத்திப் 
பார்த்ததில் 5Gயின் நுண்தாமதம் 10 மில்லி வினாடிக்கும் 
குறைவாக இருக்கிறது. குறைவான நுண்தாமதத்தால்
5Gயின் வேகம் அதிகரிக்கிறது. 

வேகமும் குறைவான நுண்தாமதமும் வலைப்பின்னலின் 
கட்டுமானத்தையும் (Network architecture) அலைக்கற்றையையும் 
பொறுத்தது. எனினும் நுகர்வோர் தரப்பில் பின்வரும் சில 
செயல்களைச் செய்வதன் மூலம் நுண்தாமதத்தைக் 
குறைக்கலாம்.

அ) ஒரு நேரத்தில் ஒரு உருப்படியை மட்டும் பதிவிறக்கம் 
செய்யுங்கள். ஒரே நேரத்தில் நாலைந்து உருப்படிகளை 
பதிவிறக்கம் செய்வதைத் தவிருங்கள்.
ஆ) ஸ்கேன் செய்து பார்த்து வைரஸ் இருந்தால் 
அப்புறப்படுத்துங்கள்.
இ) ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பேறுகளை 
(apps) ஓட்ட வேண்டாம்.       

ஓட்டுநர் இல்லாக்கார்!
---------------------------------- 
உலகம் 2Gயில் இருந்து 3Gக்குச் சென்றதும், 3Gயில் இருந்து 
4Gக்குச் சென்றதும் சாதாரண மாற்றங்கள் மட்டுமே.
ஆனால் 4Gயில் இருந்து 5Gக்குச் செல்வது ஒரு எளிய 
மாற்றமல்ல; மாறாக அது ஒரு ராட்சசத் தனமான
பாய்ச்சல் (giant leap) ஆகும். 5Gயின் சிறப்பம்சம் அதன் 
வேகம் மட்டுமல்ல; மானுடம் இதற்கு முன் கண்டிராத 
பல புதுமைகளை 5G தன்னகத்தே கொண்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார் பற்றி அறிவியல் 
புனைவுகளில் மட்டுமே நாம் படித்திருந்தோம். தற்போது
அது நனவாகிறது. இனி ஓட்டுநர் தேவையில்லை. காரோட்டும் 
பொறுப்பை 5G ஏற்றுக் கொள்கிறது. அதாவது 5G ஏற்றப்பட்ட 
மென்பொருள் இனி காரை ஓட்டும். ஒரு ஓட்டுநர் என்னவெல்லாம் 
முடிவுகளை எடுப்பாரா அவற்றையெல்லாம் 5G மென்பொருள் 
எடுக்கும். சமகால சாலைப்போக்குவரத்தின் சவால்களுக்கு 
5Gயிடம் தீர்வு இருக்கிறது. இனி விபத்துகள் குறையும்.
கார்ப்பயணிகளின் பாதுகாப்பு மென்மேலும் உறுதிப் 
படுத்தப்படும்.

ஒரு காருக்கும் இன்னொரு காருக்குமான தகவல் தொடர்பை 
5G சாத்தியம் ஆக்குகிறது. இது V2V (Vehicle to Vehicle) தகவல் 
தொடர்பு ஆகும். அது போலவே V2X (Vehicle to Everything)
தகவல் தொடர்பும் 5Gயால் சாத்தியமாகிறது. கார்கள் 
ஒன்றையொன்று குறுக்கிடும்போது V2V, V2X தகவல் தொடர்பு 
மூலமாக விபத்தை உறுதியாகத் தடுத்து விடமுடிகிறது.
5Gயின் 10 மில்லி வினாடிக்கும் குறைவான நுண்தாமதம் (latency)
V2V, V2X தகவல் தொடர்பை அதீதமாகவே விரைவுபடுத்துகிறது.
இதன் மூலம் கார் விபத்துகளை கடந்த கால நிகழ்வுகளாக 
ஆக்கி விட முடியும் என்கின்றனர் 5Gயை உருவாக்கியோர்.

எந்தப் பொருளிலும் இணையம் செயல்படும்!
----------------------------------------------------------------------
அலைபேசிகளிலும் கணினிகளிலும் மட்டுமே இதுவரை 
இணையம் செயல்பட்டு வந்தது. இனி எந்த ஒரு பொருளிலும் 
இணையம் செயல்படும். கடிகாரம் முதற்கொண்டு கதவின் பூட்டு  
வரை அனைத்துப் பொருட்களிலும் இணையம் செயல்படும். 
இவ்வாறு எந்த ஒரு பொருளின் மீதும் இணையம் செயல்பட்டால், 
அது பொருட்களின் இணையம் (IoT = Internet of Things) என்று 
அழைக்கப்படும். 

5G சேவையில் IoT எனப்படும் பொருட்களின் இணையம் 
உள்ளடங்குகிறது. இதன் பொருள் என்னவெனில், எல்லாப் 
பொருளின் மீதும் IoT செயல்படும்; அதன் மூலமாக 
5Gயும் செயல்படும்.

உங்கள் வீட்டுக் கதவின் பூட்டு திறன்மிகு பூட்டாக 
(SMART lock) இருக்கும்பட்சத்தில், அதன் மீது இணையம் 
செயல்படும்; கூடவே 5Gயும் செயல்படும். இதன் விளைவாக 
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள உங்கள் 
வீட்டின் பூட்டை சென்னையில் இருந்து கொண்டு 
பூட்டலாம்; திறக்கலாம். நம்புவதற்குக் கடினமானதும் 
கற்பனையோ என்று ஐயம் கொள்ள வைப்பதுமான 
செயல்கள் 5G சேவை முழுமையடையும்போது 
சாதாரணமாகி விடும்.

5Gயில் செயற்கை நுண்ணறிவு!
-------------------------------------------------
பல்வேறு மின்னணுக் கருவிகளை அன்றாட வாழ்வில் 
நாம் பயன்படுத்துகிறோம். இவை ஜடப்பொருட்கள்.
இவற்றை சிந்திக்கும் பொருளாகவும் சிந்தித்துச் செயல்படும் 
பொருளாகவும் செயற்கை நுண்ணறிவு ஆக்குகிறது.
அமெரிக்காவின் ஆப்பிள், தென் கொரியாவின் சாம்சங்,
சீனாவின் ஹவாய் ஆகிய நிறுவனங்கள் ஜடப்பொருளாக
இருந்த அலைபேசிகளை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் 
திறன்பேசிகளாக (SMART phones) மாற்றி உள்ளன. 5G சேவைக்கு 
உகந்த திறன்பேசிகள் மென்மேலும் செயற்கை நுண்ணறிவைச் 
சார்ந்து உள்ளன. 

ரோபோக்களை உருவாக்கும் 5G!
--------------------------------------------------
ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை உருவாக்கி 
இயக்குவதில் 5G தலையாய பங்கு வகிக்கும். 5G இல்லாமல் 
ரோபோவியல் (Robotics) இல்லை. அணுஉலைகளில் ஆபத்து 
நிறைந்த பணிகளில் இனி மனிதர்கள் அகற்றப்பட்டு 
5Gயால் இயக்கப்படும் ரோபோக்கள் பணியமர்த்தப் 
படுவார்கள். இதை எதிர்காலத்தில் நாம் காணலாம்.  

சில சிக்கலான அறுவை சிகிச்சைகளில், தொலைமருத்துவத்தில்
(Telemedicine) மருத்துவர்களுக்கு உதவியாக 5G அலைக்கற்றை 
பயன்படும்.  இவ்வாறு 5G அலைக்கற்றை என்பது வெறுமனே 
ஒரு உற்பத்திக்கருவி என்ற அளவோடு நிற்காமல், பல்வேறு 
சமூகவியல் சிக்கல்களுக்கும் தீர்வை வழங்குகிறது.  
மானுட வாழ்வு முன்னிலும் மேம்படுகிறது.      

தனித்த வலைப்பின்னல்!
----------------------------------------
உலகில் 195 நாடுகள் உள்ளன. இயற்றில் அமெரிக்கா, தென் கொரியா,
சீனா ஆகிய நாடுகள் 5G சேவையில் முன்னணியில் உள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவும் வரும் அக்டோபர் 2022 முதல் 
இணைந்து கொள்கிறது. 

5G கட்டுமானத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு விதமான 
கட்டுமானங்களை (Network Architecture) 3GPP அமைப்பு 
(3rd Generation Partnership Project) உலகளவில் அங்கீகரிக்கிறது.
ஐநாவின் துணை அமைப்பான ITU (International Telecommunication Union)  
மற்றும் 3GPP ஆகிய அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள 
அலைக்கற்றைத் தலைமுறைகளை வரையறுப்பது முதல்  
வலைப்பின்னல்களுக்கு இலக்கணம் வகுப்பது வரை 
அனைத்து நடவடிக்கைளையும் கட்டுப்படுத்துகின்றன.  

3GPPயின் வரையறைப்படியே இந்தியாவிலும் இரண்டு விதமான வலைப்பின்னல் கட்டுமானங்கள் உருவாக்கப் படுகின்றன.
அ) தனித்த வலைப்பின்னல் (Stand Alone network)
ஆ) தனித்தது அல்லாத வலைப்பின்னல் (Non Stand Alone network).

தனித்த வலைப்பின்னல் என்பது ஏற்கனவே இருக்கும் 
பழைய 3G, 4G வலைப்பின்னலைப் பயன்படுத்தாமல்,
முற்றிலும் புதிதான 5G வலைப்பின்னலை உருவாக்குவது.
இது முற்றிலும் துல்லியமானதும் மிகவும் நுட்பமான 
பணிகளை மேற்கொள்ளப் பயன்படுவதும் ஆகும்.

தனித்தது அல்லாத வலைப்பின்னல் என்பது ஏற்கனவே 
உள்ள பழைய வலைப்பின்னலை குறிப்பாக 4G LTE
வலைப்பின்னலை மேம்படுத்தி 5G வலைப்பின்னலை 
உருவாக்குவது. 

(4G, 4G LTE, 5G என்பதுதான் வரிசை. 5G > 4G LTE > 4G.
இது கால வரிசை மட்டுமின்றி தரவரிசையும் ஆகும். 
LTE என்பது Long Term Evolution ஆகும்.
4G LTE என்பது 4Gயை விடத் திறன் மிக்கதும் 5Gயை 
விடத் திறன் குறைந்ததும் ஆகும். 4G LTE என்றால் 
4.5 G என்றோ 4.75 என்றோ புரிந்து கொள்ளலாம்).       

புதிதாக ஓர் தலைமுறையை உருவாக்கும்போது 
அது பழைய தலைமுறையின் கருவிகளோடு 
பொருந்திப் போவதை (Backward compatibility) 
இயன்றவரை சாத்தியம் ஆக்க வேண்டும் என்று 
3GPP வலியுறுத்துகிறது.

இதன் மூலம் பயனாளர் தமது கருவியைத் 
தடையின்றிப் பயன்படுத்த இயலும் என்று 
3GPP கூறுகிறது. அதாவது 5G வந்த பிறகும்,
சாத்தியமானவரையில் பயனாளர் தமது பழைய 
சிம்மையும் பழைய கைபேசியையும் பயன்படுத்த 
வாய்ப்பளிக்கும் விதத்தில் புதிய வலைப்பின்னலின் 
கட்டுமானம் இருக்க வேண்டும் என்று 3GPP கருதுகிறது.

அது போலவே forward compatibilityயும் இயன்றவரை 
உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று 3GPP           
எல்லா நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்கூறிய காரணங்களால் தனித்தது அல்லாத 
வலைப்பின்னல் (Non Stand Alone Netowork) உருவாக்கப் 
படுகிறது.

இந்தியாவில் இரண்டு வலைப்பின்னல்கள்!
-------------------------------------------------------------------
இந்தியாவில் 5G அலைக்கற்றையின் ஏலம் 2022 ஜூலை 
26 முதல் ஆகஸ்டு 1 வரை 7 நாட்கள் நடைபெற்றது.
தொலைதொடர்புத்துறை அமைச்சரும் எம்டெக் பட்டம் 
பெற்ற தொழில்நுட்ப அறிஞருமான அஸ்வினி வைஷ்ணவ் 
இந்த ஏலத்திற்குப் பொறுப்பேற்று நடத்தினார். ஏலத்தின் 
இறுதியில் அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் 
வருவாய் கிடைத்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ 88,708 கோடிக்கு 
24,740 MHz அளவுள்ள அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தது.
3.3 GHz அதிர்வெண், 26 GHz அதிர்வெண், 700 MHz அதிர்வெண்,
1800 MHz அதிர்வெண் ஆகிய அலைக்கற்றைகளை
ஏலம் எடுத்தது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனித்த வலைப்பின்னல் 
கட்டுமானத்தை (Stand Alone Network Architecture) மேற்கொண்டு 
5G சேவையை வழங்க இருக்கிறது. ஏர்டெல் மற்றும் 
BSNL உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தனித்தது அல்லாத
(Non-Stand Alone) வலைப்பின்னலை உருவாக்க முடிவு 
செய்துள்ளன.

5G சேவை வந்த பின்னும்கூட இந்தியாவில் 4G LTE சேவை 
குறைந்தது 10 ஆண்டுகளுக்கேனும் நீடிக்கக் கூடும்.
எனவே தனித்தது அல்லாத (Non-Stand Alone) வலைப்பின்னல் 
மூலம் சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 
தங்களின் பழைய சிம்மையும் பழைய கைபேசியையும்
மாற்ற வேண்டிய தேவை இல்லை. அவற்றின் மூலமாகவே 
5G சேவையை அவர்கள் பெற இயலும். எனினும் புதிய சிம், 
புதிய கைபேசி இரண்டும் தேவை என்று அந்நிறுவனங்கள் 
கூறினால் அதைத்தான் வாடிக்கையாளர்கள் ஏற்க வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ முற்றிலும் புதிதான தனித்த 
வலைப்பின்னலை உருவாக்கி சேவை வழங்குவதால்,
புதிய சிம், புதிய கைபேசி ஆகியவற்றின் மூலம்தான் 
அவர்களின் 5G சேவையைப் பெற இயலும். இதுவரை 
பழைய சிம், பழைய கைபேசிகளை மாற்ற வேண்டுமா 
வேண்டாமா என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  
எதுவும் கூறவில்லை. இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ 
என்ன கூறுகிறதோ அதையே வாடிக்கையாளர்கள் 
பின்பற்ற வேண்டும்.  
********************************************************                 

     

 
  
   
   

      
    

     
       



 


   
 

             
  
                   


  
        
           

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக