செவ்வாய், 17 செப்டம்பர், 2013

IRAAVANAN PATHILKAL

இராவணன் பதில்கள் 
--------------------------------------------------------------    
நிர்பயா  வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த பின்னும் கூட, குற்றங்கள் குறையவில்லையே, கவுகாத்தியில் ஒரு பத்து வயதுச் சிறுமியை ஐந்து மைனர் பையன்கள் வல்லுறவு செய்துள்ளனரே!  

( இரா.மனோகர், சேத்துப்பட்டு )

அரச மரத்தைச் சுற்றி விட்டு உடனே அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் எப்படி?  ஒரு தனி மனிதன் சட்டென்று முடிவு எடுப்பான்;
மாறி விடுவான். ஆனால் ஒரு சமூகம் மாற்றம் அடைய காலம் 
நிறைய ஆகும். வழக்குகளை விரைந்து முடிப்பதும், கடும் தண்டனை
வழங்குவதுமான நிகழ்ச்சிப்போக்கு 
தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்போது தான், 
அது சமூகத்தின் பொது மனத்தில் உறைக்கும்; 
சமூகம் படிப்பினை பெறும். 
இதற்கெல்லாம் குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும். 
திடீர் சாம்பார், திடீர் புளியோதரை மாதிரி 
சமூகத்தில் திடீர்த் தீர்வு ( instant  remedy )  எதுவும் கிடையாது.
--------------------------------------------------------------------------------------------------------

இந்து   மதத்தின் பெருமையை நிலைநாட்டியவர் என்று தமிழ்நாட்டில் இருந்து யாரையேனும் கூற முடியுமா?

( ப.செல்வராசு, பல்லாவரம் ) 

ஏன் முடியாது? காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன் இருக்கும் வரை உதாரணத்திற்கா பஞ்சம்?
----------------------------------------------------------------------------------------------------------
அடையாள அரசியல் என்றால் என்ன?

( கா.நாதமுனி, அயன்புரம் )

இன்ன சாதி, இன்ன மதம், இன்ன தேசிய இனம் என்ற அடையாளத்தின் அடிப்படையில் அமைப்பு தொடங்கி ,
 மக்களைத் திரட்டி அரசியல் செய்வது 
அடையாள அரசியல்.
 யாதவர் பேரவை, கொங்கு வேளாளர் கூட்டமைப்பு 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றெல்லாம் இருக்கிற அமைப்புகள் 
அடையாள அரசியலின் வெளிப்பாடுகள்.
---------------------------------------------------------------------------------------------------------

இன்றைய இளைய தலைமுறை ஆங்கில வழியில் படித்தும் கூட ஆங்கிலத்தில் புலமை இல்லாமல் இருக்கிறதே, ஏன்?

(மீ. பார்வதி, பெரம்பூர்)

அவர்கள் அண்ணாவைப் படிக்க வேண்டும்.  அண்ணா ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளர்.அவர் பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் வரிசையாய் வந்து கைகட்டி நிற்கும். ஒரு சுவாரசியமான  உதாரணம்.
இந்திய மாணவர்களின் கல்வித் தரம் குறித்து அண்ணா கூறியது:
( இதில் எத்தனை முறை tion என்று முடியும் வார்த்தைகள் வருகின்றன 
என்று எண்ணிப் பார்த்துச் சொல்லுங்கள்!)
 
" AFTER A LONG CONSIDERATION, CONSULTATION AND  CONFABULATION  I have 
COME to THE CONCLUSION THAT THE LONDON MATRICULATION examination is 
NOT A botheration to THE STUDENTS OF OUR NATION WHOSE OCCUPATION is 
irrigation AND CULTIVATION ."
---------------------------------------------------------------------------------------------------------

கருத்து சுதந்திரத்தை எதுவரை அனுமதிக்கலாம்?

( செ. மாணிக்கம், எழும்பூர்)

பாட்டாளி வர்க்க சர்வ தேச கீதம் பற்றித் தெரியுமா?
 உலகம் முழுவதும் உள்ள 
 கம்யூனிஸ்ட் தோழர்களுக்கான பொதுவான கீதம்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில்  (ரஷ்யா) செம்படையின் அணிவகுப்பின் போது இசைக்கப் படும் இசையே இப்பாடலுக்கான இசை

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் 
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள் 
கொட்டு முரசு கண்டன முழக்கம் எங்கும் குமுறிட 
குதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட .
       
          என்று  தொடங்கும் அப்பாடலில் பின்வரும் பத்தி 
          ( STANZA ) கருத்து சுதந்திரத்தின் வரம்பை  தெளிவு படுத்தும்.

நாளை எண்ணி வட்டி சேர்க்கும் 
ஞமலிகட்கு இங்கு இடமில்லை 
நாம் உணர்த்தும் நீதியை 
மறுப்பவர்க்கு இங்கு இடமில்லை.

இதுதான் வரம்பு! மக்கள் நலன் சாராத , 
மக்களின் எதிரிகளின் கருத்துகளுக்கு இடம் தரக்கூடாது.  
---------------------------------------------------------------------------------------------------------

நரேந்திர மோடியை விட ஜெயலலிதா தான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்கிறாரே, தா. பாண்டியன்!

( சி. கடற்கரை, வண்ணை )

"சித்தம் எல்லாம் எனக்கு ஜெ மயமே 
ஜெவைச் சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே "

என்பதுதான் தா.பா வின் தாரக மந்திரம்.
ஜெ.வின் காலில் விழுந்தால் எழுந்திருக்கவே மாட்டாராம் 
தா.பா என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இப்படிப் பட்ட ஒரு ஜென்மம் வேறு எப்படித் தான் பேச முடியும்?
----------------------------------------------------------------------------------------------------------

மத்திய மாநில அரசுகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும்
 கைது செய்து சிறையில் தள்ள முடியும் அல்லவா?

( ரா.ஜானகி, திருவல்லிக்கேணி )

முடியும், இரண்டே இரண்டு பேரைத் தவிர;
அவர்கள்: 1) டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி 
                     2) கூடங்குளம் உதயகுமார் 
சி.ஐ.ஏ ஏஜண்டுகளைக் கைது செய்யும் திராணி எந்த மாநில 
அரசுக்கு அல்லது மத்திய அரசுக்கு இருக்கிறது?
-----------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக