வெள்ளி, 2 செப்டம்பர், 2016

வேலைநிறுத்தம் பற்றி லெனின்!
----------------------------------------------------------------
1) 1960 ஜூலை 12இல் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய அரசு
ஊழியர்களும், தேவை அடிப்படை குறைந்தபட்ச ஊதியம்
(need base minimum wage) கோரி வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு ஊழியர்களின்
சம்பளம் ஒன்றுபோல் இல்லை; வேறுபாடு நிலவியது. கடும்
அடக்குமுறையால் ஒரு வாரத்திற்குள் அன்றைய மத்திய அரசு
இந்த வேலைநிறுத்தத்தை ஒடுக்கியது. இந்த வேலைநிறுத்தம்
எனது அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போர் (civil war against my govt)
என்று கண்டித்தார் அன்றைய பிரதமர் நேரு.
**
2) 1974இல் ரயில்வே வேலைநிறுத்தம் பல நாட்கள் நடந்தது.
3) துறைவாரி சம்மேளனங்கள் தத்தம் துறைக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் வேலை நிறுத்தங்கள்
யாவும் காலவரம்பற்றதாக அமையும். கோரிக்கைகள்
ஏற்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, வேலைநிறுத்தம்
தொடர்ந்து நடக்கும். 
**
4) அதே நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர் முதல் அரசு ஊழியர் வரை
ஈடுபடுத்தப்படும் பொதுவேலைநிறுத்தங்கள் (general strikes)
ஒரே ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இது ஏதோ நடுத்தர
வர்க்கத்தின் பின்தங்கிய உணர்வு நிலையை உத்தேசித்து
ஏற்பாடு செய்யப் படுவது அல்ல. இன்றைய வேலைநிறுத்தம்
(செப்-2, 2016) அரசியல் வேலைநிறுத்தம் ஆகும். இந்த வேலைநிறுத்தத்தை ஒட்டி, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையோ அல்லது உடன்பாடோ ஒப்பந்தமோ கிடையாது.
**
5) ஆனால் துறைவாரி சம்மேளனங்கள் தத்தம் துறை சார்ந்த
கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் வேலைநிறுத்தங்களில்
பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் உண்டு.
6) பேச்சு வார்த்தையோ ஒப்பந்தமோ இல்லாத அரசியல் 
வேலைநிறுத்தத்தை பொதுவாக ஒருநாள் மட்டும்தான்
நடத்துவது வழக்கம்.
**
7) 1980க்கு முன்பு, மத்திய மாநில அரசு ஊழியர்களை
ஒரு அரசியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்த முடியாத
நிலை இருந்தது. தங்களின் துறைசார்ந்த கோரிக்கைகளுக்கு
(sectional demands) மட்டுமே போராட அவர்கள் முன்வருவார்கள்.
ஆனால் இன்றைய நிலைமை அப்படியல்ல. தங்களுக்கு
நேரடிப்பயன் எதுவும் இல்லாத கோரிக்கைகளை முன்வைத்து
அறைகூவல் விடுக்கப்படும் வேலைநிறுத்தங்களில்
30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களை நேரடியாக ஈடுபடுத்த
முடிகிறது. 1978 முதல்   என்னுடைய 30 ஆண்டுகளுக்கும்
மேலான தொழிற்சங்க வாழ்க்கையில் இது போல் ஆயிரம் உதாரணங்களை, ஆயிரம் ஆதாரங்களைச்  சொல்ல
முடியும்.
**
8) சுருங்கக் கூறின், ஒருநாள் வேலைநிறுத்தம் என்பது
வீரியம் குறைந்த ஒன்று என்ற பார்வை முற்றிலும்
தவறானது; அது பாட்டாளி வர்க்கப் பார்வை அல்ல. 
"என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் லெனின்
வர்ணித்த அரசியல் வேலைநிறுத்தங்களே இவை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக