திங்கள், 26 செப்டம்பர், 2016

1000 ரூபாய் ஹெர்குலிஸ் சைக்கிளில் தொடங்கி  
ஒரு கோடி ரூபாய் பி.எம்.டபிள்யு கார் வரை! 
1G முதல் 5G வரை ஓர் அறிவியல் பயணம்!
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-3)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
2G ,3G போன்ற தலைமுறை மாற்றங்கள் எல்லாம் 
வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா மொபைல் 
சேவைக்கு மட்டுமே பொருந்தும். நிலைத்த 
தொலைபேசியான  நிலவழித் தொலைபேசியில் 
(Landline Telephone) இத்தகைய தலைமுறை 
மாற்றம் எதுவும் கிடையாது.

உலகம் முழுவதும் 4G பெருவாரியான நாடுகளில் 
பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015) 
இந்தியாவில் நாடு தழுவிய அளவில் 4G சேவையை 
(4G LTE எனப்படும் 4G யை விடக் குறைந்த சேவை)
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப் படுத்தியதால், இந்தியாவும் 
4G பயன்பாட்டுக்கு நெருக்கமாக வந்து விட்டது.

ஐந்தாம் தலைமுறை வந்து விட்டதா? உலகில் 
எங்கெல்லாம் 5G இருக்கிறது என்கிற கேள்விகள் 
எழுவது இயற்கையே.
உலகில் எங்கும் 5G இல்லை என்பதே இதற்கு விடை.

2010-2011 காலக்கட்டத்தில் 4G வளர்த்தெடுக்கப் பட்ட 
உடனேயே, 5Gயை உருவாக்கும் பணிகள் தொடங்கி 
விட்டன. ஐரோப்பியத் தொலைதொடர்பு தரநிர்ணயக் 
கழகம் (European Telecomn Standards Institute) என்ற அமைப்பு 
5Gயை வளர்த்தெடுத்து அதற்கான தரநிர்ணயத்தை 
உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. பல்வேறு 
மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் மொபைல்  
சேவை நிறுவனங்களும் இப்பணியில் துணை புரிந்து 
வருகின்றன.

2019இல் 5Gக்கான தரநிர்ணயம் இறுதியாகும் என்றும்,
அவ்வாறு இறுதியானால் 2020-2021  ஆண்டுகளில் 
5G சேவை தொடங்கும் ( Commercial Rollout of 5G service)
என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் 
உலகில் 5G வருவதற்கு இன்னும் 6,7 ஆண்டுகள் ஆகும்.

அப்படியானால் இந்தியாவில் 5G வருவதற்கு இன்னும் 
எத்தனை ஆண்டுகள் ஆகும்? கால தாமதம் ஆகுமோ 
என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். ஏர்டெல் 
இருக்கும்போது கவலைப் படலாமா? இருக்கிற ஒண்ணே 
முக்கால் ஜி, ரெண்டேமுக்கால் ஜி ஆகியவற்றை 
வைத்துக் கொண்டு 5G, 6G என்று சேவை வழங்கத்தான் 
ஏர்டெல் தயாராக இருக்கிறதே! பின் ஏன் கவலை? 

5G என்பது பிக்காசோவின் நவீன ஓவியம்!
--------------------------------------------------------------------
ஆண்டுதோறும் பார்சிலோனா நகரில் உலக மொபைல் 
காங்கிரஸ் (World Mobile Congress) நடைபெறும். வயர்லெஸ் 
தொழிலில் உள்ள அனைவரும் இங்கு கூடி, தங்களின் 
கருவிகள் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பகிர்ந்து 
கொள்வர். கடந்த மார்ச் 2015இல் நடைபெற்ற காங்கிரசில் 
பேசிய ஒரு தொழில் (நுட்ப) அதிபர், 5Gயை பிக்காசோவின் 
நவீன ஓவியத்துக்கு ஒப்பிட்டார்.

(ரவிவர்மா மரபான ஓவியர்; பிக்காசோ நவீன ஓவியர்.
மரபான ஓவியம் என்பது பார்த்ததை அப்படியே வரைவது.
நவீன ஓவியம் என்பது பார்த்ததை வரையாமல் 
உணர்ந்ததை வரைவது. இது நவீன ஓவியத்திற்கான ஒரு 
இலக்கணம் என்பதை ஓவிய ஆர்வலர்கள் அறிந்திருக்கக் 
கூடும்).

5G யின் ராட்சச வேகம்!
----------------------------------------
5G வரும்போது, அதன் வேகம் அசுரத்தனமாக இருக்கும்.
10 Gbps வரையிலான வேகம் கிடைக்கும். இதுவரையிலான
2G, 3G, 4G சேவைகளில் நாம் உணர்ந்த வேகம் Kbps மற்றும் 
Mbps தான். 5Gஇல்தான் Gbps வேகத்தை உணரப் போகிறோம்.

தொழில்நுட்ப விவரங்களைத் தவிர்த்து விட்டு,
சராசரி நுகர்வோர் 5Gயை எப்படிப் புரிந்து கொள்வது?   
ஒரு முழுநீள ஹாலிவுட் சினிமாவை பதிவிறக்கம் 
செய்து முடிப்பதற்கு, 3Gயில் பல மணி நேரம் ஆகும்.
4Gயில் பல நிமிடங்கள் ஆகும். 5Gயில் சில நொடிகள் 
ஆகும்.

இன்னும் எளிமையாகச் சொல்வதானால், 
2G என்பது சைக்கிள்.
3G என்பது ஸ்கூட்டர்.
4G என்பது  மாருதி ஏ.சி கார்.
5G  என்பது பி.எம்.டபிள்யு கார். 
1000 ரூபாய் சைக்கிளில் தொடங்கிய அறிவியலின் 
பயணம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள BMW காரில்
தொடர இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------
தொடரும் 
***************************************************************    
(1) இந்தியாவில் 3G படுதோல்வி!
4G என்பது மெய்யான 4G அல்ல!
அலைக்கற்றை குறித்த அறிவியல் விளக்கக் கட்டுரை!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
வணிக ரீதியான 3G மொபைல் சேவையை இந்தியாவில்
முதன் முதலில் வழங்கியது BSNL நிறுவனமே. தனியார்
நிறுவனங்கள் கடைசியில் நின்றன. அன்றைய
தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா, முன்பணம்
எதுவும் செலுத்தாமலும் (without any upfront payment),
ஏலத்தில் பங்கெடுக்கக் கோராமலும் BSNLக்கு
3G அலைக்கற்றையை ஒதுக்கித் தந்தார்.

இந்தியாவில் 3G அலைக்கற்றைக்கான ஏலம் 2010ஆம்
ஆண்டில் நடைபெற்றது. 2010 ஏப்ரல் மாதம் தொடங்கிய
ஏலம், 34 நாட்கள் நடைபெற்று, மே 19 அன்று முடிவுற்றது.
மொத்தம் 183 சுற்றுக்களில் இந்த ஏலம் நடைபெற்றது.
மிகவும் வெளிப்படையாகவும் சர்வதேச அளவிலான
பார்வையாளர்கள் பங்கேற்புடனும் நடந்த இந்த
ஏலத்தில் மொத்தம் ஒன்பது நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த அலைக்கற்றை ஏலத்தை நடத்திய அமைச்சர் யார்?
வேறு யார்? ஆ ராசாதான். ஏலமே விடாமல், 2G அலைக்
கற்றையைத் தாரை வார்த்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு
ஆளான அதே ஆ ராசாதான்.

இந்த ஏலம் மட்டுமின்றி வேறொரு அலைக்கற்றை ஏலத்தையும்
ஆ ராசா நடத்தினார். அது BWA (Broadband Wireless Access)
அலைக்கற்றைக்கான ஏலம் ஆகும். தொழில்நுட்ப
வட்டாரங்களில் இது வைமேக்ஸ் என்று அழைக்கப்படும்.
WiMAX என்றால்  Worldwide inter operability of Microwave access என்று
பொருள்.

2010 மே மாதம் தொடங்கிய இந்த ஏலம், 16 நாட்கள் நடைபெற்று
ஜூன் 11 அன்று முடிவுற்றது. 11 நிறுவனங்கள் பங்கேற்ற
இந்த ஏலத்தில் 6 நிறுவனங்கள் மட்டுமே அலைக்கற்றை
கிடைக்கப் பெற்றன.

தமது பதவிக் காலத்தில் அலைக்கற்றை குறித்த இரண்டு
ஏலங்களை நடத்திய ஒரே அமைச்சர் ஆ ராசாதான். அவருக்குப்
பின் பதவியேற்ற கபில் சிபில் ஒரு தோல்வி அடைந்த
ஏலத்தை நடத்தினார்.

3G ஏலத்தின் விளைவாக ரூ 67718.95 கோடி அரசுக்குக் கிடைத்தது.
முப்பதாயிரம்  கோடி ரூபாய்தான் கிடைக்கும் என்று
DOT (Dept of Telecom) எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு
இரு மடங்குக்கு மேல் கிடைத்தது.

ஏலத்தின் இறுதியில், மொத்தம் 71 உரிமங்கள் வழங்கப் பட்டன.
ஒரு உரிமதாரருக்கு 5 MHz (மெகா ஹெர்ட்ஸ்) வீதம் மொத்தம்
355 MHz அளவுள்ள 3G அலைக்கற்றை வழங்கப் பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற BWA அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக
அரசுக்கு ரூ 38543.31 கோடி கிடைத்தது. இவ்விரண்டு
ஏலங்களிலும் சேர்த்து மொத்தம் 106262.26 கோடி ரூபாய்
அரசுக்குக் கிடைத்தது. அதாவது ஒரு லட்சத்து ஆறாயிரம்
கோடி ரூபாய் ஏலத்தொகையாக அரசுக்குக் கிடைத்தது.
இதற்கான பெருமை ஆ ராசா அவர்களையே சேரும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்தும்கூட, இந்தியாவில்
3G சேவை என்பது முற்றிலும் படுதோல்வி அடைந்த ஒன்று.
இந்த உண்மையை அன்றைய அமைச்சர் கபில் சிபல்
வெளிப்படையாகவே பேசினார். இது நாளிதழ்களிலும்
தொலைக்காட்சிச் செய்திகளிலும் வெளிவந்ததை வாசகர்கள்
நினைவு கூரட்டும். எனினும், அமைச்சரின் ஒப்புதல்
வாக்குமூலமான 3G சேவை படுதோல்வி என்ற பொருளின்மீது
இந்தியாவில் எந்த விவாதமும் நடக்கவில்லை.

அறிவுபூர்வமான விவாதங்களுக்கு இந்தியாவில் இடமில்லை
என்ற ஒளிவீசும் உண்மையை அறிந்து வைத்திருக்கும்
எவருக்கும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தியாவில் 3G சேவை படுதோல்வி அடைந்ததற்குக் காரணம்
தனியார் நிறுவனங்களே. பல நிறுவனங்கள் அலைக்கற்றையைப்  
பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில்
3G  அலைக்கற்றை உரிமம் பெற்றவை 1) பாரதி ஏர்டெல் 2) ஏர்செல்
3) வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே. ரிலையன்ஸ்,
டாட்டா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கிடத்
தேவையான அலைக்கற்றை உரிமத்தைப் பெறவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

டாட்டா ஃபோட்டான் என்ற பெயரில் 2G அலைக்கற்றையில்
அதிவேகம் தருவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றும்
டாட்டா நிறுவனம் 3G உரிமத்தைப் பெறாததில் வியப்பில்லை.
3G உரிமம் பெற்ற நிறுவனங்கள்கூட குறித்த நேரத்தில்
சேவையைத் தொடங்க முன்வரவில்லை.

2G, 3G, 4G என்ற தலைமுறை மாற்றங்களின்போது, புதிய
தலைமுறையின் வேகம் முந்தைய தலைமுறையை விட
அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு
பொதுவான பண்பு. ஆனால் 2G, 3G சேவைகளுக்கு இடையிலான
பெரும் வேறுபாடு என்னவெனில், 3G சேவையில் வீடியோ
அழைப்பு (VIDEO CALL)   உண்டு என்பதுதான்.  அதாவது இரு
முனைகளிலும் பேசுவோரின் முகம் (உருவம்) தெரியும்.
அதற்காகவே இரு பக்கங்களிலும் காமிரா ( camera at both front
and back) உடையதாக  3G மொபைல் ஃபோன்கள் வடிவமைக்கப்
படுகின்றன.

3G சேவை வெற்றி பெற்று இருக்குமேயானால், இந்தியா
முழுவதும் வீடியோ அழைப்புகள் பிரபலமாகி இருக்கும்.
இருபுறமும் காமிரா கொண்ட 3G வசதி கொண்ட  செட்டுகள்
உற்பத்தியாகி இருக்கும். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில்
ரூ 20000க்கும்,   ரூ 30000க்கும் மொபைல் ஃபோன் வாங்கும்
அளவு வசதி படைத்த வாடிக்கையாளர்கள்கூட 3G வசதி கொண்ட
மொபைல் ஃபோன்களை (3G enabled handsets) வாங்குவதில்
ஆர்வம் காட்டவில்லை.

ஆக, 3G சேவை இந்தியாவில் படுதோல்வி என்ற அன்றைய
அமைச்சர் கபில் சிபலின் கூற்று உண்மையே என்று
வாசகர்கள் உணர இயலும்.
---------------------------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------------------------------
மொபைல் பயன்படுத்தும் அனைவரும் 
நன்றி செலுத்த வேண்டியது யாருக்கு?
வயர்லெஸ்சின் தந்தையான ஜே.சி.போசுக்கே!   
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-4)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
இன்ஸ்பெக்டர்: சார், குற்றவாளி Xஐக் கைது செய்து 
விட்டேன்; ஓவர்.
கமிஷனர்: அப்படியா, எங்கே, எப்போது; ஓவர்.
இன்ஸ்பெக்டர்: சற்று முன்பு; பம்பாய் VTயில்; ஓவர்.
கமிஷனர்: உடனே அவனை K-12க்குக் கொண்டு வாங்க; ஓவர்.
  
நிஜ வாழ்க்கையிலோ அல்லது திரைப்படத்திலோ 
இதுபோன்ற உரையாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும். 
இது என்ன ஓவர்? ராமபக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவது 
போல, வயர்லெஸ் பக்தர்கள் ஓவர் என்று அடிக்கொருதரம் 
சொல்ல வேண்டுமா? இது என்ன நேர்த்திக் கடனா?

ஆரம்பகால  வயர்லஸ் உரையாடல் இது. (இது இன்னமும் 

உலகின் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது)
இந்த வயர்லஸ் ஒருவழிச் சேவை (one way working) ஆகும்.
அதாவது, ஒரே நேரத்தில் இருவரும் பேச முடியாது.
அப்படிப் பேசினால், குரல் கேட்காது; இரைச்சல்தான் 
கேட்கும் (noise instead of voice). எனவே உரையாடலில் 
தனது ஸ்பெல் முடிந்து விட்டது என்பதை  உணர்த்தும் 
பொருட்டு, ஒவ்வொரு ஸ்பெல் முடிவின்போதும்  ஓவர் 
என்று சொல்லியாக வேண்டும்.

மொபைல் சேவை ஒரு வயர்லெஸ் சேவை. என்றாலும் 

அதற்கு முன்பே வேறு வடிவில் வயர்லெஸ் சேவை 
உலகெங்கும் இருந்தது. முதன் முதலில் வயர்லெஸ் 
செய்திப் பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்கியவர் இந்திய 
விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்தான். ஆனால் அதற்குரிய 
காப்புரிமைக்கு அவர் உரிமை கோராமல் இருந்ததால், 
இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி அந்தப் பெருமையைத் 
தட்டிச் சென்றார். நோபல் பரிசும் பெற்றார்.

முதன்முதலில் இருந்த வயர்லஸ் சேவை கார்கள், 

காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களில் இருந்தது.
டிரான்ஸ்மீட்டர், ரிசீவர் இரண்டும் வாகனத்தின் தலையில் 
பொருத்தப் பட்டு இருக்கும். செல் தொழில்நுட்பத்துக்கு 
முந்திய வயர்லஸ் சேவை இது. இது பூஜ்யம் தலைமுறை 
(Zero Generation) அதாவது 0G எனப்படுகிறது.

மொபைல் வயர்லெஸ்சின் முதல் தலைமுறை, 

செல் தொழில்நுட்பத்தைக் கொண்டது (Cellular technology).
சேவை வழங்கப்படும் ஏரியாக்கள் சிறு சிறு 
சிற்றறைகளாகப் பிரிக்கப் படுவதால் செல் என்ற பெயர் 
வந்தது. இந்த 1G,  அனலாக் (analog) முறையில் ஆனது.
அதாவது, இம்முறையில் பேசப்படும் சொற்கள் 
எவ்வித ரகசியக் குறியீடுகளாகவும் மாற்றப் படாது.
(No encoding and  hence no decoding).

2G முதற்கொண்டு தொடர்ந்த எல்லாத் தலைமுறைகளும் 

டிஜிட்டல் முறையிலானவை. இம்முறையில், பேசப்படும் 
சொற்கள் பைனரி குறியீடுகளாக (Binary code) மாற்றப்படும்.
உதாரணமாக, "12" என்பது அனலாக் முறையில் 12 என்றே 
டிரான்ஸ்மிட் செய்யப்படும். டிஜிட்டலில் 12 என்பது
பைனரியாக மாற்றப்பட்டு 1100 என்று டிரான்ஸ்மிட் 
செய்யப்படும். தற்காலத்தில், கீழ் வகுப்புகளிலேயே 
பைனரி கற்றுக் கொடுக்கப் படுவதால், இன்றைய 
தலைமுறை இது குறித்து நன்கு அறிந்திருப்பர்.

வணிக ரீதியிலான 1G சேவை முதன் முதலில் 1981இல் 

சவூதி அரேபியாவில் தொடங்கியது. 1980இன் பத்தாண்டுகள் 
முழுவதும் 1G செயல்பட்ட காலம். தரநிர்ணயப்படி, 1G 
என்பது NMT -450 (Nordic Mobile Telephony) என்று அழைக்கப் 
பட்டது. (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து,
டென்மார்க் ஆகியவையே நார்டிக் நாடுகள். இங்குதான் 
1G உருவாக்கப் பட்டது. எனவேதான் NMT என்ற பெயர்).
1G அளித்த வேகம் (speed provision) 2.4 kbps மட்டுமே.

1990இன் பத்தாண்டுகள் 2Gயின் காலம். 1990-91இல் 2G

சேவை தொடங்கியது. இது அளித்த வேகம் 64 kbps வரை.  
2Gயின் பிரபல தொழில்நுட்பங்கள் GSM, CDMA, IS-95
ஆகியவை ஆகும். இவற்றில் CDMA மற்றும் IS-95 ஆகிய 
இரண்டும் CDMA தொழில்நுட்பங்கள். இவ்விரண்டும் 
அமெரிக்காவில் பிரபலமாக இருந்தன. அமெரிக்கா
தவிர்த்த உலகின் பிற நாடுகளில் GSM தொழில்நுட்பமே 
செல்வாக்குப் பெற்றது.

GSM என்பது Global System of Mobile communication ஆகும்.
CDMA என்பது Code Division Multiple Access ஆகும்.

GSMஇல் ரேடியோ அதிர்வெண் அலைக்கற்றையானது
(Radio Frequency Spectrum) பல்வேறு சானல்களாகப்
பிரிக்கப் பட்டு, FD அல்லது TD (frequency division or time division)
முறையில் பயன்படுத்தப்படும்.

CDMAயில் இவ்வாறு பிரிக்கத் தேவையில்லாமல், மொத்த 
அலைக்கற்றையுமே பயன்படுத்தப் படும். இது spread spectrum 
டெக்னாலஜி ஆகும். CDMA சேவைக்கென்றே 
பிரத்தியேகமான மொபைல் ஃபோன்கள் உண்டு. இத்தகைய 
CDMA ஃபோன்கள் GSM சேவையில் பயன்படாது.
(CDMA handsets do not have interchangeability)
-------------------------------------------------------------------------------------------------------
படங்கள்: இடமிருந்து வலம்; 
ஜகதீஷ் சந்திர போஸ் (இந்தியா) (1858-1937)
மார்க்கோனி (இத்தாலி) (1874-1937)
--------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*************************************************************************         

     



  
   
  
        
          



          

    


              

        

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக