திங்கள், 6 டிசம்பர், 2021

ஒளிரும் சதுரங்கம்!

-------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

------------------------------------------------ 

இதுநாள் வரையிலான சதுரங்க வரலாற்றின் மிக நீண்ட 
சதுரங்க ஆட்டத்தை அண்மையில் (03.12.2021) மொத்த 
உலகும் கண்டு களித்தது. டிசம்பர் 3 அன்று இந்திய 
நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டம் 
நள்ளிரவு 1.45 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 
7 மணி 45 நிமிடம்வரை நீடித்த  இந்த ஆட்டம்  
136 நகர்த்தல்களைக் கொண்டிருந்தது.

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) நடத்தும் 
"உலக சாம்பியன் போட்டி 2020" துபாயில் 
நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக 
ஓராண்டு தாமதாக 2021ல் நடந்து வரும் இப்போட்டியில் 
நடப்பு சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை (நார்வே) 
சாலஞ்சரான நெப்போ எனப்படும் அயன் நெப்போம்னியாச்சி (ரஷ்யா) 
எதிர்த்து ஆடுகிறார். இவ்விருவருக்கும் இடையிலான ஆறாவது 
ஆட்டம்தான் மிக நீண்ட சதுரங்க ஆட்டமாக (the longest chess game) 
சமகால வரலாற்றில் பதிவாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் 
கார்ல்சன் வென்றார். 

ஈலோ புள்ளிகள்!
-------------------------
உலக சாம்பியனாக இருப்பதுடன் மட்டுமின்றி, உலக அளவில் 
சதுரங்கத் தரத்தில் முதல் இடத்திலும் இருந்து வருகிறார் 
கார்ல்சன். இவரை எதிர்த்து ஆடும் நெப்போ உலகத் தரத்தில்
ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். வீரர்களின் ஆட்டத் திறனை 
அளவிட ஈலோ தரநிர்ணயம் (Elo Rating) என்னும் அளவுகோல் 
உள்ளது. 

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) வெளியிட்டுள்ள 
டிசம்பர் 2021க்கான சதுரங்க வீரர்களின் தரவரிசைப் 
பட்டியலில் முதல் ஐந்து இடங்கள் பின்வருமாறு:-

1) மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) 2856.
2) அலிரெஸா ஃப்ரவ்ஜா (பிரான்சு) 2804.
3) லிரன் டிங் (சீனா) 2799.
4) ஃ பேபியானா கரௌனா (அமெரிக்கா) 2792.         
5) அயன் நெப்போம்னியாச்சி  (ரஷ்யா) 2782.

ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்த இந்தியரான 
விஸ்வநாதன் ஆனந்த் தமது சதுரங்க வாழ்க்கையில் 
உச்சமாக (peak rating) 2817 என்னும் ஈலோ புள்ளிகளை 
2011 மார்ச்சில் பெற்றிருந்தார். அவர் தற்போது
டிசம்பர் 2021ல், 2751 ஈலோ புள்ளிகளுடன் தரவரிசைப் 
பட்டியலில் 16ஆவது இடத்தில் உள்ளார்.

ஆனந்துக்கு முன்னும் பின்னும்!
--------------------------- -------------------
இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன் தேசிய 
அளவிலான சதுரங்க வீரராகவும் இந்தியாவின் தேசிய 
சாம்பியனாகவும் இருந்தவர் தமிழரான மானுவல்
ஆரன் (பிறப்பு;1935). இவர் கிராண்ட் மாஸ்டர் அல்லர்.
ஆனந்துதான் இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட் 
மாஸ்டர் ஆவார்.

மானுவல் ஆரன் சதுரங்கத்தில் அனைத்துலக மாஸ்டர்
பட்டம் வென்றவர் (IM = International Master). இது கிராண்ட் மாஸ்டர் 
பட்டத்துக்கு கீழானது.1961ல் இவர் இப்பட்டத்தை வென்றபோது, இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியராக இவரே இருந்தார். 
இவரின் உச்ச ஈலோ புள்ளி ஜனவரி 1981ல் 2415 ஆகும்.


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த 
விதித் சந்தோஷ் குஜராத்தி (Vidit Santosh Gujarathi) என்னும் 
27 வயது இளைஞர் இன்று ஆனந்துக்கு அடுத்து இரண்டாம் 
இடத்தில் இருக்கிறார். FIDE நிர்ணயித்த இவரின் ஈலோ 
புள்ளிகள் (டிசம்பர் 2021ல்) 2727 ஆகும். உலக அளவில்  
தரவரிசைப்படி இவர்  22ஆம் இடத்தில் உள்ளார். 
ஆனந்து 16ஆம் இடத்தில் இருப்பதை அறிவோம்.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் என்றால்,
இந்தியாவின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் திவ்யேந்து 
பரூவா (Dibyendu Baruah, age 55) ஆவார். மேற்கு வங்கத்தைச் 
சேர்ந்த இவர் 1991ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.
இவரின் உச்ச ஈலோ புள்ளிகள் (peak Elo rating) 2003 ஜூலையில் 
2561 ஆகும். இது கடந்த கால வரலாறு.

கிராண்ட் மாஸ்டர்களாக சிறுவர்கள்!
-----------------------------------------------------------
ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோர் 18 வயதானதும்  
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற்னர்.  மாக்னஸ் கார்ல்சன்,
இந்தியாவின் பரிமெர்ஜன் நெகி ஆகியோர் 13 வயது ஆனதும் 
கிராண்ட் மாஸ்டர் ஆகினர். இன்றெல்லாம் சிறுவர்கள் 
12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர்கள் ஆகி விடுகின்றனர்.
   
பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு என்னும் சென்னையைச் சேர்ந்த 
சிறுவன் 12 ஆண்டு, 10 மாதம், 13 நாளிலேயே கிராண்ட் 
மாஸ்டர் ஆகியிருப்பது நமக்குத் பெருமை.. அபிமன்யு மிஸ்ரா 
என்னும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியச் சிறுவன் 
உலகிலேயே மிக்க இளம் வயதில், 12 ஆண்டு, 4 மாதம், 25 நாளில்  
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளது உலக சாதனையாகும். 

ஒரு காலத்தில் பாபி பிஷர் (19943-2008) என்னும் அமெரிக்க 
வீரர், 1958ல்,  தமது 15ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 
வென்றதே உலக சாதனையாக நீண்ட காலம் வரலாற்றில் 
இடம் பெற்று இருந்தது. இந்தச் சாதனையை ஹங்கேரியைச் 
சேர்ந்த ஜுடிட் போல்கர் (Judit Polgar, வயது 45) என்னும் ஒரு யூதப் 
பெண்மணி முறியடித்தார். பாபி பிஷரை விடக் குறைவான
வயதில், 15 ஆண்டு 4 மாதத்தில், 1991ல் ஜுடிட்  போல்கர்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.  

மானுட சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்திய தலைமுறையின் தோள் மீது ஏறிக் கொண்டு உலகைப் பார்க்கிறது. 
இது அடுத்தடுத்த தலைமுறைகளின் அறிவுத்திறனை 
அதிகரித்து விடுகிறது. இதன் விளைவாகவே ஆனந்த் 
18 வயதிலும், ஜூடிட் போல்கர் 15 வயதிலும், மாக்னஸ் கார்ல்சன்
13 வயதிலும், அபிமன்யு மிஸ்ரா 12 வயதிலும் கிராண்ட் 
மாஸ்டர் ஆகி இருக்கிறார்கள். 
 

சதுரங்கத்தில் பெண்கள்!
----------------------------------------
ஆனந்துக்கு முன்பு ஒரு கிராண்ட் மாஸ்டர்கூட இல்லாத 
இந்தியாவில் இன்று 72 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.
124 அனைத்துலக மாஸ்டர்கள் உள்ளனர். பெண்களைப் 
பொறுத்தமட்டில் 20 பெண் கிராண்ட் மாஸ்டர்களும்,
42 அனைத்துலக பெண் மாஸ்டர்களும் உள்ளனர்.    

கோனேரு ஹம்பி என்ற இந்திய சதுரங்க 
வீராங்கனையை நாம் அறிந்திருக்கலாம். இவர் 
2001ல் பெண் கிராண்ட் மாஸ்டர் (WGM) பட்டத்தையும் 
2002ல் இருபாலருக்கும் பொதுவான கிராண்ட் மாஸ்டர் 
(GM) பட்டத்தையும் வென்றுள்ளார்.   

துபாயில் நடைபெறும் தற்போதைய உலக சாம்பியன் 
போட்டியை செய்தியாளராக இருந்து வர்ணனை செய்து வரும்  
இந்திய வீராங்கனை டானியா சக்தேவ் (Tania Sachdev) 
பொதுவான IM பட்டமும், பெண் கிராண்ட் மாஸ்டர் (WGM)
பட்டமும் வென்றுள்ளார்.

உலக சாம்பியன் மற்றும் சாலஞ்சரை (champion, challenger)
முடிவு செய்யும் போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமானவை அல்ல.
அவை ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானவை.
ஆனால் இதுவரை எந்த ஒரு பெண்ணும் உலக சாம்பியன் போட்டி
வரை வரவில்லை.

உலக சாம்பியன் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்றால், 
முதலில் சாம்பியனை எதிர்த்து விளையாடும் சாலஞ்சராகத் 
தேர்வு செய்யப்பட வேண்டும். சாம்பியன், சாலஞ்சர் ஆகிய 
இருவருக்கும் இடையிலான போட்டியே உலக சாம்பியன் போட்டி.
இதுவரை ஒரு பெண் கூட சாலஞ்சராகத் தேர்வு செய்யப்படவில்லை.

ஒரு பெண்ணின் அதிகபட்ச சாதனையாக இதுவரை சதுரங்க 
வரலாற்றில் பதிவாகி இருப்பது என்னவெனில், மே-ஜூன் 2007ல் 
நடைபெற்ற, 2007ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன் போட்டிக்கான சாலஞ்சரைத் தேர்வு செய்யும் வேட்பாளர் 
பந்தயத்தில் (candidates tournament)  ஜுடிட் போல்கர் என்னும் பெண்மணி பங்கேற்றார் என்பதே. ஆனால் அவரால் அதில் 
வெற்றி பெற இயலவில்லை. 


மூளை விளையாட்டு!
---------------------------------
உலக அளவில் இதுவரையிலான சதுரங்க வெற்றியாளர்கள் 
மற்றும் கிராண்ட் மாஸ்டர்களில் யூதர்கள் அதிக 
எண்ணிக்கையில் உள்ளனர். சதுரங்கத்தின் கடவுளாகப் 
போற்றப்படும் காரி காஸ்பரோவ் முதல்  சதுரங்கத்தின் மிக 
வலிமையான பெண்மணியான ஜுடிட் போல்கர் வரையிலான 
மிகப்பலரும் யூதர்களே.

ஒரு மூளை விளையாட்டில் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக 
இருப்பதன் காரணிகள் என்னென்ன? பிற இனத்தவரை விட 
யூதர்களின் நுண்ணறிவு ஈவு (IQ) எனப்படும் அறிவுத்திறன்  
அதிகம் என்று கூறப்படுகிறதே! இது சரியா? இக்கேள்விகளுக்கு  
அறிவியல் ஆய்வுகள் மூலம் விடை காண வேண்டும். 

ஈலோ தர நிர்ணயம்!
-------------------------------
ஈலோ புள்ளிகளை, ஈலோ தர நிர்ணய முறையை 
உருவாக்கியவர் இயற்பியல் பேராசிரியரான 
ஆர்ப்பட் ஈலோ (Arpad Elo 1903-1992). இவர் ஹங்கேரியில் 
பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.

பேராசிரியர் ஈலோ மாஸ்டர்களின் தரத்தில் ஆடும் மிகச் 
சிறந்த சதுரங்க வீரர். அக்காலத்தில் கென்னத் ஹார்க்னெஸ் 
(Kenneth Harkness) என்பவரின் புள்ளியியல் முறையைக் கொண்டு 
வீரர்களின் திறன் ஒப்பீடு செய்யப்பட்டது. இம்முறையானது 
துல்லியமற்று  இருந்ததால், பேராசிரியர் ஈலோ துல்லியம் 
மிகுந்த ஒரு முறையைக் கண்டறிந்தார். அது அவர் பெயராலேயே 
ஈலோ தர நிர்ணய முறை  என்று வழங்கப் பட்டது. உலக சதுரங்க 
சம்மேளனம் (FIDE) 1970ல் இம்முறையை ஏற்றுக்கொண்டு 
நடைமுறைப் படுத்தியது. 

   
சதுரங்கமும் கணிதமும்!
---------------------------------------
சதுரங்கத்துக்கும் கணிதத்துக்குமான நெருக்கத்திற்கு ஒரு 
சிறந்த உதாரணத்தைப் பார்ப்போம். 

2010 ஆகஸ்டில் ஹைதராபாத்தில் 40 கணித நிபுணர்களுடன் 

ஒரே நேரத்தில் (simultaneously) விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம் விளையாடினார். சர்வதேச கணித நிபுணர்களின் காங்கிரஸ் 

(International Congress of  Mathematicians) இப்போட்டிக்கு ஏற்பாடு 

செய்திருந்தது. 35 கணித நிபுணர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர்கள் 5 பேரும் ஆக மொத்தம் 40 பேருடன் ஒரே நேரத்தில் ஆனந்த் விளையாடினார். 


போட்டியின் முடிவில் ஆனந்த் 39.5 புள்ளிகள் பெற்றிருந்தார்.

ஆனந்துடன் விளையாடிய 40 கணித நிபுணர்களில் 39 பேர் தோல்வி அடைந்தனர். கணித மேதையான டி ஸ்ரீகர் (T Srikar) என்னும் 14 வயதுச் சிறுவனுடன் மட்டும் ஆனந்த் டிரா செய்தார்.


கணிதம் சதுரங்கம் இடையிலான நெருக்கம் தொன்மையானது. 
இமானுவேல் லஸ்கர் (Emanuel Lasker 1868-1941) என்னும் ஜெர்மன் 

கணித மேதை சதுரங்க வீரரும் ஆவார். இவர் 1894 முதல் 1921 வரை 

27 ஆண்டுகள் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார்.


டாக்டர் மாக்ஸ் ஊவ் (Dr Max Euwe 1901-1981) என்னும் நெதர்லாந்து நாட்டின் 

கணித மேதை 1935-37ல் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார்.


மூன்று வடிவங்களில் சதுரங்கம்!

---------------------------------------------------

தற்காலத்தில் சதுரங்கம் மூன்று வேறுபட்ட வடிவங்களில் (three formats)

ஆடப்படுகிறது.

1) செவ்வியல் சதுரங்கம்  (Classical Chess)

2) விரைவுச் சதுரங்கம்  (Rapid Chess)

3) மின்னல் சதுரங்கம் (Blitz Chess) 


இம்மூன்று வடிவங்களையும் பிரிப்பது அவற்றுக்கு 

வழங்கப்படும் கால அளவு மட்டுமே.வேறெந்த வேறுபாடும் இல்லை.

FIDE நடத்தும் செவ்வியல் ஆட்டத்திற்கான   

கால அளவு ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் பின் வருமாறு;-

முதல் 40 நகர்த்தல்களுக்கு 120 நிமிடம்.

அடுத்த 20 நகர்த்தல்களுக்கு 60 நிமிடம்.

பின் ஆட்டம் முடியும்வரை 15 நிமிடம்.

61ஆவது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 

30 வினாடி.


FIDE நடத்தும் விரைவு வடிவ ஆட்டங்களின் (rapid chess ) கால அளவு 

பின்வருமாறு:- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 15 நிமிடம்.

அத்துடன் முதல் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு 

நகர்த்தலுக்கும் 10 வினாடி.


FIDE நடத்தும் மின்னல் ஆட்டங்களுக்கான (Blitz chess)  

கால அளவு வருமாறு:- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 

3 நிமிடம். அத்துடன் முதல் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு 

நகர்த்தலுக்கும்  2 வினாடி.


சாகர் ஷா என்னும் அனைத்துலக மாஸ்டர் நடத்தி வரும் 

Chess Base India என்னும் இணையதளம் கார்ல்சன், நெப்போ 

ஆட்டங்களை நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. மேலும் 

இந்தியில் நேரடி வர்ணனையும் அளிக்கிறது. 


அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் The Queen's Gambit 

என்னும் சதுரங்கம் பற்றிய ஆங்கில நெடுந்தொடரை 

தமிழர்கள் பலரும் பார்த்து வருகிறார்கள். 

(The Queen's Gambit = ராணியின் பலிப்பொருள் ஏற்பு). சதுரங்கம் 

குறித்து அநேக திரைப்படங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன  

அவற்றுள் The pawn sacrifice என்ற படம் மிகச் சிறந்தது. முன்பு போல் 

தந்தக் கோபுரத்து விளையாட்டாக இல்லாமல், அனைவருக்கும் எளிதில் கிட்டும் விளையாட்டாக வீதிக்கு வந்து விட்ட 

சதுரங்கம் எல்லோராலும் விரும்பப் படுகிறது..

**************************************************     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக