ஞாயிறு, 25 ஜூன், 2023

மார்க்சிஸ்ட்டாக இருப்பதற்கான நிபந்தனைகள்!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
1) மார்க்சிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து, புரிந்து 
மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

2) ஏதேனும் ஒரு வர்க்க ஸ்தாபனத்தில் வேலை 
செய்ய வேண்டும். தொழிற்சங்கம், விவசாய 
சங்கம் போன்றவை வர்க்க ஸ்தாபனங்கள்.

3) தான் வாழும் நாட்டின் சமகால உற்பத்தி முறையைப் 
பற்றிய தெளிந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும்.

ஒருவர் இந்திய மார்க்சிஸ்ட் என்றால் அவர் இந்தியாவின் 
சமகால உற்பத்தி முறையைப் பற்றிய அறிவைப் 
பெற்றிருக்க வேண்டும்.உற்பத்தியானது எப்படி 
நடைபெறுகிறது? உற்பத்தியானது அறிவியல் 
மூலமாக நடைபெறுகிறது. எனவே அறிவியலில் 
குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருக்கும்போதுதான் 
சமகால உற்பத்தி முறையைப் பற்றிய அறிவைப் 
பெற முடியும்.

மார்க்ஸ் வரையறுத்த ஆலைப்பாட்டாளி 
(industrial proletariat) என்பவர் அறிவியல் கல்வி 
பெறாமல் இருந்தாலும், தமது பாட்டாளி வர்க்கத் 
தன்மை காரணமாக உற்பத்திமுறை பற்றிய 
அறிவைப் பெற இயலும். பாட்டாளி வர்க்கம் 
அப்படித்தான் உற்பத்தி குறித்த அறிவைப் 
பெறுகிறது.

ஆலைப்பாட்டாளி வர்க்கம் அல்லாத பிற 
வர்க்கத்தினர் குறிப்பாக குட்டி முதலாளித்துவ, 
 லும்பன் வர்க்கத்தினருக்கு பாட்டாளி 
வர்க்கத்தினருக்கு கிடைத்த வாய்ப்பு 
கிடைக்காத நிலையில், அவர்கள் அறிவியலைக் 
கற்றுத்தான்  உற்பத்தி பற்றிய அறிவைப் 
பெற இயலும்.

இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தொடங்கி 
நூறு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மார்க்சியம் 
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒரு 
சரியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கூட இன்னும் 
கட்டப்படவில்லை.

இதற்கான பல காரணங்களில் இந்தியாவின் 
சமகால உற்பத்திமுறை பற்றிய அறிவை 
கம்யூனிஸ்டுகள் பெறாமல் இருப்பதுதான் 
பிரதான காரணம் ஆகும்.

மார்க்சிய அறிவு என்பதே அந்தந்த நாட்டின்
உற்பத்திமுறை பற்றிய அறிவைப் பெறுவதுதான்.
அப்போதுதான் மார்க்சியத்தைப் பிரயோகிக்க 
முடியும். உற்பத்தி உறவை மாற்றி அமைக்க 
முடியும். உற்பத்தி உறவை மாற்றி அமைப்பதுதானே 
கம்யூனிஸ்டுகளின் பிரதான கடமை.

இந்தியாவின் தொழில் துறை 
வங்கித் துறை 
ரயில்வேத் துறை 
தொலைதொடர்புத் துறை 
நெடுஞ்சாலைத் துறை 
துறைமுகம் மற்றும் கடல்சார் துறை 
போன்ற பல்வேறு துறைகளில் உற்பத்தி 
எப்படி நடக்கிறது என்ற அறிவு ஒரு மார்க்சிஸ்டுக்கு 
மிகவும் முக்கியம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக இந்திய மார்க்சிஸ்டுகள்,
மார்க்சிய லெனினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் 
ஆகியோர் சமகால உற்பத்தி முறை பற்றிய 
தேவையான அறிவில் சிறிது கூடப் பெறாமல்
இருக்கிறார்கள்.

1940களில், 1950களில் இந்தியாவில் நிலவிய 
பின்தங்கிய உற்பத்தி முறையைப் பற்றிய 
அறிவுதான் 99.9 சதவீதம் கம்யூனிஸ்டுகளுக்கு 
இருக்கிறது. சமகால உற்பத்தி என்பது,
அதாவது இந்த 2023ல் உற்பத்தி என்பது அசுரத் 
தனமாக நவீனப் படுத்தப் பட்டுள்ளது. 

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி 
சமகாலத்தில் தொழிற்புரட்சியின் நான்காவது 
வெர்ஷனில் நாம் இருக்கிறோம்.
(industrial revolution 4.0). இது AI எனப்படும் 
Artificial Intelligence, Digitalisation, Quantum computing
என்று விண்ணைத் தொடும் தொழில்நுட்பமாக 
உள்ளது. 

எனவே சமகால உற்பத்தி முறை பற்றிய அறிவைப் 
பெறவிரும்பும் எவர் ஒருவருக்கும் அடிப்படையானதும் 
அகல்விரிவானதுமான அறிவியல் கல்வி அவசியம்.

அறிவியல் கல்வியின் முக்கியத்துவம் 
முன்னெப்போதையும் விட தற்போது வெகுவாக 
முன்னுக்கு வந்துள்ளது. சமூகம் மொத்தமும் 
அறிவியல் கல்வியைப் பெருமளவில் பெற்று 
வருகிறது.

இந்த ஆண்டு ப்ளஸ் டூ (XII std) தேர்வு எழுதிய 
8 லட்சம் பேரில் அறிவியல் பிரிவு பாடங்களை 
(Science group) படித்தவர்கள் 5 லட்சம் பேர்;
வணிகபிரிவு 2.5 லட்சம் பேர்; வெறும் 45000
பேர் மட்டுமே arts group (அதாவது history literature
போன்ற பாடப் பிரிவினர்)

சமூகத்துக்கு வழிகாட்டவும் சமூகத்திற்குத் 
தலைமை தங்கவும் கடமைப்பட்டுள்ள 
மார்க்சிஸ்டுகள் அறிவியல் கல்வியைப் 
பெற்றிருக்க வேண்டாமா? நமது சமூகத்தின் 
சாதாரண உறுப்பினர்கள் அறிவியல் கல்வி 
பெற்றிருக்கும்போது சமூகத்திற்குத் 
தலைமை தாங்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் 
அறிவியல் கல்வி பெற்றிருக்க வேண்டாமா!

அறிவியல் கற்காமல் சமகால உற்பத்தி முறை 
பற்றிய அறிவைப் பெற இயலாது. உற்பத்தி முறை 
பற்றிய அறிவைப் பெறாமல் உற்பத்தி உறவை 
மாற்றியமைக்க முடியாது.

எனவே மார்க்சிடுகளே, மா-லெ தோழர்களே,
அறிவியலைப் படியுங்கள். கணிதம், இயற்பியல் 
படியுங்கள். அறிவியலைப் பரப்பும் 
நியூட்டன் அறிவியல் மன்றம் போன்ற அறிவியல் 
அமைப்புகளை ஆதரியுங்கள்.

ஆதரிப்பது என்றால் நாங்கள் எந்த விதமான 
நிதி உதவியையும் கோரவில்லை. நிதி எங்களுக்குத்  
தேவையில்லை. எங்களின் அறிவியல் பரப்பும் 
பணிகளை ஆதரியுங்கள். அறிவியலைப் படியுங்கள்.

நியூட்டன் அறிவியல் மன்றமானது
1) Print media
2) Electronic media
3) Social media
4) public forum 
உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிழும் அறிவியலைப் 
பரப்பி வருகிறோம்.

இதுவரை எங்களை ஆதரித்தவர்களும் சரி,
எங்களின் அறிவியல் போதனைகளுக்குச் செவி 
மடுத்து பயன் அடைந்தவர்களும் சரி வலதுசாரிகளே! 
இடதுசாரி முகாமின் தோழர்களும் இனிமேலாவது 
எங்களால் பயன் அடையத் தொடங்குவார்கள் என்று 
நம்புகிறோம்.
-----------------------------------------------------------------------  
பின்குறிப்பு:
இடதுசாரி முகாமில் உள்ளோர் எங்கலின் அறிவியல் 
பணிகளை ஆதரிக்காவிட்டாலோ எங்களின் 
அறிவியல் போதனைகளுக்குச் செவிமடுக்காமல் 
போனாலோ நஷ்டம் எங்களுக்கு அல்ல!
********************************************  
           
   
    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக