சனி, 7 ஏப்ரல், 2018

அத்வைதமும் குவான்டம் தியரியும்!
----------------------------------------------------------------
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரையிலான
இயற்பியல், நியூட்டனின் இயற்பியல் (Newtonian physics)
என்று அழைக்கப் படுகிறது. 1900ஆம் ஆண்டுடன்
நியூட்டனின் இயற்பியலின் காலம் முடிவடைகிறது.

1901 முதல் இன்று வரையிலான இயற்பியல்
நவீன இயற்பியல் (modern physics) எனப்படுகிறது.
நவீன இயற்பியலில் ஐன்ஸ்டினின் சார்பியல்
கொள்கை, குவான்டம் கொள்கை. இழைக்கொள்கை
(string theory) ஆகியவை உள்ளடங்கும்.

பொதுவாக எப்போதுமே இயற்பியல் என்பது
கணிதத்தையும் உள்ளடக்கியது. என்றாலும் பெருங்
கணிதப் புலமை இல்லாமலேயே நியூட்டனின்
இயற்பியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறைந்த
பட்சக் கணித அறிவு இருந்தாலே போதும், நியூட்டனின்
இயற்பியலைக் கற்றுத் தெளிய முடியும் என்ற நிலை
இருந்தது.

இந்த நிலைமை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
மாறத் தொடங்கியது. ஐன்ஸ்டினின் சிறப்புச்
சார்பியல் கொள்கை  1905ல் வெளிவந்தது. 1915ல்
ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல் கொள்கை
வெளிவந்தது. இவற்றைப் புரிந்து கொள்ள
ஆழமான கணித அறிவு தேவைப் பட்டது.
கணிதத்தில் பெரும் புலமை இல்லாமல் ஐன்ஸ்டினின்
புலச் சமன்பாடுகளை விளங்கிக் கொள்ள இயலாது.

தொடர்ந்து மாக்ஸ் பிளாங்க், நியல்ஸ் போர், ஷ்ராடிங்கர்,
பால் டிரக், ஹெய்சன் பெர்க் உள்ளிட்ட பலர்
குவான்டம் விசையியலை (quantum mechanics)
உருவாக்கினர். இதைப் புரிந்து கொள்ள ஆழமான
கணித அடிப்படை அவசியமானது.

அடுத்து வந்த இழைக்கொள்கை முன்னிலும்
கூடுதலான கணித அறிவைக் கோரியது.
(இழைக்கொள்கை பற்றி அறிந்திட பெப்ரவரி 2017
அறிவியல் ஒளி இதழில் வெளியான என்னுடைய
கட்டுரையைப் படிக்கலாம். உலக அளவில்
இழைக்கொள்கை பற்றி தமிழில் வெளிவந்த முதல்
கட்டுரை இதுவே).

அண்டவெளி என்பது ஒரு வெக்டர் வெளி (vector space)
என்று கருதினார் நியூட்டன். ஆனால் அண்டவெளி
ஒரு டென்சார் வெளி (tensor space) என்று கருதினார்
ஐன்ஸ்டின்.ஐன்ஸ்டினின் கருத்தே மெய் என்று
நிரூபிக்கப் பட்டது. அண்டவெளியானது வளைந்த
வெளியாகவும் (curved space) டென்சார் வெளியாகவும்
இருக்கிறது.

எனவே வெளியைப் புரிந்து கொள்ள, அதாவது
வெளி காலத்தை (space time) புரிந்து கொள்ள,
டென்சார் அல்ஜிப்ரா பற்றிய கணித அறிவு
அவசியமாகிறது. அதே போல, வளைந்த
வெளிக்கான வடிவியல் (curved space geometry) அறிவும்
தேவை.

ஆனால் இந்தியப் பள்ளிகள் எல்லாவற்றிலும்
11,12 வகுப்புகளில் வெக்டர் அல்ஜீப்ரா சொல்லித்
தரப்படுகிறதே தவிர, டென்சார் அல்ஜீப்ரா
சொல்லித் தரப் படுவதில்லை. அதே போல,
யூகிளிட்டின் வடிவியல் மட்டுமே சொல்லித்
தரப் படுகிறதே தவிர, வளைந்த வெளி வடிவியல்
(curved space geometry) பாடத்திட்டத்திலேயே இடம்
பெறுவதில்லை.

சுருங்கக் கூறின், முதுகலை மட்டத்திலான அறிவியல்
பட்டப் படிப்பில்தான் டென்சார் அல்ஜீப்ரா
பாடத்திட்டத்தில் உள்ளது.  முதுகலை  மட்டத்திலான
கணித அறிவை எத்தனை பேரால் பெற இயலும்?
தேவையான கணித அறிவு இல்லாமல்
குவான்டம் இயற்பியலை எத்தனை பேரால் படிக்க
இயலும்? புரிந்து கொள்ள இயலும்?

ஆக மொத்தத்தில், போதிய கணித அறிவு
இல்லாமையால்தான் குவான்டம் தியரியானது
இந்தியச் சூழலில் இன்றளவும் அறிந்து
கொள்ளப் படாமலும் புரிந்து கொள்ளப்
படாமலும் இருக்கிறது.

இப்போது அத்வைதத்திற்கு வருவோம். அத்வைதம்
புரிந்து கொள்ளக் கடினமானது என்கிற ஒரு
சித்திரத்தை தமிழ்ச் சூழலில் சிலர் உருவாக்கி
வைத்துள்ளனர். இந்தச் சித்திரத்தை சில
அத்வைத வியாபாரிகள் பேணிக்காத்து
வருகின்றனர்.

இது உண்மையா? பரிசீலிப்போம்!
அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது அல்ல.
இன்னும் சொல்லப் போனால், பிற தத்துவங்களை விட,
அத்வைதம்  புரிந்து கொள்வதற்கு எளிதானது.

அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது என்பது
கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம். அத்வைதத்தில்
எந்த அம்சம் புரிந்து கொள்ளக் கடினமானது, ஏன்
கடினமானது என்று இந்தக் கருத்துமுதல்வாதிகள்
சொல்வார்களா?

நீங்கள் பிரம்மத்தோடு ஐக்கியம் ஆனால்தான்
அத்வைதத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று
சொல்வார்கள் இவர்கள். இதெல்லாம் மோசடி,
பித்தலாட்டம்!.

எட்டாம் நூற்றாண்டில் தோன்றி பத்தாம்
நூற்றாண்டிலேயே வழக்கு வீழ்ந்த தத்துவம்
அத்வைதம். இதை எல்லோராலும் புரிந்து
கொள்ள முடியாது என்று கூறுவதெல்லாம்
போக்கிரித்தனம். திண்ணை தூங்கிச்
சோம்பேறிகள் இப்படிச் சொல்லிக்கொண்டு
திரிவார்கள்.

அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது என்ற
மாயையை எனது நூல் உடைத்து எறிகிறது.
யார் எவராயினும், அவர் படிப்பு குறைவான
ஆட்டோ ஓட்டுநர் என்றாலும் அவரும் புரிந்து
கொள்ளும் விதத்தில் அத்வைத சாரம் இந்நூலில்
விளக்கப் பட்டுள்ளது. மேலும் அத்வைதம்
மார்க்சியப் பார்வையில் விமர்சிக்கப் பட்டுள்ளது.

JUST LIKE THAT எவர் ஒருவரும் அத்வைதத்தை
அறிவதை இந்நூல் உறுதி .செய்கிறது. இவ்வளவு
எளிதானதா அத்வைதம் என்று அனைவரையும்
வியக்க வைக்கிறது.

இந்த நூல் வெளிவந்ததுமே,
அத்வைத  மோசடிகள், பித்தலாட்டங்கள், அத்வைத
வியாபாரம் ஆகிய எல்லாம் முடிவுக்கு வந்து
விடுகின்றன.அத்வைத வியாபாரிகள் அடிவயிற்றில்
குத்துப்பட்டதை போல அலறுகிறார்கள்.

எலுமிச்சம் பழத்தை அறுத்து, குங்குமத்தை அப்பி,
சாம்பிராணிப் புகை போட்டு, புகைமூட்டத்துக்கு
நடுவே, அதோ மங்கலாத் தெரியுது பாரு, அதுதான்
அத்வைதம் என்று காட்டிப் பிழைப்பு நடத்திக்
கொண்டு இருந்தவர்கள் வெலவெலத்துப்
போனார்கள்.

அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது
என்று பொய் சொல்பவர்கள் மனித ஆற்றலின்
மகத்துவத்தைக் குறை சொல்லும் மூடர்கள்.
அவ்வளவுதான்.
******************************************************* 











               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக