ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மீன் உண்பதால் ஆபத்தா?
சென்னை எண்ணெய்க்கசிவு அகற்றும் பணிகள்!
வாளி என்பது தொழில்நுட்பம் அல்ல!
தினமும் 7 டன் எண்ணெய் ஆவியாகிறது!
கட்டுரையின் இரண்டாம் பகுதி!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
ஜனவரி 28இல் நடந்த இந்த எண்ணெய்க் கசிவின்போது,
எவ்வளவு எண்ணெய் கடலில் கலந்துள்ளது என்பது
இந்த விஷயத்தில் முக்கியமான கேள்வி. இதைத்
தெரிந்து கொள்ளாமல் இவ்விஷயத்தில் கருத்துக்
கூறுவது அபத்தமாகும்.

மத்திய அரசின் தொழில்நுட்ப அமைப்பான இன்காய்ஸ்
(INCOIS- Indian National Centre for Ocean Information Services) அமைப்பு
கடலில் கலந்த எண்ணெய் 20 டன் என்று தெளிவாகக்
கூறுகிறது. மேலும் அந்த எண்ணெய்ப் படலம் கடலில்
எங்கெல்லாம் செல்லும் என்று காட்டுகிற ஒரு படத்தை
(trajectory) வரைந்து கழிவகற்றும் பணியில் உள்ளோருக்கு
வழங்கி உள்ளது.

மொத்தக் கசிவே 20 டன்தான் என்பது மிகப்பெரிதும்
ஆறுதல் அளிக்கும் செய்தி. எண்ணெய்க்கசிவு
விபத்துகளிலேயே மிக மிகக் குறைவான கசிவு
இந்த விபத்தில்தான் ஏற்பட்டு உள்ளது.

சென்னை எண்ணூர் கடற்பகுதியில் தொடங்கி, மெரீனா,
நீலாங்கரை, வெட்டுவாங்கேணி வழியாக, இந்த
எண்ணெய்ப்படலம் செல்லக்கூடும் என்று அறிவியல்
கணிப்புகள் கூறுகின்றன. விஜிபி கோல்டன் பீச்
பகுதிக்கு வெகு முன்னதாகவே எண்ணெய்ப்படலம்
அகற்றப்பட்டு விடும் என்று தெரிய வருகிறது.

2010 ஆகஸ்டில் மும்பை கடற்கரையில் ஏற்பட்ட,
எண்ணெய்க் கசிவு விபத்தை இத்துடன் ஒப்பிட்டுப்
பார்ப்பது நலம். அப்போதைய மத்திய சுற்றுச் சூழல்
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் மராட்டிய முதலவர்
அசோக் சவானும் இவ்விபத்தைக் கையாண்டனர்.
இதில் கசிவு ஏற்பட்டு, கடலில் கலந்த எண்ணெய்
அதிக பட்சமாக 800 டன் ஆகும்.

மும்பை கடற்கரையில் தொடங்கி ராய்காட் (Raigad)
வரை எண்ணெய்ப் படலம் விரைவாகப் பரவியது.
மீன்களை உண்ண வேண்டாம் என்று அரசே
அறிவித்தது. கழிவகற்றும்  பணிகள் மாதக் கணக்கில்
நீடித்தன.

800 டன் கசிவு ஏற்பட்ட மும்பை விபத்துடன், 20 டன்
கசிவு ஏற்பட்ட சென்னை விபத்தை ஒப்பிட்டுப்
பார்க்கும்போது நமக்கு ஆறுதல் கிடைக்கிறது.

இன்காய்ஸ் அமைப்பின் அறிக்கைப்படி, நாளொன்றுக்கு
சராசரியாக சுமார் 7 டன் எண்ணெய்ப்படலம்
ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து விடுகிறது.
இது மனித முயற்சியின் சுமையைக் குறைத்து,
நம்மை ஆசுவாசப் படுத்துகிறது.

இந்த விவகாரத்தில் பயன்படும் சில ஆங்கிலச்
சொற்களின் பொருளை அறிந்து கொள்வது நலம்.
oil spill = எண்ணெய்க்கசிவு, எண்ணெய் சிந்துதல்
oil slick= நீரின் மீது படியும் எண்ணெய்ப் படலம்
sludge= எண்ணெயுடன் நீரும் மணலும் இதர பொருட்களும்
கலப்பதால் ஏற்படும் ஈரப்பதமான கசடு.

சிந்திய எண்ணெய் 20 டன்தான். ஆனால் அதை அகற்றும்
முயற்சியில், எண்ணெயுடன் இதர பொருட்கள்
கலப்பதால் உண்டாகும் ஈரப்பதமான கசடு (sludge)
20 டன்னை விடப் பல மடங்கு அதிகமாகும். அதாவது
அகற்ற வேண்டிய கழிவு 20 டன்னை விட அதிகமாகும்.

இந்தக் கட்டுரையில் உள்ள தரவுகளும் விவரங்களும்
அறிவியல்-தொழில்நுட்ப அமைய்ப்பின் தரவுகள்.
அரசியல்வாதிகளின் கூற்றை அறிவியல் ரீதியாகப்
பொருட்படுத்த முடியாது. எனவே அரசியல்வாதிகளின்
கூற்றுக்கு கோனார் நோட்ஸ் போடுகிறவர்களுக்கு
இந்தக் கட்டுரை உவப்பாக இருக்காது.

மீன் உண்ணலாம். நடுக்கடலில் சென்று மீனவர்கள்
பிடித்து வரும் மீன்கள் பாதிப்படையவில்லை. அவற்றை
உண்ணத் தடையில்லை. எண்ணெய்ப் படலம் நடுக்கடல்
பகுதிக்குப் பரவவில்லை  என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
கரையோரமாகவே எண்ணெய்ப் படலம் பரவியுள்ளது.

எனவே பீதியைக் கிளப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மண்ணள்ளிப்போட வேண்டாம் என்று குட்டிமுதலாளித்துவப்
பெருந்தகைகளை நியூட்டன் அறிவியல் மன்றம்
கேட்டுக் கொள்கிறது.

பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்ன? இதை
அடுத்த கட்டுரையில் காணலாம்.
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: மருத்துவ அறிவுரைப்படி, இக்கட்டுரை
ஆசிரியர் அசைவம் உண்பதை நிறுத்தி ஓராண்டாகிறது.
எனினும், இந்த நிகழ்வை ஒட்டி, குழம்பில் வெந்த
வஞ்சிரம் மீனை உண்பது என்று முடிவெடுத்து,
கடைக்குச் சென்றால் அங்கு வஞ்சிரம் கிடைக்க
வில்லை. மீன் வரத்தும் விற்பனையும் வெகுவாகக்
குறைந்துள்ளன. குட்டி முதலாளித்துவத்திற்கு நன்றி.
பின்குறிப்பு-2: இன்காய்ஸ் அமைப்பின் அறிக்கை
இங்கு இணைக்கப் பட்டுள்ளது. அதைக் கண்டிப்பாகப்
படிக்குமாறு வேண்டுகிறோம்.
************************************************************************
        


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக