திங்கள், 27 பிப்ரவரி, 2017

(4) ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு
அரசு கொள்கை ஏதேனும் வகுத்துள்ளதா?
NELP என்றால் என்ன? HELP என்றால் என்ன?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும்
உள்ள 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்
படுகிறது. இருப்பினும் தமிழகம் தவிர்த்த பிற
மாநிலங்களில் உள்ள 30 இடங்களிலும் இத்திட்டத்திற்கு
எவ்வித எதிர்ப்பும் சிறு அளவில் கூட இல்லை.
மாறாக ஆதரவும் வரவேற்பும் உள்ளன. விவசாயம்
அழிதல், விளைநிலங்கள் தரிசாதல், நிலத்தடி நீர்
நஞ்சாதல் போன்ற பெருந்தீமைகள் ஹைட்ரோ கார்பன்
திட்டத்தால் ஏற்படுவதாக அம்மாநிலங்களில் எவரும்
கூறவில்லை.

2) ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இதற்கு எதிர்ப்பு உள்ளது
என்பதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

3) எண்ணெய், வாயு ஆகியவற்றை (அதாவது ஹைட்ரோ
கார்பனை) தோண்டி எடுப்பது இந்தியாவில் பிரிட்டிஷ்
ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரை நடந்து வருவதாகும்.
இதில் புதிதாக எதுவும் இல்லை.

4) அசாமில் உள்ள திக்பாய் (Digboi) என்ற இடத்தில்
ஆசியாவிலேயே முதன் முதலாக எண்ணெய்க் கிணறுகள்
1901இல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தோண்டப்பட்டன.
இந்தியாவின் எண்ணெய் நகரம் (oil city of India) என்று
திக்பாய் அழைக்கப் படுகிறது என்பதை பூகோளம்
பயிலும் பள்ளிச் சிறுவர்கள் அறிவார்கள்.

5) அப்படியானால் எண்ணெய் எடுப்பது பற்றி இந்திய
அரசுக்கு ஏதேனும் கொள்கை உள்ளதா? இது குறித்து
கொள்கை முடிவுகள் எவையேனும் இந்திய அரசால்
எடுக்கப்பட்டு உள்ளதா? அல்லது ராணுவ ரகசியம்
போல, எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறதா?

6) அண்மைக்கால வரலாற்றைப் பார்த்தால், மார்ச் 1997இல் அப்போதைய இந்திய அரசு எண்ணெய் எடுக்கும்
ஒரு கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையின்
பெயர் நெல்ப் (NELP= New Exploration Licensing Policy) என்பதாகும்.
அப்போதைய பிரதமர் தேவ கவுடா அவர்கள். அவரைத்
தொடர்ந்து வந்த பிரதமரான ஐ கே குஜ்ரால்
காலத்தில் இக்கொள்கை தீவிரமாக முன்னெடுக்கப்
பட்டது.

7) பல்வேறு குறைபாடுகளால் இக்கொள்கையால்
வரையறுத்த இலக்கை அடைய முடியவில்லை.
எனவே இக்கொள்கை திருத்தப்பட்டு, கடந்த ஆண்டு
மார்ச் 2016இல், நரேந்திர மோடி அரசு ஹெல்ப் (HELP)
என்ற கொள்கையை அறிவித்தது.
(HELP = Hydrocarbon Exploration Licensing Policy)

8) அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, இத்திட்டம் (HELP) அறிவிக்கப்பட்டு, தொலைக்காட்சிகளிலும்
ஏடுகளிலும் செய்திகள் வந்த நாள்: 10 மார்ச் 2016.
இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டில் பரவலான எதிர்ப்பு
கிளம்பியது தற்போது பெப்ரவரி 2017இல்.
இடைப்பட்ட இந்த 11 மாதங்களில், மோடி அரசின்
ஹெல்ப் திட்டம் குறித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
எவரிடம் இருந்தும் சிறு எதிர்ப்புகூட கிளம்பவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

9) "பாட்டாளி வர்க்கம் தன் சொந்த அனுபவத்தில்
இருந்துதான் படிப்பினை பெறும்" என்பார் லெனின்.
எனவே அமைச்சரவை எடுக்கிற முடிவை எல்லாம்
பரந்துபட்ட பொதுமக்கள் தாங்களாகவே படித்துத்
தெரிந்து கொண்டு ஆதரிக்கவோ எதிர்க்கவோ
செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால்
மக்களின் முன்னணிப்படையாகத் திகழ வேண்டிய
அரசியல்வாதிகள் அமைச்சரவை முடிவைப் பற்றி
அறியாமல் இருப்பது மன்னிக்கக் கூடிய குற்றமல்ல.

10) இன்று 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்
படுகிறது என்றால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
ஹெல்ப் (HELP) கொள்கை செயல்படுத்தப் படுகிறது
என்பதுதானே பொருள்!

11) ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயம்
அழியும் என்று கருதுவோர், இந்தக் கொள்கை
அறிவிக்கப் படும்போதே எதிர்த்து இருக்கலாமே!
எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதற்கு
உரிமை உண்டு. ஆனால் முன்பு ஏன் எதிர்க்கவில்லை
என்பதற்கு பதில் தரப்பட வேண்டும். முன்பே எதிர்த்து
இருந்தால், அதாவது சிறுவயல்கள் கண்டறியப்பட்டு
(discovered small fields) அறிவிக்கப்பட்ட உடனேயே
எதிர்த்து இருந்தால், நெடுவாசலில் உள்ள சிறுவயல்
ஏலத்திற்கே வந்திருக்காதே. எல்லாக் கட்சிகளின்
அரசியல்வாதிகளும் அப்போது என்ன செய்து கொண்டு
இருந்தார்கள்?
***********************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக