வெள்ளி, 28 ஜூலை, 2017

துரோகம் செய்தவர்கள் லாலுவும் ராகுல் காந்தியுமே!
துரோகத்தை முறியடித்தார் நித்திஷ் குமார்!
-------------------------------------------------------------------------------------------
1) பீகாரில் மாபெருங்கூட்டணி அமைந்து நித்திஷ்
 முதல்வர் ஆனார். இதே கூட்டணி தொடர்ந்து நீடித்தால்,
2019 தேர்தலில் நித்திஷ்குமார் பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப் படுவார் என்ற நிலை இருந்தது. இது
சோனியாவுக்குப் பிடிக்கவில்லை.

2) பிரதமர் வேட்பாளராக தன்னுடைய குடும்பத்திற்கு
அப்பால் யாரும் அறிவிக்கப்படுவது சோனியாவால்
தாங்க முடியாத ஒன்று. எனவே நித்திஷ்குமார்
சோனியாவின் நெஞ்சில் தைத்த நெருஞ்சி முள் ஆனார்.

3) லாலு மூலம் தொடர்ந்து நித்திஷுக்கு நெருக்கடி
கொடுத்து வந்தார் சோனியா. மாபெருங் கூட்டணியில்
இருந்து நித்திஷை வெளியேற்ற வேண்டும் என்ற
ஒற்றை அஜெண்டாவுடன் சோனியா செயல்பட்டார்.

4) சோனியாவின் யோசனை லாலுவுக்கு மிகவும்
பிடித்து இருந்தது. நித்திஷை வெளியேற்றி விட்டு
தன் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி
யாதவை முதல்வராக்கி. அவரை பினாமியாகக் கொண்டு
தானே பீகாரை ஆளலாம் என்று கனவு கண்டார் லாலு.

5) லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை
முதல்வரான போது அவரின் வயது 25 மட்டுமே.
ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர் என்பதே
அவரின் கல்வித் தகுதி. இன்னொரு மகனான
தேஜ் பிரதாப் யாதவ்வும் நித்திஷிடம் அமைச்சராக
இருக்கிறார். இவ்விரு அமைச்சர்களின் துறை சார்ந்த
கோப்புகள் அனைத்தையுமே லாலுதான் பார்வை
இடுகிறார்; முடிவு எடுக்கிறார். பீஹார் மக்கள்
அனைவரும் அறிந்த செய்திதான் இது.

6) ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்.
பீஹார் முதல்வர் என்ற உறையில் நித்திஷ் என்ற
ஒரு கத்தி மட்டும்தான் இருக்க முடியும். லாலுவின்
தலையீடு நித்திஷால் பொறுக்க முடியாத எல்லை
வரைக்கும் சென்றது. ராகுலிடம் முறையிட்டார்
நித்திஷ்.தன பங்கிற்கு நித்திஷை வெறுப்பேற்றினார்
ராகுல்.

7) எனவே பாஜகவின் துணையை நாடுவது என்ற
முடிவை எடுத்தார் நித்திஷ். இதற்கு முன்பு
பீஹார் முதல்வராக இருந்தபோது, நித்திஷிடம்
துணை முதல்வராக இருந்தவர் பாஜகவின் சுஷில்
குமார் மோடி. இவர்கள் இருவரும் முதல்வராகவும்
துணை முதல்வராகவும் எட்டு ஆண்டுகள் சுமுகமாகப்
பணியாற்றிய வரலாறு உள்ளது.

8) ஒருபுறம் கூடவே இருந்து குழி பறிக்கும் லாலு.
மறுபுறம் தன தலைமையை ஏற்றுக்கொண்டு
சுமுகமாக ஆட்சி நடத்த உதவிய சுஷில் குமார்.
எனவே லாலுவை விவாகரத்து செய்தார்
நித்திஷ். சுஷிலுடன் வாழ முடிவு செய்தார்.

9) உட்பகை மிகவும் கொடியது. அது மனிதனை
வாழ விடாது. எனவே பாஜகவின் ஆதரவைப்
பெறுவது என்ற நித்திஷின் முடிவு தர்க்கப்
பொருத்தம் உடையதே. இந்த முடிவுக்கு
நித்திஷைத் தள்ளிய சோனியாவும் லாலுவுமே
குற்றவாளிகள்.

10) நித்திஷை வெளியேற்றியதன் மூலம், "அப்பாடா,
ஒரு போட்டியாளர் ஒழிந்தார்" என்று நிம்மதிப்
பெருமூச்சு விடுகின்றனர் சோனியாவும் ராகுலும்.

11) தனது பேராசையால் பெரு நஷ்டம் அடையப்
போகிறவர் லாலு. லாலுவின் மொத்தக் குடும்பமும்
இனி சிறையில் களி தின்றுதான் வாழ வேண்டி
இருக்கும்.

12) தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்ட குற்றவாளி
என்பதும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதால்,
தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்பதையும்
லாலு மறந்து விட்டு, பேராசையுடன் செயல்பட்டார்.
இனி அவரின் எஞ்சிய வாழ்நாள் சிறைக்கம்பிகளுக்குப்
பின்தான்.

13) நித்திஷ் குமார் படித்த இன்ஜீனியர். மின்
பொறியாளராகப் பணியாற்றியவர். மனைவி
இறந்து விட்டார். குடும்ப அரசியல் அவரிடம்
கிடையாது. ராஜதந்திரத்தில் ஆயிரம் கலைஞருக்குச்
சமம் அவர். அவரை வெறும் முரட்டு முட்டாளான,
சுயநல குடும்ப அரசியலின் அருவருக்கத்தக்க
வெளிப்பாடான லாலுவால் ஒருநாளும் வெற்றி
கொள்ள முடியாது.

14) வல்லமை வாய்ந்த நித்திஷ் குமாரை தங்கள்
அணியில் தக்க வைத்துக் கொள்ள சோனியா
முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் தன் குடும்ப
நலனுக்காக, நித்திஷை விரட்டிய சோனியாவே
முழுமுதல் குற்றவாளி!

15) ஆக, நித்திஷ் வெளியேறியது சோனியாவின்
கைங்கரியமே. இதன் விளைவு 2019லும் மோடியே
பிரதமர் என்பதை உறுதி செய்வதுதான்.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்
கொண்டு, தன் குடும்பத்தினர் மீதான வழக்குகளை
வாபஸ் வாங்கினால், நித்திஷை விரட்டி விடுவதாக
வாக்களித்து லாலு பல காய்களை நகர்த்தினார்.
அவை குறித்து பின்னர் பார்ப்போம்.
***************************************************************  
நித்திஷ்குமார் ஏற்கனவே வாஜ்பாய் அவர்களிடம்
ரயில்வே அமைச்சராக இருந்தார். இதே பீகாரில்
பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி ஆட்சி நடத்தியவர்தான்.
பாஜக- நித்திஷ் கூட்டணிதான் இயற்கையான
கூட்டணி. இது வரலாறு. இப்படிப்பட்ட ஒருவரை
தன அணியில் தக்க வைக்க காங்கிரஸ் செய்த
முயற்சி என்ன? பூஜ்யம்!! நித்திஷை போட்டியாளராக
பார்த்து, கூட்டணி அமைந்த நாள் முதல் மனம்
புழுங்கி கொண்டிருந்த சோனியா நேற்றுதான்
நிம்மதியாக உறங்கினார். காங்கிரஸ் ஒரு மண்குதிரை
என்பதை மக்கள் உணர்வது எப்போது?
               
வாஜ்பாய்  அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக
இருந்தபோது, ஒரு ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் நித்திஷ்.
இது வரலாறு. நித்திஷ் ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல.

மாபெருங்கூட்டணியில் காங்கிரஸ் ஒரு
வேண்டாத சுமைதான். (unwanted extra luggage). காங்கிரசுக்கு
போட்டியிட சீட்டு கொடுப்பதில் லாலு எவ்வளவு
கறார் ஆகவும் மிரட்டும் தொனியுடனும் நடந்து
கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்கவும்.
காங்கிரஸ் நித்திஷைத் தூக்கிச் சுமக்கவில்லை.
லாலுவும் நித்திசும்தான் தங்கள் தோள்களில்
காங்கிரஸைத் தூக்கிச் சுமந்தனர்.
**
2019ஐ விட்டுக் கொடுத்து விட்டார் சோனியா என்பதே
கசப்பான உண்மை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக