வியாழன், 22 பிப்ரவரி, 2018



Friday, 28 April 2017


வெறும் இராமசாமி ஈ.வே.ரா - பெருஞ்சித்திரனார் கட்டுரை

வெறும் இராமசாமி ஈ.வே.ரா
- பெருஞ்சித்திரனார் கட்டுரை
ஈ.வே.ரா 1965 மொழிப்போரில் இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்த தமிழ் எதிர்ப்பு கருத்துகளைக் கண்டு சினமடைந்த பெருஞ்சித்திரனார் பதிலடியாக எழுதிய கட்டுரரையின் முக்கிய வரிகள் கீழே,
"கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று 'விடுதலை'யில்  ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம்.
அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றியுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.
அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி,
அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துள்ளதாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும்,
அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.
இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ ,
அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.
ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம்.
அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.
தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான்.
பக்தவத்சலம் ஆரிய அடிமை.
பெரியார் திராவிட அடிமை.
இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ,
அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்.
இவர் பற்றி “திரு.வி.க.” அவர்கள் கூறியதாக ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
ஒருகால் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் (நாயக்கர்) , திரு.வி.க., ஈ.வே.ரா. மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம்.
அக்கால் திரு.வி.க. இவரிடம்
“ஏன், ஐயா ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று கூறுகின்றீர்களே!
அதை விட்டுத் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்று கூறினால் நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளுவோமே”
என்று கூறினாராம்.
அப்பொழுது பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களும் திரு.வி.க. கருத்தே சரி என்று கூறினாராம்.
சிறிதுநேரம் கழித்துத் திரு.வி.க. எழுந்து போய் மீண்டும் வந்தாராம்.
அவர் வருவதற்குள் ஈ.வே.ரா., பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களிடம்,
“ஏன் ஐயா, நீங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கூப்பாடு போடச் சொல்கிறீர்களே,
அப்படியே தமிழ்நாடு கிடைத்தால் அதில் உங்களுக்கும் எனக்கும் எப்படி ஐயா இடமிருக்கும்?
முதலில் நம்மையன்றோ தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் ஓடச் சொல்லுவார்கள்.
இது தெரியாமல் நீங்களும் பேசுகின்றீர்களே”
என்று கூறினாராம்.
பா.வே.மாணிக்கம் அவர்கள் உண்மையான தமிழ்த் தொண்டாரனதால் அதைப்பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லையாம்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரியாரின் உட்கோள் எவ்வாறு இருந்தது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இதனை இங்கு ஏன் வெளிப்படுத்தினோம் எனில்,
பெரியார்க்குத் தமிழ் பற்றிய எண்ணமும் எந்த அளவில் இருந்தது, இருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவே ஆகும்.
ஆனால் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை இப்பொழுது இவரும் வற்புறுத்துவதில்லை.
தமிழ் நாடு பிரியவேண்டும் என்பதுதான் இப்பொழுது இவர் கொள்கையாக இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினராவது திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
ஆனால் இவரோ தம் திராவிட நாட்டுக் கொள்கையை மக்கள் உணராதவாறு சிறிது சிறிதாகப் பேச்சிலும் எழுத்திலும் கைநழுவவிட்டதுடன் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கொள்கையைச் சிறிதுசிறிதாக கைக்கொண்டும் விட்டார்.
இவர்தம் நாளிதழான “விடுதலை”யில் முன்பெல்லாம் தலைமுகத்துப் பொறித்து வந்த “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற வேண்டுரை இப்பொழுது எடுபட்டுப் போய்விட்டது.
இவரைப் பின்பற்றும் அன்பர்களும் காலத்திற்குக் காலம் மாறுபட்டவர்கள்.
ஆகையால், அதுபற்றி ஒருவரும் கவலைப்பட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.
இவர் அரசியல் வீழ்ச்சி இப்படியாக முடிந்துவிட்டாலும் குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றி கண்டுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இத்துறையில் இவர் கண்ட வெற்றியே தமிழ்த் துறையிலும் இவரைப் இப்படிப் பேசச் செய்திருக்கிறது. //
// பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார்.
இவரோ “பண உதவி ஏதும் செய்யமுடியாது;
வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்;
நான் விற்றுத் தருகின்றேன்.”
என்று கூறினாராம்.
பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம்.
பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.
பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசித் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம்.
அவர்களை நாமும் பாராட்டுவதில்லை .
அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான்.
ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?
உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ?
ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?
உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால்,
இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்கவேண்டும்? //
//தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை.//
// தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் ,
சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும்,
புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் ,
மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் ,
அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் ,
திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும்,
திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.
// இவர் அரசியல்காரர்;
அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ ,
வரலாற்றுப் பேராசிரியராகவோ,
மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது.
அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.//
// மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.
இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார்.//
// ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்;
பகுத்தறிவு வழிகாட்டி;
அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். "
_ பாவலேறு பெருஞ்சித்தரனார்
தென்மொழி ஏடு,
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்,
தலைப்பு “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி”.
நன்றி: tamilthesiyan.wordpress
சிலர் பெருஞ்சித்திரனார் எழுதிய தொண்டு செய்து பழுத்த பழம்' என்ற பாடலை வைத்துக்கொண்டு ஏதோ அவருக்கு ஈ.வே.ராதான் வழிகாட்டி என்பது போல எழுதுகிறார்கள்.
ஈ.வே.ராவின் சாயம் வெளுத்த பிறகு பாவலேறு, பாரதிதாசன், பாவாணர் ஆகியோர் பிற்காலத்தில் அவருக்கு எதிராக எழுதியதை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள்.
அது இனி நடக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக