சனி, 6 பிப்ரவரி, 2016

எரிவாயுக் குழாய் திட்டத்தின் எதிர்காலம் என்ன?
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------
விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக்
குழாய்களைப் பதித்துக் கொள்ளலாம் என்று அண்மையில்
உச்சநீதிமன்றத்தின் மூவர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
எனினும் இத்தீர்ப்பு பிரச்சினையை முடித்து வைக்கவில்லை.
தங்களின் விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க
முடியாது என்று கொங்கு மண்டல விவசாயிகள் உறுதியாக
நிற்கிறார்கள். தமிழக அரசும் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு
தாக்கல் செய்கிறது.

ஆக விவகாரம் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வந்து விட்டது.
விரைவில் முடிக்க வல்ல எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம்
ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டு போவது ஏன்,
விவசாயிகளின் எதிர்ப்பின் நியாயங்கள் என்ன என்ற
கேள்விகளுக்கு விடை காண இத்திட்டம் குறித்து முதலில்
காண்போம்.

மகாரத்னா அந்தஸ்து பெற்ற கெயில் நிறுவனம் 
--------------------------------------------------------------------------------
எரிவாயுக் குழாய் பதிக்கும் இத்திட்டத்தை மேற்கொண்டிருக்கும்
கெயில் (Gas Authority of India Limited) நிறுவனம் அந்நிய நிறுவனமோ
தனியார் நிறுவனமோ அல்ல. அது   மத்திய அரசின் பொதுத்துறை
நிறுவனம் ஆகும். 1984இல் தொடங்கப் பட்ட இந்நிறுவனம்
1997இல் நவரத்னா அந்தஸ்தையும் 2013இல் மகாரத்னா
அந்தஸ்தையும் பெற்றது. ரூ 5000 கோடி வரையிலான முதலீடுகளை
அரசைக் கலந்து கொள்ளாமல், அதாவது பெட்ரோலியத்துறை அமைச்சகத்தைக் கலந்து கொள்ளாமல் கெயில் நிறுவனமே மேற்கொள்ளலாம்  என்பதே மகாரத்னா அந்தஸ்தின் பொருள்.
இந்தியாவில் இதுபோன்று மகாரத்னா அந்தஸ்தைப் பெற்ற
இன்னொரு நிறுவனம் பெல் (BHEL)மட்டுமே.

இந்தியாவைத் தாண்டி, மியான்மார், எகிப்து, சிங்கப்பூர் உள்ளிட்ட
வெளிநாடுகளிலும் தன் செயல்பாட்டை விரிவு படுத்தியுள்ளது
கெயில். எரிவாயுக்களைக் கையாள்வதுடன் நின்று விடாது
காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி
ஆகியவற்றிலும் தடம் பதித்துள்ளது. குஜராத் தொடங்கி
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காற்றாலைகளை
கெயில் நிறுவி உள்ளது.

கொச்சி-மங்களூரு குழாய்த் தடம் 
--------------------------------------------------------
தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும். கொச்சியில்
இருந்து மங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தின்
மொத்த நீளம் 1104 கி.மீ. இது தோராயமாக  893 கி.மீ நீளம்
முதன்மை வழியும் (trunk line), 211 கி.மீ நீளம் துணை வழியும்
(spur line) கொண்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக,
கேரளத்தில் புதுவைப்பியில் இருந்து கலமசேரி வரை 41 கி.மீ
நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணி 31.07.2013 அன்று முற்றுப்
பெற்று விட்டது.

இத்திட்டத்தின்படி,  கேரளத்தில் 510 கி.மீ, தமிழ்நாட்டில் 310 கி.மீ,,
கர்நாடகத்தில் 75 கி.மீ  நீளத்துக்கு குழாய் பதிக்க வேண்டும். 
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல். சேலம், தருமபுரி, 
கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் குழாய்த் தடத்தில் உள்ளன.

இத்திட்டம் 16 mmscmd  (million metric standard cubic meter per day),
திறன் கொண்டது. அதாவது  நாளொன்றுக்கு 16 மில்லியன் 
கனமீட்டர் வாயுவைக் கையாளும் திறன். இதில் 4 மில்லியன் 
கனமீட்டர் வாயு,  நுகர்வோர் பயன்பாட்டிற்காக பொதுக்
குழாய்களின் வழியே செல்வதாகும்.  

ஒப்புதல் வழங்கப்பட்டபோது இத்திட்ட மதிப்பீடு ரூ 3240.37
ஆகும். தற்போது கால தாமதம் காரணமாக திட்டச் செலவு
மேலும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக இக்குழாய்களின்
ஆயுட்காலம் (economic life) 25 ஆண்டுகள் ஆகும்.

மாற்று எரிபொருளின் அவசியம் 
------------------------------------------------------
புவி  வெப்பம் அடைந்து கொண்டே போவதைத் தடுத்து நிறுத்த
வேண்டிய கடமை நமக்கு உள்ளது. உலகம் முழுவதும்
நிலக்கரியை எரித்துப் பெறும் ஆற்றலுக்குப் பதிலாக
சூழலை மாசு படுத்தாத அல்லது குறைந்த அளவே மாசு படுத்துகின்ற
மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதே உலகின்  இன்றைய
நடைமுறை  இதனால்தான் இயற்கை எரிவாயு நவீன உலகின்
பிரதான எரிபொருள் ஆகி வருகிறது.

இயற்கை எரிவாயு என்பது பிரதானமாக மீத்தேன் ஆகும்.  இது
புதைபடிவ எரிபொருள் வகையைச் சார்ந்தது. நிலக்கரி மற்றும்
பெட்ரோலை விட வளிமண்டலத்தை இது குறைவாகவே 
மாசு படுத்துகிறது. எனவே முழுமையான பசுமை எரிபொருளை
நோக்கிய மானுடத்தின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க 
மைல்கல்.

வீடுகள், வாகனங்கள் மற்றும் ஆலைகளுக்கான சிறந்த 
எரிபொருள் இது.  நாம் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தி 
வரும் LPG வாயுவை விட இது  மிகவும் பாதுகாப்பானது. 
வாயுக் கசிவு ஏற்பட்டால், காற்றை விடக் கனமான
LPG வாயு கசிந்த இடத்திலேயே சேகரமாகி நின்று தீப்பிடிக்க
ஏதுவாகும்.. ஆனால் இயற்கை வாயுவோ காற்றை விட லேசானது
என்பதால், வாயுக் கசிவு ஏற்பட்டால், வளி மண்டலக் காற்றோடு
சுலபமாகக் கலந்து விடும். எனவே தீ விபத்துக்கான வாய்ப்பு
மிகவும் குறைவு.

தமிழ்நாட்டை இணைத்தது ஏன்?
----------------------------------------------------
கொச்சித் துறைமுகத்தில் வந்து இறங்கிய இயற்கை எரிவாயுவை
ஏன் தமிழ்நாடு வழியாக மங்களூர் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகின்றனர்.
இது வெறுமனே எரிவாயுவை கொச்சியில் இருந்து மங்களூருக்குக்
கொண்டு செல்லும் போக்குவரத்துச் செயல்பாடல்ல. கொண்டு
செல்வதுதான் ஒரே நோக்கம் எனில், கடல் வழியாக, கப்பலில் 
ஏற்றி மிக எளிதாக எரிவாயுவை மங்களூருக்குக்  கொண்டு 
சேர்க்கமுடியும். குழாய் பதிக்கத் தேவையில்லை.

இயற்கையில் வாயு நிலையில் கிடைக்கும் எரிவாயுவை
திரவமாக்கி பீப்பாய்களில் அடைத்து கப்பலில்  ஏற்றி
அனுப்புகிறார்கள். வாயு என்பது அதிக இடத்தை அடைக்கும்;
திரவத்திற்கு ஒப்பீட்டளவில் குறைவான இடமே போதும் 
என்பதால் இப்படிச் செய்யப் படுகிறது. அதை மீண்டும் 
வாயு நிலைக்கு மாற்றி (regasified) குழாய் பதித்து, பல்வேறு 
இடங்கள் வழியாக கொண்டு செல்வதன் நோக்கம், 
வழித்தடத்தில் இணைந்துள்ள ஊர்களுக்கும் எரிவாயுப் 
பயன்பாடு கிட்ட வேண்டும் என்பதற்காகவே.

எரிவாயுப் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே 
போனாலும், எரிவாயு  விநியோகத்திற்கான ஒரு மையத் 
தொகுப்பு (central grid) இன்னும் அமைக்கப்படவில்லை. 
தற்போது நாடு முழுவதும் 13000 கி.மீ நீளமுள்ள 
குழாய்த்தடம் செயல்பட்டு வருகிறது. மேலும் 12000 கி.மீ 
நீளமுள்ள குழாய்த்தடம் விரைவில் முற்றுப்பெற உள்ளது. 
எனவே கூடிய விரைவில் 30000 கி.மீ நீளமுள்ளதும் 
875 mmscmd  திறன் உடையதுமான 
(நாளொன்றுக்கு 875 மில்லியன் கனமீட்டர்)  குழாய்த்தடம்  
முற்றுப் பெற்று விடும். இதைத் தொடர்ந்து எரிவாயு 
விநியோகத்திற்கான மையத் தொகுப்பு உருவாகி விடும்.
அவ்வாறு அமையவிருக்கும் மையத் தொகுப்பில் 
தமிழ்நாட்டையும் இடம் பெறச் செய்யும் பொருட்டே 
கெயில் நிறுவனம் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்கள் 
வழியே குழாய் பதிக்கிறது.     

நெடுஞ்சாலை வழியாகக் குழாய் பதிப்பது ஒப்பீட்டளவில் 
ஆபத்தானது. சாலைகளில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும். மேலும் டன் கணக்கில் சுமை ஏற்றப்பட்டலாரிகளும் டிரக்குகளும்  சென்று கொண்டே இருக்கும். சதா அதிர்ந்து 
கொண்டே இருக்கும்  நெடுஞ்சாலைகள் குழாய் பதிப்பதற்கு 
ஏற்றவை அல்ல.

தீவிர கண்காணிப்பில் குழாய்கள் 
------------------------------------------------------
நாடு முழுவதும் உள்ள 13000 கி.மீ நீளக் குழாய்த்தடம் கெயில் 
நிறுவனத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
வழக்கமாக ஹெலிகாப்டர்கள் மூலம்  கண்காணிப்பு 
மேற்கொள்ளப் படும். ஜூன் 2014இல் கிழக்கு கோதாவரி 
மாவட்டத்தில், குழாயில் கசிவு ஏற்பட்டதால் நேர்ந்த 
தீவிபத்தில் சிலர் இறந்து போயினர். கெயிலின் முப்பதாண்டு 
கால வெற்றி வரலாற்றில் நிகழ்ந்த ஒரே துயரம் இதுதான். 
இந்த விபத்தைத் தொடர்ந்து, இஸ்ரோ நிறுவனத்துடன் 
ஒப்பந்தம் செய்து கொண்டு, செயற்கைக் கோள் மூலம் 
குழாய்த் தடத்தைக் கண்காணிக்கும் (satellite surveillance)  
ஏற்பாட்டை கெயில் தொடங்கி உள்ளது.

குஜராத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் வரை செல்லும் 
610 கி.மீ நீளமுள்ள தேஜ்-விஜய்பூர் (Dhej-Vijaypur) குழாய்த்
தடத்தில் இதற்கான முன்னோடித் திட்டம் (Pilot project)
கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது. குழாய்த் தடங்களின் 
அருகில் வசிக்கும் மக்கள் அச்சமின்றி இருப்பதற்கும் 
வாயுக்கசிவை உடனடியாகக் கண்டறிந்து களைவதற்கும்    
இத்தகைய அதிநுட்ப  (highly sophisticated) பாதுகாப்பு 
ஏற்பாடுகள் துணை புரிகின்றன.


விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?
-----------------------------------------------
தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்கான நிலம் கையகப் படுத்தல் 
முன்பே முடிந்து விட்டது. ஆனால் நடப்பில் உள்ள சட்டப்படி, 
நிலத்தின் மதிப்பில், வெறும் பத்து சதம் மட்டுமே இழப்பீடு 
வழங்கப் பட்டது. விவசாயிகள் இதை இகழ்ச்சியுடன் 
நிராகரித்ததும், பலர் வழங்கப்பட்ட காசோலைகளை 
ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியதும் நியாயமே.

கொங்கு மண்டலத்தின் ஏழு மாவட்டங்கள் வழியாகச் 
செல்லும் குழாய்த்தடம் பெரும்பாலும் புஞ்சை மற்றும் 
அரைத்தரிசு நிலங்கள்  வழியாகவே செல்கிறது. இவை 
பெரிதும் மரம் வளர்ப்பதற்கு மட்டுமே தோதுவான நிலங்கள்.  
மேலும் நிலம் கிரையம் செய்யப்படவில்லை; நிலத்தின் மீது 
அனுபோகப் பாத்தியதையை (right of use) மட்டுமே கெயில் 
நிறுவனம் கொண்டுள்ளது. இக்காரணங்களால்  10 சதம் இழப்பீடு 
போதுமானதே என்ற வாதம் முற்றிலும் அபத்தமாகும்.  

குழாய் பதிக்கப்பட்ட இடத்தை உள்ளடக்கி 20 மீட்டர் 
அகலத்துக்கு எவ்வித மரங்களும் வளர்க்கக் கூடாது 
என்ற நிபந்தனை காரணமாக தங்களின் வருவாய் ஆதாரமான 
மரங்களை விவசாயிகள் இழந்துள்ளனர். எனவே போதிய 
இழப்பீடு, மேலை நாடுகளில் உள்ளது போல் ஆயுள் முழுவதும் ஓய்வூதியம்,அல்லது  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, 
மாற்று வாழ்வாதாரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு
வழங்காமல், நிலத்தை மட்டும் எடுத்துக் கொள்வது அநீதியாகும்.

கெயில் நிறுவனம் என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------------------------------------
நிலம் கையகப் படுத்தலுக்கான புதிய சட்டம் மக்களவையில் 
நிறைவேறிய நிலையில் நாடாளுமன்றத்தில் நிலுவையில் 
உள்ளது. நிலத்தின் சந்தை மதிப்பில் நான்கைந்து   மடங்கு 
இழப்பீடு வழங்க இச்சட்டம் வகை செய்கிறது. எப்படியும் 
நிறைவேறப் போகும் இச்சட்டத்தின்படி,  நிலம் வழங்கிய 
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளோ தமிழக அரசோ இத்திட்டத்தை 
எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விவசாயிகளின் 
வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல், குழாய்கள் பதிக்கப் பட்டால்  
அதை எவரும் எதிர்க்கப் போவதில்லை. அணுஉலை 
எதிர்ப்பு போன்றதல்ல இது. அணுஉலை எதிர்ப்பாளர்கள் 
கோட்பாட்டு ரீதியாகவே அணுஉலை கூடாது என்ற 
கருத்து உடையவர்கள். ஆனால் எரிவாயுக் குழாய்க்கான 
எதிர்ப்பு அப்படிப்பட்டது அல்ல. 

எவ்வித எதிர்ப்புமின்றி நாடு முழுவதும் 13000 கி.மீ நீளத்துக்கு 
எரிவாயுக் குழாய்ப் பாதை அமைக்க முடிந்த கெயில் நிறுவனம் 
தமிழகத்தில் வெறும் 310 கி.மீ நீளக் குழாய்ப் பாதையை 
அமைக்க முடியாமல் திணறுவது ஏன்? மக்களின் ஒத்துழைப்பைப் 
பெறத் தவறியதுதான் காரணம். விவசாயிகளின் வாழ்வாதாரம் 
பாதிக்கப் படாமலும், பாதிக்கப்படும் இடத்தில், நிறைவான 
இழப்பீடு வழங்குவதன் மூலமுமே இத்திட்டத்தை நிறைவேற்ற 
முடியும். வேறு குறுக்கு வழி எதுவுமில்லை. 

அதை விடுத்து, ஏற்கனவே வழங்கிய 10 சதம் தொகையுடன், 
அதில்  30 சதம் சேர்த்து இழப்பீடு வழங்க முனைவது பயன் தராது.
கொடுத்த காசோலைகளை விவசாயிகள் ஏற்க மறுத்து வீசி 
எறிவதுதான் நடக்கும். நீதிமன்றத்துக்கு வெளியில் இதைத் 
தீர்த்துக் கொள்வதே கெயில் நிறுவனத்தின் முன்னுள்ள 
ஒரே வழியாகும். பந்து கெயிலின் முற்றத்தில் உள்ளது.
****************************************************************  


      

  







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக