ஞாயிறு, 26 நவம்பர், 2017

(3) உபரி மதிப்புக்கு தோல்வி என்பதே கிடையாது!
விமர்சனங்களின் முதுகெலும்பை முறிக்கும் பதில்!
-----------------------------------------------------------------------------------------
1) மார்க்சியப் பொருளாதாரத்தின் உயிர் எது?
அது உபரி மதிப்புக் கோட்பாடுதான்.மார்க்சியப்
பொருளாதாரத்தில் இருந்து உபரி மதிப்பை
நீக்கி விட்டால், அது உயிரற்ற உடலாகி விடும்.

2) "மார்க்சின் மகத்தான பங்களிப்புகள் இரண்டு.
ஒன்று: உபரி மதிப்பு; மற்றொன்று வரலாற்றியல்
பொருள்முதல்வாதம்"  என்கிறார் எங்கல்ஸ்.

3) எங்கல்ஸ் கூறுவது முழுவதும் உண்மை. ஏனெனில்
உபரி மதிப்பும், வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்
மார்க்சுக்கு முன் இருக்கவில்லை. அவை முழுக்க
முழுக்க மார்க்சின் கண்டுபிடிப்புகள்.

4) மார்க்சுக்கு முன்பு சோஷலிசம் இருந்தது. பிரான்சு
நாட்டில் புருதோன் என்பவரால் சோஷலிசம் பேசப்பட்டது.
இங்கிலாந்தின் சோஷலிஸ்டுகள் ஃபேபியன் சோஷலிசம்
(fabian socialism) என்பதை முன்வைத்தனர்.இவ்வாறு
சோஷலிசமும், பொருள்முதல்வாதமும், இயங்கியலும்,
ஏன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட மார்க்சுக்கு முன்னரே
இருந்தன.  

5) ஆனால் மார்க்சுக்கு முன்பு உபரி மதிப்பு என்பதே
கிடையாது. வரலாற்றை பொருள்முதல்வாத நோக்கில்
அணுகுவது என்பதும் மார்க்சுக்கு முன்பு எவருடைய 
சிந்தையிலும் தோன்றியதே கிடையாது. எனவே
எங்கல்ஸின் கூற்று உண்மையே அன்றி வெறும்
புகழ்ச்சியில்லை.

6) மார்க்சுக்கு முந்திய சோஷலிசம்  எல்லாம்
குட்டி முதலாளியத் தன்மை வாய்ந்ததாகவும் நடைமுறை  சாத்தியமற்ற கற்பனையானதாகவும்
இருந்தது. ஆனால் மார்க்சின் சோஷலிசம் மட்டும்
மெய்யானதாகவும் நடைமுறைப் படுத்தக்
கூடியதாகவும் இருந்தது. (சோவியத்திலும்
சீனத்திலும் நடைமுறைப் படுத்தப் பட்டதைக்  .
கருதுக).எனவே மார்க்சின் சோஷலிசம் விஞ்ஞான
சோஷலிசம் எனப் பெயர் பெற்றது. இதனால்தான்
கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்தவர்
என எங்கல்ஸ் மார்க்ஸைப் புகழ்ந்தார்.

7) முதலாளியம் எப்படிச் சுரண்டுகிறது, முதலாளிகள்
எப்படிப் பணம் சேர்க்கிறார்கள் என்ற ரகசியத்தின்
திறவுகோலாக மார்க்சின் உபரி மதிப்பு திகழ்கிறது
என்று குறிப்பிட்டார் எங்கல்ஸ். (இக்கட்டுரையில்
விளக்கப்பட்டுள்ள எங்கல்ஸின் கூற்றுகள் யாவும் 
Socialism: Utopian and scientific என்ற நூலில் உள்ளவை)

8) ஆக, உபரி மதிப்பு என்பது மார்க்சியப்
பொருளாதாரத்தின் உயிர் என்பதை உணர்ந்த
எதிரிகள் குறி பார்த்து அதன் மீது கத்தியைப்
பாய்ச்சுகிறார்கள். 

9)  இந்த எதிரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள
வேண்டும். முதலாளித்துவம் என்பது ஒரு சிஸ்டம்.
ஒரு அமைப்பு முறை. இதன் தவிர்க்க இயலாத
இரண்டு கூறுகள் மூலதனமும் உபரி மதிப்பும்.
இவை ஒரே சிஸ்டத்துக்குள் இயங்குபவை.
இரட்டைத் தன்மை வாய்ந்தவை (binary).
ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. என்றாலும்
ஒரே சிஸ்டத்துக்குள்தான் இவை இரண்டும்
இருந்தாக வேண்டும்.  முதலாளித்துவம் என்ற
சிஸ்டம் இருக்கும் வரை, இந்த இரண்டும்
இருந்துதான் தீரும்.

10) "எதிரிடைகளின் ஒற்றுமை" (unity of opposites) என்று
ஒரு விதி உண்டு. இது ஒரு இயங்கியல் விதி ஆகும்.
(It is a dialectical law). ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு
விஷயங்கள் ஒரே அமைப்புக்குள் இருப்பதைக்
கூறும் விதி இது. இந்த விதிப்படியே மூலதனமும்
உபரி மதிப்பும் (அல்லது) முதலாளிகளும்
தொழிலாளிகளும் ஒரே அமைப்புக்குள்
இருக்கின்றனர்.

11) எனவே இந்த இயங்கியல் விதிப்படி, இவ்விரண்டில்
ஒன்று வெளியேறி இன்னொன்று மட்டும் முதலாளிய அமைப்புக்குள் இருக்க இயலாது. இருந்தால் இரண்டும்
இருந்தாக வேண்டும். எனவே உபரி மதிப்பு மட்டும்
காலாவதி ஆவதும், அதே நேரத்தில் மூலதனம்
மாற்றமின்றி நீடிப்பதும் என்பது சாத்தியமற்றது.

12) அதாவது முதலாளிய அமைப்பு முறை நீடிக்கும்
வரை உபரி மதிப்பும் நீடிக்கும். எப்போது
முதலாளித்துவ உற்பத்தி முறை முடிவுக்கு
வருகிறதோ அப்போதுதான் உபரி மதிப்பும்
முடிவுக்கு வரும். எனவே உபரி மதிப்புக் கோட்பாடு
தோற்று விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.

13) கி.பி 1776இல் ஜேம்ஸ் வாட் நீராவி எஞ்சினைக்
கண்டு பிடித்தார். இதைத் தொடர்ந்து தொழிற்புரட்சி
வேகம் எடுத்தது. இதன் பிறகு இரண்டு நூற்றாண்டுகள்
கழித்து உலகில் தொழில்நுட்பப் புரட்சி (technological
revolution) ஏற்பட்டது. அதிநவீன தானியங்கி எந்திரங்கள்,
கணினிகள், ரோபோக்கள் என்று உற்பத்திக் கருவிகள்
பேரளவில் வளர்ச்சி அடைந்தன.

14) பயோ டெக்னாலஜி, ஜெனெடிக் இன்ஜீனியரிங்,
நானோ டேகினாலஜி என்று நுட்பமான தொழில்நுட்பப் 
புரட்சியும் ஏற்பட்டது. சுருங்கக் கூறின், இந்த
மில்லேனியத்தின் தொடக்கத்தில் மனித சமூகம்
மொத்தமும் புரட்சிகரமான தொழில்நுட்ப
சகாப்தத்துக்குள் நுழைந்து விட்டன.

15) இதனால் எல்லாம் உபரி மதிப்பு தோல்வி அடைந்து
விட்டது என்று எவராலும் கூற இயலாது. ஒரு லட்சம் பேர் 
செய்துவந்த வேலையைச் செய்யக்கூடிய ஒரு
தானியங்கி எந்திரத்தை முதலாளிகள் வாங்கலாம்.
மனிதர்களுக்குப் பதில் எந்திரத்தை வைத்து
உற்பத்தியையும் நடத்தி விடலாம். ஆனால் இத்துடன்
முதலாளிய உற்பத்திமுறை என்னும் சர்க்யூட்
பூர்த்தி அடைந்து விடுவதில்லை.

16) உற்பத்தியான பொருட்கள் விற்கப்பட்டால்
மட்டுமே சர்க்யூட் பூர்த்தியாகும். பொருட்கள்
விற்பனையாக வேண்டும் என்றால், அதற்கான
சந்தை தேவை. சந்தை என்றால் "வாங்கும் சக்தி"
என்று பொருள்.(market means purchasing power). அதாவது
வாங்கும் சக்தி உடைய மக்களைக் கொண்டதே
சந்தை ஆகும். லட்சக் கணக்கான தொழிலாளிகளை
வேலை தராமல் தெருவில் வீசி எறிந்து விட்ட
பிறகு, சந்தை இருக்குமா? அழிந்து போய் இருக்கும்.

17) சந்தை இல்லாமல் போவதால், பொருட்கள் தேங்கும்.
இதனால் தடையற்ற தொடர்ச்சியான உற்பத்தி
நின்று போகும். ஆக மொத்தத்தில் முதலாளிய
உற்பத்திமுறை முடங்கிப் போகும்.

18) எனவே உபரி மதிப்பை முற்றிலும் பூஜ்யமாக்க
மூலதனத்தால் இயலாது. அப்படிச் செய்யுமானால்,
அது மூலதனத்தின் தற்கொலைப் பாதையாகும்.

19) எந்திரங்கள், கருவிகள், நிலம் ஆகியவற்றில்
செலுத்தப்படும் மூலதனத்தை மார்க்ஸ் நிலையான
மூலதனம்  (constant capital) என்று அழைக்கிறார். இந்த
நிலையான  மூலதனத்திலும் உழைப்பு மறைந்து
கிடக்கிறது என்கிறார் அவர். எனவே தானியங்கி
எந்திரம் உருவாக்கும் உபரி என்பது உழைப்பின்
உபரியே.

20) எனவே எந்தெந்த வழிகளில் முயன்றாலும்
உழைப்பு என்பதை எந்த நிலையிலும் தவிர்க்க
முடியாது. உழைப்பு இருக்கும்வரை உபரி
மதிப்பும் இருக்கும். முதலாளிய உற்பத்தி முறை
இந்த உலகில் இருக்கும் வரை உபரி மதிப்பும்
கூடவே இருக்கும். எனவே உபரி மதிப்புக்கு
தோல்வி என்பதே கிடையாது.
 ======================================================= 
  
           
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக