ஞாயிறு, 12 நவம்பர், 2017

முதலாளிய சமூகம் எப்படிப் பிறந்தது என்று
மூலதனம் நூலில் தெளிவாக விவரிக்கிறார்
மார்க்ஸ். எனினும், மார்க்ஸ் விவரித்த விதத்தில்
இன்று எந்தவொரு நாட்டிலும் முதலாளியம்
தோன்ற வாய்ப்பில்லை. ஏனெனில் முதலாளியம்
ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்து விட்டது.
**
இக்காலக்கட்டம் ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி
வர்க்கப் புரட்சியின் காலக்கட்டம் என்று மார்க்சியம்
(லெனினியம்) வரையறுக்கிறது. மேலும் உலகமயம்
என்கிற  ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய  ஆதிக்கம்
இன்று உலகெங்கும் நிலவுகிறது. இந்நிலையில்,
மூலதனம் நூலில் கூறியவாறு எந்தவொரு நாட்டிலும்
முதலாளியம் தோன்ற இயலாது. 

புரட்சி என்பது அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது.
அவ்வளவுதான். அரசு அதிகாரம் கைவரப் பெற்றதும்
புரட்சியின்  கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதாவது சோஷலிசத்தைக் கட்டுமானம் செய்ய
வேண்டும். தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியம்
என்பதை லெனின், மாவோ, காஸ்ட்ரோ ஆகியோர்
சாத்தியமாக்கிக் காட்டினார். அது அன்று  நிலவிய
சூழல். இன்று 2017ல் அதே சூழல் உள்ளதா என்பது
பரிசீலித்து உணர வேண்டியது.
**
புரட்சி வேறு; சோஷலிஸக் கட்டுமானம் வேறு.
தனியொரு நாட்டில் புரட்சி வெற்றி பெற்றதன்
உதாரணங்களைப் பார்த்தோம்.
சோஷலிஸக் கட்டுமானம் ஒரு நாளில் மேற்கொள்ளப்
படுவதல்ல. பல ஆண்டுகள் தேவைப்படும். தனியொரு
நாட்டில் இன்றைய உலகமயச் சூழலில், சோஷலிசத்தை
நிர்மாணிப்பது கடினம் என்று நடைமுறை நமக்கு
உணர்த்துகிறது. இதில் மார்க்ஸ் கூறியது  சரியாகவே
உள்ளது.
 

எதிர்ப்புரட்சியை முறியடிக்க cheka தேவை. புரட்சி
என்பது வன்முறை மூலம் அரசு அதிகாரத்தைக்
கைப்பற்றுவதுதான். இதில் அமைதி வழிக்கெல்லாம்
இடமில்லை என்கிறது கம்யூனிஸ்ட்  அறிக்கை.
இதிலெல்லாம் விவாதத்துக்கே இடமில்லை.
எனவே பதிவின் பேசுபொருளுக்குள்
நின்று உரையாடலாம். அது தவிர்த்த ஏனையவை
அனுமதிக்கப் பட மாட்டாது.

கேள்வி இதுதான்!
தனியொரு நாட்டில் சோஷலிசம் கட்ட முடியுமா?
--------------------------------------------------------------------------------------
ரஷ்யப் புரட்சி 1917, சீனப் புரட்சி 1949, கியூபப் புரட்சி
1959 ஆகிய புரட்சிகள் இருபதாம் நூற்றாண்டில்
வெற்றி பெற்றன. இவை அண்மைக் காலத்தில்
நடந்து வெற்றி பெற்ற புரட்சிகள்தான். இவை
தனியொரு நாட்டில் நடந்த புரட்சிகள்தான். தனியொரு
நாட்டில் புரட்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கான
தேவை எழவில்லை.எனவே டிராட்ஸ்கியின்
நிரந்தரப் புரட்சி  பற்றி இங்கு பேசும் தேவை
எழவில்லை.

மாறாக, தனியொரு நாட்டில் சோஷலிசம் கட்ட
முடியுமா  என்பதுதான் பரிசீலனைக்கு உரிய
கேள்வி. இன்றைய உலகமயச் சூழலில் இது
எவ்வளவு சாத்தியம் அல்லது சாத்தியமில்லை
என்பது பரிசீலனைக்கு உரியது. இதில் காத்திரமான
விவாதம் தேவை. அதில் கருத்துக்கள் வரவேற்கப்
படுகின்றன.   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக