வெள்ளி, 26 டிசம்பர், 2014

டிசம்பர் 26
சுனாமி நினைவு நாள் 
----------------------------------- 
பத்து ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்,
( 26 டிசம்பர் 2004 ) ஊழித்தாண்டவம் 
ஆடிய சுனாமியால் உயிர் உடமை 
இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது 
அன்று ( 04.01.2005 ) எழுதப்பட்ட இந்தக் கவிதை.
------------------------------------------------------------------- 

                                     மிச்சம் வை!
           ..............வீரை பி இளஞ்சேட்சென்னி .........
----------------------------------------------------------------------  

யாரும்  பொல்லாத சொப்பனம் காணாமலும்
வானத்தில் தூமகேது தோன்றி மறையாமலும் 
மார்கழி வழமையின் ஆண்டாள் பாராயணத்துடன் 
தீங்கின்றி விடிந்த அன்றையப் பொழுதின் 
அடுத்து  வந்த கணங்கள் 
பேய்களுக்கே உரியவை.

தாய்முலை நஞ்சுண்டு  
நீலம் பாரித்துக் கிடந்தனர்
ஆழியின்  பிள்ளைகள்.

உயிர் சுரக்கும் கடல் தாய் 
எங்ஙனம் பூதகி ஆனாள்?
காடழித்து 
மணல் அபகரித்து 
மக்காப் பொருளால் நீரூற் றுகளின் கண் அவித்து    
வளியடுக்கில் துளைசெய்து 
இயற்கையைச் சுட்டுத் தீய்த்த 
மானிடப் பதர்களே 
சபித்தலுக்கு உரியவர்கள்.

படிப்பினை தேரா மானிடனே 
நுனிக்கிளை அமர்ந்து
அடிக்கிளை அறுக்கும் 
பேதைமை குறித்து ஓர்மை கொள்
உன்னினும் வலிய இயற்கையுடன்    
கைகுலுக்கு முறுவலி 
தோழமை பூண் 
இயைந்து வாழ் 
அடுத்து வரும் தலைமுறைக்கு 
இயற்கையை மிச்சம் வை.

******************************************* 




 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக