வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இன்றையத் தேதி 09.09.2018ஆ? அல்லது 09.09.1848ஆ?
பத்தாம் பசலி மார்க்சியத்துக்கும் நவீன மார்க்சியத்துக்கும்
உள்ள வேறுபாடு 170 ஆண்டுகள்!!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
நமது மார்க்சிய வகுப்புகளுக்கும் மற்றவர்கள் நடத்தும் மார்க்சிய
வகுப்புகளுக்கும் 170 ஆண்டு கால வேறுபாடு உள்ளது. நமது
மார்க்சியம் 2018ஆம் ஆண்டிற்கானது. மற்றவர்கள் கற்பிக்கும்
மார்க்சியம் 1848ஆம் ஆண்டிற்கானது.

மார்க்சும் எங்கல்சும் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதியதை அடுத்து உலகில் கம்யூனிசம் பிறந்தது. இன்று இந்த 2018ல் கம்யூனிசம் 170 ஆண்டுகளைக் கடந்து விட்டது.

இன்றையத் தேதி என்ன என்ற கேள்விக்கு 09.09.2018 என்று
எம்மால் சொல்ல முடியும். ஆனால் மற்றவர்களைப் பொறுத்த
மட்டில், இன்றையத் தேதி என்ன என்ற கேள்விக்கு
அவர்களால் 09.09.1848 என்றுதான் சொல்ல முடியும்.

1848க்கும் 2018க்கும் இடையிலான இந்த 170 ஆண்டுகளில் அறிவியலில் மிகப் பிரம்மாண்டமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அசுரத் தனமான, ராட்சசத் தனமான, பாரதூரமான மாற்றங்கள் இவை. அறிவியலின் செல்வாக்கிற்கு உட்படாத துறைகளே கிடையாது. எனவே மனித வாழ்வியலின் அனைத்துத் துறைகளையும் அறிவியலில் ஏற்பட்டுள்ள இந்த 170 ஆண்டு கால மாற்றம் பாதித்து உள்ளது.

18ஆம் நூற்றாண்டில் 1750களில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தோன்றியது. தொழிற்புரட்சி முதலாளித்துவத்தைப் பெற்றெடுத்தது. முதலாளியத்தைத் தொடர்ந்து மார்க்சியம் உருவானது.முதலாம் தொழிற்புரட்சி 1750களில் தொடங்கியது.இன்று இந்த 2018ல் நாம் நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறோம்.

இவ்வளவு மாற்றங்களையும் தமிழக மார்க்சியர்கள் அறிந்து
வைத்துள்ளனரா? மார்க்சியக் கல்வியில் இந்த 170 ஆண்டுகளில்
நிகழ்ந்த மாற்றம் உள்வாங்கப் பட்டுள்ளதா? இல்லையே.

எந்த ஒரு மார்க்சிய அமைப்போ, கட்சியோ, தனிநபரோ
இந்த 170 ஆண்டுகால அறிவியலின் வளர்ச்சியை மார்க்சியம்
கற்போருக்குப் போதித்து உள்ளதா? இல்லை என்பது கண்கூடு.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்த 170 ஆண்டுகளில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் கொண்டு, நவீனப்
பார்வையோடு, காலத்துக்கு ஏற்பப் புதுப்பிக்கப் பட்ட
மார்க்சியக் கல்வியை தமிழ் மார்க்சியர்களுக்கு வழங்குகிறது.

எலுமிச்சம் பழத்தை அறுத்து, குங்குமத்தை அப்பி, சாம்பிராணிப்
புகை போட்டு, ஊதுபத்தியைக் கொளுத்தி 19ஆம் நூற்றாண்டு
விபூதிச் சாம்பலைப் பறக்க விட்டு இதுதான் மார்க்சியம் என்று
அறியாமைப் புகை வளர்க்கும் மார்க்சிய மந்திரவாதிகள்தானே
தமிழ்நாட்டில் மார்க்சியம் பயிற்றுவிக்கிறார்கள்! இந்தக்
கொடுமை இந்த பூமியில் எங்கும் கிடையாதே!

மார்க்ஸ் 1818ல் பிறந்து 1883ல் மறைகிறார். எங்கல்ஸ் 1820ல் பிறந்து
1895ல் மறைகிறார். இருவரும் 19ஆம் நூற்றாண்டு முடிவதற்குள்
வாழ்ந்து மறைந்து விடுகிறார்கள். மார்க்சின் காலத்தில் அவர்
வாழ்ந்த லண்டனில் மின்சாரமே கிடையாது. உலகில் முதன் முதலில் மின்சாரம் என்பது தாமஸ் ஆல்வா எடிசனால் அமெரிக்காவில்
1882 செப்டம்பரில்தான் அறிமுகப் படுத்தப் பட்டது. பின்னர்தான்
ஐரோப்பாவுக்கு வணிக ரீதியான மின்சாரம் வந்து சேர்கிறது.
ஆக மின்சார வெளிச்சத்தை அனுபவிக்காமலேயே மார்க்ஸ்
மறைந்து விடுகிறார்.

மார்க்ஸ் எங்கல்ஸின் மறைவுக்குப் பின்னரே மனித குலத்தின்  தலைசிறந்த அறிவியல்  கொள்கைகள் வெளியிடப் படுகின்றன. இவை அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின்
கண்டுபிடிப்புகள்.

1) 1900ல் மார்க்ஸ் பிறந்த ஜெர்மனியின் பெர்லின் நகரில் மாக்ஸ் பிளாங்க் (Max Planck) குவான்டம்  கொள்கையை  முன்மொழிகிறார். 2) 1905ல் சிறப்புச் சார்பியல் கொள்கையையும்
3) 1915ல் பொதுச் சார்பியல் கொள்கையையும் ஐன்ஸ்டின்
முன்மொழிகிறார்.4) 1920களில் குவாண்டம் விசையியல்
(quantum mechanics) உருவாகிறது. 5) எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்களின் கண்டு பிடிப்பு,  நியல்ஸ் போரின் அணுச்சித்திரம் ஆகிய இவை அனைத்தும் மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப் பின்னரான கண்டுபிடிப்புகளே.

மார்க்ஸ் எங்கல்சின் படைப்புகளில் காணும் அறிவியல் என்பது
19ஆம் நூற்றாண்டின் அறிவியலே. அதாவது நியூட்டனின்
இயற்பியலே (Newtonian physics). நவீன இயற்பியலின் குவான்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப் பின்னர் தோன்றியவை என்பதால் மார்க்ஸ் எங்கல்சின் படைப்புகளில் அவை இடம்பெறவில்லை.

ஆங்கிலம் மிகப்பெரிய முட்டுக்கட்டை!
-----------------------------------------------------------------------
அறிவியல் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. இதனால் தமிழ்
மட்டும் அறிந்த மார்க்சியர்கள் அறிவியலுக்கு வெளியே  நிறுத்தப்
படுகிறார்கள். நவீன அறிவியல் ஆயிரம் வாய்ப்புகளை
வழங்கியுள்ள போதிலும், ஆங்கிலம் தெரியாத காரணத்தால்
அறிவியலைக் கற்க இயலாமல் தமிழ் மட்டும் அறிந்த
மார்க்சியர்கள் பின்தங்கி விடுகிறார்கள். அவர்களின்
மார்க்சிய அறிவு தேங்கிய குட்டையாகி விடுகிறது.170 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் பற்றிய அறிவை அவர்களால் பெற இயலவில்லை.

இந்த அவலநிலையை மாற்றுவது பற்றிய சிந்தனையே எந்த
ஒரு மார்க்சியக் கட்சிக்கும் இல்லை. 170 ஆண்டுகளாகப்
பின்தங்கி இருக்கிற மார்க்சியக்  கல்வியை நவீனப் படுத்தாமல்
சமூக மாற்றம் என்றெல்லாம் பேசுவது மோசடியே.

சகல தடைகளையம் உடைத்தெறிந்து நவீனப் படுத்தப்பட்ட  புதுப்பிக்கப்பட்ட மார்க்சியக் கல்வியை மார்க்சியர்களுக்கு
வழங்கி வருகிறது நியூட்டன் அறிவியல் மன்றம். எமது
மார்க்சிய வகுப்புகளில் அறிவியல் போதிய அளவு இடம்பெறும்.
அறிவியல் இல்லாத மார்க்சியக் கல்வியையே எம்மால்
நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.

சார்பியல் கொள்கை, குவான்டம் கொள்கை ஆகியவற்றைத்
தாண்டி சமகால அறிவியலானது இழைக்கொள்கையில் வந்து
நிற்கிறது. (இழைக்கொள்கை = string theory). இவ்வளவு நவீனமான
இழைக்கொள்கை குறித்து தமிழில் ஒரே ஒரு  கட்டுரையாவது
எழுதப் பட்டுள்ளதா?

இன்றைய தேதியில் உலகின் மக்கள்தொகை 765 கோடி.
இந்த 765 கோடிப்பேரில் ஒரே ஒருவர் முன்வந்து இழைக்கொள்கை
பற்றிய ஒரு கட்டுரையை தமிழில் எழுதி உள்ளார். (பார்க்க:
அறிவியல் ஒளி பெப்ரவரி 2017 சிறப்பு மலர்), அந்த  ஒருவர்
வேறு யாருமல்ல, நியூட்டன் அறிவியல் மன்றமே.

குற்றச்சாட்டுகளைச் சொல்ல எவராலும் இயலும். ஆனால்
தீர்வுகளைச் சொல்ல நியூட்டன் அறிவியல் மன்றத்தால்
மட்டுமே இயலும் என்பதை நிரூபித்துள்ளோம்.

அறிவியல் பார்வை வேண்டும்!
-----------------------------------------------------
மார்க்சியத்தைக் கற்கவும் கற்றதைப் புரிந்து கொள்ளவும்
அறிவியல் பார்வை வேண்டும். அறிவியல் பார்வை எப்படி
ஒருவருக்குக் கைகூடும்? அறிவியலைக் கற்றால் மட்டுமே
அறிவியல் பார்வை கைவரும்.

எந்த ஒரு கோட்பாட்டையும், அது மார்க்சியக் கோட்பாடாக
இருந்தாலும் அல்லது அறிவியல் கோட்பாடாக இருந்தாலும்
திறனாய்வுப் பார்வையுடன் (critical outlook) அணுக வேண்டும். அப்போதுதான் அக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ள இயலும்.  அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறியதன் பொருள் இதுதான். திறனாய்வுப் பார்வை இல்லாமல்
மார்க்சியத்தைக் கற்க இயலாது.

மார்க்சி யத்தைத் திறனாய்வு செய்வதா? ஐயோ என்ன கொடுமை
இது என்று பாராயணவாதிகளும் பத்தாம் பசலிகளும்
மார்க்சிய ஜெய்னுலாதீன்களும் கூச்சல் போடலாம். அப்படிக்
கூச்சல் போடுவோர் மார்க்சிய விரோதிகள்.

ஒலியின் வேகத்தைக் கண்டறிவதில் நியூட்டன் ஒரு சிறிய
பிழை செய்தார். நியூட்டனுக்குப் பின்வந்த பிரெஞ்சு விஞ்ஞானி
லாப்லேஸ் அதைத் திருத்தினார். 11ஆம் வகுப்பு  இயற்பியல்  புத்தகத்தில் இந்தப்பாடம் உள்ளது. நியூட்டன் தவறு செய்தார்
என்று பாடப்புத்தகத்தில் எழுதி இருப்பதால், நியூட்டன்
மீதான மரியாதை குறைந்து விட்டதா? இல்லையே!

மகத்தான புரட்சியாளர்கள் மார்க்சும் எங்கல்சும் தவறே
செய்யாதவர்கள் அல்ல. அவர்களின் தவறைத் திறனாய்வுப்
பார்வையுடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும். மார்க்சைத்
திறனாய்வுப் பார்வைக்கு உட்படுத்துவதே மார்க்சிய
விரோதம் என்று கூறுபவர்கள் மார்க்சிஸ்டுகளாக
இருக்க இயலாது. அவர்கள் மார்க்சிய மதவாதிகளே.
  
ஹெக்கலின் இயங்கியல் என்பது சிந்தனையின் விதிகளே!
---------------------------------------------------------------------------------------------------
இயங்கியல் என்பது குறைந்தது 2500 ஆண்டுத் தொன்மை மிக்கது.
கிரேக்க இயங்கியல் ஜீனோ  என்னும் தத்துவஞானியிடம்
இருந்து தொடங்கியதாக ஹெக்கல் கூறுகிறார். இந்தியா சீனா
போன்ற கீழ்த்திசை நாடுகளிலும் இயங்கியல் .இருந்தது. புத்த
மதத் துறவிகள் இயங்கியலைக் கையாண்டனர். சாக்ரட்டீஸ்
எலஞ்சஸ் (elenchus) என்னும்  கேள்விகளுடன் கூடிய விவாத
முறையைக் கையாண்டார்.

இயங்கியல் என்பது தத்துவம் அல்ல. அது ஒரு மெய்காண் முறை.
அதாவது உண்மையைக் கண்டறியும் முறை. ஹெக்கல் ஒரு
கருத்துமுதல்வாதி. அவர் மனித சிந்தனையின் விதிகளைக்
கண்டறிந்தார். அவையே ஹெக்கலின் இயங்கியல் எனப்படுகிறது.    ஹெக்கல் பருப்பொருளின் விதிகளைக் கண்டறியவில்லை.
அவர் சிந்தனையின் விதிகளையே கண்டறிந்தார் என்பதை
மனதில் பதிக்க வேண்டும்.

பொருள் என்பதே முதன்மையானது (primary). பொருளின்
பிரதிபலிப்புதான் சிந்தனை. எனவே சிந்தனை என்பது
இரண்டாம் பட்சமானது (secondary). கண்ணாடியில் முகம்
பார்க்கிறோம். கண்ணாடியில் நமது முகத்தின் பிம்பம் (image)
தெரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்றதே
சிந்தனை. ஹெக்கல் வகுத்தது சிந்தனைக்கான விதிகளை.
அதாவது கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான விதிகளை.

ஹெக்கலின் சிந்தனைக்கான விதிகள் பருப்பொருளுக்குப்
பொருந்தாது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான
விதிகள், அந்தப் பிம்பத்தை உண்டாக்கும்  மூலப்பொருளான
மனிதனுக்குப் பொருந்தாது. எனவே ஹெக்கலின் விதிகள்
பொருளுக்கானவை அல்ல. அவை பருப்பொருளான
இயற்கைக்குப் பொருந்தாதவை. ஒரு தீவிரக் கருத்துமுதல்வாதியான ஹெக்கல், பொருள் என்பதை
இரண்டாம் பட்சமாகக் கருதுபவர். எனவே பொருளுக்கான
விதிகளை அவர் உருவாக்கவில்லை.
-----------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக