புதன், 5 செப்டம்பர், 2018



18ஆம் நூற்றாண்டில் 1750களில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தோன்றியது. தொழிற்புரட்சி முதலாளித்துவத்தைப் பெற்றெடுத்தது. முதலாளியத்தைத் தொடர்ந்து மார்க்சியம் உருவானது.முதலாம் தொழிற்புரட்சி 1750களில் தொடங்கியது.இன்று இந்த 2018ல் நாம் நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறோம்.

மார்க்சும் எங்கல்சும் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதியதை அடுத்து உலகில் கம்யூனிசம் பிறந்தது. 1848ல் பிறந்த கம்யூனிசம்
இன்று இந்த 2018ல் 170 ஆண்டுகளைக் கடந்து விட்டது.

இந்த 170 ஆண்டுகளில் அறிவியலில் மிகப் பிரம்மாண்டமான
மாற்றம் ஏற்பட்டுள்ளது. அசுரத் தனமான ராட்சசத் தனமான
பாரதூரமான மாற்றம் இது. அறிவியலின் செல்வாக்கிற்கு
உட்படாத துறைகளே கிடையாது. எனவே மனித வாழ்வியலின்
அனைத்துத் துறைகளையும் அறிவியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பாதித்து உள்ளது.

இவ்வளவு மாற்றங்களையும் தமிழக மார்க்சியர்கள் அறிந்து
வைத்துள்ளனரா? மார்க்சியக் கல்வியில் இந்த 170 ஆண்டுகளில்
நிகழ்ந்த மாற்றம் உள்வாங்கப் பட்டுள்ளதா? இல்லையே.

எந்த ஒரு மார்க்சிய அமைப்போ, கட்சியோ, தனிநபரோ
இந்த 170 ஆண்டுகால அறிவியலின் வளர்ச்சியை மார்க்சியம்
கற்போருக்குப் போதித்து உள்ளதா? இல்லை என்பது கண்கூடு.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்த 170 ஆண்டுகளில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் கொண்டு, நவீனப்
பார்வையோடு, காலத்துக்கு ஏற்பப் புதுப்பிக்கப் பட்ட
மார்க்சியக் கல்வியை தமிழ் மார்க்சியர்களுக்கு வழங்குகிறது.

எலுமிச்சம் பழத்தை அறுத்து, குங்குமத்தை அப்பி, சாம்பிராணிப்
புகை போட்டு, ஊதுபத்தியைக் கொளுத்தி 19ஆம் நூற்றாண்டு
விபூதிச் சாம்பலைப் பறக்க விட்டு இதுதான் மார்க்சியம் என்று
அறியாமைப் புகை வளர்க்கும் மார்க்சிய மந்திரவாதிகள்தானே
தமிழ்நாட்டில் மார்க்சியம் பயிற்றுவிக்கிறார்கள்! இந்தக்
கொடுமை இந்த பூமியில் எங்கும் கிடையாதே!

மார்க்ஸ் 1818ல் பிறந்து 1883ல் மறைகிறார். எங்கல்ஸ் 1820ல் பிறந்து
1895ல் மறைகிறார். இருவரும் 19ஆம் நூற்றாண்டு முடிவதற்குள்
வாழ்ந்து மறைந்து விடுகிறார்கள். மார்க்சின் காலத்தில் அவர்
வாழ்ந்த லண்டனில் மின்சாரமே கிடையாது. உலகில் முதன் முதலில் மின்சாரம் என்பது தாமஸ் ஆல்வா எடிசனால் அமெரிக்காவில்
1882 செப்டம்பரில்தான் அறிமுகப் படுத்தப் பட்டது. பின்னர்தான்
ஐரோப்பாவுக்கு வணிக ரீதியான மின்சாரம் வந்து சேர்கிறது.
ஆக மின்சார வெளிச்சத்தை அனுபவிக்காமலேயே மார்க்ஸ்
மறைந்து விடுகிறார்.

மார்க்ஸ் எங்கல்ஸின் மறைவுக்குப் பின்னரே மனித குலத்தின்  தலைசிறந்த அறிவியல்  கொள்கைகள் வெளியிடப் படுகின்றன. இவை அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின்
கண்டுபிடிப்புகள்.

1) 1900ல் மார்க்ஸ் பிறந்த ஜெர்மனியின் பெர்லின் நகரில் மாக்ஸ் பிளாங்க் (Max Planck) குவான்டம்  கொள்கையை  முன்மொழிகிறார். 2) 1905ல் சிறப்புச் சார்பியல் கொள்கையையும்
3) 1915ல் பொதுச் சார்பியல் கொள்கையையும் ஐன்ஸ்டின்
முன்மொழிகிறார்.4) 1920களில் குவாண்டம் விசையியல்
(quantum mechanics) உருவாகிறது. 5)எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்களின் கண்டு பிடிப்பு,  நியல்ஸ் போரின் அணுச்சித்திரம் ஆகிய இவை அனைத்தும் மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப் பின்னரான கண்டுபிடிப்புகளே.

மார்க்ஸ் எங்கல்சின் படைப்புகளில் காணும் அறிவியல் என்பது
19ஆம் நூற்றாண்டின் அறிவியலே. அதாவது நியூட்டனின்
இயற்பியலே (Newtonian physics). நவீன இயற்பியலின் குவான்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப் பின்னர் தோன்றியவை என்பதால் மார்க்ஸ் எங்கல்சின் படைப்புகளில் அவை இடம்பெறவில்லை.

ஹெக்கலின் இயங்கியலை ஏற்ற மார்க்சும் எங்கல்சும்!
---------------------------------------------------------------------------------------------------
இயங்கியல் என்பது குறைந்தது 2500 ஆண்டுத் தொன்மை மிக்கது.
கிரேக்க இயங்கியல் ஜீனோ  என்னும் தத்துவஞானியிடம்
இருந்து தொடங்கியதாக ஹெக்கல் கூறுகிறார். இந்தியா சீனா
போன்ற கீழ்த்திசை நாடுகளிலும் இயங்கியல் .இருந்தது. புத்த
மதத் துறவிகள் இயங்கியலைக் கையாண்டனர். சாக்ரட்டீஸ்
எலஞ்சஸ் (elenchus) என்னும்  கேள்விகளுடன் கூடிய விவாத
முறையைக் கையாண்டார்.

இயங்கியல் என்பது தத்துவம் அல்ல. அது ஒரு மெய்காண் முறை.
அதாவது உண்மையைக் கண்டறியும் முறை. ஹெக்கல் ஒரு
கருத்துமுதல்வாதி. அவர் மனித சிந்தனையின் விதிகளைக்
கண்டறிந்தார். அவையே ஹெக்கலின் இயங்கியல் எனப்படுகிறது.    ஹெக்கல் பருப்பொருளின் விதிகளைக் கண்டறியவில்லை.
அவர் சிந்தனையின் விதிகளையே கண்டறிந்தார் என்பதை
மனதில் பதிக்க வேண்டும்.

பொருள் என்பதே முதன்மையானது (primary). பொருளின்
பிரதிபலிப்புதான் சிந்தனை. எனவே சிந்தனை என்பது
இரண்டாம் பட்சமானது (secondary). கண்ணாடியில் முகம்
பார்க்கிறோம். கண்ணாடியில் நமது முகத்தின் பிம்பம் (image)
தெரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்றதே
சிந்தனை. ஹெக்கல் வகுத்தது சிந்தனைக்கான விதிகளை.
அதாவது கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான விதிகளை.

ஹெக்கலின் சிந்தனைக்கான விதிகள் பருப்பொருளுக்குப்
பொருந்தாது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான
விதிகள், அந்தப் பிம்பத்தை உண்டாக்கும்  மூலப்பொருளான
மனிதனுக்குப் பொருந்தாது. எனவே ஹெக்கலின் விதிகள்
பொருளுக்கானவை அல்ல. அவை பருப்பொருளான
இயற்கைக்குப் பொருந்தாதவை. ஒரு தீவிரக் கருத்துமுதல்வாதியான ஹெக்கல் பொருள் என்பதை
இரண்டாம் பட்சமாகக் கருதுபவர். எனவே பொருளுக்கான
விதிகளை அவர் உருவாக்கவில்லை.
-----------------------------------------------------------------------------------

மார்க்சும் எங்கல்சும் ஹெக்கலின் இயங்கியலை அப்படியே எடுத்துக் கொண்டனர். அது பொருளுக்கும் பொருந்தும் என்று  ஏற்றுக் கொண்டனர். இயற்கை, மனித சமூகம், சிந்தனை
ஆகிய மூன்றுக்கும் ஹெக்கலின் இயங்கியல் பொருந்தும்
என்று அறிவித்தார் எங்கல்ஸ்.

சிந்தனையின் விதி பொருளுக்கும் பொருந்தும் என்றால்.
சிந்தனையும் பொருளும் ஒன்றே என்று ஆகி .விடுகிறது.
இது கருத்துமுதல்வாதப் பார்வை அல்லவா!.

பொருளுக்கும் சிந்தனைக்குமான உறவு என்பது பொருளுக்கும்  பிம்பத்துக்குமான உறவு (relation between object and image) என்கிறது
பொருள்முதல்வாதம். அப்படி இருக்கையில் பொருளும்
பிம்பமும் (object and image) எப்படி ஒன்றாகும்? இரண்டுக்கும் ஒரே விதி எப்படிப் பொருந்தும்? இயங்கியல் என்பது சிந்தனைக்கான விதி என்றால், அது பொருளுக்கான விதியாக இருக்க முடியாது.

பொருளில் இருந்து சிந்தனைக்கு வர வேண்டும். பொருளுக்கான  விதியில் இருந்து சிந்தனைக்கான விதியை உருவாக்க வேண்டும்.
சிந்தனையில் இருந்து பொருளுக்கு .வரக்கூடாது. சிந்தனைக்கான
விதியை எடுத்துக் கொண்டு இதுவே பொருளுக்கான விதி என்று
சொல்லக் கூடாது.  அப்படிச் சொன்னால் அது கருத்துமுதல்வாதம் ஆகும்.

அறிவியலின்  வரலாற்றில் மாபெரும் ஒரு பாதை மாற்றத்தை
ஏற்படுத்தியவர் கலிலியோ ( Galileo 1564-1642).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக