புதன், 6 பிப்ரவரி, 2019

 "பை" யின் மதிப்பு!
----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
"பை"யின் மதிப்பை 8 தசம இடங்கள் வரை
சொல்வதற்கு இந்த வாக்கியம் உதவும்.

"அன்பே வா நண்பனே வா அதிரசம் முந்திரிப்பருப்பு
சீடை வாழைப்பழம்  உண்ணலாம்".

மாணவர்களே. மேற்கண்ட வாக்கியத்தை மனனம்
செய்து கொள்ளுங்கள். அந்த வாக்கியத்தில் உள்ள
ஒவ்வொரு வார்த்தையிலும் எத்தனை எழுத்துக்கள்
உள்ளனவோ, அவைதான் வரிசைப்படியான
"பை"யின் மதிப்புகள்.


அன்பே = 3
வா = 1
நண்பனே= 4
வா= 1
அதிரசம் = 5
முந்திரிப்பருப்பு = 9
சீடை = 2
வாழைப்பழம் = 6
உண்ணலாம் = 5

பை = 3.14159265...................

ஆங்கில வாக்கியமும் வெகுவாகப் புழக்கத்தில்
உள்ளது. மாணவர்கள் நன்கு அறிந்தது. அது இதுதான்!
" May I have a large container of coffee".

தமிழறிஞர்கள் கவனத்திற்கு!
--------------------------------------------------
முன்பு ஒரு வாக்கியம் உருவாக்கி இருந்தேன்.
பல ஆண்டுகளுக்கு முன் தினமணி ஏட்டில்
அந்த வாக்கியத்தை ஒரு கட்டுரையில்
குறிப்பிட்டு இருந்தேன். தற்போது அந்த
வாக்கியத்தை மாற்றி விட்டேன். ஏன்?

தமிழ் மாணவர்களுக்கு புணர்ச்சி இலக்கணம்
பற்றிய அறிவு துளியும் இல்லை என்பதால்.
அந்த வாக்கியம் இதுதான்!

"பெண்ணே தை மகளின் கை விரல்களை
வெண்டைப்பிஞ்சுகள் என மயங்கினான் மாமன்னன்".

இந்த வாக்கியத்தை ஏன் மாற்ற நேர்ந்தது?
"கைவிரல்களை" என்ற சொல்லை கை என்றும்
விரல்களை என்றும் சிலர் பிரித்து விடக் கூடும்
மேலும் "வெண்டைப்பிஞ்சுகள்" என்பதை "வெண்டை"
என்றும் "பிஞ்சுகள்" என்றும் பிரித்து விடவும் கூடும்.

இதனால் "பை"யின் மதிப்பில் தவறு ஏற்பட்டு விடும்.
அதைத் தவிர்க்கவே அதிரசம் சீடை என்றெல்லாம்
புதிய வாக்கியத்தை உருவாக்கினேன். இது சற்று
முன்பு ) 06.02.2019 காலை 11.15 மணி முதல் 11.20
வரையிலான 5 நிமிடங்களுக்குள் உருவாக்கப்
பட்டது.

தமிழில் அதிக எழுத்துக்களைக் கொண்ட
சொற்கள் இல்லை. எல்லாச் சொற்களுமே
5 எழுத்து அல்லது 6 எழுத்து கொண்ட சொற்கள்தான்.
8 எழுத்து, 9 எழுத்தில் சொல் வேண்டுமென்றால்
கூட்டுச்சொல் மட்டுமே கிடைக்கிறது.

முந்திரிப்பருப்பு என்பதையும் முந்திரி என்றும்
பருப்பு என்றும் மாணவர்கள் பிரிக்காமல் இருக்க
தமிழ்க்கடவுள் முருகன்தான் அருள் புரிய வேண்டும்.
(இந்த வாக்கியம் கடவுள் இருக்கிறார் என்ற
பொருளில் எழுதப்படவில்லை).

"ALL SILVER TEA CUPS" என்ற வாக்கியம் உலக அளவில்
புகழ் பெற்றது. அது போல தமிழ் வாக்கியமும்
தமிழக அளவிலாவது அறியப்பட வேண்டும்.

என் இஷ்டத்துக்கு எழுதுவது நியாயமல்ல.
புரியும்படி எழுத வேண்டும்; நாம் எழுதுவது
வாசிப்பனுக்குப் புரிய வேண்டும். இதுவே
நியூட்டன் அறிவியல் மன்றம் கடைப்பிடிக்கும்
மொழிக்கொள்கை.
******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக