வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

செல்போன் கதிர்வீச்சு!
-------------------------------
செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.
செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்கமுடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.
ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)
இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.
பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், தொழிலில் இலாபம் வரும் என்றாலும், ஓர் அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யமுடியாது, செய்யக்கூடாது.
அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். செல்லுக்கு அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.
இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.
லேண்ட்லைனில், தரைவழி கம்பிகள் வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே அதில் கிடையாது.
என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.
செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.
தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
இன்னும் 2.0 பார்க்கவில்லை. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை.
-பாலகுமார் விஜயராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக