புதன், 29 ஏப்ரல், 2020

பூமியை நோக்கி வரும் விண்கல்!
இன்று (ஏப்ரல் 29, 2020) பூமியின் மீது மோதுமா?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
பூமியின் மீது மோதி பெருத்த நாசத்தை விளைவிக்குமோ
என்று அஞ்சத்தக்க ஒரு நிகழ்வு இன்று நிகழ இருப்பதாக
சமூக வலைத்தளங்களில் கூக்குரல்கள் கேட்கின்றன.
எனவே சிறிதள்வு வானியல் தெரிந்து கொண்டால்
நாமே உண்மை என்ன என்பதை உணர முடியும்.

விண்கல் அல்லது விண்பாறை பற்றி நாம் அறிந்திருக்க
வேண்டும். ஆங்கிலத்தில் இவற்றை ASTEROID என்பர்.

நமது சூரிய மண்டலத்தில் விண்பாறைகள் இருக்கின்றன.
செவ்வாயின் சுற்றுப்பாதைக்கும் (orbit) வியாழனின்
சுற்றுப்பாதைக்கும் இடையில் விண்பாறைகள் வசித்து
வருகின்றன.

எல்ஐசி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி என்பனவற்றை
நாம் அறிவோம். எல்ஐசி காலனி என்றால் எல்ஐசி
ஊழியர்கள் குடியிருக்கும் பகுதி என்று பொருள்.
அது போல, நமது சூரிய மண்டலத்தில் விண்பாறைகள்
வசிக்கும் குடியிருப்பானது Asteroid belt  என்று அழைக்கப்
படுகிறது.

சாராம்சத்தில் விண்பாறைகள் என்பவை குறுங்கோள்களே.
நமது சூரிய மண்டலம் உருவான போது, கோள்கள்
அளவுக்கு வளர முடியாத குள்ளர்களே விண்பாறைகள்.
இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. பல்வேறு
விண்பாறைகளும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இவ்வாறு சுற்றி வருகையில், ஒரு குறிப்பிட்ட தருணத்தில்
ஏதேனும் ஒரு விண்பாறையானது நமது பூமியை
நெருங்கி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வாய்ப்புத்தான் தற்போது நிகழ்ந்துள்ளது. இப்படி
அவ்வப்போது நிகழ்வதும் அதையொட்டித் தற்காலிகமாக
பரபரப்பு ஏற்படுவதும் வழக்கமான ஒன்றே.

ஒரு விண்பாறை! அதன் பெயர் "(52768) 1998 OR 2."
மனிதர்களைப் போலவே வான்பொருட்களுக்கும்
(celestial bodies) பெயர் உண்டு. நட்சத்திரங்கள், கோள்கள்,
குறுங்கோள்கள், விண்பாறைகள் என அனைத்திற்கும்
பெயர் சூட்டப் பட்டுள்ளது. சரியான பெயர் இருந்தால்
மட்டுமே ஒரு வான்பொருளைத் துல்லியமாக அடையாளம்
காண இயலும்.

டெலிபோன் டைரக்டரியைப் போல வான்பொருட்களின்
பெயர்கள் அடங்கிய பட்டியலை (catalogue) சர்வதேச
வானியல் சங்கம் (IAU= International Astronomical Union)
தயாரித்து வைத்துள்ளது.
          
மேற்கூறிய விண்பாறை "(52768) 1998 OR 2." சற்றே கோள
வடிவமானது. 2 கிமீ விட்டம் உடையது. அப்படியானால்
பூமியை விட இது எவ்வளவு சிறியது? இதைத் தெரிந்து
கொள்ள வேண்டுமெனில் பூமியின் விட்டம் எவ்வளவு
என்று தெரிய வேண்டும்.

பூமியின் விட்டம் எவ்வளவு? ஏதேனும் ஐடியா இருக்கிறதா?
இருக்காது. பூமியின் விட்டம் என்றவுடனே இரண்டு
வகையான விட்டங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
பூமியின் விட்டத்தை அதன் பூமத்திய ரேகைப் பக்கமாக
அளந்தால் ஒரு அளவும், துருவங்களுக்கு இடையில்
அளந்தால் ஒரு அளவும் கிடைக்கும். ஏனெனில் பூமியானது
முழுநிறைவான கோளம் அல்ல.

பூமியின் Equatorial diameter = 12756 கிமீ.
பூமியின் Polar diameter = 12713.6 கிமீ.    
பூமியின் mean diameter என்ன? கண்டு பிடியுங்கள்!

ஆக, பூமி என்றால் அது 13000 கிமீ விட்டம் உடையது.
நமது விண்பாறையின் விட்டமோ வெறும் 2 கிமீ.
பூமியுடன் இந்த விண்பாறையை ஒப்பிட்டுப்
பார்த்தால்? பூமி ஒரு யானை! இந்த விண்பாறை
ஒரு கொசு!!

சரி, தனது சுற்றுப்பாதையில் (orbit) சூரியனைச் சுற்றிக்
கொண்டு வரும் இந்த விண்பாறை பூமிக்கு எவ்வளவு
தூரம் கிட்ட வருகிறது? என்று வருகிறது? என்ன நேரம்?

இது பூமிக்கு அருகில் வரும்போது, 0.05 AU தொலைவை
விடச் சற்றுக் குறைவாக இருக்கும். 1 AU என்பது 15 கோடி கிமீ.
ஆயின் 0.05 AU என்றால் 7,500,000 கிமீ. (புரிகிறதா?
75 லட்சம் கிமீ). இதற்குச் சற்றுக் குறைவாக இருக்கும்.
நாசா கூறுகிறபடி, பூமிக்கு நெருக்கமாக வரும்போது
(during the closest approach to earth) , பூமிக்கும் இந்த
விண்பாறைக்கும் இடையே 63 லட்சம் கிமீ
தூரம் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக, (ஏப்ரல் 2020ன் கடைசி வாரம்)
இந்த விண்பாறையின் சுழற்சி கண்காணிக்கப்
பட்டு வருகிறது. ஏப்ரல் 29 புதன் கிழமையன்று
3.26 PMக்கு இது பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது.

இந்த விண்பாறை மட்டுமல்ல, பூமிக்கு நெருக்கமாக
வர வாய்ப்புள்ள எந்த விண்பாறையும் பூமியின்
மீது மோதுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
எனவே இவற்றால் பூமிக்கு எந்த விதமான
பாதிப்பும் இல்லை.

ஒரு யானையின் மீது ஒரு கொசு மோதுகிறது என்று
வைத்துக் கொள்ளுங்கள். என்ன ஆகும்? அதுதான்
இந்த விண்பாறையானது பூமியின் மீது மோதினாலும்
நடக்கும்.

அதன் பாதையில் அது போகிறது; அதாவது சுற்றுகிறது.
அதுபோல தனது பாதையில் பூமி போகிறது. பூமிக்கு
எந்த ஒரு வான்பொருளாலும் எவ்விதப் பாதிப்பும்
இல்லை. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,
ஏதேனும் ஒரு வான்பொருள் பூமியின் மீது
மோத முற்பட்டால், அது பூமியை நெருங்கும்
முன்பே எரித்துச் சாம்பலாக்கப் பட்டு விடும். எனவே
மக்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை.
******************************************************************







  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக