செவ்வாய், 19 ஜூலை, 2022

கணித வேதியியல் ஆசிரியைகளைக் 
கைது செய்தது மிகப்பெரிய அநியாயம்! 
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலைக்கு
ஆசிரியைகளைப் பொறுப்பாக்குவது பேதைமை!
----------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
சின்ன சேலம் கனியாமூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) 
தனியார் மெட்ரிக் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவியான 
ஸ்ரீமதி (17) அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி இறந்து சில நாட்கள் ஆன பின்னரும்கூட 
தமிழக அரசின் காவல் துறை நடவடிக்கை எதுவும் 
எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமுற்ற மக்கள் பள்ளியை 
அடித்து நொறுக்க்கினர். மேசை நாற்காலி பள்ளிப் 
பேருந்துகள் என கோடிக்கணக்கிலான பள்ளியின் 
சொத்துக்கள் எரிக்கப்பட்டன.  

3500 மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பசு மாடுகளின் 
பால் காம்புகளை கயவர்கள் அறுத்திருக்கிறார்கள்.
(பள்ளியானது உண்டு உறைவிடப் பள்ளி ஆதலால்
பசு மாடுகள் வளாகத்தில் நிற்கின்றன)  

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை 
மீட்டெடுப்பது தமிழக அரசின் கடமை ஆகும். 
அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்.
இந்த வன்முறைக்கும் தீவைப்புக்கும் காரணம் 
காவல்துறையின், பள்ளிக் கல்வித் துறையின்
அலட்சியமும் மெத்தனமுமே ஆகும். 

மாணவி ஸ்ரீமதியின் மரணம் நெஞ்சைப் பிழியும் 
சோகம் ஆகும். அக்குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை
அரசு வழங்க வேண்டும். மாணவி மரணம் குறித்து 
CBI விசாரணை நடத்துவதே சிறந்த தீர்வாகும்.

ஆசிரியைகளைக் கைது செய்தது அநியாயம்!
----------------------------------------------------------------------
மாணவியின் மரணத்துக்குக் காரணம் என்று கருதி 
பள்ளியின் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து 
சேலம் சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை.
.
1) பள்ளித் தாளாளர் 2) பள்ளிச் செயலாளர் (இவர் ஒரு பெண்)
3) பள்ளித் தலைமையாசிரியர் 4) வேதியியல் ஆசிரியை 
ஹரிப்பிரியா (40 வயது)  5) கணித ஆசிரியை கீர்த்திகா 
(28 வயது )ஆகிய ஐந்து பேரும் பிணைத்தகுதியற்ற 
பிரிவில் (non bailable) கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் 
அடைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களில் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா
கணித ஆசிரியை கீர்த்திகா இருவரையும் காவல்துறை 
கைது செய்ததும் சிறையில் அடைத்ததும் எந்த 
நியாயமும் அற்ற அராஜகச் செயலாகும். 

மாணவி இறந்த முதல் நாளன்றே நடவடிக்கை 
எடுக்காமல் உறங்கிக் கிடந்த தமிழகக் காவல்துறை, 
மக்களின் கோபம் எல்லை மீறியதும், தங்களின் 
முதுகுத் தோலைக் காப்பாற்றிக் கொள்ள
ஒரு பாவமும் அற்ற ஆசிரியைகளைக் கைது செய்து 
சிறையில் அடைத்துள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு 
ஆசிரியைகள் எப்படிப் பொறுப்பாக முடியும்?
மாணவியை யாரும் அடிக்கவில்லை; 
துன்புறுத்தவில்லை.

மாணவி எழுதிய தற்கொலைக் கடிதத்தை காவல்துறை 
வெளியிட்டு உள்ளது.தமிழ் வாக்கியத்தை ஆங்கில 
எழுத்துக்களால் எழுதியதே அக்கடிதம். ஒரு பக்க 
அளவு கூட, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதத் 
தெரியவில்லை அந்த மாணவிக்கு. 

அக்கடிதத்தில் மாணவி என்ன சொல்லி இருக்கிறார்?
தனக்கு கெமிஸ்டிரி சமன்பாடுகளை எழுத 
முடியவில்லை என்றும், கெமிஸ்டிரி ஆசிரியை 
படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார் என்றும்
மாணவி சொல்லி இருக்கிறார். தற்கொலைக் 
குறிப்பில் ஒரு இடத்தில் கூட ஆசிரியைகள் 
தன்னை இழிவாகத் திட்டியதாகவோ, 
அடித்ததாகவோ  மாணவி கூறவில்லை.

மாணவி படித்த பள்ளி உண்டுஉறைவிடப் பள்ளி.
(Residential school). சொந்த ஊரான கடலூரில் இருந்து 
சின்னசேலத்தில் உள்ள இப்பள்ளியில் விடுதிவாசியாக
(hosteller) மாணவி தங்கிப் படித்துள்ளார். ஓராண்டுக்கு 
லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்திப் படிக்கிறார் 
இந்த மாணவி.

மாணவி தனது கடிதத்தில் கூறியபடி பார்த்தால்,
கணிதம் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்கள்
தனக்குப் புரியவில்லை என்று மாணவி ஒப்புதல் 
வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது மாணவியின் 
குறை அல்ல. கணக்கு எல்லோருக்கும் வராது. 

Taylor series expansion, 2nd order differential equation போன்ற 
கடினமான கால்குலஸ் பாடங்களும் சரி, 
Group, semi group, monoid போன்ற discreet algebra பாடங்களும்  
சரி கடினமானவை. எல்லோராலும் அவற்றைப் 
படித்துப் புரிந்து கொண்டு தேர்வெழுத முடியாது. 
நல்ல மதிப்பெண்களும் பெற முடியாது. 
  
இந்த மாணவியை ஏதாவது கலைப் பாடப் பிரிவிலோ 
(arts group) அல்லது வணிகவியல் சார்ந்த அக்கவுண்டன்சி
பாடப்பிரிவிலோ சேர்த்திருக்க வேண்டும். அதைச் 
செய்ய மாணவியின் பெற்றோர்  தவறி விட்டனர்.
மாணவியின் பெற்றோர் செய்த தவறுக்கு, M.Sc Maths 
மற்றும் M.Sc Chemistry படித்து விட்டு கூடவே B.Ed, M.Ed
படித்து விட்டு அதன் பிறகும் தேவையான போட்டித் 
தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று ஆசிரியப் 
பணிக்கு வந்த ஆசிரியைகள் தங்கள் பக்கம் தவறு  
இல்லாத நிலையிலும் இன்று சேலம் சிறையில் 
அடைக்கப் பட்டு வாடி வருகின்றனர்.    
  
Maths, Physics, Chemistry பிரிவிலோ அல்லது BioMaths
பிரிவிலோ ஒரு குழந்தையைச் சேர்ப்பதற்கு முன்னால்,
அப்படங்களில் கடினத்தனமைக்கு தங்களின் 
குழந்தையால் ஈடு கொடுக்க முடியுமா என்று 
பெற்றோர்கள் தீர விசாரித்து முடிவுக்கு வர வேண்டும்.

அப்படியில்லாமல் தங்களின் நிறைவேறாத 
ஆசை, நிராசைக்கெல்லாம் குழந்தைகளிடம் 
வடிகால் தேட முயன்றால் விபரீதங்கள் ஏற்பட்டே
தீரும்.

குட்டி முதலாளித்துவப் பெற்றோரிடம் இன்னொரு 
பெருங்கேடு அவர்களின் குழந்தை வளர்ப்பு 
முறை. குழந்தைகளை வெகு செல்லமாக 
வளர்ப்பது அவர்களின் நடைமுறை. இதன் 
விளைவாக அனிச்சப் பூக்களாகவும் தொட்டால் 
சிணுங்கிகளாகவும் இவர்கள் தங்களின் குழந்தைகளை
வளர்த்து பொதுவெளியில் விட்டு விடுவார்கள்.

மிகச்சிறிய அசௌகரியத்தைக்கூட எதிர்கொள்ளும்
துணிவு இல்லாமல் வளர்க்கப்பட்ட இந்தக் 
குட்டி முதலாளித்துவப் பெற்றோரின் குட்டி 
முதலாளித்துவக் குழந்தைகள் ஆசிரியை 
படிக்கச் சொல்வதையே ஒரு துன்புறுத்தலாக 
(harassment) எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து 
கொண்டு விடுகிறார்கள்.

பாடம் கடினமாக இருக்கிறது என்ற தன்னுடைய 
உண்மையான கஷ்டத்தை அந்தப் பெண்ணால் 
தன பெற்றோரிடம் கூற முடியவில்லை. அதற்கான 
ஒரு சூழலே அப்பெண்ணின் குடும்பத்தில் இல்லை.
பெற்ரோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் 
இருக்க வேண்டிய ஆரோக்கியமான அறிவுபூர்வமான 
வெளி (space) ஸ்ரீமதியின் குட்டி முதலாளித்துவக்    
குடும்பத்தில் இல்லை. ஸ்ரீமதி மட்டுமல்ல எல்லா 
நடுத்தர  வர்க்கக் குடும்பங்களிலும் இதுதான் 
நிலைமை.

தன்  பிள்ளை படிக்க வேண்டும்; மார்க் எடுக்க 
வேண்டும். இதைத்தவிர வேறு எதையும் ஒரு 
பெற்றோர் காது கொடுத்துக் கேட்க விரும்புவதில்லை.
Grievance redressal mechanism என்பதே குட்டி முதலாளித்துவக் 
குடும்பங்களில் இல்லை. 

தனது குறைகளுக்கு தன்  பெற்றோரிடம் ஆறுதல் தேட 
வாய்ப்பு இல்லாததால் அக்குழந்தை ஸ்ரீமதி தன்  
வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. இதற்கு 
ஆசிரியைகள் எவ்விதத்தில் பொறுப்பாக முடியும்?

மாணவியைப் படிக்கச் சொல்வதும் படிக்கிறாளா 
என்று கண்காணிப்பதும் ஆசிரியர்களின் கடமை.
படிப்பு வராத ஒரு பெண் செத்துப் போனதற்காக 
தங்களின் கடமையைச் செய்த ஆசிரியைகளைச் 
சிறையில் அடைப்பது என்ன நியாயம்?

இப்படித்தான் இந்த சமூகம் இருக்குமென்றால் 
இந்தச் சமூகம் தேவையில்லை; அழியட்டும்.

எனவே தமிழக அரசு உடனடியாக சேலம் சிறையில் 
அடைக்கப்பட்டுள்ள இரண்டு ஆசிரியைகளையும்
(ஹரிப்பிரியா, கீர்த்திகா) விடுதலை செய்ய வேண்டும். 
அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பிள்ளைகள் 
இருக்கின்றன. அந்த ஆசிரியைகள் சுயமரியாதையுடன் 
வாழ வழி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. 
மேலும் அது சமூகத்தின் பொறுப்பும் ஆகும். 

முழுவதும் தன்னுடைய தப்பாலும் தன்னுடைய 
பெற்றோரின் தப்பாலும் செத்துப்போன ஸ்ரீமதி என்ற 
பரிதாபத்துக்கு உரிய அந்தக் குழந்தைக்காக 
எந்தத் தப்புமே செய்யாத ஆசிரியைகள் இரண்டு 
பேரைத் தண்டிப்பது பெருங்குற்றம் ஆகும்.
********************************************


  
      

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக