சனி, 9 ஜூலை, 2022

 பிற மொழிகளை விட இந்தி நளினமானது

என்றும் இசைக்கு மிகவும் பொருத்தமானது
என்றும் இளையராஜா கூறியது சரியா?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
முன் எச்சரிக்கை:
இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்ற
ஷரத்தை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து
நீக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை!
இனி கட்டுரையைப் படிக்கலாம்.
பாரதியார் ஆழ்ந்த இசைஞானம்
உடையவர்.சுந்தரத் தெலுங்கினில்
பாட்டிசைத்து என்று பாடினார் அவர்.
தமிழை விட தெலுங்கானது இசைக்கு
உகந்தது. இது அந்த மொழியின் தன்மை.
உலக அளவிலும் கிரேக்கம்
இசைமொழி என்றும், லத்தீன்
சட்டமொழி என்றும் கருதப்
படுகிறது. (தமிழறிஞர் தனிநாயக
அடிகளார் இவ்வாறு கூறியுள்ளார்).
இளையராஜாவும் பல மொழிகளை
அறிந்தவர். இந்தி உட்பட பல மொழிகளில்
இசை அமைத்தவர். இந்தி மொழி
குறித்து தாம் பெற்ற அனுபவத்தை,
அதிலிருந்து பெற்ற படிப்பினையை
அவர் எடுத்துக் கூறுகிறார். இந்தி
நளினம் மிகுந்தது என்றும் இசைக்குப்
பொருத்தமானது என்றும் அவர்
கூறுகிறார்.
இளையராஜா இந்தியும் இசையும்
அறிந்தவர். இந்தியின் நளினம்
குறித்தும் இசைக்கு அது மிகப்பெரிதும்
பொருந்துவது குறித்தும் பேசுவதற்கு
இளையராஜா அருகதை உடையவர்.
இளையராஜா கூறியது தவறாக
இருப்பின், அவரின் கூறு தவறு என்று
அருகதை உடைய யாரும் நிரூபிக்கலாம்.
ஆனால் இந்தியம் தெரியாமல்,
இசையும் தெரியாமல் இளையராஜா
கூறியதை எள்ளி நகையாடுவது
சாதிவெறியின்பாற்பட்டதாகவே
அமையும்.
நான் ஓரளவு இந்தியும் ஓரளவு இசையும்
அறிந்தவன்.இளையராஜா கூறுவதற்கு
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தி
பிற மொழிகளை விட, அதிகமாக
இசைக்குப் பொருந்துவது பற்றி
இசைவாணர்கள் கூறக் கேட்டவன்.
முத்தமிழில் இசையும் ஒன்று என்பதை
அதன் வரம்புகளைத் தாண்டி அதீதமாக
உணர்ந்து கொள்வது குட்டி
முதலாளித்துவ வெற்றுப் பரவச
உணர்வு மட்டுமே.
முத்தமிழில் இசையும் ஒன்று
என்பதன் பொருள் என்ன? பிற எந்த
மொழியையும் விட தமிழ் இசையில்
உயர்ந்தது என்று பொருள் அல்ல.
முத்தமிழில் "இயல்" ஒன்று என்று
சொல்வது வேறெந்த மொழியையும்
விட இயலில் தமிழே உயர்ந்தது என்று
பொருள்படாது அல்லவா!
ஒரு பறையன் சொல்வதாலேயே
சொல்லப்பட்ட உண்மை தவறாகி
விடாது. உண்மைகள் சாதிக்
காழ்ப்பை உடைத்தெறியும்
வல்லமை உடையவை.
காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்
அறிவுடையார் கண்ணதே.
-------------------------------------------------
பின்குறிப்பு:
கண்ணே கலைமானே என்ற தமிழ்ப்
பாடலையும் "சுருமை அக்கியோமே"
என்ற இந்திப் பாடலையும் (தமிழ்ப்
பாடலின் இந்தி வெர்ஷன்) ஒப்பிட்டுப்
பார்த்து இளையராஜா கூறியதன்
சரித்தன்மையை உணரலாம்.
இளையராஜா கூறிய அதே கருத்தை
கே ஜே யேசுதாசும் கூறியதை நான்
அறிவேன். தக்கோரிடம் விசாரித்து
எவரும் உண்மை அறியலாம், விரும்பினால்.
***************************************
kothai nachiar sats
ஹிந்திக்கவிதைகளில் சமஸ்கிருதத் சொற்கள் நிறைய இருக்கும்.
பாலிவுட் திரைப்படப்பாடல்களில் உருதுச் சொற்கள் மிக அதிகமாகஇருக்கும். ராஜாசொல்வது பாலிவுட் ஹிந்தி.
உருதுச் சொற்கள் கவர்ச்சிகரமானவை musical ஆகவும் இருக்கும்.
ஹிந்தி திரைப்படப்பாடல்கள் எழுதுகிறவர்கள்பெரும்பாலோர் இஸ்லாமியர்.
அவர்களுக்கு உருதுச் சொற்களின் மீது காதல் இருப்பது இயற்கையே.
ga gha ja jha da dha da dha ba bha ஸ ஷ ஹ போன்ற ஒலி வளம்/வலிமை உள்ள Consonants ஹிந்தியில் இருப்பதால் இசைக்கு இந்தி ஏற்ற மொழி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சங்கீத மும்மூர்த்திகள் தங்கள் கீர்த்தனைகளை தெலுங்கில் எழுதக்காரணமும் இதுவே. இந்த சம்ஸ்கிருத எழுத்துக்களை தெலுங்கு தன்னுள் ஏற்றுக்கொண்டுவிட்டதால் ஒலி வளம் குறையாமல் தெலுங்கில் எழுதுவது வசதியாக இருந்தது. சங்கீதத்துக்கு phonetical richness மிகவும் வசதியானது.ராகங்களின் ஓசை பழுதுபடாமல் பாடல்கள்/கீர்த்தனைகள் இயற்றுவது எளிது..phonetics விஷயத்தில் தமிழ் நோஞ்சான் பாஷை
-------------------------------------------------narayanamurthy gopal says 
இந்தி மொழிப் பாடல்கள், மற்ற மொழிப் பாடல்களை விடவும் நயம் மிகுந்ததாக இருப்பதாக ஓர் எண்ணம் இருப்பதை தென்னிந்திய இசையமைப்பாளர்கள் அனைவருமே ஒப்புக் கொள்வார்கள்.
இளையராஜா சொன்னதாலேயே இப்போது சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, மெல்லிசை மன்னரின் சீடரும், இளையராஜாவின் குருவுமான ஜி.கே.வெங்கடேஷ் இப்படிச் சொல்லுவார்:
"இந்திச் சொற்களை நம் வசதிக்கேற்ற படி பிரித்தோ, நீட்டியோ, சுருக்கியோ பாட முடியும்.உதாரணத்திற்கு "மொகபத்" என்ற சொல்லை பல்வேறு ஸ்டைலில்,சுரங்களின் வரிசைக்கேற்ப பாட முடியும். அதற்கு இணையான " காதல்" என்ற சொல்லை உள்ளபடியேதான் உச்சரிக்க முடியும். நீட்டவோ சுருக்கவோ முடியாது.அதனால் இந்திப் பாடல்கள் ஓசை நயம் மிக்கதாகவும், மெட்டுக்கு வளம் சேர்ப்பதாகவும் இருக்கின்றன.மேலும், கற்பனை வளத்தோடு அலங்காரமாய் எழுத நிறைய பண்டிதர்கள் இந்தித் திரையலகில் இருந்தார்கள்"
மெல்லிசை மன்னர் ராம மூர்த்தியும் இதே கருத்தையே கொண்டிருந்தார்.
எப்போதோ சொன்ன இளையராஜா வீடியோவை வைத்து, அவரை இப்போது கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக