செவ்வாய், 27 ஜனவரி, 2015

ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கரின் 
மூடநம்பிக்கைப் பிரச்சாரம்!
----------------------------------------------- 
தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார் 
அதிகாரி உமாசங்கர் ( இன்று 27.01.2015). செய்தியின் ஊடே 
ஒளிபரப்பான  இப்பேட்டியை காலை 9.30--10.00 மணிக்கு 
பார்க்க நேர்ந்தது.அடுத்தடுத்த ஒளிபரப்புகளிலும் 
இப்பேட்டி இடம் பெற்றதாகக் கேள்வியுற்றேன்.

அதிகாரி உமாசங்கர் ஆணித்தரமாகத் தமது நிலையை 
எடுத்துரைத்தார்.
1) கடவுள் நம்பிக்கை 2) கிறிஸ்துவ மத நம்பிக்கை 
3) கிறிஸ்துவப் பிரச்சாரம் 4) கிறிஸ்துவத்துக்கு மத மாற்றம் 
ஆகிய நான்கையும் தமது நிலையாகவும் தமது செயல்களாகவும் 
அவர் ஒப்புக் கொண்டார்.
இவை நான்கையும் இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது 
( பிரிவு-19 மற்றும் பிரிவு-25இன்பிரகாரம்)  என்றும், எனவே 
தம் மீது சட்டப்படி தவறு ஏதும் இல்லை என்றும் 
உறுதிபடக் கூறினார்.   

மதமாற்றத்தை அரசமைப்புச் சட்டம் தடுக்கவில்லை 
என்று மேலும் விளக்கம் அளித்த அவர், மதமாற்றம் என்ன 
விபச்சாரமா ( BROTHEL) என்றும் வெடித்தார்.

அதிகாரி உமாசங்கர் ஒப்புக்கொண்ட மேற்சொன்ன நான்கிலும் 
சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. அவர் மீது ஒழுங்கு 
நடவடிக்கை எடுக்க எவ்வித நியாயமும் இல்லை. எனவே,
கிறிஸ்துவப் பிரச்சாரம், கிறிஸ்துவத்துக்கு மதமாற்றம் ஆகிய 
செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபடுவதை எதிர்ப்பதில்  
அர்த்தம் இல்லை.அது அவரின் உரிமை.

ஆனால் இத்தோடு நின்று விடாமல் மேலும் ஒன்றைக் கூறினார்.
மேற்சொன்ன பேட்டியில் அவர் கூறியது:-
------------------------------------------------------------ 
" நான் ஏசுவின் மகிமைகளைக்  கூறி ஜெபம் செய்கிறேன்.
இதன் மூலம் நோயாளிகளைக் குணப்படுத்துகிறேன்.
நான் ஜெபம் செய்து முடித்ததும் ஆஸ்த்மா நோய் மாஜிக்கைப் 
போல குணம் ஆகிறது. ஆர்த்ரைட்டிஸ் நோய் மாஜிக்கைப் போல 
குணம் ஆகிறது. மனிதனால் முடியாத, மெடிக்கல் சயன்சால்
முடியாத வியாதிகளை நான் குணப் படுத்துகிறேன்.

நான் கோஆப்டெக்சில் பணி புரிந்தபோது, ஒரு ஊழியருக்கு 
கண் பார்வை இல்லாமல் இருந்தது. ஒருவிதமான DISORDER அது.
நான் ஜெபம் செய்து முடித்ததும் அவருக்குப் பார்வை வந்து விட்டது."

இவை அனைத்தும் அவர் கூறியது ஆகும். இது எவ்வளவு 
பெரிய மோசடி! எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம்! மருத்துவ 
விஞ்ஞானத்தால் முடியாததை இவரின் ஜெபம் குணப் 
படுத்தும் என்றால், நாட்டில் மருத்துவமனைகள் எதற்கு?

தமிழ்நாட்டில் நிறைய மருத்துவமனைகளைக் கட்டியவர்கள் 
கிறிஸ்துவ மெஷினரிகள். ஜெபத்தால் நோய் குணமாகும் 
என்றால், பாதிரியார்கள் மருத்துவ மனைகளைக் கட்டியது ஏன்?

எனவே உமாசங்கர் செய்து வருவது கேவலமான மூடநம்பிக்கைப் 
பிரச்சாரம். முறியடிக்க வேண்டியஒன்று.
இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடம் அறிவியல் 
மனப்பான்மையை ( SCIENTIFIC TEMPER) வளர்க்க வேண்டும் என்று 
கூறுகிறது. அதிகாரி உமாசங்கரோ, அறிவியலுக்கு எதிராக 
மூடநம்பிக்கையை வளர்த்து வருகிறார். இது கண்டிக்கத் தக்கது.

மராட்டிய மாநிலத்தில், மறைந்த அறிவியல் போராளி 
டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் மறைவை ஒட்டி 
" மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்" என்று ஒரு சட்டம் 
பிறப்பிக்கப் பட்டது. அந்தச் சட்டத்தின்கீழ் உமாசங்கர் 
தண்டனைக்கு உரிய குற்றவாளி ஆகிறார். அதுபோன்ற 
சட்டம் தமிழ்நாட்டிலும் கொண்டு வரப் பட வேண்டும்.

அதிகாரி உமாங்கரின் மூடநம்பிக்கைப் பிரச்சாரத்தை 
முறியடிப்பதில் அறிவியல் ஆர்வலர்களும் 
பகுத்தறிவாளர்களும் தோள் கொடுக்க வேண்டும் என்று 
நியூட்டன் அறிவியல் மன்றம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை 600 094, நாள்: 27.01.2015

***********************************************************               




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக