வியாழன், 22 ஜனவரி, 2015

தென்னாலிராமன் வளர்த்த குதிரையாக 
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி!
---------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------  

நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா பாண்டியன் என்று 
கட்சியினர் பெருமை கொள்ளலாம். ஆனால் எங்கள் 
வடசென்னைத்  தொகுதி மக்கள் தா.பா.வை ஒரு 
கம்யூனிஸ்ட் தலைவராகக் கருதுவதில்லை. அவரை 
ஒரு காங்கிரஸ் தலைவராகவே பாவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு,
மூவர்ணச் சுவரொட்டிகளில் இந்திரா, ராஜீவ் படங்களுக்கு 
இடையில் ஒளிர்ந்து, தொந்தி பருத்த கதர்க் குல்லாய்கள்
புடைசூழ அவர் தெருத்தெருவாக வந்து ஓட்டுக் கேட்ட 
காட்சியும் அதன் மாட்சியும் இன்றளவும் எங்கள் 
வடசென்னைத் தொகுதிவாழ் மக்கள் நெஞ்சில் அழியாச் 
சித்திரமாகத் திகழ்வதை யாரால் மறக்க இயலும்!

நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு, தொண்ணூறுகளில் 
புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப் 
படுத்தியபோது, அதை ஆதரித்து தா.பா அவர்கள் 
எழுதிய புத்தகம் இப்போது படித்தாலும் திகட்டவில்லையே!
அற்புதமான எழுத்தாற்றலும் ஆணித்தரமான வாதங்களும் 
ஆழ்ந்த பொருளாதார ஞானமும் பளிச்சிட்ட அவரின் 
எழுத்து, ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் 
ஆகியவற்றின் பொருளாதார நிபுணர்களை நாணம் 
கொள்ளச் செய்ததே!

அட்டையைக் கிழித்துவிட்டுப் படித்தால், அதை எழுதியவர் 
டாக்டர் மன்மோகன்சிங் அல்லது ப சிதம்பரம் என்றுதானே 
இன்றைய இளைய தலைமுறை நினைக்கும்?

எனவேதான் சிங்காரவேலர், சீனிவாசராவ், ஜீவானந்தம் 
ஆகியோர் வரிசையில் எங்கள் வடசென்னைத் தொகுதி 
மக்கள் தா.பா.வை வைத்துப் பார்ப்பதில்லை. மாறாக,
மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராமமூர்த்தி, தங்கபாலு 
ஆகியோரின் வரிசையில் வைத்தே பார்க்கிறோம்,
வணங்குகிறோம்.

எஸ்.ஏ.டாங்கே, மொஹித்சென் ஆகிய தத்துவ அறிஞர்கள் 
இந்தியத் துணைக்கண்டத்தில், ஒரு புதிய வகை 
கம்யூனிசத்தை அறிமுகம் செய்தபோது, யாரினும் 
முன்னதாக அதன் மாண்பை உணர்ந்தவர் தா.பா.
எனவேதான், ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அவர்களின் 
மகரஜோதியில் ஒன்று கலந்தார் தா.பா. 

டாங்கேயிசம் என்று புகழப்படும் அத்தத்துவம் ஒருவித 
அத்வைத தத்துவம் ஆகும். த்வைதம் என்றால் இரண்டு
என்று பொருள். அத்வைதம் என்றால் இரண்டல்ல, ஒன்று
என்று பொருள். முதலாளி, தொழிலாளி என்ற தனித்தனி 
வர்க்கங்கள் இரண்டு அல்ல ஒன்றுதான் என்று பொருள்.
சுண்டெலியும் பூனையும் இரண்டு தனித்தனி உயிர்கள் 
அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்று பொருள்.

காலடி ஆதிசங்கரரின் அத்வைதம் ஆன்மிக விடுதலைக்கானது.
ஆனால் டாங்கே அவர்களின் தத்துவமோ அரசியல் 
விடுதலைக்கானது. எனவே முன்னதை விடப் பின்னது உயர்ந்தது.
இதைத் தம் நுண்மாண்  நுழைபுலத்தால் உணர்ந்த தா.பா.
டாங்கேயிசத்தில் நெஞ்சைப் பறிகொடுத்தார். 

தம் குருநாதரால் உந்தப்பட்டு அவரைப் போன்றே, ஒரு 
புதியவகைக்  கம்யூனிசத்தை, தமிழ்நாட்டில், 2014 ஏப்ரல்-மே
காலக்கட்டத்தில் அறிமுகப் படுத்தினார் தா.பா. புதுமை 
மணக்கும் அத்தத்துவத்தின் பெயர் ஜெ.யிசம்   

ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவதன் மூலம், தேசிய 
ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றத் திட்டமிட்டார் தா.பா.
ஆனால், பாவம், அவர் ஒன்று நினைக்க, தெய்வம் வேறு 
ஒன்றை நினைத்து விட்டதே!

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தென்னாலிராமன் 
வளர்த்த குதிரையாகி விட்டது. இந்தியாவில் மட்டும் 
என்ன வாழ்கிறதாம் என்று வாசகர்கள் கேட்கக் கூடும்.
543 மக்களவை இடங்களில் "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு"
என்பதாக ஒரே ஒரு இடத்தோடு சுருங்கிப் போய்விட்டது 
கம்யூனிஸ்ட் கட்சி.

நேரு அரசை ஆதரித்தது, டாங்கேயிசத்தைப் பின்பற்றியது,
நெருக்கடி நிலையை ஆதரித்தது, ஜெயாவுக்குப் பல்லக்குத் 
தூக்கியது என்று செய்யத் தகாதவற்றைச் செய்ததுதான் 
கம்யூனிஸ்ட் கட்சியை இன்று மீளாப் படுகுழியில் 
தள்ளி உள்ளது. 

     செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
     செய்யாமை யானும் கெடும்.

வலது பிற்போக்கு சக்திகள் மிகுந்த மூர்க்கத்துடன் 
அரசியல் களத்தில் வாளைச் சுழற்றும் இக்காலக் கட்டத்தில் 
அதை எதிர்கொண்டு முறியடிக்க கம்யூனிஸ்ட் கட்சி 
உயிருடன் இருப்பது அவசியம். 1925இல் சிங்காரவேலர் 
தொடங்கி வைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர் குடிக்க  
எவனுக்கும் உரிமை கிடையாது. 

எனவே உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை,
கம்யூனிஸ்ட் கட்சி தன்னைப் புனர் உத்தாரணம் செய்து 
கொள்ள வேண்டும் . இந்த மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து 
தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக, 
கிரேக்கப்  புராணத்தில் வரும் அவுகியன் லாயத்தைப் போல 
( AUGIAN STY ) அழுக்குப் படிந்து கிடக்கும் கட்சி, 
கழுவித் தூய்மை அடைந்து ஒளிர வேண்டும். 

கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லாம் இருக்கிறது, கம்யூனிசத்தைத் 
தவிர என்ற அவப்பெயர் நீங்க வேண்டும். டாங்கேயிசம் ஜெ.யிசம் 
ஆகியகழிவுகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும்.   

புரட்சிகர உணர்வைக் குன்றிமணி அளவேனும் தக்க வைத்துக் 
கொண்டிருக்கும் கட்சியின் அணிகளாலும், கட்சிக்கு 
வெளியே உள்ள கம்யூனிசத்தை நேசிக்கும் திரளான 
ஆதரவாளர்களாலும் இதைச் சாதிக்க முடியும்.

       வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 
       மற்றைய எல்லாம் பிற.

*****************************************************************  

         
  





  
          .


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக