புதன், 27 ஜனவரி, 2021

சதுரங்கத் தந்தை விஸ்வநாதன் ஆனந்துக்கு 

பாரத ரத்னா எட்டாக்கனியா? 

--------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------- 

2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அண்மையில் அறிவிக்கப்

பட்டன. ஆனால்  பாரத ரத்னா விருது மட்டும் யாருக்கும் அறிவிக்கப் 

படவில்லை. சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா 

விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த சதுரங்க ஆர்வலர்கள் பெரிதும் 

ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் கடைசியாக 2019ல் பாரத் ரத்னா 

விருது வழங்கப் பட்டது. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவர் பெற்றனர். 

அதன் பிறகு கடந்தஆண்டிலும் இந்த ஆண்டிலும் யாருக்குமே 

வழங்கப் படவில்லை.


முன்னதாக 2011 டிசம்பரில் பாரத ரத்னா விருது குறித்த விதிகள் திருத்தப் 

பட்டன; அதுவரை கலை, இலக்கியம், அறிவியல், பொதுசேவை 

ஆகிய துறைகள் மட்டுமே விருதுக்கு உரியனவாக இருந்தன.

"மனித முயற்சிக்கு இடமளிக்கும் எத்துறையாயினும்" 

(any field of human endeavour) விருதுக்கு உரியதே என்று விதிகள் திருத்தப் 

பட்டன. இதன்படி விளையாட்டுத் துறையும் விருதுக்கு 

உரியதாயிற்று. திருத்தப்பட்ட விதிகளின்படியே கிரிக்கெட் வீரர் 

சச்சின் டெண்டுல்கருக்கு 2014ல் பாரத ரத்னா வழங்கப் பட்டது.

நூறு செஞ்சுரிகளை எடுத்தவரும், கிரிக்கெட்டின் கடவுள் என்று 

வர்ணிக்கப் பட்டவருமான சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா 

வழங்கியது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில் சதுரங்கத்தில்  ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளையும் அதன்விளைவாக இந்திய 

சதுரங்கம் பெரும் உயரத்தை எட்டியதையும் அரசு கணக்கில் 

கொள்ள வேண்டும்.  

 

2007ல் பத்ம விபூஷண் விருது வழங்கி ஆனந்தை இந்திய 

அரசு கெளரவித்துள்ளது. எனினும் உலக சாம்பியன் பட்டத்தை 

ஐந்து முறை வென்றுள்ள ஆனந்துக்கு நியாயமான கெளரவம் 

என்பது பாரத ரத்னா விருதுதான். அரசு அதை அவருக்கு வழங்க 

முன்வர வேண்டும்.


ஆனந்தின் வருகைக்கு முன் இந்திய சதுரங்கம் எப்படி இருந்தது 

என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் சதுரங்க 

வரலாற்றில் ஆனந்தின் (வயது 51) வருகை என்பது  

வெங்கலக் கடையில் யானை புகுந்தாற்போல இருந்தது. சதுரங்கத்தில்  கிராண்ட் மாஸ்டர் என்பதுதான் ஒரு வீரர் பெறக்கூடிய அதிகபட்ச 

அந்தஸ்து. ஆனந்தின் வருகைக்கு முன்னால் இந்தியாவில் ஒருவர் கூட கிராண்ட் மாஸ்டர் கிடையாது. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரே  ஆனந்துதான். 1988ல் தமது 18ஆவது வயதில் ஆனந்த்  கிராண்ட் மாஸ்டர் 

ஆனார். 


ஆனந்துக்கு முன்னால் இந்தியாவில் சதுரங்கத்தில் தலைசிறந்து 

விளங்கியவரும் ஒரு தமிழரே.அவர்தான் மானுவல் ஆரன். தற்போது  

 85 வயதாகும் அவர்  கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் 

பெற்றிருக்கவில்லை.. ஆனால் அதைவிடக் குறைந்த சர்வதேச மாஸ்டர் (International Master) அந்தஸ்தை 1961ல்பெற்றிருந்தார். இந்தியாவின் 

முதல் சர்வதேச மாஸ்டரும் அவரே. 1961 முதல் 1978 வரை அவர் மட்டுமே இந்தியாவின் ஒரே சர்வதேச மாஸ்டராக இருந்திருக்கிறார். 1978ல்தான் 

வி  ரவிக்குமார் இந்தியாவின் இரண்டாவது சர்வதேச 

மாஸ்டராக ஆகிறார். இவரும் தமிழரே; பரமக்குடியில் பிறந்தவர்.  

1978 வரை இந்தியாவில் ஒரே ஒருவர்தான் சர்வதேச மாஸ்டர் என்பதும்,

1988 வரை இந்தியாவில் கிராண்ட் மாஸ்டரே இல்லை என்பதும்

இந்திய சதுரங்கத்தின் தாழ்நிலையைச் சுட்டிக் காட்டுகின்றன.  


மானுவல் ஆரன் இந்தியாவின் தேசிய சாம்பியனாக ஒன்பது முறை இருந்திருக்கிறார். சர்வதேசப்  போட்டிகளில், ஒலிம்பியாட்களில் 

இந்திய அணிக்குத் தலைமை ஏற்றுள்ளார். இந்திய அரசு 

இவருக்கு 1962ல் அர்ஜுன் அவார்டு வழங்கி, பொன்னை வைக்கும் 

இடத்தில் பூவை வைத்தது. 

 

யார் யாரோ பத்மஸ்ரீ விருதுகளை அள்ளிச் செல்லும்போது  

மானுவல் ஆரனுக்கு ஒரு பத்மஸ்ரீ விருது இதுவரை வழங்கப்   

படவில்லை. 2021ல் 119 பத்ம விருதுகள், 2020ல் 141, 2019ல் 112 

என ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பத்ம விருதுகள் 

வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் 1970ல் இருந்து இன்று 

வரை இந்த ஐம்பதாண்டுகளில் பல்லாயிரக் கணக்கான 

பத்ம விருதுகள் வழங்கப் பட்டிருந்தும் மானுவல் ஆரனுக்கு  

ஒன்றுமில்லை என்பது நியாயமற்றது. சதுரங்கம் புறக்கணிக்கப் 

படுகிறது என்பதன் நிரூபணமே இது.


விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க வீரர் மட்டுமல்ல கணித 

நிபுணரும் ஆவார். சதுரங்கம் என்பது கணிதமே என்பதால், 

உலக சாம்பியனாகத் திகழும் சதுரங்க வீரர்கள் கணித 

நிபுணர்களே ஆவர். 2010 ஆகஸ்டில் ஹைதராபாத்தில் 40 கணித நிபுணர்களுடன் ஒரே நேரத்தில் (simultaneously) ஆனந்த் சதுரங்கம் விளையாடினார். சர்வதேச கணித நிபுணர்களின் காங்கிரஸ் 

(International Congress of  Mathematicians) இப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.      

35 கணித நிபுணர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் 

பொறியாளர்கள் 5 பேரும் ஆக மொத்தம் 40 பேருடன் ஒரே நேரத்தில் 

ஆனந்த் விளையாடினார். 


போட்டியின் முடிவில் ஆனந்த் 39.5 புள்ளிகள் பெற்றிருந்தார்.

(வெற்றி = 39; டிரா = 1; தோல்வி = 0). ஆனந்துடன் விளையாடிய 40 கணித நிபுணர்களில் 39 பேர் தோல்வி அடைந்தனர். டி ஸ்ரீகர் (T Srikar) என்னும் 

14 வயதுச் சிறுவன் மட்டும் ஆனந்துடன் டிரா செய்தார்.


கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதே சதுரங்கம். சதுரங்கக் காய்களின் நகர்வுகள் கணித விதிகளுக்கு உட்பட்டவையே. உதாரணமாக சதுரங்கக் குதிரையை 

எடுத்துக் கொள்வோம். சதுரங்கப் பலகையில் ஒரு கட்டத்தில் 

உள்ள குதிரையை நகர்த்தினால் அது எட்டு கட்டங்களுக்குச் 

செல்ல இயலும்.  இந்த எட்டு கட்டங்களையும் இணைத்தால் 

ஒரு எண்கோணம் (octagon) கிடைக்கும்.


சதுரங்கத்தில் இரண்டு பிஷப்புகளை வைத்துக்கொண்டு 

எதிரி அரசனைச் சிறைப்பிடிக்க முடியும். ஆனால் இரண்டு 

குதிரைகளை வைத்துக்கொண்டு சிறைப்பிடித்தல் இயலாது.

இவை கணித ரீதியாக  நிரூபிக்கப்பட்ட உண்மைகள். 


குதிரையின் சுற்றுலா (The Knight's tour) என்று ஒரு புகழ் மிக்க 

புதிர் சதுரங்கத்தில் உண்டு. சதுரங்கப் பலகையில் ஏதேனும் 

ஒரு கட்டத்தில் வைக்கப்பட்ட குதிரையானது 64 கட்டங்களுக்கும் 

செல்ல வேண்டும். எந்தக் கட்டமும் விடுபடாமலும், எந்தக் 

கட்டத்திலும் ஒருமுறைக்கு மேல் நுழையாமலும் சுற்றுலாவை 

நிறைவு செய்ய வேண்டும். உலகப்புகழ் பெற்ற கணித மேதை 

லியனார்டு ஆய்லர் (Leonhard Euler) இப்புதிருக்குத் தீர்வு கண்டார். 


அது போல, சதுரங்கப் பலகையில் எட்டு ராணிகளை  

ஒன்றையொன்று வெட்டாமல் நிறுத்த முடியுமா என்பது இன்னொரு 

புதிர். ஜெர்மனியின் கணித மேதை காரல் காஸ் (Carl Gauss) இதற்குத் 

தீர்வு கண்டார்.  


ஆக சதுரங்கம் முற்றிலும் கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டே 

இயங்குகிறது என்பது நிதர்சனம். சதுரங்கத்தில் இருந்து கணிதத்தைப் 

 பிரிக்க இயலாது.எனவே சதுரங்க நிபுணராக இருப்பவர் இயல்பாகவே 

கணித நிபுணராகவும் இருக்கிறார். ஆக ஐந்து முறை 

உலக சாம்பியனாக இருந்த ஆனந்த் ஒரு கணித நிபுணரே. 

ஆனந்த் மட்டுமல்ல பாபி பிஷர், காரி காஸ்பரோவ், மாக்னஸ் 

கார்ல்சன் உள்ளிட்ட சதுரங்க சாம்பியன்கள் கணித நிபுணர்களே.


டாக்டர் மாக்ஸ் யூவ் (Dr Max Euwe) என்ற நெதர்லாந்து நாட்டின் 

கணித நிபுணர் 1935ல் உலக சாம்பியன் ஆனார். ஒரு கணித நிபுணர்

உலக சாம்பியனாக ஆவது என்பது சதுரங்கத்தில் மட்டுமே

சாத்தியம். இவர் உலக சதுரங்க சம்மேளனத்தின் (FIDE) 

தலைவராகவும் பணியாற்றியவர்.


ஹைதராபாத்தில் 40 கணித நிபுணர்கள் சேர்ந்து 41ஆவது 

கணித நிபுணர் ஆனந்துடன் சதுரங்கம் விளையாடியதும், 

இப்போட்டியை சர்வதேச கணித மாநாடு முன்னின்று 

நடத்தியதும்  சதுரங்கம் கணிதமே என்ற உண்மையை 

நிரூபிக்கின்றன.


சதுரங்கத்தின் தாயகம் இந்தியாவே. சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவர் ஒரு கணித நிபுணரே. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ருத்ரதர் என்னும் காஷ்மீரப் புலவர் "காவிய அலங்காரம்" 

என்னும் நூலை இயற்றி உள்ளார். இந்த சமஸ்கிருத நூலில் 

சதுரங்கம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. "குதிரையின் சுற்றுலா" 

என்னும் சதுரங்கப் புதிர் பற்றி இந்நூலில் விவரிக்கப் 

பட்டுள்ளது. சதுரங்கம் பற்றிய மிகத் தொன்மையான ஆவணம்

இதுவே. இந்தியாவில் பிறந்த சதுரங்கம் இங்கிருந்து பாரசீகம் சென்று, அங்கிருந்து ஐரோப்பா சென்றது. சதுரங்கம் பிறந்தது 

இந்தியாவில்தான் என்ற உண்மையை தற்போது உலகம் 

ஏற்றுக் கொண்டுள்ளது. 


சதுரங்கம் இந்தியாவில் பிறந்திருந்தாலும், கடந்த பல 

நூற்றாண்டுகளில் இந்திய சதுரங்கம் பாலைவனமாகவே 

காட்சி அளித்தது.  இந்நிலையில் 1988ல்  கிராண்ட் மாஸ்டர் பட்டம்   

வென்ற ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆகிறார்.

80 கோடி மக்கள்தொகை இருந்தும் ஒரு  கிராண்ட் மாஸ்டர் கூட 

இல்லாத நாடு இந்தியா என்னும் அவப்பெயரைத் துடைத்தெறிகிறார். 

ஆனந்த் விதைத்த விதைகள் மரமாகி இன்று 2020ஆம் ஆண்டின் 

இறுதியில் இந்தியாவில் 65 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.


உலக அளவில் 2019 ஜூலை நிலவரப்படி, உலகின் மொத்த கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 1918. இதில்  256 கிராண்ட் 

மாஸ்டர்களுடன் ரஷ்யா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 101 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 65 பேர் என்பது பெரும் 

சாதனையாகும். மகத்தான இந்த சாதனை ஆனந்தால் விளைந்தது.

சதுரங்கத்தை விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாக 

இருந்தவர் ஆனந்த். இளம் வீரர்கள் பெரும் சாதனைகளை 

நிகழ்த்துவதற்கு உத்வேகம் அளித்தவர் ஆனந்த்.      


டெஹ்ரானில் 2000ல் நடந்த போட்டியில் அப்போதைய உலக 

சாம்பியன் அலெக்சாண்டர் காலிஃப்மேன் என்னும் ரஷ்யரை 

வென்று முதன் முதலாக உலக சாம்பியன் ஆகிறார் ஆனந்த்.

2007ல் மெக்சிகோவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்ச 

புள்ளிகளைப் பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆகிறார் 

ஆனந்த்.


2008ல் ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற போட்டியில் 

எதிராளி (challenger) விளாதிமீர் கிராம்னிக்கை முறியடித்தும்,

2010ல் பல்கெரியாவின் சோபியாவில் நடைபெற்ற போட்டியில் 

எதிராளி வெசலின் டோபலோவை முறியடித்தும் உலக 

சாம்பியன் ஆகிறார் ஆனந்த். 2012ல் மாஸ்கோவில் நடைபெற்ற 

போட்டியில், எதிராளி போரிஸ் கெல்ஃபண்டை வென்று 

உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார் 

ஆனந்த். இதன் மூலம் சதுரங்கத்தில் காலங்காலமாக நீடித்து வந்த 

ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடித்தார் ஆனந்த். இறுதியில் 2013ல் 

சென்னையில் நடந்த போட்டியில் எதிராளி மாக்னஸ்  கார்ல்சனிடம் 

தோல்வி அடைந்தார்.ஆனந்த்.


2000 முதல் 2012 வரை ஐந்து முறை உலக சாம்பியனாகத் 

திகழ்ந்தவர் ஆனந்த். ஈலோ தர நிர்ணயப்படி(Elo rating)

தற்போது ஜனவரி 2021ல் ஆனந்த் 2753 ஈலோ புள்ளிகள் 

பெற்றுள்ளார். அதிகபட்சமாக இவர் பெற்றது 2817 ஈலோ 

புள்ளிகள் (மார்ச் 2011ல்). உலக சதுரங்க சம்மேளனத்தின் 

(FIDE) அளவீட்டின்படி, 2800க்கு மேல் புள்ளிகள் பெறுவது  

பெரும் கெளரவத்துக்கு உரியதாகும். அவ்வாறு பெற்றுள்ள 

நான்காவது வீரர் ஆனந்த் ஆவார்.                     


ஆனந்த் இல்லாவிட்டால் இந்திய சதுரங்கம் ஓர் வறண்ட 

பாலைவனமே. இந்தியாவில் கிரிக்கெட், டென்னிஸ் 

உள்ளிட்ட பிற விளையாட்டுகள் சதுரங்கம் போல மிகவும் 

தாழ்நிலையில் இல்லை. 1988ல் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர்

பட்டம் பெற்ற பின்புதான், மரணப் படுக்கையில் கிடந்த இந்திய 

சதுரங்கம் எழுந்து உட்கார்ந்தது. இன்று 65 கிராண்ட் 

மாஸ்டர்களுடன் சர்வதேச அரங்கில் கம்பீரத்துடன் 

தலை  நிமிர்ந்து நிற்கிறது இந்திய சதுரங்கம் என்றால் 

இதற்குக்  காரணமான ஒரே ஒருவர் ஆனந்தே!

பூஜ்யத்தில் இருந்த இந்திய சதுரங்கத்தை வரம்பிலி வரை 

(from zero to infinity) கொண்டு சென்றவர் ஆனந்தே.


எனவே இந்திய சதுரங்கத்தின் தாயும் தந்தையுமான 

விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா வழங்கி

சதுரங்கத்தை கெளரவிக்க இந்திய அரசு முன்வர 

வேண்டும். ஆனந்துக்கு முந்திய சதுரங்க நாயகன் 

மானுவல் ஆரனுக்கு பத்மபூஷண் விருது வழங்க வேண்டும்.

இவை சதுரங்கத்தை நேசிக்கும் கோடானுகோடி

ஆர்வலர்களின் கோரிக்கைகள் ஆகும்.இந்திய அரசு 

இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்.

*********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக