திங்கள், 21 ஜனவரி, 2019

அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துக்களை
முறியடிப்பது நமது கடமை!
------------------------------------------------------------------------------------------
அண்மைக்  காலமாக இந்தியாவில் நடைபெறும் அறிவியல்
மாநாடுகள் ஏளனத்துக்கு இலக்காகி வருகின்றன. 2015ல்
மும்பையில் நடைபெற்ற 102ஆவது அறிவியல் மாநாடு முதலாக
அண்மையில் (2019) ஜலந்தரில் நடைபெற்ற 106 ஆவது
அறிவியல் மாநாடு வரை தொடர்ச்சியாக எல்லா மாநாடுகளும்
சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. அறிவியலுக்கு எதிரான
பிற்போக்கான கருத்துக்களை வெளியிடும்  மேடையாக
அறிவியல் மாநாடுகள் மாறி வருகின்றன. இந்தப் போக்கு
நாடெங்கும் உள்ள அறிவியலாளர்கள் அறிவியல் ஆர்வலர்கள்
இடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. சர்வதேச
அளவிலும் இந்திய அறிவியல் மாநாடுகள் நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி வருகின்றன.

மும்பை அறிவியல் மாநாட்டில் (2015) பிள்ளையாரைப் பற்றிக்
குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மனித உடலில்
யானைத் தலையைப் பொருத்தும் அளவுக்கு பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில்
(plastic surgery) இந்தியா சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி
இருந்ததா? இருந்தது என்பதே உண்மை. உலகிற்கே
பிளாஸ்டிக் சர்ஜரியைக் கற்றுக் கொடுத்தது
இந்தியாவே. இந்திய ஞானி சுஸ்ருதரே பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை. ஆனால் மனிதத் தலைக்குப் பதில்
யானைத் தலையைப் பொருத்தியது இந்தியா
என்று கூறும்போது, இது என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
மெய்யாகவே வேத காலத்தில் இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி
இருந்தது என்ற உண்மைகூட கேலிக்கூத்தாகக்
கருதப் பட்டு விடுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த அறிவியல் மாநாடுகளிலும்
இந்தியாவின் பண்டைப் பெருமையை உலகிற்கு
உணர்த்துவதாகக் கருதிக் கொண்டு பல கட்டுக்கதைகள்
வலம் வந்தன.

மகாபாரத காலத்திலேயே இணையதளம் (internet) இருந்ததாக
ஒருவர் கூற, ராவணன் ஆகாய விமானங்கள் வைத்திருந்ததாக
இன்னொருவர் கூற, போட்டி போட்டுக் கொண்டு ஆளாளுக்கு
நாணமே இல்லாமல் அபத்த மூட்டைகளை அவிழ்த்து விட, இந்தியாவின் அறிவியல் என்பது கேலிக்கு இடமானது. இவ்வாறு பேசுபவர்கள் எவரும் குப்பனோ சுப்பனோ அல்லர். மலினமான அரசியல்வாதிகள் அல்லர். மாறாக விஞ்ஞானிகள் என்பது
நாணத் தகுந்தது.

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது டைத்து.

ஜலந்தர் மாநாட்டில், ஆந்திரப் பல்கலைக் கழகத்தின்
துணை வேந்தரான ஜி நாகேஸ்வர ராவ் மகாபாரதக் கதையில்
வரும் கெளரவர்கள் நூறு பேரும் சோதனைக் குழாய்க்
குழந்தைகள் என்று கூறி  அவையினரை நடுங்க வைத்தார்.

2014ல் டில்லியில் இந்தி விழாவில் (Hindi Diwas) பேசிய
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
ஹெய்சன் பெர்க் என்ற ஜெர்மன் இயற்பியலாளரின்
உறுதியின்மைக்  கோட்பாடு (uncertainty principle)
இந்தியாவின் வேதங்களிலேயே இருப்பதாகக்
கூறி தம் பங்குக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியான ஜெகதாள கிருஷ்ணன்
என்பவர், நியூட்டன் ஐன்ஸ்டின் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய
மூவரின் அறிவியல் கோட்பாடுகளும் தவறானவை என்று
கூறினார். அத்தோடு நிற்காமல் ஈர்ப்பு அலைகளுக்கு
மோடி அலைகள் என்று தாம் பெயரிடப் போவதாகவும்
கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

நியூட்டனின் கோட்பாடு தவறு என்றால், அதைத் தவறு
என்று நிரூபிக்கும் உரிமையை அனைவருக்கும் அறிவியல்
வழங்கி இருக்கிறது. ஒன்றல்ல ஓராயிரம் கோட்பாடுகளைக்
கூறியவர் நியூட்டன். சற்றேறக் குறையை முந்நூறு ஆண்டுகளாக
நியூட்டனின் கோட்பாடுகள்தான் அறிவியலில் ஆட்சி
செலுத்தின. நியூட்டனின் கோட்பாடுகள் தவறானவை என்று
கூறும் ஜெகதாள கிருஷ்ணன், நியூட்டனின் எந்தக் கோட்பாடு
தவறு என்றோ அது எப்படித் தவறானது என்றோ நிரூபணத்துடன்
கூறவில்லை. பொதுவெளியில் ஒரு கருத்தை வைப்பவர்
அதற்கான நிரூபணத்தைத் தருவதுதான் நேர்மையானது.
அதற்கு மாறாக, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி விட்டுப்
போவது அறிவியல் ஆகாது.

நோபெல் பரிசு பெற்ற தமிழரும் இந்தியருமான வெங்கட்ராமன்
ராமகிருஷ்ணன் அழைப்பின் பேரில் ஒரு அறிவியல் மாநாட்டில்
பங்கேற்றார். அதன் பிறகு மைசூரில் நடைபெற்ற (2016 ஜனவரி)  103ஆவது அறிவியல் மாநாட்டுக்கு அழைக்கப் பட்டபோது வர மறுத்து விட்டார்.

"என் வாழ்நாளில் இனி இந்திய அறிவியல் மாநாட்டில்
கலந்து கொள்ள மாட்டேன்; அங்கு அறிவியல் துளியும்
பேசப்படவில்லை; அங்கு நடப்பது வெறும் சர்க்கஸ்" என்று
மனம் கசந்து கூறினார் வெங்கடராமன்.

பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இருந்த
பேராசிரியர் சி என் ஆர் ராவ்,  அறிவியல் மாநாட்டில்
தாம்  இனிமேல் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும்
கலந்து கொண்டால் அங்கு பேசப்படும் அறிவியலுக்கு
எதிரான விஷயங்களுக்கு தானும் உடந்தை ஆகிவிடும்
ஆபத்து ஏற்பட்டு விடும் என்றும் அண்மையில் கூறியுள்ளார்.

மெய்யான அறிவியலுக்குப் பதில் போலி அறிவியலை
(pseudo science) முன்வைப்பது, புராணக் குப்பைகளுக்கு அறிவியல்
முலாம் பூசுவது, அறிவியல் உண்மைகளைத் திரிப்பது
ஆகிய அறிவியலுக்கு எதிரான செயல்பாடுகள் நாட்டில் பெருகி
வருகின்றன. அறிவியல் மாநாடு போன்ற மாண்புமிக்க
நிகழ்வுகளைக் கேடாகப் பயன்படுத்தி, பிற்போக்கான போலி அறிவியலை ஊக்குவிக்கப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்த  வேகத்துடன்  நடந்து வருகிறது. தலைசிறந்த விஞ்ஞானிகளான
வெங்கடராமன், சி என் ஆர் ராவ் போன்றோர் அறிவியல்
மாநாடு என்றாலே தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவல நிலை குறித்து இந்தியா முழுவதிலும் உள்ள
அறிவியல் சமூகமும் அறிவியலை நேசிக்கும் மக்களும்
கவலை கொண்டுள்ளனர். இத்தகைய போக்குகள் சகிக்க இயலாதவை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரின் கடமை .ஆகும். எனவே
போலி அறிவியலை எதிர்த்து முறியடிக்கவும் அறிவியலின் கறார்த் தன்மையையும் தூய்மையையும் பேணிப் பாதுகாக்கவும் முன்வருமாறு அறிவியல் ஆர்வலர்கள்
அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.
*******************************************************
 








   
     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக