செவ்வாய், 1 ஜனவரி, 2019

உலகெங்கும் இரண்டு காலண்டர்கள்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
உலக மக்கள் அனைவரும் இரண்டு காலண்டர்களைக்
கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு கலாச்சாரமும்
இரண்டு காலண்டர்களைக் கொண்டுள்ளது.

1. உற்பத்திக்கான காலண்டர்
2. மரபார்ந்த பண்பாடு சார்ந்த காலண்டர்.

உற்பத்திக்கான காலண்டரை தமிழகத்தில் சிலர்
ஆங்கிலப் புத்தாண்டு என்று .தவறாக அழைக்கின்றனர்.
உண்மையில் அது ஆங்கிலப் புத்தாண்டு அல்ல.
ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும்
ஜப்பானியர்களுக்கும் சீனர்களுக்கும்
தமிழர்களுக்குமான காலண்டர் அது.

அது உலகப் பொது காலண்டர் ஆகும். இன்றைய
தேதியை நாம் 01.01.2019 என்று குறிப்பிடுகிறோம்
அல்லவா? இப்படி நாம் பின்பற்றி வரும்
காலண்டர் உலகப் பொதுக் காலண்டர் ஆகும்.
இதை அறிவியல் அறிஞர்கள் உருவாக்கிப் பேணி
வருகின்றனர்.

மதத் தலைவர்களின் ஆதிக்கத்திலும்
கட்டுப்பாட்டிலும் இருந்த இந்தப் பொதுக்
காலண்டர் தற்போது அறிவியலின்
கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
கிமு கிபி என்கிற கிறிஸ்து சகாப்தம் எல்லாம்
போயே போய் விட்டது என்று ஆயிரம் முறை
கூறி உள்ளேன்.

இந்த உலகப் பொதுக் காலண்டர் மதச்சார்பு
எதுவும் இல்லாதது. உலக மக்கள் அனைவருக்கும்
அனைத்து நாட்டினருக்கும் அனைத்து
கலாச்சாரத்திற்கும் பொதுவானது. எனவே இதை
ஆங்கிலப் புத்தாண்டு என்றோ, ஆங்கிலக்
காலண்டர் என்றோ அழைப்பது தவறாகும்.

இந்தக் காலண்டர்தான் சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் இருக்கிறது. அதாவது இது
உற்பத்திக்கான  காலண்டர் ஆகும்.

அடுத்து மரபார்ந்த காலண்டர். ஒவ்வொரு
கலாச்சாரத்தைச் சார்ந்த மக்களும் தங்களின்
பண்பாட்டில், மரபில் உருவாக்கிப் பேணி
வந்த காலண்டரே இதுவாகும்.

உதாரணமாக சித்திரையைப் புத்தாண்டாகக்
கொண்ட தமிழ்க் காலண்டரை நாம் கடந்த
நூற்றாண்டு வரை நடைமுறையில் வைத்து
இருந்தோம். சித்திரை அல்லது தை என்று எதை
ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாலும்,
இந்தக் காலண்டர் நமது பண்பாட்டுக்
காலண்டர் ஆகும்.

இந்தத் தமிழ்க் காலண்டரின்படி, இன்று என்ன
தேதி? அநேகமாக விரல் விட்டு எண்ணக்கூடிய
ஒரு சிலருக்குத்தான் இன்று மார்கழி மாதம்
என்பதும் தேதி 17 என்பதும் தெரியும். 99 சதம்
தமிழர்களுக்குத் தெரியாது. ஏனெனில்
தமிழ்க் காலண்டர் உற்பத்தியில் இல்லை.

மலையாளிகள் கொல்லம் ஆண்டுக் கணக்கையும்
விஷுவைப் புத்தாண்டுப் பிறப்பாகவும் ஏற்றுள்ளனர்.
தெலுங்கர்கள் யுகாதியை புத்தாண்டுப் பிறப்பாக
ஏற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் இரண்டு காலண்டர்களும்
பயன்பாட்டில் இருக்கின்றன. இஸ்லாமியர்கள்
தங்களின் ஹிஜிரா காலண்டரையும் உலகப்
பொதுக் காலண்டரையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சீனர்கள் தங்களின் மரபார்ந்த காலண்டரையும்
உலகப் பொதுக் காலண்டரையும் ஏற்றுள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தமிழ்
போலிக்கூச்சல் காதைத் துளைக்கிறது.
அப்படிக் கூச்சலிட்ட ஒரு பயலிடம் கேட்டேன்.
இன்றைக்கு தமிழ்த்தேதி என்ன என்று. பேய்முழி
.முழித்தான். மார்கழி மாசம் என்று  கூடச்
சொல்லத் தெரியாத நாய்கள்தான் அதிகம்
குரைக்கின்றன.

திருப்பாவையில் ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லுலே
என்றேன்; ஓடி விட்டான். தமிழ்ப் பண்பாட்டின்
மீதான பற்று தமிழனுக்கு இருக்கிற லட்சணம்
இதுதான்!

உற்பத்திக் காலண்டரான உலகப் பொதுக்
காலண்டரை யார் எவராலும் புறந்தள்ள
முடியாது. இந்த உண்மையை உணர வேண்டும்.
******************************************************.  



         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக