வியாழன், 8 ஜூன், 2017

சாதி ஒழிப்பின் ஒரு பகுதியாக
பின்னொட்டை ஒழிக்க வேண்டும் என்றும், பின்னொட்டு போட்டு யாரும் எழுதவோ, பேசவோ கூடாது என்ற கருத்து சமூக அரசியல் தளங்களில் பெருஞ் செல்வாக்கு செலுத்துகிறது. இந்தத் தலைமுறையில் பெரும்பாலும் இவ்வழக்கம் ஒழிந்து விட்டது என்பது நல்ல விஷயம்தான். ஒரு சமூகம் தன் குலப் பெயரை போடுவதையே சமூக இழிவாக கருதும் நிலையில் மற்றொரு பிரிவினர் அதை ஒரு பெருமிதக் குறியீடாக போடுவதை நீக்கும் முயற்சியை திராவிட இயக்கம் ஒரு பண்பாட்டுப் போராகவே நடத்தியது.
ஆனால் சென்ற நூற்றாண்டு வரை அது ஒரு சமூக நடைமுறையாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களை எப்படி விளிப்பது?
குறிப்பாக பசும்பொன் முத்துராமலிங்கனார் என்று தான் போட வேண்டும் என்று பேசும் நம் கருஞ்சட்டையினர், இடதுசாரி முற்போக்காளர் டி.எம்.நாயர் என்றும் ஜி.டி.நாயுடு என்றும் இன்று வரை பேசியும் எழுதியும் வருகின்றனர்.
பூலித்தேவர் என்று எழுதும் போது வராத கோபம், ஒரு அவெர்ஷன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று எழுதும் போது மட்டும் அதிகமாக வருகிறதே. ஏன்? இந்த வெறுப்பு, கோபம் என்பது அவர்கள் போட்டுள்ள பின்னொட்டுகளால் வரவில்லை. அவர்களைப் பற்றி இவர்கள் கொண்டிருக்கும் பிம்பத்தினால் தான். சமகாலத்தில் இவர்கள் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கடந்தகாலத்தை மதிப்பீடு செய்யும் சமூக அறிவியலுக்குப் புறம்பான தவறான அணுகுமுறையின் வெளிப்பாடு இது. இராகவையங்கர், நீலகண்ட சாஸ்திரி, வரதராஜுலு நாயுடு, உ.வே. சாமிநாத அய்யர், கே.கே.பிள்ளை, பண்டாரத்தார், ந.மு.வே. நாட்டார், சீனிவாச அய்யங்கார் என்று இவர்களை சுட்டி எழுதும் போது வராத வெறுப்பும் கோபமும் பசும்பொன் தேவர் என்று எழுதும் போது மட்டும் வருகிறதே. ஏன்? சார்பு நிலை . ஆம். அரசியல் சார்பு நிலைகளிலிருந்தே இது தொடங்குகிறது.
இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது? மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய அரசியல் நலன்களுக்காக சாதிய சங்கங்களை ஊக்குவித்தார். குறிப்பாக 1980 களில் தென் மாவட்டங்களில் தேவர் பேரவை தொடங்குவதை அவர் ஊக்குவித்தார். அப்போதுதான் முதன்முதலாக பசும்பொன் தேவரின் படம் சாதியச் சங்கங்களில் பரவலாக இடம் பெற்றது. அதுவரை ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர், விடுதலைப் போராட்ட தியாகி, இடதுசாரி சிந்தனையாளர் என்று அறியப்பட்ட தேவர், சாதியச் சங்கங்களின் குறியீடாக மாற்றப்பட்டார். 1957 இமானுவேல் சேகரன் கொலை வழக்கு கூட அரசியல் சூழ்ச்சி என்றே பலராலும் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும் விதமாக இமானுவேல் சேகரன் அவர்களின் சகோதரரும், மைத்துனரும் (அமிர்தம் கிரேஸ் அம்மையாரின் சகோதரர்) 1980கள் வரை ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்தனர். 1980 ல் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக இராசபாளையம் தொகுதியில் மொக்கையன் என்ற அருந்திய வகுப்பைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனில் இந்த முரண் எப்போது கூர்மையானது? 1990 களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பட்ட தலித் எழுச்சி, புதிய தலித் இயக்கங்களை தோற்றுவித்தது. விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகமும், ஆதித்தமிழர் பேரவையும் இதன் அரசியல் அடையாளங்களாக விளங்கின. சர்வதேச அளவில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால், பின் நவீனத்துவம் என்ற பெயரில் தலித்திய, அடையாள அரசியல் தமிழக அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டது. இது இவர்களின் அரசியல் எழுச்சிக்கான சித்தாந்த புலமாக விளங்கியது.
இதே காலகட்டத்தில் ஆட்சியமைத்த ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக அரசு, முக்குலத்தோரின் அரசு என்ற ஒரு புறத்தோற்றத்தை ஏற்படுத்தியது. 60 களில் இருந்து தேவர் ஜெயந்தி வழிபாடு நடந்து வந்திருந்தாலும், இந்தக் கால கட்டங்களில் அது பிரமாண்டமாய் மாறியது. இந்த எழுச்சியானது, தலித் தலைவர்களுக்கும் தங்களுடைய வரலாற்று நாயகர்களை கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இமானுவேல் சேகரன், அம்பேத்கர் விழாக்கள் விரிவாக கொண்டாடப்பட்டன. இதையொட்டி ஏற்பட்ட தலித்திய எழுச்சியினால், சாதிய மோதல்கள் பல இடங்களில் நடைபெற்றன. இந்த மோதலினால், அரசியலில் தூண்டப்பட்ட தலித் இளைஞர்கள், தேவர் சமூகத்தின் அடையாளமாக மாற்றப்பட்ட பசும்பொன் தேவரின் மீது காழ்ப்பையும் வெறுப்பையும் உமிழத் தொடங்கினர். பொய்ப் பிரச்சாரங்கள், உண்மைக்கு மாறான புனைவுகள், அதற்கான ஆய்வுகள், பரப்புரைகள் என அனைத்து மட்டங்களிலும் NGO நிதி உதவி குழுக்களுடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? பசும்பொன் தேவர் சாதி ஆதிக்கத்தின் குறியீடாக மாற்றப்பட்டார். தலித்திய முற்போக்கு தளங்களில் செயல்படுபவர்கள் இந்த வரலாற்றுப் பின்னணியை புரிந்து கொண்டாலும், தம்முடைய அரசியல் நலன்களுக்காக இதைப் பேசத் தயங்குகின்றனர்.
எனவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஆளுமையும், தேவர் என்ற அவரது பின்னொட்டும் ஆதிக்கத்தின் குறியீடாக மாற்றப்பட்டுவிட்டது. இன்று வரை தொடர்கிறது .
இதற்கு தலித் இயக்கங்கள் மட்டும் காரணமில்லை. பசும்பொன் தேவருடைய அரசியலை அறியாமல், வெறும் வழிப்பாட்டுணர்வுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இளைஞர்களும் இதற்கு முக்கியக் காரணம் ஆவர். சந்தர்ப்பவாத அரசியலாளர்களும், வரலாற்றை வக்கிரத்தோடு வெளிப்படுத்தும் அறிவுஜீவிகளும், சமூக அரசியல் மாற்றத்திற்குப் போராடும் இயக்கங்களும், அமைப்புகளும் எந்த வித மறுவாசிப்புமின்றி வெறுப்பரசியலை விதைப்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும்.

வரலாறு இப்படியே நகரப் போகிறதா? காலம் பதில் சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக