வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

தா பாண்டியன் மறைந்தார்!

--------------------------------------------

1970களில் திருநெல்வேலி ம தி தா இந்துக் கல்லூரியில் 

நான் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் கல்லூரியில் 

உரையாற்றினார் தோழர் தா பாண்டியன். மறவர் முரசு 

என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவே அவர் அன்று 

எங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டார். பின்னாளில் 

அவர் ஜனசக்தி பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார்.


1970களின் பிற்பகுதியில் கட்சி மாநாட்டுக்கோ அல்லது 

AITUC மாநாட்டுக்கோ அவர் ஜாம்ஷெட்பூர் சென்றபோது,

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொக்காரோ 

ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் அவரை வழியனுப்ப  

எங்கள் ஊர் தோழர்களுடன் சென்றிருந்தேன். ரயில் ஒரு 

மணி நேரம் தாமதம் என்பதால், மிஞ்சிய நேரம் முழுவதும் 

அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.வியட்நாம் 

போர் குறித்து எனக்கு விளக்கம் அளித்தார்.


கல்வி, படிப்பு, ஆற்றல், திறமை என அனைத்தும் கைவரப் 

பெற்றவர் தா பாண்டியன். தமிழ்நாட்டில் யார் யாரெல்லாமோ 

அமைச்சராக இருக்கிறார்கள்; சட்டமன்ற நாடாளுமன்ற 

உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.ஆனால் எவ்வளவு 

ஆற்றல் இருந்தும் தா பாண்டியனால் ஒரு அமைச்சராக 

முடியவில்லை. ராயபுரம் தொகுதியில் முன்பு அவர் 

போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை; MLA ஆக 

முடியவில்லை.


தா பாண்டியனும் இரு முறை மக்களவை எம்.பி.யாக 

இருந்தார். அது அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி

UCPI கட்சியில் இருந்த நேரம். 1989. 1991 தேர்தல்களில் அவர் 

வடசென்னை தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் 

கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று 

எம்பி ஆனார். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருந்திருந்தால் 

அவரால் எம்பி ஆகி இருக்க முடியாது.

 

பொதுவாக எவரையுமே மதித்தறியாத ஜெயலலிதா இவரை 

மதித்தார். சசிகலாவும் இவரை மதித்தார். இவர்கள் 

இருவருடனும் தனக்குள்ள உறவைப் பயன்படுத்தி 

ஒரு ராஜ்யசபை எம்பி சீட்டைப் பெற்று வந்தார் 

தா பாண்டியன். தனக்கென்று பெருமுயற்சியில் இவர்

பெற்று வந்த எம்பி பதவியை, அடுத்தவனின் உழைப்பில் 

வாழ்ந்தே பழகிய டி ராஜா பிடுங்கிக் கொண்டார் 


சில ஆண்டுகளுக்கு முன்பு, தா பாண்டியன் ஒரு புத்தகம் 

எழுதினர். கம்யூனிசம் பற்றிய புத்தகம் அது. கம்யூனிஸப் 

பாட நூலோ அல்லது விளக்க நூலோ அல்ல அது. மாறாக 

இந்தியாவின் கம்யூனிச இயக்கம் இன்று சந்திக்கும் பல 

பிரச்சினைகள் குறித்த கேள்விகள் அடங்கிய புத்தகம் அது.


மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அந்நூலில் 

தா பாண்டியன் எழுதி இருந்தார். என்றாலும் அந்நூல் 

தமிழகத்தில் இடதுசாரிகளால் விவாதிக்கப் படவில்லை.


தா பாண்டியனுக்கு அஞ்சலி என்ற பெயரில் முகநூலில் 

சுயஇன்பம் அனுபவிக்கிற கபோதிகள் தா பாண்டியனின் 

புத்தகத்தை ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்ய 

வேண்டும்.

*********************************************************************.  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக