வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

 சாதி பொருள் அல்ல, சிந்தனையே என்பதன் நிரூபணம்!

தோழர்கள் தியாகு, தீக்கதிர் குமரேசன்
ஆகியோருக்கு மறுப்பு!
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம், சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
-------------------------------------------------------------------
இந்த உலகில் உள்ள அனைத்தையும்
பொருள், சிந்தனை என்று இரண்டாகப்
பிரிக்கலாம்.பொருளும் சிந்தனையும்
என்னும் இவ்விரண்டு தவிர மூன்றாவதாக
ஒரு வகைமை தத்துவத்தில் இல்லை.
சிந்தனை என்பது கருத்து என்றும் வழங்கப்
படுகிறது.
எனவே எந்த ஒன்றையும் பொருளா அல்லது
கருத்தா என்று அறிந்து கொள்ள விழைவதும்
அறிந்து கொள்வதும் உலகின் இயல்பாகும்.
ரோஜாப்பூ அழகாக இருக்கிறது. இந்த
வாக்கியத்தைக் கருதுங்கள். இதில் ரோஜாப்பூ
என்பது பொருள் (matter).அழகு என்பது என்ன?
அது பொருளா? இல்லை. அது கருத்து (idea).
மனித சிந்தனை உருவாக்கிய கருத்தே அழகு.
பொருள், கருத்து என்பன முறையே matter, idea
என்று ஆங்கிலத்தில் குறிக்கப் படுகின்றன.
தற்போதைய கேள்வி சாதி பற்றியது. சாதி
என்ற சொல் கோனார் என்றோ தேவர் என்றோ
ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும்
இங்கு குறிக்கவில்லை. மாறாக சாதி என்பது
சாதிய முறையைக் குறிக்கிறது. அதாவது
சாதியத்தை (casteism) குறிக்கிறது.
தற்போது இங்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது.
சாதி என்பது அதாவது சாதியம் என்பது
பொருளா அல்லது கருத்தா? இவ்விரண்டில்
அது எந்த வகைமையில் வரும்?
இக்கேள்விக்கு தோழர் தியாகு அவர்களும்,
தோழர் தீக்கதிர் குமரேசன் அவர்களும்
ஒரே குரலில் சாதி என்பது பொருளே என்று
விடை கூறுகின்றனர்.
நியூட்டன் அறிவியல் மன்றமானது தோழர்கள்
தியாகு மற்றும் குமரேசனுடன் முரண்படுகிறது.
சாதி என்பது பொருள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை.
சாதி என்பது கருத்தே என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் அடித்துக் கூறுகிறது.
சாதியம் = பருப்பொருள் (தியாகு, குமரேசன்)
சாதியம் = கருத்து (நியூட்டன் அறிவியல் மன்றம்)
தத்துவ விவாதங்களின்போது,
பொருள் என்பதை பருப்பொருள் என்று
சுட்டும் மரபு பிற மொழிகளில் இல்லாவிடினும்
தமிழ் மொழியில் உண்டு. எனவே பொருளும்
பருப்பொருளும் ஒன்றே என்று கருத்தில்
பதித்துக் கொள்ள வேண்டும்.
சாதியம் என்பது கருத்தே என்னும் எமது கூற்று
பெரும் அதிர்ச்சி மதிப்பைக் கொண்டது.
பொதுவெளியில் இதைக் கூறும்போது,
அநேகமாக இதைக் கேட்கிற அத்தனை பேரும்
மூர்ச்சை அடையக்கூடும். சாதி என்பது பொருளல்ல
என்பதும் அது வெறும் கருத்துதான் என்பதும்
புரிந்து கொள்ள எளிதல்ல.
சாதியம் தனி ஒருவரால் கண்டுபிடிக்கப்
பட்டதல்ல. ஆகாய விமானத்தை ரைட்
சகோதரர்கள் கண்டுபிடித்தனர் என்பது
போல, யாரோ ஓரிருவரால் உண்டாக்கப்
பட்டதல்ல சாதி. ஆற்றல் வாய்ந்த ஒருவர்
பிறர் எவரின் துணையுமின்றி, ஒரு விஞ்ஞானக்
கண்டுபிடிப்பைச் செய்து விட முடியும்.
எக்ஸ்ரேயை ரியான்ட்ஜென் தனி
ஒருவராகத்தான் கண்டுபிடித்தார்.
சாதியை அவ்வாறு யாரும் கண்டுபிடிக்கவில்லை.
கண்டுபிடிக்கவும் இயலாது.ரோமாபுரி ஒரே நாளில்
கட்டப் பட்டதல்ல (Rome was not built in a day)
என்பது போல, சாதியும் ஒரே ஒரு நாளில்
உருவானதல்ல.
அப்படியானால் சாதி எப்படி உருவானது?
சமூகத்தின் சில குறிப்பிட்ட சூழல்களின்கீழ்,
ஒட்டு மொத்த சமூகமும் மேற்கொண்ட
செயல்பாடுகளின் விளைச்சலாக பல்வேறு
காலக்கட்டங்களைத் தழுவி சாதி உருவானது.
மகத்தான ஞானி ஒருவர் ஒரு மதத்தை
ஸ்தாபிப்பது போலவோ, மாபெரும் விஞ்ஞானி
ஒருவர் ஒரு அரிய கண்டுபிடிப்பைச் செய்வது
போலவோ சாதி உருவாகவில்லை. எனவேதான்
சாதி ஒரு சமூகக் கட்டுமானம்.என்று கூறுகிறோம்.
சமூகக் கட்டுமானம் என்பதன் மூலம், சாதியை
உருவாக்கியது சமூகம்தானே தவிர தனிநபர் அல்ல
என்பது புலப்படுகிறது. ஆக இந்த வரையறுக்கப்பட்ட
பொருளில்தான் சமூகக் கட்டுமானம் என்ற சொல் இங்கு .ஆளப்படுகிறது. .
மேலே விவரிக்கப்பட்ட சாதி எனப்படும் சமூகக்
கட்டுமானத்திற்கு சமூக அடித்தளம் (social base)
ஏதேனும் உண்டா? பொருளியல் அடித்தளம்
ஏதேனும் உண்டா? கிடையாது.
சாதி கடவுளைப் போன்றது.கடவுள் என்பது வெறும்
கோட்பாடுதான் (mere concept). கடவுள் என்பது
வெறும் கருத்தியல் கட்டுமானம்தான். அது போலவே
சாதி என்பதும் வெறும் கருத்தியல் கட்டுமானம்தான்.
கடவுள் என்பவர் இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும்
தனக்கென்று ஒரு இடம் இல்லாதவர். கடவுளுக்கு
பௌதிக இருப்பு (physical existence) என்பது அறவே
கிடையாது. மானசீக இருப்பு மட்டுமே கடவுளுக்கு
உண்டு. எனவே வெறும் கோட்பாடாக எஞ்சிப்
போனவர் கடவுள். (God is a mere concept).
கடவுளைப் போன்றே சாதிக்கும் எவ்விதமான
பௌதிக இருப்பும் கிடையாது. சாதி ஒரு பொருள்
என்று சொன்னால், அதற்கு ஒரு பௌதிக இருப்பு
இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு
பௌதிக இருப்பும் சாதிக்கு இல்லை. கடவுள்
என்பவர் மனித சிந்தனையில் வாழ்கிறார். மனித
மனத்தைத் தவிர வேறெங்கும் கடவுள் இருப்பதில்லை.
அது போலவே, சாதியமும் மனித மனங்களில்
வாழ்கிறது. இக்கட்டுரையை எழுதுகிற நான் கோனார்
சாதியைச் சேர்ந்தவன் (என்று வைத்துக் கொள்க).
அதாவது மாடு மேய்க்கிற சாதி. என் பக்கத்து
வீட்டில் ஒரு பிராமணர் இருக்கிறார். அவர்
உயர்ந்த சாதி.
நாங்கள் இருவரும் B.Com பட்டம் பெற்று வங்கியில்
பணியாற்றத் கூடியவர்கள். சொந்த வீடு, மனைவி
மக்கள், வண்டி வாகனம், பிள்ளைகளின்
கான்வென்ட் படிப்பு என்று எல்லாவற்றிலும் இருவரும்
சமமாகவே இருக்கிறோம். Cetaris paribasu the caste based
superiority is to be determined.
சாதிய முறைமைப்படி, கோனார் சாதி தாழ்ந்த சாதி
என்பதும் பிராமண சாதி உயர்ந்த சாதி என்பதும்
அனைவரும் அறிந்ததே. இப்போது சாதியை
பருப்பொருள் என்று கூறி ஆதரிக்கும் நண்பர்களுக்கு
ஒரு கேள்வி!
பிராமண சாதி உயர்ந்தது என்றால், அந்த உயர்வானது
பௌதிக ரீதியாக எங்கு இருக்கிறது? கோனார் சாதியின் தாழ்வு எங்கு இருக்கிறது? சாதிய உயர்வும் சரி, சாதியத் தாழ்வும் சரி பௌதிக ரீதியாக எங்கும் இல்லை.
அ) பிராமணரின் உடலில் உயர்வும் கோனாரின் உடலில்
தாழ்வும் இருந்தால், அல்லது
ஆ) பிராமணரின் மூளையில் உயர்வும், கோனாரின்
மூளையில் தாழ்வும் இருந்தால்
சாதிய அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்பது
பௌதிக ரீதியாக இருக்கிறது (existing physically) என்று
எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி எல்லாம்
எதுவும் இல்லை.
பிராமணர் உயர்ந்தவர் என்பது வெறும் மன உணர்வு.
அது போலவே கோனார் தாழ்ந்தவர் என்பதும் வெறும்
மன உணர்வே. ஆக உயர்வு தாழ்வு என்பவை வெறும்
மன உணர்வுகளே. அவை நம்முடைய மனத்தில்
உள்ளவையே தவிர, வேறெங்கும் இல்லை.
சாதியம் என்பது ஏற்றத் தாழ்வை உயிர்நாடியாகக்
கொண்டது. இந்த ஏற்றத் தாழ்வானது சிந்தனையில்,
மனதில், நம் எண்ணத்தில், நினைப்பில் இருக்கிறதே
தவிர பௌதிக ரீதியாக எங்குமே இல்லை.
தனது கற்பனையில் நடிகை நயன்தாராவுடன்
உடலுறவு கொள்வதாக நினைத்து ஒரு விடலை
சுயஇன்பம் அனுபவிக்கிறான். இது வெற்றுச் சுய
இன்பமே தவிர, இருவரும் உறவு கொள்ளவில்லை.
அதைப் போலவே பார்ப்பான் உயர்ந்தவன் என்பதும்
கோனார் தாழ்ந்தவன் என்பதும் வெற்று
நினைப்புகளே. இத்தகைய நினைப்புகளுக்கு
அடித்தளம் எது? கற்பனையே.
அதைப் போல, சாதிய ஏற்றத் தாழ்வுகள் எத்தகைய அடிப்படையும் அற்ற (without any material base)
வெற்று நினைப்புகளே. ஒரு விடலையின்
சுயஇன்பம் போல அது இகழ்ச்சியுடனே பார்க்கப்படும்.
சாதியத்துக்கு வலுவான சமூகவியல் அடிப்படைகள்
இருப்பதாகக் கருதும் எவர் ஒருவரும், சாதிய உயர்வு
தாழ்வு உண்மையே என்று கருதுகிறார். அவரைப்
பொறுத்த மட்டில், பார்ப்பான் உண்மையிலேயே
உயர்ந்தவன்; கோனார் உண்மையிலேயே தாழ்ந்தவன்.
நடைமுறையில் இதன் பொருள் என்னவெனில்,
பார்ப்பான் IQ கூடியவன் என்பதும், பிற தாழ்ந்த
சாதியினர் IQ குறைந்தவர்கள் என்பதுமே.
சராசரியாக பார்ப்பான் 105 IQவும்,தாழ்ந்த சாதி
கோனார் 95 IQவும் கொண்டிருப்பதாகவே இது பொருள்படும்.
இது உண்மையில்லை என்பது அன்றாடம் அனந்த கோடி உதாரணங்களின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.
இத்தகைய சிந்தனை கடைந்தெடுத்த பிற்போக்குத்
தனத்தின் அடையாளம் ஆகும்.
ஆக, இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்,
சாதியம் என்பது இதுதான்!
1) கடவுளின் தூதரோ ஞானியோ விஞ்ஞானியோ
சாதியை ஒரே நாளில் உண்டாக்கிப் புழக்கத்துக்கு
விடவில்லை. சாதி என்பது சமூகத்தின்
விளைபொருளே. வரையறுக்கப்பட்ட இந்தப் பொருளில்
சாதி (அல்லது சாதியம்) ஒரு சமூகக் கட்டுமானம் ஆகும்.
2) சாதி ஒரு சமூகக் கட்டுமானமாக இருந்த போதிலும்,
அதாவது சமூகமே சாதியை உருவாக்கி இருந்தாலும்,
சாதிக்கு எவ்விதமான பொருளாயத அடித்தளமும்
கிடையாது (no material base). சாதியம் என்பது வெறும்
கருத்தியல் கட்டுமானம் மட்டுமே ஆகும்.
3) இச்சமூகத்தில் சாதியின் தோற்றுவாயாக இந்த
இடம் இருந்தது என்றோ, சாதியத்தின் மூல ஊற்றாக
இந்த இடத்தில் இது இருந்தது என்றோ சொல்லுவதற்கு
எதுவும் இல்லை. சாதிக்கு பௌதிக இருப்பு எதுவும்
இல்லை. (no physical existence).
மேற்கூறிய மூன்று அம்சங்களில் சாதி அடங்கி
விடுகிறது. இதுதான் சாதி குறித்த மார்க்சிய வரையறை.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
தோழர்கள் தியாகு, தீக்கதிர் குமரேசன் ஆகியோரும்
பிற தோழர்களும் இக்கட்டுரை மீதான தங்களின்
திறனாய்வை வெளிப்படுத்துமாறு அன்புடனும்
மரியாதையுடனும் நியூட்டன் அறிவியல் மன்றம்
வேண்டுகிறது.
************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக