செவ்வாய், 2 ஜூலை, 2019

பகுதி-1
-----------
தமிழ் இலக்கணம் குறித்த
பொருள்முதல்வாதப் பார்வையும்
குட்டி முதலாளியத்தின்
கருத்துமுதல்வாதப் பார்வையும்!
-----------------------------------------------------------
மட்பாண்டம் என்ற சொல் வழக்கில் இருக்கிறது
என்றும் அதற்கு ஆதாரம் "தமிழ் விக்கிப்பீடியா"
என்றும் திரு வேல்முருகன் கூறுகிறார். தமிழ்
விக்கிப்பீடியா எவ்விதத்திலும் ஏற்கத்தக்க
ஆதாரமன்று.

தமிழை முறையாகக் கற்காத அரைவேக்காடுகளான
தனித்தமிழ்த் தலிபான்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே
தமிழ் விக்கிப்பீடியாவைக் கைப்பற்றிக் கொண்டனர்.
அந்த மூடர்களுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என்று
நல்ல பல தமிழறிஞர்கள் தமிழ் விக்கியில் எழுதுவதில்
இருந்து விலகிக் கொண்டனர். ஒருவரின் இலக்கண
அறிவின் ஊற்றுமூலம் (source) தமிழ் விக்கிப்பீடியாதான்
எனில், அது இரங்கத்தக்க நிலையே.

மட்குடம் என்ற சொல் என்றுமே மக்களின் பேச்சு
வழக்கில் இருந்ததில்லை. " மாமியா ஒடச்சா மங்கொடம்,
மருமவ ஒடச்சா பொங்குடமா?" என்று எங்கள் ஊரில்
மக்கள் பேசிக் கேட்டுள்ளேன். இங்கு கருதத்தக்கது
என்னவெனில், "மங்குடம்" என்ற சொல்லாட்சிதான்.
மக்கள் ஒருபோதும் மட்குடம் என்று பேசியதில்லை. நிற்க.

தமிழ் இலக்கணத்தில் புணரியல் சற்றுக் கடினமானதே.
பேரளவிலான இலக்கியப் புலமையும் சுயசிந்தனையும்
இருந்தால் மட்டுமே புணரியலை நன்கு விளங்கிக்
கொள்ள முடியும்.

தொல்காப்பியப்  புணரியல் நன்னூலின் புணரியல்
ஆகிய இரண்டையும் கற்றோர் இரண்டுக்கும்
இடையிலான பெரும் வேறுபாட்டைப் புரிந்து
கொள்ள இயலும். மொழி தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருப்பதால் இந்த வேறுபாடு தோன்றுகிறது.

ஒரு வேற்றுமைக்கு ஒரு உருபு மட்டுமே என்பது
தொல்காப்பியரின் கொள்கை. பவணந்தி முனிவரோ
ஒரு வேற்றுமைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உருபுகளைக்
கூறுகிறார். (பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றியவர்).

ஐ ஆல் கு இன் அது கண் ஆகிய ஆறு உருபுகளுடன்
நன்னூலார் நின்று விடவில்லை. இவை தவிர
சொல்லுருபுகளும் உள்ளன. (சொல்லுருபு என்றால் என்ன
என்பது பற்றிப் பின்னர் பார்ப்போம்). இந்த மாற்றம்
ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

"இரண்டு முதலாம் இடைஆறு உருபும்
வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே".
இதுதான் வேற்றுமைத் தொகைக்கு நன்னூலின்
இலக்கணம். வேற்றுமை உருபு மறைந்து நிற்பதை
மட்டுமே ஒரே ஒரு காரணியாகக் காட்டுகிறார்
பவணந்தியார்.



பகுதி-2 (பகுதி-1இன் தொடர்ச்சி)
--------------------------------------------------
தமிழிலக்கணம் கர்நாடக இசை போன்றது. பாடகரின்
சுய வியாக்கியானத்திற்கு (own interpretation)  கர்நாடக
இசை இடமளிக்கக் கூடியது. அதே போல் மக்களின்
வழக்குக்கு தமிழிலக்கணம் இடமளிக்கிறது.
தொல்காப்பியம் கற்றோர் இதனை அறிவர்.

புறனடை என்ற ஒன்றை தொல்காப்பியர் அறிமுகம்
செய்கிறார். ஒரு சூத்திரத்தை (அல்லது நூற்பாவை)
எழுதிய பின்னர் தேவையிருப்பின் அதற்குப் புறனடையும்
எழுதுவார் தொல்காப்பியர். புறநடை என்றால் விதிவிலக்கு
என்று புரிந்து கொள்க.

மீண்டும் வலியுறுத்தவிரும்புகிறேன்; மொழியிலக்கண
விதிகள் கணித இயற்பியல் விதிகள் போன்று
எல்லாச் சூழலுக்கும் விதிவிலக்கின்றிப் பொருந்துவன
அல்ல.தொல்காப்பியரின் சிறப்பு என்னவெனில்
அவர் தலைசிறந்த பொருள்முதவாதியாக இருந்தார்
என்பதே. எனவேதான் அவர் மொழியை அதன்
இயக்கத்தில் வைத்துப் பார்த்து இலக்கணம் செய்தார்.

திரு வேல்முருகனின் இலக்கணப் புரிதலும்
அவரின் இலக்கணப் பிரயோகமும் மொழியின்
இயக்கத்தை, இயக்கத்தின் போக்கில் நிகழும்
மாற்றத்தை மறுக்கும் இயங்காநிலைவாதம் ஆகும்.

ஒரு சான்றைப் பார்ப்போம். உடன் தொக்க தொகை
என்பதை "உடன்றொக்கதொகை" என்று எழுதுகிறார்.
இவ்வாறு எழுதுவது 200 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்த பழக்கம். இன்று அது முற்றிலுமாக மாறிய
பின்னும், காலத்துக்குப் பின் சென்று, வழக்கு
வீழ்ந்ததை, அதாவது இறந்து போனதை எடுத்து
மடியில் வைத்துக் கொண்டுச் சீராட்டுகிறார்.
இது பிற்போக்காகும்.

இதுபோலவே காலத்தால் அழிந்து போன மட்குடம் என்ற
வழக்கை எடுத்துக்கொண்டு வாதம் செய்கிறார்.
இவையெல்லாம் discredited long back.

வெள்ளிக்குடம் என்பது வெள்ளியால் செய்யப்பட்ட
குடம் என்று பொருள்படும்போது, மண்குடம் என்பது
மண்ணால் செய்யப்பட்ட குடம் என்று பொருள்படாது
என்று வாதம் செய்வது எப்படிச் சரி?

வெள்ளிக்குடம் என்பது மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாக இருக்கும்போது
மண்குடம் என்பது அவ்வாறு ஆகாது என்பது
எப்படிச் சரி?

மண்குடம் என்பது மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையன்று என்று அவர்
கருதினால், உரிய நன்னூல் சூத்திரங்களுடன்
அதை வேல்முருகன் அவர்கள் நிரூபிக்கட்டும்.
தமிழ் விக்கிப்பீடியா, quora மற்றும் இணையத்தில்
கிடைக்கும் அரைகுறைத் தகவல்களை
ஆதாரமாகக் காட்ட மாட்டார் என்று நம்புகிறேன்.
===========================
பகுதி-3 (பகுதி 2இன் தொடர்ச்சி)
--------------------------------------------------
புணரியலில் அல்வழியாகவும் இயல்பாகவும்
புணர்ச்சி நிகழும். தோன்றல், திரிதல், கெடுதல்
இருந்தால் மட்டுமே புணர்ச்சி நிகழ்ந்துள்ளது
என்று கருதுவது தவறு.

புணர்ச்சியின்போது நிலைமொழியின் ஈற்றெழுத்தும்
வருமொழியின் முதலெழுத்தும் வெறுமனே எழுத்து
சார்ந்து மட்டுமே பணர்கின்றன என்று கருதுவது
யாந்திரீகமான பார்வை. புணர்ச்சி என்பது பொருள்
சார்ந்தும் நிகழ்கிறது.

விதிகளுக்கு மாறான பல்வேறு புணர்ச்சிகள்
நிகழும் என்பதை நன்னூலில் இருந்தே சான்று
காட்டி நிறுவ என்னால் இயலும். ஆனால் அதற்கான
இடம் இது இல்லை.

இது குறித்த விவாதத்தைப் பொதுவெளியில்
நடத்தலாம்; ஆனால் முகநூலில் கூடாது.
ஒரு லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே நன்கு
இலக்கணம் கற்றவர் என்ற நிலையில்,
இந்த விவாதத்தை நீட்டிப்பது தேவையற்றது.

திரு வேல்முருகன் கிளப்பிய இந்த விவாதத்தின்
நிகர விளைவு என்னவெனில், மண்குடம் என்ற சொல்
இலக்கணப்படி தவறானது என்ற புரிதலுக்குச்
சிலர் வந்திருப்பதுதான். இது முற்றிலும்
பிறழ்புரிதல். மண்குடம் என்பது அன்றும் இன்றும்
இலக்கணப்படி சரியானதே.

புணரியல் குறித்து தமது சொந்தப புரிதலை,
சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்க திரு
வேல்முருகனுக்கு உரிமை உண்டு. ஆனால் அவரது
புரிதல் மட்டுமே சரியானது என்றும் அது மட்டுமே
நிறுவப்பட்ட இலக்கணம் என்றும், ஏனைய அனைத்தும்
பிழை என்றும் அவர் வாதிட முற்படுவது பெருந்தவறு.

இந்நிலையில் தமிழிலக்கணம் குறித்த அவரின்
பார்வை (perspective) இருநூறு ஆண்டுக்கு முந்தியது
எனவே பிற்போக்கானது என்று சுட்டிக்காட்ட நேர்கிறது.
இது மாற்றத்துக்கு எதிரானது எனவே தமிழுக்கும்
தமிழின் வளர்ச்சிக்கும் எதிரானது என்பதையும்
மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட நேர்கிறது.

தமிழிலக்கணம் என்பது ஒரு சிறிய சிமிழுக்குள்
அடக்கப்படக் கூடியது என்றும் அதைத் தம்
உள்ளங்கையில் இறுக்கிக் கொள்ள முடியும் என்றும்
எவர் ஒருவரும் கருதுவது பேதைமையுள் எல்லாம்
பேதைமை ஆகும். இது ஒருவித சுருக்கல்வாதம்
(reductionism) ஆகும்.

பத்துத் தரப்பில் அவரும் ஒரு தரப்பு என்ற அளவில்
திரு வேல்முருகன் தம் சொந்தப புரிதலை
முன்வைக்கலாம். மாறாக அவரின் தரப்பு மட்டுமே
நிறுவப்பட்ட இலக்கணம் என்று அவர் கருதினால்
அதைத் தமிழுலகம் ஏற்காது.
*****************************************************
பகுதி-3 முற்றியது.
மொத்தக் கட்டுரையும் முற்றியது.






         






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக