புதன், 3 ஜூலை, 2019

வேற்றுமை என்றால் என்ன?
தொல்காப்பியமும் நன்னூலும் ஓர் ஒப்பீடு!
------------------------------------------------------------------
இராமன் கொன்றான்.
இராமனைக் கொன்றான்.

இவ்விரண்டு வாக்கியங்களையும் பாருங்கள்.
இரண்டுக்கும் இடையில் பொருள் மாறுபாடு எவ்வளவு
தீவிரமாக இருக்கிறது என்று பாருங்கள்.

இரண்டு வாக்கியங்களில் இராமன் இருக்கிறார்.
அதாவது இராமன் என்னும் பெயர்ச்சொல் இருக்கிறது.
இரண்டாம் வாக்கியத்தில் இராமன் என்னும் பெயர்ச்
சொல்லுடன் "ஐ" என்பது சேர்வதால், பொருள் எவ்வளவு
மாறி விடுகிறது என்று பாருங்கள்.

இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது
வேற்றுமை ஆகும். (இராமன் என்ற பெயர்ச்சொல்லை
இராமனை என்று மாற்றும்போது பொருள் மாறுகிறது
அல்லவா?)  
 
இங்கு ஐ என்ற எழுத்து பொருளை வேறுபடுத்தி
விடுகிறது. இவ்வாறு பொருளை வேறுபடுத்தப்
பயன்படும் எழுத்துக்கள் உருபுகள் எனப்படும்.
இங்கு ஐ என்பது வேற்றுமை உருபு.

தமிழில் வேற்றுமை மொத்தம் எட்டு. முதல் வேற்றுமை
தொடங்கி எட்டு வேற்றுமைகள் உள்ளன.

முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இது ஒரு வாக்கியத்தில் எழுவாயாக வரும்.
கண்ணன் வந்தான்.
சீதை ஓடினாள்.
கோதை பாடினாள்.

மேற்கூறிய வாக்கியங்களில் கண்ணன், சீதை, கோதை
ஆகிய சொற்கள் எழுவாயாக அமைந்துள்ளன. இவை
அனைத்தும் முதலாம் வேற்றுமை ஆகும். 

ஆங்கிலத்திலும் இப்படித்தான். ஆங்கிலத்திலும்
முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமையே ஆகும்.

எழுவாய் வேற்றுமை என்பது ஆங்கிலத்தில்
Subjective case எனப்படும்.
Rama came என்ற வாக்கியத்தில் Rama என்பது எழுவாயாக
உள்ளது. இது Subjective case ஆகும்.

எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை.
இது ஒரு பெயர்ச்சொல்லை அழைப்புச் சொல்லாக
மாற்றப் பயன்படும் வேற்றுமை ஆகும். எனவே
இது விளி வேற்றுமை ஆகும்.

அண்ணா (வா).
பாப்பா (போ).
சுந்தரி (ஓடு). 

இந்த வாக்கியங்களில் பெயர்ச் சொற்கள்
விளிப்பதற்கு (அழைப்பதற்கு) உதவுகின்றன.
பெயர்ச் சொற்கள் விளிப்புச் சொற்களாக
வேற்றுமை அடைந்துள்ளன. எனவே இவை
விளிவேற்றுமை எனப்படும்.

எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
அண்ணன் என்பதை அண்ணா என்றும்
கண்ணன் என்பதை கண்ணா  என்றும்
விளிக்கும்போது தோன்றும் ஆகாரம்
(ஆகாரம் = ஆ என்ற எழுத்து) உருபு ஆகாது.

ஏனைய ஆறு வேற்றுமைகளும் உருபு உண்டு.
ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை
வரையிலான வேற்றுமைகளின் உருபுகளாகும்.

தொல்காப்பியர் ஒரு வேற்றுமைக்கு ஒரு உருபு
என்றே கொண்டுள்ளார்.

பின்வரும் தொல்காப்பிய சூத்திரத்தைப் படியுங்கள்.

அவைதாம்
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி
யென்னும் ஈற்ற
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், 64)
(சந்தி பிரித்து எழுதியுள்ளேன்),

1. பெயர் வேற்றுமை (அதாவது எழுவாய் வேற்றுமை)
2. ஐ.  3.ஒடு. 4. கு. 5. இன். 6. அது. 7. கண். 8.விளி.
தொல்காப்பியர் காலத்தில் உருபுகள் மிகவும்
குறைவே. மொத்தமே ஆறே ஆறு உருபுகளை
மட்டுமே கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு. வெகுகாலம்
கழித்தே நன்னூல் இயற்றப் பட்டது. இன்று
நன்னூல்தான் பயன்பாட்டில் இருக்கிறதே தவிர
தொல்காப்பியம் இல்லை.

பள்ளிப் பாட நூல்களில், கல்லூரித் தமிழ் மொழிப்பாட 
நூல்களில் எல்லாம் நன்னூலே பின்பற்றப்
பட்டு வருகிறது. புலவர் படிப்பு, வித்துவான் படிப்பு
ஆகிய எல்லாவற்றிலும் நன்னூலே பாடம்.
முதுகலை இலக்கிய வகுப்புகளில் மட்டுமே
தொல்காப்பியம் பாடமாக உள்ளது.

நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர் காலத்தில்
வேற்றுமை உருபுகள் அதிகரித்து விட்டன.
ஐ ஆல் கு இன் அது கண் போன்ற எழுத்து உருபுகள்
மட்டுமின்றிச் சொல்லுருபுகளும் வழங்கி வந்தன.

எடுத்துக்காட்டாக மூன்றாம் வேற்றுமைக்கான
உருபுகளைப் பற்றிப் பார்ப்போம்.
ஆல் ஆன் ஒடு ஓடு என்னும் நான்கு உருபுகளை
நன்னூலார் குறிப்பிடுகிறார்.

கத்தியால் குத்தினான் (ஆல்)
வாளால் அறுத்தான் (ஆல்)    
காலால் உதைத்தான் (ஆல்)
கரங்களால் அணைத்தான் (ஆல்)

அறத்தான் வருவதே இன்பம் (ஆன்). இது செய்யுள்
வழக்கு. செய்யுளில் மட்டுமே வரும். 
       
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
இக்குறளில் வரும் ஒடு (கண்ணொடு) ஓர் உருபாகும். இதுவும்
செய்யுள் வழக்கே.

காதலனோடு ஓடினாள் (ஓடு)
அண்ணனோடு தம்பியும் சென்றான் (ஓடு)

ஆக, மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் நான்கு
உருபுகளைப் பார்த்தோம் (ஆல், ஆன், ஒடு, ஓடு).
நான் ஏற்கனவே கூறியபடி, தற்காலத்தில்
உருபுகள் பெருத்து விட்டன. எழுத்து உருபுகள் மட்டுமின்றிச்
சொல் உருபுகளும் வழக்கில் உள்ளன.

பலத்த காற்றுடன் மழை பெய்யும்; வானிலை ஆய்வு
மையம் எச்சரிக்கை.
இந்த வாக்கியத்தில் காற்றுடன் என்பதில் உள்ள உடன்
என்பது மூன்றாம் வேற்றுமை உருபாகும்.
காற்றோடு மழை பெய்யும் (ஓடு).
காற்றுடன் மழை பெய்யும் (உடன்).
இவ்விரண்டும் ஒரே பொருளைத் தருவதைக் காண்க.
உடன் என்பது எழுத்து வழக்கில் மட்டுமே உள்ளது.
ஓடு என்பது பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும்
உள்ளது.

தொல்காப்பியர் காலத்தில் உடன் என்பது ஓர் உருபாக
உருவாகவில்லை. பிற்காலத்தில் உடன் என்பது
தோன்றியது.

மூன்றாம் வேற்றுமையில் மேலும் ஓர் உருபைப்
பார்ப்போம். கொண்டு என்னும் உருபு அது.

தடி கொண்டு அடித்தான் (கொண்டு).
தடியால் அடித்தான் என்ற பொருளைத் தருகிறது இது.

விரல் கொண்டு பூத்தொடுத்தாள் (கொண்டு)
ஊசி கொண்டு தைத்தான் (கொண்டு).

நன்னூலார் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகளாக
நான்கை மட்டுமே (ஆல் ஆன் ஒடு ஓடு) கூறுகிறார்.
உடன், கொண்டு ஆகியனவும் இன்று உருபுகளாக
உள்ளன. இவை சொல்லுருபுகள் (post positions).

தொல்காப்பியர் காலத்தில் மூன்றாம் வேற்றுமைக்கு
உரிய உருபு "ஒடு" மட்டுமே. ஆல், ஆன், ஓடு ஆகியவை
உருபுகளாக இல்லை.

மேலும் தொல்காப்பியர் காலத்தில் "உடன்" ,"கொண்டு"
ஆகியவையும்  உருபுகளாகஇல்லை. மொழி தொடர்ந்து
இயங்கிக் கொண்டிருக்கிறது. இயக்கத்தின் போக்கில்
மாறிக்கொண்டே இருக்கிறது. நிகழ்ந்து விட்ட
மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய இலக்கணத்தை
உருவாக்க வேண்டியது உள்ளது.

தொல்காப்பியர் காலத்தில் உடன் என்பது வேற்றுமை
உருபாக இல்லை என்பதால் இன்று அதை எப்படி
உருபாக ஏற்கலாம்? அது பிழை அல்லவா?
இப்படி எவரேனும் கேட்கக் கூடும். அப்படிக்
கேட்பது அறிவுடைமை ஆகாது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறார் மார்க்ஸ்.
மார்க்சியம் கற்றவர்களால் மட்டுமே
தமிழிலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு
உள்வாங்க முடியும். அவர்களால் மட்டுமே
தமிழுக்குச் சரியான இலக்கணம் செய்ய முடியும்.
குட்டி முதலாளியத்தால் இது ஏலாது.

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
தமிழ் இலக்கணம் குறித்த எமது கட்டுரைத் தொடர்கள்
நிரந்தரமாக நிறுத்தப் படுகின்றன.
போதிய வரவேற்பின்மை, தடைகள் ஆகியவற்றுடன்
"Don't cast pearls before swine" என்ற அறிவுரையும்
காரணமாகி விட்டது.
*************************************************************      
    


    

 
     




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக