புதன், 17 ஜூலை, 2019

முகிலன் விவகாரம்!
மொத்த சமூகத்துக்குமான படிப்பினை!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
முகநூல் 2004ல் தொடங்கப் பட்டது. இது அறிவியலின்
மகத்தான கண்டுபிடிப்பு! இதைக் கண்டுபிடித்தவர்கள்
மானுடப் பயன் கருதி மட்டுமே இதை உருவாக்கினர்.
காலப்போக்கில் முகநூலின் செல்வாக்கை உணர்ந்த
ஏகாதிபத்தியம், இதைத் தன் தீய நோக்கங்களுக்காக
மிகத் திறமையுடன் பயன்படுத்தி வருகிறது.

மனிதனின் இயல்பு கூட்டு வாழ்க்கை வாழ்வது.
மனிதன் ஒரு சமூக விலங்கு (man is a social animal).
முகநூலின் மூலம் மனிதனின் சமூக உளவியலை,
அதாவது சமூகமாகச் சேர்ந்து வாழ்வது என்ற
உளவியலை ஏகாதிபத்தியம் உடைத்து எறிந்து
விட்டது.

அமைப்பாகச் சேருவது என்ற மானுட உளவியலை
உடைத்தெறிந்து, தனித்தனியாக உதிரியாக
நிற்பது என்ற உளவியலுக்கு சமூகத்தைப் பழக்கி
விட்டது ஏகாதிபத்தியம். இதற்கு முகநூலை ஒரு கருவியாகப்
பயன்படுத்திக் கொண்டது. எப்படி என்று பார்ப்போம்.

முகிலன் ஒரு ஒற்றைத் தனிநபர் (single individual).
அவர் எந்தக் கட்சியையோ அமைப்பையோ சாராதவர்.
கட்சி சார்ந்து இயங்குவது அல்லது அமைப்பு சார்ந்து
இயங்குவது என்ற சிந்தனையே முகிலனிடம் அணுவளவும்
கிடையாது. அது மட்டுமல்ல, அமைப்பு சார்ந்து இயங்கவே
கூடாது என்று தெளிவுடன் இருப்பவர். அவரின் சமூகக்
கண்ணோட்டம் என்பது குட்டி முதலாளியக் கண்ணோட்டம்
ஆகும்.

முகிலன் சமூகத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்று
இருக்கிறார். அவரின் செயல்பாட்டுக்குப் பொருத்தமற்ற
மிகையான செல்வாக்கு இது. இதற்கு முகநூலே காரணம்.
பாலியல் செயல்பாட்டாளரான அவர் சூழலியல்
செயல்பாட்டாளராக மகுடம் சூட்டப் படுகிறார்.

நியாயமாக கட்சிகளோ அமைப்புகளோ பெற வேண்டிய
செல்வாக்கை ஒரு ஒற்றைத் தனிநபரான முகிலன்
அபகரித்து விடுகிறார். இது எப்படி சாத்தியம் ஆகிறது?
மக்களை அமைப்புகளிலோ கட்சிகளிலோ அணிசேர
விடாமல் தடுக்கும் கருவியாக முகநூலை ஏகாதிபத்தியம்
பயன்படுத்துவதால்தான் இது சாத்தியம் ஆகிறது.

நாடு சுதந்திரம் அடையும் முன்னால் 1930, 1940களில்
சமூக உணர்வு பெற்ற ஒரு இளைஞன் காங்கிரசில்
சேர்ந்தான். 1950,1960களில் சமூக உணர்வு பெற்ற
இளைஞர்கள் பெரியார் அண்ணாவின் திராவிட
இயக்கத்திலோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியிலோ
சேர்ந்தனர்.

1970களில் வசந்தத்தின் இடி முழக்கமாக வெடித்தெழுந்த
நக்சல்பாரி இயக்கத்தில் (மார்க்சிய லெனினிய இயக்கம்)
இளைஞர்கள் சேர்ந்தார்கள்.

முகநூலுக்கு முந்திய காலத்தில் மேற்கூறிய இளைஞர்கள்
முறையான கட்சிகளில் அமைப்புகளில் சேர்ந்தார்கள்.
இன்று நிலை என்ன? சமூக உணர்வு பெறுகிற அல்லது
பெற்று விட்டதாகக் கருதுகிற இளைஞர்கள் முகநூலில்
ஆகப் புரட்சிகரமாக ஒரு பதிவு போடுகிறார்கள்.
இப்படிப் பதிவு போடுவதையே பெரும் புரட்சிகரமாக
இவர்கள் நினைக்கிறார்கள். மார்க்சும் லெனினும் கூட
இவர்களை விடப் புரட்சிகரமாக ஒரு பதிவு போட முடியாது.

ஏதாவது ஒரு மார்க்சிய லெனினியக் கட்சியிலோ
அல்லது அக்கட்சிகளின் மக்கள் திரள் அமைப்புகளிலோ
சேர மறுக்கும் இவர்கள் முகநூலில் 24365 என்ற அளவில்
(24 hours 365 days) புரட்சி செய்கிறார்கள்.

ஆக அமைப்பாகத் திரள்வது என்கிற உயர்ந்த நோக்கத்தை
ஏகாதிபத்தியம் சிதறடித்து விடுகிறது. அரசுக்கு எதிராக
மக்கள் பெருமளவில் திரண்டு விடும் அபாயத்தை
முகநூலைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியம்
சாமர்த்தியமாகத் தடுத்து விடுகிறது.

பேராசிரியர் சாய்பாபா மெய்யான அரசு எதிர்ப்புப்
போராளி. 2014 முதல் சிறையில் இருந்து வருகிறார்.
இன்னும் சுதா பரத்வாஜ், விநாயக் சென் என்று
யாரைக் கண்டெல்லாம் இந்த அரசு அஞ்சுகிறதோ
அவர்களெல்லாம் சிறையில் உள்ளனர். முகநூலில்
உள்ள சுயஇன்பச் செயல்பாட்டாளர்கள் எவரும்
சாய்பாபா பற்றி அறிவார்களா?

கட்சி, அமைப்பு என்பதை எல்லாம் சுக்கு நூறாக
அடித்துத் துவைத்து விடுகிறது ஏகாதிபத்தியம்.
முகநூல் மூலமாக சுயஇன்பப் போராளிகளை
உருவாக்கி சமூகத்தில் நியாயமாக ஏற்பட்டு
இருக்க வேண்டிய மக்கள் கிளர்ச்சியை அடக்கி
விடுகிறது.

ஒற்றைத் தனிநபரான முகிலனும் பியூஸ் மனுசும்
எப்படி பெரும் செல்வாக்குடன் திகழ முடிகிறது?
சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

எனவே சமூக உணர்வு உடைய இளைஞர்களே,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அருள்கூர்ந்து மார்க்சிய லெனினியக் கட்சிகளில்
ஏதாவது ஒன்றில் சேர்ந்து செயல்படுங்கள்.
கட்சியில் சேராவிட்டாலும் கூட, கட்சியின்
வெகுஜன அமைப்புகளில் சேர்ந்து செயல்படுங்கள்.
அல்லது ஏதாவது ஒரு கட்சியின் அனுதாபியாக
இருந்து செயல்படுங்கள். கட்சியினர் தருகிற
வேலைகளை எடுத்துக் கொண்டு செய்ய
முயலுங்கள்!

ஒற்றைத் தனிநபராக இருக்காதீர்கள். அது அரசியலற்ற
போக்கு ஆகும் (an apolitical trend). ஒற்றைத் தனிநபர்களை
நாயகர்களாக்கி அவர்களை வணங்காதீர்கள். இதுவே
முகிலன் விவகாரத்தில் இருந்து பெறும் படிப்பினை!
**********************************************************     





 


.



சமூகத்தின் பொருள் உற்பத்தியில் பங்கெடுக்காத
வர்க்கம் காரல் மார்க்சின் பார்வையில் உதிரி வர்க்கம்
(lumpen class) ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக