வியாழன், 11 ஜூலை, 2019

காடு + விலங்கு = காட்டு விலங்கு
மாடு + தீவனம் = மாட்டுத் தீவனம்
வீடு + கு = வீட்டுக்கு

மேற்காணும் எடுத்துக் காட்டுகள் ஒரு வகைப்
புணர்ச்சியை உணர்த்துகின்றன. அது என்ன?
ஒற்று இரட்டித்துப் புணர்தல் என்னும் புணர்ச்சியை
உணர்த்துகின்றன.

ரோடு (road) என்பது ஆங்கிலச் சொல். அதுவும்
தமிழுக்கு வந்த பிறகு, தமிழ்ச் சொல்லாகவே
கருதப்பட்டு, தமிழ்ச்சொல்லுக்கு உரிய
ஒற்று இரட்டித்துப் புணர்தலுக்கு ஆளாகிறது.

இதே அடிப்படையில்,
தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்றாகிறது.
இங்கும் ஒரு இரட்டித்துப் புணர்தலே. நிற்க.

தமிழ்நாடு + அரசு  என்பதில்,
தமிழ்நாடு என்பது நிலைமொழி.
நிலைமொழியின் ஈற்றெழுத்து டு அதாவது ட்+ உ.
அதாவது உ.

வருமொழியில் அரசு என்பதில் முதல் எழுத்து அ.
உ அ ஆகிய இரண்டும் உயிர்கள்.
இரண்டு உயிர்கள் புணரும்போது உடம்படு மெய்
வரும்.
சான்றாக, கோ + இல் = கோவில் (வகர உடம்படு மெய்)
கோ + இல் = கோயில் (யகர உடம்படு மெய்)
      
இந்த அடிப்படையில் பார்த்தால்,
தமிழ்நாடு + அரசு + தமிழ்நாடுவரசு என்று
வகர உடமாடு மெய் பெற்றுப் புணரும்.

இவ்வாறு இரண்டு பிரிவாகப் பிரிந்து அக்காலத்தில்
புலவர்களுக்கு இடையில் விவாதம் நடந்தது.
அப்போது அறிஞர் அண்ணா இதைத் தமிழறிஞர்களிடம்
ஒப்படைத்தார். அவர்கள் வழங்கிய தீர்ப்பே
தமிழ்நாட்டரசு.

ஆக ஒற்று இரட்டித்துப் புணர்தலா அல்லது வகர
உடமாடு மெய்யா என்ற சிக்கலில், ஒரு இரட்டித்தலுக்கு
ஆதரவாக தீர்ப்பு வந்தது. இது வரலாறு.

பின்குறிப்பு:
------------------
நாடு + அரசு = நாடரசு என்று புணர்ந்தால்.
அது நாட்டின் அரசு என்ற பொருளைத் தராது.
அரசை விரும்பு என்ற பொருளைத் தரும்.
நாடு = விரும்பு
நாடு + அகம் = நாடகம்
நாடு + அரசு + நாடரசு  (நாடுகின்ற அரசு என்று பொருள்)
எனவே தமிழ்நாட்டரசு என்று ஒற்று இரட்டித்துப் புணர்வதே சரி.


   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக