திங்கள், 1 ஏப்ரல், 2019

நோட்டாவுக்கு வாக்களிப்பதும்
வாக்களிக்கத் தூண்டுவதும்
பேதைமையுள் எல்லாம் பேதைமை!
அண்ணன் தியாகு அவர்களின் கருத்துக்கு மறுப்பு!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) நோட்டாவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்
என்று அறைகூவல் விடுக்கிறார் அண்ணன் தியாகு அவர்கள்.
(பார்க்க: அவரின் ஆடியோ எண்: 24)

2) நோட்டாவுக்கோ அல்லது விரும்பிய எவருக்குமோ
வாக்களிப்பது அண்ணன் தியாகு அவர்களின் உரிமை!
கருத்துரிமை! பிறப்புரிமையும் கூட. நோட்டாவுக்கு
வாக்களியுங்கள் என்று கூறுவதோடு அவர் நிறுத்திக்
கொண்டிருப்பார் எனில், அதில் நமக்கு எந்த ஆட்சேபணையும்
இல்லை.

3) ஆனால் அடுத்து அவர் கூறுவது மார்க்சியத்துக்கு
ஏற்புடையதாக இல்லை. நோட்டாவுக்கு வாக்களிப்பதன்
மூலம், இந்திய அரசமைப்பு மீதும் தேர்தல் முறையின்
மீதும் நம்பிக்கை இல்லை என்று உணர்த்தவே
நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார் தியாகு.
இது மார்க்சியத்துக்கு எதிரானது. எனவே இதைக்
கடுமையாக ஆட்சேபிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

4) அண்ணன் தியாகு இன்று கூறுவதை பல ஆண்டுகளுக்கு
முன்பே மறைந்த பார்ப்பன ஞானி கூறி வந்தார்.
நோட்டா உருவாக்கப் படுவதற்கு முன்பு 49ஓ பிரிவு
இருந்த காலந்தொட்டே, நோட்டாவைப் பயன்படுத்துமாறு
பார்ப்பன ஞானி கூறி வந்தார்.

5) பின்னர் தான் சொன்னதில் தானே நம்பிக்கை இழந்த
பார்ப்பன ஞானி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஆலந்தூர்
இடைத்தேர்தலில்  போட்டியிட்டு படுதோல்வி அடைந்து
பின்னர் மண்டையையும் போட்டு விட்டார்.

6) எனினும் பார்ப்பன ஞானி இறக்கவில்லை என்றே
தோன்றுகிறது. அண்ணன் தியாகுவின் உருவில் அவர்
உயிர் வாழ்கிறார் என்றே கூற வேண்டும்.

7) ஊழல் பெருச்சாளிகள், ரௌடிகள். தாதாக்கள்,
பாலியல் குற்றவாளிகள் என்று வேட்பாளர்களில்
பெரும்பகுதி இவர்களே என்று ஆகி விட்ட பிறகு
சலிப்படைந்த வாக்காளர்கள் தேர்தல் முறையின்
மீதே நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள்.
இழந்த நம்பிக்கையை மீண்டும் வாக்காளர்களுக்கு
ஊட்டும் பொருட்டு, இந்திய ஆளும் வர்க்கம்
நோட்டாவை அறிமுகப்படுத்தி மக்களின்
அதிருப்தியை வெற்றிகரமாக மடைமாற்றம் செய்தது.
ஆக, நோட்டா என்பது ஆளும் வர்க்கத்தின் தேவைக்காக
ஆளும் வர்க்கமே கொண்டு வந்த ஒரு ஏற்பாடு. இதில்
ஒரு புரட்சியும் இல்லை. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை.   

8) நோட்டாவுக்கு வாக்களிப்பது என்பது தேர்தல்
புறக்கணிப்பில் வரும் என்று ஒரு விசித்திரமான
வாதத்தை முன்வைக்கிறார் அண்ணன் தியாகு.
திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்வது
பிரம்மச்சரியத்தில் வரும் என்பது போன்றது இது.
நோட்டாவுக்கு வாக்களிப்பது எவ்விதத்திலும் தேர்தல்
புறக்கணிப்பு ஆகாது.

9)  நோட்டாவுக்கு வாக்களிப்பதை விட கற்பழிப்பு புகழ்
மன்சூர் அலிகானுக்கோ, கல்வித்தந்தை  பாரி வேந்தருக்கோ
வாக்களிக்கலாம். இது ஒரு political commitmentஐ
அடையாளப்படுத்தும். நோட்டாவுக்கு வாக்களிப்பது
அரசியலற்ற போக்கையே சுட்டும்.

10) இந்த மொத்தத் தேர்தலையும் முழுவதுமாகப்
புறக்கணிப்பதே சரியான மார்க்சிய லெனினிய
நிலைபாடு ஆகும். இதுதான் மார்கசிய லெனினியக்
கட்சியின் 1970 வேலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

11) 1970 வேலைத்திட்டம் இன்று பொருந்தாது என்று
தியாகு அவர்கள் கூறுவாரேயானால் அதை
விவாதிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும்
நோட்டாவுக்கு வாக்களிப்பது சரியானதல்ல.
அது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் ஆகும்.

-------------------------------------------------------------------------------------

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக