ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கும்
கார்முகில் அவர்களுக்கு கைத்தாங்கல் கொடுத்துக்
கூட்டி வரும் பாசிசமற்ற காங்கிரசின் ஆதரவாளர்களுக்கு!
(தோழர் திருப்பூர் குணா அவர்களுக்கு மறுப்பு!)
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
"நீள்விட்டப் பொன்மாளிகை கட்டி அங்குப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்"
என்று நொந்து கொள்வார் பாரதியார். காங்கிரசை
ஆதரிக்கும் தோழர் கார்முகில் அவர்களை நினைத்து
நாமும் நொந்து கொள்கிறோம். மார்க்சிய லெனினிய
மாளிகையில் பாசிச காங்கிரஸ் பேயை, பேயே வா,
என்று வணங்கிக் கும்பிட்டுக் குடியமர்த்துகிறார்
தோழர் கார்முகில்.

இதைச் செய்வதற்கு ஒரு கார்முகில் தேவையில்லை!
ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி தேவையில்லை!
கடந்த 40 ஆண்டுகளாக, கடும் போராட்டங்களுக்கு
நடுவில் ஒரு மார்க்சிய லெனினியக் கட்சியைப்
பேணிப்பாதுகாத்து உயிர்ப்புடன் வைத்திருந்து,
கடைசியில் அதைப் பாசிசத்துக்கு இரையாக்க வேண்டிய
தேவையில்லை. கிளியை வளர்த்துப் பூனையின்
கையில் கொடுக்கிறார் கார்முகில்!

பாரிவேந்தரையும் ஜகத் ரட்சகனையும், கார்த்திக்
சிதம்பரத்தையும் ஆதரிப்பதற்கு ஒரு தலைமறைவுக்
கட்சி எதற்கு? பொதுவெளியில் தோழர் கார்முகிலின்
ஒரு புகைப்படம்கூடக் கிடையாது; ஏனெனில் அவர்
தலைமறைவாக இருக்கிறார் என்ற வெற்றுப்
பெருமைகள் எதற்கு?

கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்குப்
பதிலளித்த எஸ் ஏ டாங்கே, " காங்கிரசை ஆதரிப்பதுதான்
கம்யூனிசம்" என்று பதிலளித்தார். காங்கிரசை
ஆதரிப்பதற்கு டாங்கேயிசம் போதுமே, மார்க்சிய
லெனினியம் எதற்கு?

காங்கிரசை ஆதரிப்பது என்றால், அதற்கு டாங்கேயும்
மொகித் சென்னும் ஆரம்பித்த UCPI கட்சி
(United Communist party of India) போதுமே! TNML எதற்கு?

எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், அது தன்
வர்க்க நலனை முன்னிட்டு பாசிசத்தைக் கடைபிடித்தே
தீரும். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.
இதுவே மத்திய அரசை ஆளும் எல்லாக் கட்சிகளுக்குமான
பொது விதி. இதில் காங்கிரஸ், பாஜக என்றெல்லாம்
அணுவளவும் வேறுபாடு கிடையாது.

பாசிசமற்ற காங்கிரஸ் என்று ஒரு காங்கிரஸ் கட்சி
இந்தியாவில் கிடையாது. அப்படி ஒரு கற்பனாவாதத்தைப்
பிடித்துக் கொண்டு தொங்குகிறார் கார்முகில்!

திமுக, மதிமுக, CPI, CPM  போன்ற சிறிய கட்சிகள்
கார்ப்போரேட்டுகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவை.
எனவே அவை பாசிசத்தை ஆதரிக்காது என்கிறார்
தோழர் திருப்பூர் குணா. அவரின் இந்த அபத்தமான
தர்க்கம், அதைப் படிக்கிற அனைவருக்கும் சிரிப்பை
வரவழைத்து விடும்.

மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, பாஜக ஆண்ட
போதும் சரி, அவர்கள் இருவரிடமும் அமைச்சர்
பதவிகளைப் பெற்றுக் கொண்டது திமுக. பெற்றுக்
கொண்டு அவர்களின் பாசிசச் செயல்பாடுகளுக்கு
ஒத்து ஊதியது திமுக.

வாஜ்பாய் அமைச்சரவையில் (1999-22004) முரசொலி மாறன்,
டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.
கூடவே மதிமுகவின் மு கண்ணப்பன் இருந்தார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடெங்கும்
உள்ள பல்கலைக் கழகங்களில் சோதிடம் (astrology)
ஒரு பட்டப் படிப்பாக வைக்கப்பட்டது. இதை திமுகவோ
மதிமுகவோ எதிர்க்கவில்லை; ஒத்து ஊதின. இவ்வாறு
கலாச்சார பாசிசத்துக்கு உடந்தையாக இருந்தது திமுக.

பொடா சட்டத்தை (POTA) வாஜ்பாய் அரசு கொண்டு வந்தது.
திமுக மதிமுக கட்சிகள் ஆதரித்தன. பொடாவை
ஆதரித்து நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றினார்
வைகோ. இது போல ஆயிரம் உதாரணம் கூற இயலும்.
இக்கட்சிகள் எப்போதுமே ராஜனை மிஞ்சிய ராஜ
விசுவாசத்துடன் செயல்படுபவை. இக்கட்சிகள் ஒருபோதும்
பாசிசத்தை எதிர்க்காது.

டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின்போது, ஆட்சியில்
பங்கேற்ற திமுக அப்பா சட்டத்தை
(UAPA = Unlawful Activities Prevention Act) ஆதரித்தது. இதெல்லாம்
பாசிசத்துக்குத் துணை போனதாக ஆகாதா?
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுச் சட்டத்தை
ஆதரித்து திமுக வாக்களிக்கவில்லையா?

காங்கிரசை ஆதரித்த டாங்கேயின் அனுபவங்கள் என்ன?
காங்கிரசை ஆதரித்த, இந்திராவின் நெருக்கடி நிலையை
ஆதரித்த CPI கட்சி பட்டிண்டா மாநாட்டில் காங்கிரசை
ஆதரித்தது தவறு என்று சுயவிமர்சனம் செய்து கொண்டு
நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டதா இல்லையா?

நெருக்கடி நிலையை ஆதரித்து கேரளத்தில் அச்சுதமேனன்
முதல்வராக இருந்தபோதுதானே, நக்சல்பாரி ராஜனை
(REC Calicut BE மாணவர்) அச்சுத மேனன் அரசு சித்திரவதை
செய்து கொன்றது! இது பாசிசமா அல்லது பாயாசமா?

எனவே பாசிசமற்ற காங்கிரஸ் என்றோ, மாநிலக் கட்சிகளின்
துணையோடு கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ்
பாசிசத்தைக் கடைப்பிடிக்காது என்று நம்புவதும்
எவ்வளவு பாமரத்தனம்? எவ்வளவு ஏமாளித்தனம்?

காங்கிரசை ஆதரிக்கும் யார் எவருக்கும் டாங்கேயின் கதி
அல்லது அச்சுதமேனனின் கதிதான்! பாசிசமற்ற
காங்கிரஸ் என்பதெல்லாம் கேலிக்கிடமான கூத்து.

இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக
இரண்டையும் மார்க்சிய லெனினிய ஆய்வு செய்து
இரண்டாகப் பிரிக்கிறார் தோழர் கார்முகில்.

1. பாசிசமற்ற ஆளும் கட்சி அதாவது பாசிசமற்ற காங்கிரஸ்.
2. பாசிசமுடைய ஆளும் கட்சி அதாவது பாசிச பாஜக.
எனவே பாசிசமற்ற காங்கிரசை ஆதரித்து, பாசிச பாஜகவை
வீழுத்துவது என்று ஒரு மூல உத்தி அல்லது செயலுத்தி
வகுத்து விட்டார் கார்முகில். நல்ல வேளையாக கார்முகிலின்
ஆய்வறிக்கை (Thesis) ப சிதம்பரத்திடம் கிடைக்கவில்லை.
கிடைத்திருந்தால், படித்துப் பார்த்த சிதம்பரத்துக்கு
சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி இருக்கும்.

உலகிலேயே காங்கிரசை பாசிசமற்ற கட்சி என்று
வரையறுத்ததன் மூலம் தோழர் கார்முகிலை
கின்னஸ் அதிகாரிகள் வந்து சந்திக்கக் கூடும். இனி
கார்முகிலுக்கு உரிய கெளரவங்கள் ஆளும் வர்க்கத்
தரப்பில் இருந்து தேடி வரும். அநேகமாக பத்மஸ்ரீ
விருதுக்கு கார்முகில் பரிசீலிக்கப் படக்கூடும்!
He is in the good books of the Indian ruling class.

பாசிச பாஜகவை வீழ்த்துவோம்!
பாயாச காங்கிரசை ஆதரிப்போம்!
--------------------------------------------------------------
பின்குறிப்பு: நாடாளுமன்றத்துக்குப் புறம்பான பெரும்
மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டி எழுப்புவதன்
மூலமே பாசிசப் போக்குகளை முறியடிக்க முடியும்.
*****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக