வியாழன், 11 ஏப்ரல், 2019

திருமாவளவன் பற்றி
வெளியீடு பெருமாள் பீற்றர் நினைவு முற்றம்
--------------------
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக திரு. #ரவிக்குமாரும்எதிரணி வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் பொது செயலாளரான திரு. #வடிவேல்ராவணனும்போட்டியிடுகின்றனர். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி அரசியல் போட்டி முதன்மையாகவும் சாதிய விரோதப் போக்கு பின்புலமாகவும் இருக்கும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் சாதிய மனப்போக்கே முதன்மையானதாக தலை தூக்கி நிற்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக வன்னியர், ஆதிதிராவிடர் என்ற இரு சாதி பிரிவினரின் விரோதப் போக்கின் விளைவாக, அந்தந்த சாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவே பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. இதை எவராலும் மறுக்க முடியாது. பொதுப் பிரச்சனைகளை பேசினாலும், இரு கட்சிகளுக்கும் அந்தந்த சாதி முகமே முதன்மையாக இருக்கிறது. ஆனாலும், தமிழர் நலனுக்கான கட்சிகள் என்பது போலவே இரு கட்சிகளும் உரிமை பாராட்டி வருகின்றன. தமிழர் நலனுக்கான பொதுப் பிரச்சனைகளில் இரு கட்சிகளும் பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. சில காலம் இணைந்தும் செயல் பட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. அடிப்படையில் எதிரும் புதிருமான கட்சிகள் தான்.
தமிழகத்திலிருக்கும் அரசியல் விமர்சகர்கள், அறிவு ஜீவிகள், முற்போக்கு எண்ணம் கொண்டோர் பாட்டாளி மக்கள் கட்சியை வலது பிற்போக்குவாதக் கட்சியாக தூற்றும் வேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை இடது முற்போக்குவாதக் கட்சியாக கொண்டாடி மகிழ்வதைப் பார்க்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரில் ஒரு பகுதியினரை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்பதற்காகவே, அனைத்து மாலை மரியாதைகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அணிவிக்கப்படுகிறன. தேர்தல் அரசியல் அல்லது முதலாளித்துவ அரசியலின் அனைத்துக் (கெட்ட) குணங்களையும் கொண்டிருக்கும் ஒரு கட்சி தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும். அதற்கு வழங்கப்படும் சிறப்புத் தகுதி இங்கு எவராலும் கேள்விக்குள்ளாக்கப் படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனின் சாமர்த்தியமான பேச்சும் நடத்தையுமே.
பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர, பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்கள் உட்பட அனைத்து கட்சியினரோடும், அனைத்து ஊடகங்களோடும், அனைத்து இயக்கங்களோடும், அனைத்து நிறுவனங்களோடும், அனைத்து எழுத்தாளர்களோடும், அதிகார வர்க்கத்தின் அனைத்து உறுப்புகளோடும் எல்லோருக்கும் நல்ல பிள்ளையைப் போல நடந்து கொள்ளும் திருமாவளவனின் சாமத்தியமே அது. இதை முதிர்ச்சியான அரசியல் பண்பு என்று வர்ணித்துக் கொள்கின்றனர் அவரது கட்சியினரும் அவரோடு கைகுலுக்குபவர்களும். ஆனால் உண்மையில் இது கடைந்தெடுத்த பிழைப்புவாதம். ஒரே நேரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க) , திருநாவுகரசு (காங்கிரஸ்) , ஸ்டாலின் (தி.மு.க), பன்னீர் செல்வம் (அ.தி.மு.க) , நல்லக்கண்ணு (கம்யூனிஸ்ட்), தினகரன் (அ.ம.மு.க) மட்டுமல்ல ரஜினிகாந்த், சேதுராமன், என்.ஆர்.தனபாலன், விஜயகாந்த், திருமுருகன்காந்தி, கொளத்தூர்மணி, இஸ்லாமிய அமைப்புகள், ஜக்கி வாசுதேவ், வாழுங்கலை ரவிசங்கர், கிருத்துவ பாதிரியார்கள் என ஒரே முகபாவனைகளோடும் பவ்வியத்தோடும் கைகுலுக்கும் கலை கைவரப்பெற்ற திருமாவளவனை அரசியல் கொள்கைகள் - இலட்சியங்கள் சார்ந்து விமர்சிக்க எவரும் முன் வருவதில்லை. ம.க.இ.க என்ற புரட்சிகர அமைப்பு ஒன்றைத் தவிர.
திருமாவளவனையோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ விமர்சித்தால் அவர்களை தலித் விரோதி, சாதி இந்து மனோபாவம் கொண்டவர், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரி என்றெல்லாம் வசைபாடித் தூற்ற தலித் அறிவுஜுவிகள் - எழுத்தாளர்கள் - செயல்பாட்டாளர்கள் என்ற பதாகைகளில் கச்சைக்கட்டி நிற்கின்றனர் சிலபலர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள். ஒருசிலர் அப்படியாவது முற்போக்கு கேடயம் ஒன்றை பரிசாகப் பெற்றுவிட மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் பிற சாதியினர். ஆதிதிராவிட சமூகத்தின் தூற்றுதலுக்குப் பயந்தோ தாம் ஏங்கிக் கொண்டிருக்கும் அங்கீகாரத்திற்குப் பணிந்தோ பிற சமூக அறிவுஜீவிகள் திருமாவளவனையோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ விமர்சிக்க தயங்குகின்றனர். அரசியல் பித்தலாட்டங்களை ராஜதந்திரம், சாணக்கியத்தனம், கட்சி அரசியலின் தவிர்க்க இயலாத விதிகள் என்று தன்னைச் சார்ந்தோரையும் பிறரையும் ஏற்றுக் கொள்ள வைத்த கலைஞர் கருணாநிதியின் பாணி (அ) அரசியல் வழிமுறையைப் பின்பற்றுகிறவர்தான் திருமாவளவன்.
தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் என்ற அடைமொழியோடு குட்டிக் கருணாநிதிகளை மாவட்டந்தோறும் உருவாக்கியதைப் போலவே, திருமாவளவன் தன் குட்டிகளை ஆங்காங்கே ஈன்று வருகிறார். தாய்சிறுத்தை என்று அடைமொழியிட்டு சுவரெழுதும் அவரது தொண்டர்களின் கூற்று சரிதான். அச்சு அசல் திருமாவளனைப் போலவே நடை, உடை, பாவனைகளைப் பயின்று, பின்பற்றி, பிழைக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகமெங்கும் குட்டிச் சிறுத்தைகள். முதலாளித்துவ அரசியல் மேடை, புரட்சிகர முற்போக்கு மேடை என இரு குதிரைகளில் சவாரி செய்யும் வித்தையை நன்கு கற்றுத் தேர்ந்திருக்கிறார் திருமாவளவன். கடந்த ஆண்டு (2018)ல் தம் கட்சி சார்பில் வழங்கப்படும் விருது விழாவில், கடைந்தெடுத்த பிழைப்புவாத அரசியல்வாதி திருநாவுக்கரசையும் புரட்சிகரப் பாடகர் கத்தாரையும் தம் இரு பக்கங்களிலும் உட்கார வைத்து அரசியல் செய்யும் வித்தை நிச்சயமாக கலைஞர் கருணாநிதி கையளித்த கொடைதான். சொல்லப்போனால், கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு ஸ்டாலின் அல்ல திருமாவளவன் தான்.
தன் பிழைப்புவாத அரசியலின் வழியில் தமிழ்ச் சமூகத்தை ஊழல் மயமாக்கி, தன்னல போக்கையும் சாதிய மனப் போக்கையும் வளர்த்து விட்டவர் கருணாநிதி ( திராவிட இயக்க அரசியலின் நல்வினைகளைத் தாண்டி). இதை அடி பிசகாமல் பின்பற்றி, தம் சகாக்களையும் அடிப் பொடிகளையும் அவ்வாறே நீரூற்றி அல்லது நெய்யூற்றி வளர்த்து வரும் திருமாவளவனை விமர்சிப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதோ, தலித் அரசியலுக்கு எதிரானதோ அல்ல. புரட்சிகர இயக்கங்கள், மாற்று அரசியல், சமரசமற்ற போராட்டங்கள் இவற்றை மழுங்கடிக்க உள்ளூர் அதிகார வர்க்கமும் சர்வதேச ( பன்னாட்டு நிறுவனங்களின்) தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது புரட்சிகர வேடதாரிகளையும் புல்லுருவி அரசியல்வாதிகளையும் (இந்திய) நாடெங்கிலும் உருவாக்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் திருமாவளவன். தன்னுடைய இந்த உருவம் அம்பலமாகி விடக்கூடாது என்பதற்காகவே, எதற்கெடுத்தாலும் டாக்டர் ராமதாசுடன் தன்னை ஒப்பிட்டு அல்லது ராமதாசைப் பற்றிப் பேசி தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிறார் திருமாவளவன். ராமதாசின் சாதிரீதியிலான அரசியலை நினைவுபடுத்திக் கொண்டு, சாிதானே என்று கடந்து செல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
திருமாவளவன் முன்வைக்கும் சாதி ஒழிப்பு அரசியலுக்கு அளவுகோல் ராமதாசின் சாதிய அரசியலா? அண்ணல் அம்பேத்கரின் இந்துமத கொள்கைகள் ஒழிப்பு அரசியலா? அவ்வாறே ஆயினும், சாதி இந்து ஆதிக்க அரசியல் ராமதாசோடு அடங்கப் பெறுகிறதா? கருணாநிதி முதல் தா.பாண்டியன் வரை விரிவடைந்து நிற்பது தானே சாதி இந்து அரசியல். வன்னியர் அல்லது ராமதாஸ் மட்டுமே முதன்மை எதிரி என்பது அம்பேத்கரிய மனோபாவம் அல்ல, ஆதிதிராவிட மனோபாவம்- சுயசாதிப் பற்று. வாழும் அம்பேத்கார் என்றெல்லாம் சுவற்றில் எழுதிக் கொள்வதற்கு திருமாவளவன் கூச்சப்படுவதேயில்லை. அதிலும் இந்தியாவிலேயே அம்பேத்கருக்குப் பிறகு திருமாவளவன்தான் என்றெல்லாம் அவரது துதிபாடிகள் கூவித் திரிகின்றனர். ஈழப் போராட்டத்தின் முடிவிற்குப் பிறகு, குட்டிச் சிறுத்தைகள் ஏற்கனவே தென்னாட்டுப் பிரபாகரன் என்று சுவரில் கிறுக்கியிருந்ததை அழித்து விட்டு, வாழும் பிரபாகரன் என்று புதிதாகக் கிறுக்கத் தொடங்கினர். மறுபுறம் பழ.நெடுமாறனுடன் சேர்ந்து கொண்டு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று மேடையில் பிதற்றினார் திருமாவளவன். பிரபாகரன் உயிரோடு இருக்கும் பொழுது, வாழும் பிரபாகரன் எங்கிருந்து முளைத்துக் கிளம்பினார் என்று எவரும் கேட்கவில்லை.
ஈழப் போராட்டம் இரத்தச் சேற்றில் பேரவலத்தோடு மூழ்கடிக்கப்பட்ட கையோடு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழின விரோதி பட்டத்துடன் கருணாநிதி காங்கிரசு கட்சியுடன் (தேர்தல்) கூட்டணி கண்டார். இந்தக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்ட திருமாவளவன், தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்றார். சென்னை தீவுத் திடலில் அப்பொழுது நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மேடையேறிக் கொண்டிருந்த நேரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த திருமாவளவன், ஒரு காங்கிரஸ் தொண்டரைப் போல 'அன்னை சோனியா வாழ்க ' என்று முழக்கமிட்டார். சமீபத்திய ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் நீங்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது, 'நான் அவ்வாறு முழக்கமிடாவிட்டால் ஒலிவாங்கி (மைக்) என்னிடமிருந்து அபகரிக்கப்பட்டிருக்கும், நான் பேசுவது தடுக்கப்பட்டிருக்கும்' என்று பதிலுரைத்தார். பேச்சை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, ஒலிவாங்கி அரசியலில் வாய்ப்பந்தல் ஜாலமிடும் திருமாவளவனுக்கு மைக் ஒரு கருவியல்ல, அதுவே பிழைப்புக்கான மூலதனம்.
தமிழ்தேசிய அரசியல், ஈழப் போராட்ட ஆதரவு நிலைப்பாடு ஆகியவற்றில் சமரசமின்றி இருப்பவர்கள் தமிழகத்தில் மிகச் சொற்பமே. வாய்ப் பந்தல் போட்டு பிழைப்பவர்கள்தான் அதிகம். அதனால் திருமாவளவனை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. பெரும்பான்மையினரில் ஒருவர்தான் அவர். சோனியா வாழ்க என முழங்கிய வாயோடு, கருணாநிதியின் கட்டளை ஏற்று, இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைகுலுக்கி (பிரபாகரனுடன் குலுக்கிய அதே கையை ) திரும்பும் திராணி எந்தத் தலைவருக்காவது உண்டா என்று கூட குட்டிச் சிறுத்தைகள் இனி கேட்கலாம். ராஜபக்சேவுடன் கை குலுக்கும் குழுவில் இருப்பதும் ஒரு வரலாற்று ஆவணம் தான் விடுதலைச் சிறுத்தைக்கு. வரலாற்று அவமானம் எனக் கருதி, அதிலிருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ளாத திருமாவளவன் இன்றளவும் தமிழ்தேசிய 'போராளிகள்' கூட்டத்தில் ஒருவர் தான். ஒபாமாவுடன் கை குலுக்கும் வாய்ப்புப் பெற்ற வைகோவை போல, ட்ரம்புடன் கை குலுக்கும் வாய்ப்புக் கிடைத்தால், தன் வாழ்க்கை ஆவணத்தில் ஒரு செய்தியாக பொறித்துக் கொள்ளலாமே என்ற ஏக்கம் கூட திருமாவளவனுக்கு இருக்கலாம். 'உலக நாயகன்' என்ற பட்டத்தைப் போல 'எழுச்சி உலகத் தமிழர்' என்று திருத்தி கிறுக்கி மகிழ்வார்கள் குட்டிச் சிறுத்தைகள். தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை, தமிழ்நாட்டில் தன் பிழைப்புவாத அரசியலுக்கு இன்றைக்கும் (நேற்றைக்கும்) பயன்படுத்திக் கொள்ளும் ஒரே அரசியல் கட்சி விடுதலை சிறுத்தைகள் தான்.
விடுதலை புலிகள் எத்தனை பெரிய சாவுக்கும் ஒப்பாரி வைப்பதில்லை. கொன்றவனிடமே நிவாரணம் பெறுவதில்லை. வீரச் சாவைத் தவிர சமரசத்திற்கு இடமில்லை. ராமதாசின் தீக்குச்சிக்கும் காடுவெட்டி குருவின் அரிவாளுக்கும் குய்யோ முறையோ என ஓலமிடும் திருமாவளவன் வாழும் பிரபாகரனா? துகிலுரியப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழப் பெண்களின் மரண ஓலத்தை வரலாற்றில் கோபமாய் பொதிந்து வைத்திருக்கும் விடுதலை புலிகளுக்கும் சுயசாதிப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்ட வழக்குகளில் சாதி இந்து குற்றவாளிகளுடன் சமரசம் பேசி வயிறு வளர்க்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இல்லையா? கழுத்தறுத்த சாதி இந்துக்கள் முதல் குண்டு வீசிக் கொன்றொழித்த பகைத் தலைவர் வரை சிரித்த பாவனையுடன் எக்கணமும் கைக்குலுக்கத் தயார் நிலையில் காத்திருக்கும் அரசியல்வாதியை 'போராளித் தலைவன்' என்று ஊர்தோறும் கிறுக்கி வைத்தால் அதுவே வரலாற்று ஆவணம் ஆகிவிடுமா?
தமிழருக்கு நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிக் கொண்டே போகின்றன என அங்கலாய்ப்பவர்கள், மறுபுறம் தமிழ்ச் சமூகம் ஊழலில் புரையோடிப் போயிருக்கிறது என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முதல் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் வரை வீழ்ச்சியே சந்தித்து வருவதற்கான முதன்மைக் காரணம் என்னவெனில், தன் விருப்பு வெறுப்புக்கேற்ப வாழும் கலையை கற்று வைத்திருக்கும் அரசியல்வாதிகளே போராளிகளாக மேடையேறுவதும் போராளிகளாக அறியப்படுவோர் ஈரம் காயும் முன்பே, அரசியல்வாதிகளாக மாறத் துடிப்பதுமே என்பதை யாரறிவர்.
தமிழ்சமூகம் மிக நீண்ட காலமாக பாவனைகளில்தான் வீழ்ந்து கிடக்கிறது. திருமாவளவனின் ஆதிதிராவிட சமூகமோ, பாவனைகளையே தம் அரசியல் பாணியாக ஆக்கிக் கொண்டுள்ளது. இது இன்று நேற்றல்ல, பலநூறு ஆண்டுகள் பாரம்பரியத் தன்மை கொண்டது. எதிர்ப்பது போன்ற பாவனை - போராடுவது போன்ற பாவனை. ஆக, பாவனைகளில் மூழ்கியிருக்கும் ஓர் சமூகத்திற்கோ - ஓர் இனத்திற்கோ பாவனைகளின் உருக்கொண்ட தலைவர்களே போதுமானவர்கள், விருப்பத்திற்குறியவர்கள், கொண்டாட்டத்திற்குறியவர்கள். கருணாநிதி முதல் திருமாவளவன் வரை. ஆயிரம் ஆண்டுகளாக வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒருவர், தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டு, பூர்ஷ்வாத்தனமாக பிறந்தநாள் கொண்டாடிக் கொள்வது அருவருப்பான ஒன்றா இல்லையா?
முதலாளித்துவக் கட்சிகளின் பல தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் உட்பட, நான்கு சுவற்றுக்குள் நயத்தக்கதாக செய்து கொள்ளும் இம்மன விருப்பத்தை நடுத்தெருவில் நிகழ்த்தும் ஒரு களியாட்டமாகக் கொண்டாடி மகிழும் மன வக்கிரம்தான் தலித் உளவியலா? இதிலும் கருணாநிதி பாணிதான்.
தோற்றுவாய், வளர்சிதை மாற்றம் என்பன ஒரு விதையைப் போல மனிதனுக்கும் ஒரு இயக்கத்திற்கும் கூடப் பொருந்தும். திருமாவளவனின் தோற்றுவாய் திராவிட இயக்கம்(தி.மு.க மாணவரணி) வளர்ச்சி தலித் பேந்தர் ஆப் இந்தியா. சரி சிதை(வு) மாற்றம் எது? அது தான் விடுதலை சிறுத்தைகள். உண்ட வீட்டிற்கு இரண்டகம் என்பது போல, தன்னைக் கண்டறிந்து வளர்த்த DPI இயக்கத்தை மண்மூடச் செய்த, தன்னை ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் அடையாளப்படுத்திய DPI இயக்கத்தின் தலைவரான மலைச்சாமியை ஆவணமின்றி அழித்துவிட வேண்டுமென சூது - வஞ்சகம் செய்து, விடுதலைப் போராளியாகவே பிறந்தது போன்ற பாவனையுடன் வலம் வரும் திருமாவளவனின் சிதை(வு) மாற்றம் அரசியல் நேர்மையா? அல்லது ஆதிதிராவிட மக்களின் விடுதலைக்கான பாதையா? DPI இயக்கத்திற்கு திருமாவளவன் பொறுப்பேற்றுக் கொண்ட காலத்தில் சாதிரீதியான நட்பாக அறிமுகமாகி, நாளடைவில் நெருங்கி வந்து, பிற்காலத்தில் அவரது அந்தரங்க ஆலோசகராகி, இன்றைய தேதியில் அவரை வழிநடத்தும் அல்லது வழிகாட்டும் அறிவுஜீவியான ரவிக்குமார் தான் இந்த சிதை(வு) மாற்றத்தின் மூலகர்த்தா.
இலக்கியம், திரைப்படம், ஊடகங்கள் போன்றவற்றில் வணிகத் தன்மையுடன் எழுதுபவர்களுக்கு இங்கு வாழ்க்கை பிரச்சனை இல்லை. உத்தரவாதமான ஊதியம் தரும் ஒருவேலையை வைத்துக் கொண்டு எழுத்தாளராக இருப்பதிலும் பிரச்சனையில்லை. எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கு வாழ்வது தடுமாற்றமே. அதிலும் தீவிர அரசியல் தன்மையுடன் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிராக எழுதுவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலத்தான். வங்கியில் உத்தரவாதமான ஒரு வேலையில் இருந்து கொண்டு, நிலவும் சமூக, அரசியல் சூழலுக்கு எதிராக எழுதுபவராக தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமானவர்தான் ரவிக்குமார். சொந்த வாழ்க்கைக்கு ஊறுநேராமல் பார்த்துக் கொண்டு, தன் எழுத்தைக் கையாண்டு வந்த புத்திசாலி ரவிக்குமார். 90களின் தொடக்கம் அம்பேத்கர் நூற்றாண்டு, சோவியத் வீழ்ச்சி என்ற இரு பெரும் வரலாற்று வெளியோடு இருந்தது. 90களின் பிற்பகுதியில் தலித் அரசியல் மற்றும் தலித் இயக்கங்கள் தமிழகத்தில் வீரியமாக வளர்ந்து வந்தன. அச் சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, முக்கியமான தலித் எழுத்தாளர் என்று தன் சகாக்களின் அணிந்துரையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் ரவிக்குமார்.
தலித் அரசியல் எனும் கருத்தியலை தன்வயமாக்கிக் கொண்ட தொண்டு நிறுவனங்களின் அணிச் சேர்க்கையில், உறவுப் பாலம் அமைத்தவர்கள் திருமாவளவனும் ரவிக்குமாரும். கருணாநிதியை திட்டுவது, கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பது என தன் பேச்சு அரசியல் மூலம், திராவிட இயக்கத்தின் அரசியல் பாணியையே தலித் முகத்துடன் செவ்வனே நிகழ்த்திய திருமாவளவனுக்கு, கருத்தியல் தீனிபோடும் தோழனாக முகம்காட்டிக் கொள்ளாமல் இருந்தவர் ரவிக்குமார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல, விடுதலை சிறுத்தைகள் என சொறிந்து கொண்டது திருமாவளவனின் சொந்த சுகமாக இருக்கலாம். கருணாநிதியைத் திட்டுவதை திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனமாக மடை மாற்றியவர் ரவிக்குமார். திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டுமெனில், பெரியாரை எதிர்க்க வேண்டுமென்று, இன்று தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் பலருக்கும் துணிவு வரக் காரணமானவர் ரவிக்குமார். ஆதிதிராவிட மக்களிடத்தில் அம்பேத்கரை 'சற்று தள்ளி இரும்' என்ற அணுகுமுறையோடு அயோத்திதாசப் பண்டிதரை நிறுத்தியவர் ரவிக்குமார். மட்டுமல்லாமல், பெரியாரை விமர்சித்து தொடர்ந்து எழுதுவதற்கு ஆதிதிராவிடர் குட்டி எழுத்தாளர்களை உருவாக்கி, அவர்களை வழிநடத்தியும் வருபவர் இவர்.
இந்தியா முழுவதும் இன்று இந்துத்துவ எதிர்ப்பை தீவிரமாகக் கையாளும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பலரும் உயிரச்சத்தோடு இயங்கிக் கொண்டிருக்க, எச்.ராஐா என்ற துக்கடா அரசியல்வாதியின் மிரட்டலுக்குப் பயந்து தங்களுக்கும் பாதுகாப்பு வழக்க
வேண்டுமென பாவனை செய்து வருபவர்கள் திருமாவளவனும் ரவிக்குமாரும். இவர்களது சனாதன எதிர்ப்பும் ஒரு பாவனையே என்பதை அறிந்தவர்கள் இந்துத்துவவாதிகள். வட்டார சாதி அரசியல்வாதியான ராமதாசையும் காடுவெட்டி குருவையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாதவர்கள், ஈராயிரம் ஆண்டுகால பார்ப்பனியத்தை வாய்ப்பந்தல் மூலம் வீழ்த்தி விடுவார்களா? ஆனால் இந்த பாவனையை ஆதிதிராவிட சமூகம் கொண்டாடி மகிழ்கிறது. சிறுபான்மை சமூகங்களோ 'ஆட்டத்திற்கு இன்னொரு கை' என்பது போல கைகோர்த்து ரசித்துக் கொள்கிறது. இவர்களின் பாவனை விளையாட்டை ராமாயண- மகாபாரதக் கதைகளின் மூலம் மட்டுமே வீழ்த்தி விடுவார்கள் பார்ப்பனர்கள். இவர்களின் பேச்சு அரசியலுக்கு எதிராக அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு அவ்வளவு வலிமையானது. அலங்காரமானது. ஆளைக் கொல்லும் அம்புகளைத் தம் அம்பராவில் கொண்டது. ஆனால் பேச்சு அரசியலுக்கு கை தட்டும் கூட்டமோ, மாநாடு -பேரணி என அவ்வப்போது கூடிக் கலைகிறது.
சனாதன சாகாக்கள் பிரதிபலன் பாராது உழைக்கிறார்கள். கொண்ட கொள்கைக்காக வாழ்கிறார்கள். தன் நலன் பெரிதில்லை. ஆனால் எதிர்க்கும் பாவனை அணியிலோ, அனைவரும் தன் நலனுக்காகவே வாழும் அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள், பதவி- பணம்- சிற்றின்பம் என அலைபவர்கள். சில ஆயிரங்களில் மாத ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த திருமாவளவனும் ரவிக்குமாரும் இன்று கோடீஸ்வரர்கள். ஆதிதிராவிட சமூகத்தின் விருப்பங்களை - கனவுகளை தம் நலனுக்கானவைகளாக மாற்றிக் கொண்டவர்கள். நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதைப் போல, சிறுத்தை தொண்டர்களும் இந்த பாவனை அரசியலில் பிழைப்பு நடத்த வழியிருப்பதால், அவரவர் தகுதிக்கேற்ப மன உவகை கொள்கின்றனர். இவர்களின் பித்தலாட்ட அரசியலில் மனப் புழுக்கம் கொள்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர் சிறந்த அறிவுஜீவிகள் கூட. தங்கள் இருப்பை- பிழைப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கு, அவ்வப்போது சிறுத்தைகள் கையாளும் தந்திரம் தான் வன்னியர் -பா.ம.க எதிர்ப்பு பாவனை அரசியல்.
40 ஆண்டுகால பொது வாழ்க்கை வடிவேல் இராவணனுக்கு இருந்தாலும், இரவிக்குமாருக்கு இருக்கும் ஊடக வெளிச்சமோ செல்வாக்கோ இன்று வரை இல்லை. தி.மு.க தலைமையோடு தொடர்ந்து இணக்கம் பாராட்டியும், எழுத்து மற்றும் ஊடக வெளியில் நன்கு அறிமுகமாகி ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தேவையான அடையாளங்களைப் பெற்றிருப்பவர் ரவிக்குமார். போதாக்குறைக்கு உதயசூரியன் சின்னத்தில் வேறு போட்டியிடுகிறார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையே மேலோங்கியுள்ளது. திமுக கூட்டணியே இங்கு வலுவாக உள்ளது. இத்துணை இருந்தும் வடிவேல் இராவணனை தனிப்பட்ட வகையில் விமர்சித்து வீழ்த்திவிட முனைப்பு காட்டுகின்றனர் விடுதலை சிறுத்தைகள். அதற்கு முதன்மைக் காரணம், அவர் வன்னியர்களை முதன்மைபடுத்தும் பா.ம.க.வின் வேட்பாளர் என்பதை விட, அவர் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதேயாகும். தலித் அரசியல் என்ற வளையத்திலிருந்து பெரும்பாலும் விலகியே செயல்பட்டு வந்த பள்ளர் சமூக இயக்கங்களை, சாதி ரீதியாக அரசியல் செய்கிறார்கள் என்று பெரும்பாலான விமர்சகர்கள் பேசிவந்தனர். ஆனால் தலித் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, உள்ளுக்குள் ஆதிதிராவிடர் என்ற தம் சொந்த சாதி அரசியலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகளை மட்டும், ஒரு முற்போக்கு இயக்கமாகவே பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் ஆராதிக்கின்றனர். பட்டியல் சமூகங்களில் இன்னொரு பெரிய சமூகத்தினரான அருந்ததியருக்குக் கூட, விடுதலை சிறுத்தைகளில் எந்தப் பங்கும் தருவதில்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் அருந்ததியர்கள் தனித்தே செயல்படுகின்றனர். அப்படியிருக்க, விடுதலை சிறுத்தைகளின் தலித் முகம் என்பது போலியாகக் கட்டமைக்கப்பட்டதுதானே.
பிற சமூகங்களில் ஒரு சில தனி நபர்களை முன்னிறுத்திக் கொண்டு, அனைவருக்குமான பொதுக்கட்சி என்று விடுதலை சிறுத்தைகள் காட்ட முனைந்தாலும், அந்த இடத்தை அவர்களால் இன்றுவரை அடைய முடியவில்லை. ஆனாலும் அனைவரிடத்திலும் காரியமாற்றத் தெரிந்த கட்சி என்று பெயர் வாங்கியிருக்கின்றனர். தனது சமரசவாதத்திற்குத் திருமாவளவன் சூட்டியிருக்கும் தமிழ்ப்பெயர் உத்தி. இந்த உத்திகளை தன்னைப் போலவே சாதுர்யமாக விளக்கிப்பேச, வாய்ச்சொல் வித்தைக்கார்கள் சிலரை வளர்த்து விட்டிருக்கிறார். அவர்களில் ஒருவர் ஆளூர் ஷாநவாஸ். திருமாவளவனுக்காக அவரது குரலிலும் தனக்காக இஸ்லாமியர் குரலிலும் ஒரு சேரப் பேசி காரியமாற்றும் சிறுத்தைகளின் ஊடக முகம் இவர். ஆண்டுதோறும் ரமலான் பண்டிகை விருந்து வைத்து, ஊடக நட்புகளை பலப்படுத்தி வைத்திருப்பவர். இவர்களைப் போன்றவர்களைத் தான் ஊடகங்களுக்கும் பிடிக்கும் போலிருக்கிறது. இருக்கட்டும்.
சசிகலா மற்றும் அவரது கொள்ளைக்கார குடும்பங்களின் வீடுகள், ஜெயா டிவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. எந்த ஒரு அரசுப் பதவியிலும் இல்லாமல் அரசுப் பதவியில் இருந்த ஜெயலலிதாவைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டை கொள்ளையடித்து, இன்று சிறைவாசம் அனுபவித்து வருபவர் சசிகலா. அரசியல் ரீதியாக ஜெயா - சசி கூட்டணியை எதிர்த்து வருகிறது தி.மு.க. இவர்கள் சிறைக்குப் போவதற்கு தி.மு.க.வும் காரணம். அந்த வருமான வரித்துறை சோதனையின் போது, சசிகலா குடும்பத்தின் மீதான வருமான வரித்துறை சோதனையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் திருமாவளவன். ஜெயா தொலைக்காட்சியின் வாசலிலும் அரங்கத்திலும் திருமாவளவனின் முகமாக, இந்த வருமானவரி சோதனை பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கொக்கரித்தார் ஆரூர் ஷாநவாஸ். திரைப்படப்பாடகி சின்மயி திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய போது, பார்ப்பன சதி என்று ஊளையிட்ட ஷாநவாஸ் வைரமுத்துவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் ஒருவராக இருக்கிறார். கோவை - பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் திருமாவளவன் மீது இது போன்ற குற்றச்சாட்டை மட்டுமல்ல, புகார் மனுவையும் தந்தார். அதை முறியடிக்க வேண்டுமானால், வைரமுத்துவின் பக்கம் தானே நிற்க வேண்டும். மாநிலத்திலோ மத்தியிலோ, தங்களின் பேராசையான ஆட்சியில் பங்கு வகிப்பது என்ற கொள்கை நிறைவேறாத (இதுவரை) நிலையிலேயே, தாமும் சொத்துக்கள் சேர்த்திருப்பதை நியாயப் படுத்துவதற்காகத்தான், சசிகலா - தினகரன் கும்பலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை கொடுக்கிறார்களோ என்னவோ?
நீண்டகாலமாக டாக்டர் சேதுராமன், (சசிகலா) நடராஜன், மற்றும் முக்குலத்தோர் சாதி பெரும்புள்ளிகளோடு கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டிருக்கும் திருமாவளவனுக்கு, ஜெயா- சசி ஆட்சியில்தான் போராடும் இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதும், சாதி வன்கொடுமைகள் அதிகமாக நடந்ததும் ஒரு பொருட்டே இல்லை தான். மதச்சார்பின்மை - பா.ஜ.க எதிர்ப்பு என்ற முழக்கத்திற்குள் அனைத்து பித்தலாட்டங்களையும் மூடி மறைக்கும் விடுதலை சிறுத்தைகளை ஊடகங்கள் கொண்டாடுகின்றன. சாதி இந்து இயக்கங்கள் பலவும் நட்பு பாராட்டுகின்றன. பா.ம.க.வைத் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் பிடிக்கிறது. கட்சி அரசியல் - பதவி - அதிகாரம் - செல்வம் சேர்த்தல் என்ற சூத்திரம் தான் எல்லா கட்சிகளின் ஒரே விதி. விடுதலை சிறுத்தைகளுக்கென்று தனி வழி என ஒன்றுமல்ல. சாதி ஒழிப்பு, பெண் உரிமை, தமிழ் தேசியம் என்பதெல்லாம் இங்கு உயிரைப் பணயம் வைக்க வேண்டிய செயற்திட்டங்கள். சிறுத்தைகள் என்போர் காகிதப் புலிகள். நாசிக்கில் அச்சடிக்கப்படும் பணத்தாள்களின் விலை நிர்ணயத்திற்கு உட்பட்டவர்கள். தியாகம், துரோகம் என்பதெல்லாம் தற்புகழ்ச்சிக்கான அல்லது தூற்றுவதற்கான வார்த்தைகளேயன்றி இங்கு வேறொன்றுமல்ல.
ஆரூர் ஷாநவாஸ் போல, சிறுத்தைகளின் இன்னொரு ஊடகத்தடி வன்னிஅரசு. இவர் மதுரையிலிருந்து திருமாவளவன் சென்னைக்கு புலம்பெயர்ந்து வந்த காலம்தொட்டு உடனிருப்பவர். பல தருணங்களில் திருமாவளவனின் நிழலாக இருப்பதால், அதுவே இவரின் வளர்ச்சிக்கான மூலதனம். வெறுங்கையோடு சென்னைக்கு வந்து இன்று சொந்த வீடு, சொந்த தொழில், சொந்த வாகனங்கள், சில சொத்துக்கள் என தன்னை வளர்த்துக் கொண்டுள்ள ஜெயராஜ் என்ற வன்னிஅரசு, இன்று வரை பேருந்துகளில் பயணம் செய்து கொண்டு பூர்வீக வீட்டையும் மகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, வேறு தொழிலோ வருமானமோ இன்றி, ஒரு தொழிலாளிக்கான வாழ்வியல் பின்புலத்தோடு எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் *வடிவேல் இராவணனை*, அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே தனிப்பட்ட விமர்சன தாக்குதலை தொடுத்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க என இரு கட்சிகளிடமும் பா.ம.க தேர்தல் பேரம் நடத்தியதை பலரும் அறிவர். பாமக, அதிமுகவோடு கூட்டணியை இறுதி செய்ததற்குப் பிறகு தான், பாஜக அதில் இணைந்தது. வடிவேல் இராவணன் பாமகவின் பொதுச்செயலாளர். அவர் வன்னியரும் அல்ல. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றோர் பொறுப்பு வகித்த பாமகவின் இடத்தில் அவர் இன்று இருக்கிறார். அவர் என்றைக்கும் இந்துத்துவவாதியும் இல்லை. கடவுள் மறுப்பாளர். தமிழ் தேசிய அரசியலை ஏற்றுக் கொண்டவர். மார்க்சிய - அம்பேத்கரியவாதியும் கூட. தங்கள் சொந்த சாதியைச் சேர்ந்த தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றோர் தங்கள் எதிரிக் கட்சியான பாமக வில் நாடளுமன்ற உறுப்பினர்கள்- நடுவண் அமைச்சர்கள் என பதவி சுகம் பெற்று, வன்னியர் கட்சிக்கு சேவை செய்ததை அங்கீகரித்த விடுதலைச் சிறுத்தைகள், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, வடிவேல் இராவணனை கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். தலித் எழில்மலையும் பொன்னுசாமியும் பாமகவை பயன்படுத்தி, கோடிக்கணக்கில் பொருளீட்டி, தன்னல வாழ்க்கையில் தங்களை மேம்படுத்திக் கொண்டு, பிழைத்தது போதுமென்ற நிலையில் பாமகவிலிருந்து வெளியேறியவர்கள். தலித் எழில்மலை மத்திய அமைச்சராக இருந்து சேர்த்த செல்வத்தை சீதனமாகப் பெற்றுக் கொண்டு, அவரது மகள் எழில்கரோலின் இன்று விடுதலைச் சிறுத்தையில் சாதிப்பாசத்தோடு அங்கம் வகிக்கிறார். இவர்களின் பிழைப்புவாத அரசியல் சூத்திரத்திற்குப் பெயர்தான் தலித் அரசியலா..?
விடுதலைப் புலிகளின் பெயரையோ பிரபாகரன் படத்தையோ பயன்படுத்தினாலே வழக்கு, சிறை, அடக்குமுறை என்று நெருக்கடியிருந்த காலத்தில் தமிழீழ ஆதரவு அரசியலையும் பேசிக் கொண்டே அரசு, காவல் துறை, ஆளும் வர்க்கம் ஆகியவற்றோடு திரைமறைவு உறவுகளையும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். நிலப்பேரம், கட்டப்பஞ்சாயத்து, குண்டர் அரசியல் என பிழைக்கத் தெரிந்தவர்களாக இன்று விடுதலை சிறுத்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். வன்னி அரசு அதில் கைதேர்ந்த ஒருவர். விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய போராளி இயக்கம், தம் நட்பு சக்தியாக விடுதலை சிறுத்தைகளை நம்பியிருந்த ஒரு சூழலில், வன்னி அரசு போன்றவர்களை இந்த அரசு, உளவுத்துறை, அதிகார வர்க்கம் ஆகியன எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கும் என்ற சந்தேகம் இங்கு எவருக்கும் எழவில்லையா? விடுதலைப் புலிகளின் நட்பு சக்தி என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு, எல்லா ஊடகங்களிலும் தொடர்பை உருவாக்கிக் கொண்டு, காசு பார்ப்பதில் குறியாக இருக்கும் வன்னியரசால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை எவருக்குத் தெரியும்?
பிரபாகரன் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த போது, அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்தில் பழ. நெடுமாறன், வைகோ ஆகியோர் காத்திருந்தனர். கருணாநிதி அரசு காங்கிரஸ் தலைமையின் அழுத்தத்தால் தமிழீழ தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பியது. அந்த நள்ளிரவில் ஓர் உளவாளியைப் போல சென்னை விமான நிலையத்தில் நடமாடிக் கொண்டிருந்த வன்னி அரசை பழ. நெடுமாறன் அவர்கள் எச்சரித்து விரட்டி அனுப்பியதை ஊடகங்கள் ஏன் மறைத்தன? தமிழ் தேசிய இயக்கங்களில் உண்மையாக உழைத்த பல இளைஞர்களை தம் பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் பலரும் சிறைக்கு செல்ல காரணமானவர் வன்னி அரசு. தமிழ்தேசிய தீவிரவாதி என அறியப்பட்ட ராஜாராம் என்பவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர் தலைமறைவாக இருந்தவரை அவரைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் விடுதலை சிறுத்தைகள். அன்றைய நாளில் விடுதலை சிறுத்தைகளில் பொறுப்பு வகித்த, இன்று காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் பொறுப்பு வகிக்கும் செல்வப் பெருந்தகைக்கும், வன்னி அரசுக்குமே ராஜாராம் காவல் துறையில் சிக்கிய மர்மம் வெளிச்சம்.
தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழ்நாடு பிரச்சனைகளும் தமிழ்நாட்டு வெளியில் காவு கொள்ளப்படுவதற்கு விடுதலை சிறுத்தைகளின் பாவனை அரசியலும் ஒரு காரணமே. இவர்களுக்குத் தேவை தம் சொந்த வாழ்வியல் நலனே. இரட்டைமலை சீனிவாசனையும் அயோத்திதாசப் பண்டிதரையும் தம் விளம்பர அரசியலின் அடையாளங்களாக்கிக் கொண்டு, ஆதிதிராவிட மக்களின் சமூக அளவிலான எண்ணிக்கையை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிங்காரச் சென்னை என்ற பன்னாட்டு நிறுவனங்களின் "சுத்தமான தலைநகரம்" என்கிற திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் மு.க. ஸ்டாலின். அது இன்றுவரை சென்னையின் குடிசைவாழ் மக்களை பெருநகரத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்ற முத்திரையுடன் வெளியேற்றி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் இயக்கங்கள் அத்திட்டத்தை எதிர்த்து என்ன செய்ய முடிந்தது. சொல்லப்போனால், இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் இயங்கும் தொண்டு நிறுவன அரசியல் வழி வந்தவர்கள்தானே. இவர்கள் எப்படி அவர்களை எதிர்ப்பார்கள்? இங்கு போராட்ட அரசியலில் ஈடுபட்டு இழப்புகளை மட்டுமே தாங்கி வாழ்க்கை நிர்மூலமாகிப் போனவர்கள், சிறையில் வாடுபவர்கள், செத்துப் போனவர்கள் என சாதி, மதம் கடந்து உண்மையான ஒரு போராளிக் கூட்டம் (பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்) இருக்க, மிடுக்கான உடைகள், வாகன பவனி, கையிருப்பாக தேவையான பணம், வீடு, வாசல் என கட்சி நடத்தும் விடுதலை சிறுத்தைகளுக்கும் அதே போராளி முகம் என்றால் அது எப்படி? தமிழ்நாட்டில் பல இயக்கங்களுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கே அனுமதி மறுக்கப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகளுக்கோ கேட்ட மாத்திரத்திலேயே கிடைத்து விடுகிறது அனுமதி. காவல்துறையும், அதிகார வர்க்கமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆபத்தானவர்களாகக் கருதுவதில்லை. மாறாக, நல்ல மீடியேட்டர் என்பதாகத்தான் அங்கீகரித்து வளர்த்து விடுகின்றனர். இந்த மீடியேட்டர் (நடுநிலை அல்ல) அரசியலில் இருந்து கொண்டுதான், இருபக்கமும் திறம்பட சவாரி செய்து வருகின்றனர் விடுதலை சிறுத்தைகள்.
இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான மீடியேட்டர் குழுதான் கருணாநிதி அனுப்பிய ராஜபக்சே சந்திப்புக் குழு. அந்தக் குழுவின் நம்பிக்கைக்குரிய உறுப்பினர் தான் திருமாவளவன். அதிகார வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு ஆதிதிராவிடர் சமூகம், அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு மக்களின் விடுதலைக்கான தளகர்த்தர் என்று பட்டம் சூட்டி மகிழ்வதை வரலாறு நிச்சயம் புறக்கணிக்கும். 'சாதி ஒழிப்பு' என்பதெல்லாம் பெரிய வார்த்தை. ஒடுக்கப்பட்ட மக்களின் காத்திரமான ஒரு கோரிக்கையையாவது, தொடர்ந்து போராடிப் பெற்றிருக்கிறோம் என்று திருமாவளவனால் கூற முடியுமா? தான் ஒரு போதும் இந்த நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது, அதிகாரத்தை கட்டளையிடும் இடத்தில் அமர முடியாது என்று அவரே சொல்கிறார். அப்படியிருக்க எல்லாக் கட்சிகளையும் போலத்தானே அவருடையதும் ஒரு கட்சி. தேர்தல் (முதலாளித்துவ) அரசியலின் ஆதாயத்தில் தமக்கான பங்கு என்ன என்பது தானே இவர்களுடைய இலக்கு. அதற்கேன் கொள்கை, வெங்காயம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இந்த ஒப்பனை அரசியல். 'எல்லாம் ஒரு விளம்பரத்திற்காகத் தான் அண்ணே' என்பார்கள் இறுக்கிப் பிடித்தால். திராவிட இயக்க அரசியலால் தமிழ் நாட்டில் ஒரு ஆயிரம் சாதி இந்துக் குடும்பங்கள் செல்வந்தர்களாகி இருக்கின்றனர். அவற்றில் ஒரு சில ஆதிதிராவிடர் களும்.
தம் தலித் அரசியல் மூலம் ஒரு நூறு ஆதிதிராவிடர்களையாவது செல்வந்தர்களாக்கி விடலாம் என்ற இலக்கைத் தவிர, விடுதலை சிறுத்தைகளின் கொள்கை- இலக்கு ஒன்றுமில்லை. அதனால் தான் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு செல்வந்தர்களான செல்வப் பெருந்தகை, ஆ.ராசா (தி.மு.க) போன்ற தம் சாதியினரோடு நல்லுறவைப் பேணுகின்றனர். இந்த லட்சணத்தை வைத்து கொண்டு, வடிவேல் இராவணனுக்கு வாய்ப்பு தந்ததால், பா.ம.க தமிழ் தேசிய அரசியலுக்கு துரோகம் இழைத்து விட்டது என வன்னிஅரசு எழுதுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. பா.ம.க.வை சாதிக் கட்சி என்கிறார்களா, தமிழ்தேசிய கட்சி என்கிறார்களா? தமிழ் தேசிய அரசியலுக்கு இரத்தம் சிந்தி, தியாகம் செய்யக் காத்திருக்கும் கூட்டமா விடுதலை சிறுத்தைகள்? சொல்லப்போனால், முதலாளித்துவ அரசியல் பிழைப்பு வாதத்திற்கு கூட சற்றும் பொருத்தமற்றவர் வடிவேல் இராவணன்.
தாய்மொழி, தமிழீழம், பெண் உரிமை, தலித் விடுதலை, சனாதன எதிர்ப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டு, அதிகார வர்க்கத்தின் மீடியேட்டர்களாக எப்படிச் செயல்படுவது என்பதை தங்கள் குருநாதரான கலைஞர் கருணாநிதியிடம் பாடம் பயின்று, திராவிட இயக்க அரசியலின் வாலாகப் பயணிப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். திராவிட இயக்கம் தலித் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, பெரியார் தலித் மக்களுக்கு தலைவரில்லை என்று தொடர்ந்து குட்டிச் சிறுத்தைகள், குட்டி ரவிக்குமார்களை ஏவி விட்டுக் கொண்டே, 'தலைவர் கலைஞர்' என மூச்சுக்கு முன்னூறு தரம் கூவுவது சரிதான். ஏனெனில் பெரியார் ஒன்றும் செய்யவில்லை தான். கலைஞர் கருணாநிதி நன்றாகவே செய்திருக்கிறார். தலைநகரில் சொத்துக்கள், தொலைக்காட்சி சேனல், எல்லா மாவட்டங்களிலும் சொந்த வாகனங்கள், திமுக - அதிமுக எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் காவல்நிலைய கவனிப்பு, கொள்கைகள் கடந்து அரசியல் பிரமுகர்களின் தொடர்பு, முற்போக்கு இயக்கங்கள் மீதான செல்வாக்கு, அறிவுஜீவிகளின் அரவணைப்பு என அலுங்காத குலுங்காத அரசியலுக்கு வழி காட்டியவர் கலைஞர் கருணாநிதி தானே. பெரியார் கண்டு கொள்ளாமல் விட்டார். கருணாநிதி நன்கு கவனித்துக் கொண்டார். அவரைத் துதிபாடுவதில் தவறில்லை தான்.
ஒரு ஆயிரம் சாதி இந்துக் குடும்பங்களின் பணக்காரத் திமிருக்காக, ஒரு கோடி தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரம், எதிர்காலம், நம்பிக்கைகள் இன்று நடுவீதியில் கிடக்கிறதே, அது தான் எங்கள் வருத்தம். தமிழ் சமூகத்தின் மேம்போக்கான அரசியல் பார்வை, இலவச மோகம், சாதி அபிமானம், சினிமா மற்றும் விளம்பர மாய்மாலம் எல்லாம் மாறாத வரை, இங்கு எதுவும் மாறப்போவதில்லை. அதுவரை விடுதலை சிறுத்தைகளின் மீடியேட்டர் தொழிலுக்கும் பங்கம் நேரப் போவதில்லை. அதிகார வர்க்கத்துடன் அணுசரனையாக இருந்து பிழைத்துக் கிடக்கட்டும். அடுத்தவனைப் பேசும் முன் தங்கள் புறத்தைக் கழுவிக் கொள்ளட்டும். காலம் பதில் சொல்லும். *ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்களுக்கு புரியும் வரை, அன்றே கொல்ல அரசனும் இல்லை, நின்று கொல்ல தெய்வமும் இல்லை. இனி வேறு சொற்களும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக