ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

கடமையைச் செய்த பெண் தாசில்தார் சம்பூர்ணத்தை
சஸ்பெண்ட் செய்தது நியாயம் அல்ல!
மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்
தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிப்போம்!
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
ஒன்றுமே இல்லாத விஷயத்தைப் பெரிதாக்கி
ஒரு அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார்
மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன். இவரின்
புகாரின் பேரிலும் இதைத்தொடர்ந்து இவரின் கட்சி
ஆட்கள் நடத்திய வெறியாட்டத்தின் விளைவாகவும்,
தம் கடமையைச் செய்த ஒரு அரசு ஊழியர் சஸ்பெண்ட்
செய்யப் பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 18 ஏப்ரல் 2091 தேதியன்று
நடந்து முடிந்தது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியின்
வாக்கு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில்
கட்டுக்காவல் மிகுந்த அறைகளில் (strong rooms) வைக்கப்
பட்டுள்ளன.

தாசில்தாரும் பெண் தேர்தல் அதிகாரிகளில்
ஒருவருமான சம்பூர்ணம், வாக்கு எந்திரங்கள்
வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியின்
மூன்றாம் தளத்தில் உள்ள பொருள்வைப்பறைக்குச்
(store room) சென்றுள்ளார். சென்ற நாள்: ஏப்ரல் 20, 2091
மதியம் 3 மணி. (பார்க்க: தினமணி மதுரை 21.04.2019 பக்-4).

திருமதி சம்பூர்ணம் பாதுகாக்கப்பட்ட அறைக்கு
(strong room) செல்லவில்லை. சாமான்கள் வைக்கும்
அறைக்குச் சென்றுள்ளார். இதற்கும் ஸ்டிராங் ரூமுக்கும்
எவ்விதத் தொடர்பும் இல்லை. அது வேறுபுறம் உள்ளது.
அவர் இரவு நேரத்தில் செல்லவில்லை; பகலில் மதியம்
மூன்று மணிக்குச் சென்றுள்ளார்.

தேர்தல் அலுவலர்களில் ஒருவர் என்ற முறையில்
தமது கடமையைச் செய்யும் பொருட்டு (in the interest of service)
அவர் அந்த மூன்றாம் தளத்துக்குச் சென்றுள்ளார். இதில்
எந்தத் தவறும் இல்லை. எந்த விதிமீறலும் இல்லை.

மேலதிகாரியிடம் அனுமதி வாங்கினாரா என்ற கேள்வி
இங்கு பொருளற்றது. தனது கடமையைச் செய்யும்
பொருட்டு உரிய இடங்களுக்குச் செல்வது அவரின்
கடமை ஆகும். இதற்கெல்லாம் விசேஷ அனுமதி எதுவும்
தேவையில்லை. ஒரு ஸ்டோர் ரூமுக்குச் செல்வதற்கு
ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (Gazatted Officer) வேறு
எவரிடமும் அனுமதி பெற வேண்டும் என்று எந்தச்
சட்டமும் இல்லை.

மதுரை மருத்துவக் கல்லூரி என்பது அணுஉலை
(nuclear power plant) அல்ல. அணுஉலைக்குள் மட்டுமே
ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குச் செல்ல
Safety Enginnerன் அனுமதி வேண்டும்.

எனவே தாசில்தார் திருமதி சம்பூர்ணம் எந்த விதியையும்
மீறவில்லை. அரசியல்வாதிகள் போட்ட அர்த்தமற்ற
கூச்சலால் இன்று திருமதி சம்பூர்ணம் சஸ்பெண்ட்
செய்யப் பட்டுள்ளார்.

சஸ்பென்ஷனைத் தொடர்ந்து அவருக்கு குற்றப் பத்திரிகை
(charge sheet) வழங்கப்படும். அடுத்து உள்ளக விசாரணை
(domestic inquiry, departmental inquiry) நடைபெறும். இதெல்லாம்
அநேகமாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,
இயல்பு நிலை மீண்ட பிறகு நடைபெறும்.

திருமதி சம்பூர்ணம் அவர்கள் விரும்பினால், அவருக்காக
உள்ளக விசாரணையில் ஆஜராகி வாதிட விரும்புகிறேன்.
மத்திய அரசுப் பணியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாகப்
பணியாற்றி, ஒரு தொழிற்சங்கத் தலைவராக, ஆயிரக்
கணக்கிலான உள்ளக விசாரணைகளில் பாதிக்கப்பட்ட
தொழிலாளி சார்பாக வாதாடி வெற்றி பெற்றவன் நான்.

இதுவரை உள்ளக விசாரணைகளில் எந்த வழக்கிலும்
நான் தோற்றது கிடையாது. நான் ஏதாவது ஒரு
வழக்கில் தோற்கிறேன் என்றால், அன்று மணிக்கு
1 லட்சம் கிமீ வேகத்தில் (orbital velocity) சுற்றுகிற பூமியானது
சுற்றுவதை நிறுத்தி விடும்.

உள்ளக விசாரணையில் என்னை அமர்த்திக் கொள்வது
திருமதி சம்பூர்ணம் அவர்களின் விருப்பத்தைப்
பொறுத்தது. அவரை நானும் என்னை அவரும்
அறிந்ததில்லை. அவர் என்னை உள்ளக விசாரணையில்
அமர்த்திக் கொண்டால், அவரைக் குற்றமற்றவர் என்று
நிரூபித்து, வழக்கில் இருந்து அவரை விடுவிக்க
என்னால் இயலும்.

திருமதி சம்பூர்ணம் அவர்கள் அவருக்காக வாதாட
என்னை அமர்த்தினால், வழக்கம் போல, எனக்கு அவர்
TA, DA கொடுத்தால் போதும். வழக்கு நடத்துவதற்கான
கட்டணம் எனக்கு அளிக்கத் தேவையில்லை.   

திரு வெங்கடேசன் அவர்களே,
ஸ்டிராங் ரூமில் உள்ள வாக்கு எந்திரங்களை கடவுளே
நினைத்தாலும் கூட ஒன்றும் செய்ய முடியாது. மருண்டவன்
கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல,
ஒன்றுமே இல்லாத விஷயத்தைப் பெரிது படுத்தி
ஒரு தொழிலாளியை வன்மத்துடன் பழிவாங்கி
உள்ளீர்கள். முதல் சுற்றில் நீங்கள் ஜெயித்திருக்கலாம்.

ஆனால் பாட்டாளி வர்க்கமாகிய நாங்கள் சும்மா விட
மாட்டோம். எங்களுக்கு நீங்கள் பதில் சொல்லியாக
வேண்டும்.

தொழிலாளர் நலன் காக்க
எண்ணற்ற போராட்டத்தில்
ஆயிரமாயிரம் தோழர்கள்
அடிபட்டார்கள் உதை பட்டார்கள்!

சிறைப்பட்ட தோழர்களே,
ரத்தம் சிந்திய தோழர்களே
இன்னுயிர் நீத்த தோழர்களே,
உங்கள் நாமம் ஜிந்தாபாத்!

கோடிக்கால் பூதமடா-- தொழிலாளி
கோபத்தின் ரூபமடா!
************************************************ 
பின்குறிப்பு: உரிமையுடன் பல தோழர்களின்
அனுமதியைப் பெறாமல், அவர்களை இப்பதிவில்
கோத்துள்ளேன் (tagged). அவர்கள் என்னை மன்னிக்கவும்.
----------------------------------------------------------------------------------



பாதிக்கப்பட்ட பெண்மணிக்காக எழுந்த
முதல் குரல் இதுதான்.
இது மட்டும்தான்.

EVMகள் பூட்டப்பட்ட அறைக்குள் சீலிடப்பட்டு
பாதுகாப்புடன் உள்ளதை எல்லா டிவியம் காண்பித்தன.
பெண் அதிகாரி சென்றது வேறு ஒரு அறைக்கு.
CCTV காட்சிகளை அனைத்தும் தேர்தல் அதிகாரிகளால்
வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களுக்கும் அவர்
கூட்டி வந்த ஆட்களுக்கும் காட்டப்பட்டன. எந்தப்
பிரச்சினையும் அந்தப் பெண் அதிகாரியால் இல்லை.
வெங்கடேசன் வேண்டுமென்றே பிரச்சாரம் செய்கிறார்.

பாதுகாக்கப்பட்ட பகுதியில் பல காலம் வேலை
செய்தவன் நான். ஸ்டிராங் ரூம் மட்டுமே
பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு யாரும் செல்லவில்லை.
அந்த அறையின் பக்கம் கூட யாரும் செல்லவில்லை.
வெறுப்புறம் உள்ள ஸ்டோர் ரூமுக்கு பனியின் காரணமாச்
சென்றுள்ளார் அந்த அதிகாரி.

ஸ்டிராங் ரூம் அப்படியே பூட்டப்பட்டு சீலிடப்பட்டு
பாதுகாப்பாக உள்ளது. இது அனைத்தையும்
CCTV காட்சிகள் காட்டுகின்றன. இது எல்லாவற்றையும்
வெங்கடேசன் அவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள்
காட்டினார்கள்.


இங்கு யாருக்கும் பதற்றம் இல்லை. பதற்றம் எல்லாம்
ஊழல் புரிய வாய்ப்புக் கிடைக்காமல் போய் விடுமோ
என்று பதறுகிற அரசியல்வாதிகளுக்குத்தான்.

உழைத்துச் சாப்பிடுபவர்கள் பதற்றம் கொள்வதில்லை.


CCTV காட்சிகள் அந்தப் பெண் அதிகாரி மீது
எந்தக் குற்றமும் இல்லை என்று தெளிவாகக்
காட்டுகின்றன. இதன் பிறகும் திரு வெங்கடேசன்
பிடிவாதம் பிடித்ததால் பெண் அதிகாரியை
சஸ்பெண்ட் செய்ய நேரிட்டது.


ஆவணக் காப்பகம் எதுவும் அந்த மூன்றாம் தளத்தில்
இல்லை. அது மருத்துவக் கல்லூரியே தவிர
கலெக்டர் அலுவலகம் அல்ல. பெண் அதிகாரி சென்றது
ஸ்டோர் ரூமுக்கு. அவர் அனுமதி பெறாமல் சென்றார் என்று 
அவரின் மேலதிகாரி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?
இல்லை. நாமாக கற்பனை செய்ய வேண்டாம்.

அவர் ஒரு தாசில்தார். அவர் ஒரு கெசட்டட் அதிகாரி.
அவருக்கென்று DISCRETIONARY POWERS உண்டு.
அவர் அரசு ஊழியர் என்பதால், அவர் தரப்பு நியாயத்தை
அவர் பொதுவெளியில் பேச இயலாது. வெங்கடேசன்
என்ன கூறுகிறாரோ அதை மட்டும் வைத்துக் கொண்டு
நாம் வீண் பழி சுமத்தக் கூடாது.


இங்கு அரசு என்பதை விட, தேர்தல் ஆணையம்
என்றுதான் கூற வேண்டும். வெங்கடேசன் மட்டுமல்ல,
அவரின் கூட்டணித் தலைவர் மு க ஸ்டாலின் அல்லவா?
எனவே தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கை
எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில்,
பெண் அதிகாரி பலிகடா ஆக்கப் பட்டுள்ளார். 

திரு வெங்கடேசனுக்கு உரிமை உண்டு. அதை யாரால்
மறுக்க இயலும்? நள்ளிரவில் கலெக்டரைச் சந்திக்க
விரும்பி னார் வெங்கடேசன். அதன்படி கலெக்டர்
அவருக்கு இன்டெர்வியூ வழங்கினார்.

CCTV காட்சிகளை பார்க்க வேண்டும் என்றார்
வெங்கடேசன். எல்லாம் காட்டப்பட்டது. அந்தப்
பெண் அதிகாரி ஸ்டிராங் ரூம் இருந்த பக்கமே
போகவில்லை என்பது CCTV காட்சியில் உறுதி
செய்யப்பட்டது. இதற்குப்பிறகும் திரு வெங்கடேசன்
பிரச்சினை செய்த காரணத்தால், அந்தப் பெண்
அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டிய அவசியம்
ஏற்பட்டது.

இது மோசமான தொழிலாளி விரோதப் போக்கு.
ஒரு அரசியல்வாதி நினைத்தால், ஒரு அதிகாரியை
சஸ்பெண்ட் செய்ய முடியும் என்று காட்டி இருக்கிறார்
வெங்கடேசன்.

எங்களுக்கும்காலம் வரும் மகளே. 


தேர்தல் முடிவுக்குப்பின் உள்ளக விசாரணையில்
உண்மை தெரிய வரும். அதுவரை பொறுத்திருக்கவும்.



CCTV காட்சிகள் எந்த் தவறும் நடக்கவில்லை என்பதைத்
தெளிவாக்க காட்டிய பிறகும் திரு வெங்கடேசன்
சமாதானம் ஆகவில்லை.

தேர்தல் ஆணையத்தால். ஏதேனும் ஒரு நடவடிக்கை
எடுக்காமல் இருக்க முடியாது என்ற நிர்ப்பந்தத்தை
திரு வெங்கடேசன் ஏற்படுத்தி இருந்தார். எனவே தேர்தல்
ஆணையம் பெண் தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய
நேரிட்டது.

அரசியல்வாதிகளின் தற்குறித்தனத்துக்கும்
ஆணவத்துக்கும் திமிருக்கும் ரவுடித்தனத்துக்கும்
பெண் தாசில்தார் பலியாகி உள்ளார்.  
 .

பாதிக்கப்பட்ட பெண்மணி ஓர் அரசு ஊழியர்.
அவரால் ஊடகங்களுக்கு பேட்டி தர இயலாது.
அவர் தரப்பு நியாயத்தை அவரால் பொதுவெளியில்
சொல்ல இயலாது. முகநூலில் எழுத இயலாது.

அவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமலே
ஒவ்வொருவரும் கற்பனைக் குதிரையைத்
தட்டி விட்டுக் கொண்டிருக்கலாம்.

அவர் தமது நிலையை உள்ளக விசாரணை
நடைபெறும்போதுதான் கூற முடியும்.
அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

one sided informationஐ வைத்துக்கொண்டு முடிவுக்கு
வருவது இமாலயத் தவறு.

இதுநாள் வரை, பாதிக்கப்பட்ட பெண்மணிக்காக
எழுந்த ஒரே ஒரு குரல்தான் என்னுடைய குரல்
மட்டும்தான். 



தமிழ் இலக்கணத்தில் இல்பொருள் உவமையணி
என்று ஒன்று உண்டு. இல்லாத பொருளை உவமையாகக்
கூறுவது.

இதெல்லாம் உங்களின் அறிவின் வரம்புக்கு
உட்பட்டதல்ல. எமது பதிவுகள் குறைந்தபட்சம்
IQ = 110 உள்ளவர்களுக்காக எழுதப் படுபவை.
இதை ஆயிரம் முறை கூறியுள்ளேன்.

எனவே தங்களைப் போன்றவர்களால் இதைச் சரியாகப்
புரிந்து கொள்ள இயலாது. பிறழ்புரிதலுக்கு
இலக்காகி விடுகிறீர்கள்.  
 


அருள்கூர்ந்து இத்தகைய முயற்சிகளைக்
கைவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  

ஒரு தாசில்தாருக்கு பொதுவெளியில் கருத்துக்கூற
உரிமை கிடையாது. கருத்துக் கூறினால்
அதற்காகவே சஸ்பெண்ட் செய்யப் படுவார்.

கரூர் கலெக்டருக்கு உரிமை உண்டு. தாசில்தார்
மட்டத்தில் அந்த உரிமை கிடையாது. ஒரு அரசு
நிர்வாகத்தில் எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு
பேச்சுரிமையோ கருத்துரிமையோ கிடையாது.
அரசு நடைமுறை குறித்து அருள்கூர்ந்து புரிந்து
கொள்ளவும்.


அதிகார வர்க்கம்: இலக்கணம் என்ன?
---------------------------------------------------------
தலையாரி, பியூன் ஆகியவர்களை அதிகார
வர்க்கமாகக் கருத இயலாது. அவர்களுக்கு
நிச்சயமாகச் சில அதிகாரங்கள் உண்டுதான்.
அதற்காக அவர்கள் அதிகார வர்க்கம் ஆகி விட
மாட்டார்கள்.

அதிகார வர்க்கம் (bureaucratic class) என்பதை மார்க்சியம்
தெளிவாக வரையறுக்கிறது. முதலாளித்துவமும்
கராறாக வரையறுக்கிறது.

தமிழக  அரசைப் பொறுத்து அதிகார வர்க்கம் என்பது
சப் கலெக்டரில் இருந்து தொடங்குகிறது. அதாவது
IAS படித்த ஒருவருக்கு first appointment என்ன? தாசில்தார்
அல்ல; சப் கலெக்டரே. ஆக சப் கலக்டரில் இருந்து
அதிகார வர்க்கம் தொடங்குகிறது.

அதிகார வர்க்கம்  ஒருபோதும் பாதிப்புக்கு உள்ளாகாது.
It wont be victimised easily. ஒரு நீதிமன்றத் தீர்ப்பு மூலமாகவே
அதிகார வர்க்கத்தைத் தண்டிக்க முடியும். சாதாரண
நிர்வாக நடைமுறைகள் மூலம் அதிகார  வர்க்கத்தைத்
தண்டிக்க இயலாது.

 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அதிகார வர்க்கம்
முழுவதுமாகத் தப்பித்துக் கொண்டது. ஒரு ஏமாந்த,
தாசில்தார் அந்தஸ்தில் உள்ள ஒருவரின் மீது பழி
போடப்பட்டது.

இங்கு நாம் விவாதிக்கும் தாசில்தார் அதிகார
வர்க்க வகைமைக்குள் வர மாட்டார். அவர் ஒரு
promotee officer from a lower rank who is not a bureaucrat.
அவர் அதிகார வர்க்கமாக  இருந்திருந்தால்
சஸ்பெண்ட் செய்யப் பட்டு இருக்க மாட்டார்.

பருண்மையான நிலைமைகளைப் பருண்மையாகப்
பகுப்பாய்வு செய்வதே மார்க்சியம். ஏதோ ஒரு
மேற்கோளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு,
கிடைத்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்; அது
பொருந்தாது. ஏனெனில் அது மார்க்சியம் அல்ல.
சொற்காமுகம் (phrase mongering).           

    
JAG = Junior Administrative Grade
SAG = Senior Administrative Grade
என்ற இரு பிரிவுகள் அரசு நிர்வாகத்தில் உண்டு.
அதிகார வர்க்கம் என்பது JAGயில் இருந்து தொடங்குகிறது.
JAGக்கு கீழ் உள்ள அதிகாரி அதிகார வர்க்கம் அல்ல.

டெலிகாம் துறையில் (தற்போது BSNL) ஒரு DE (Divisional Engineer)
வரை அதிகார வர்க்கமாக மாட்டார். அதற்கு அடுத்த நிலையில்
உள்ள DGMல் (Deputy General Manager) இருந்து JAG தொடங்குகிறது.
இவர்கள் அதிகார வர்க்கம் ஆவார்கள்.      
  ----------------------------------------------------------------------------
MUCH ADO ABOUT NOTHING!
------------------------------------------
1) மூச்சிரைக்க வாதம் செய்யும் அளவுக்கு இதில்
ஒன்றும் இல்லை. இதெல்லாமே Much ado about nothing!
2) வேட்பாளர்களில் நன்கு பிரபலம் ஆனவர் வெங்கடேசன்
அவர்களே. உள்ளபடியே மற்றக் கட்சிகளின் வேட்பாளர்களை
ஒரு தொலைக்காட்சியில் பார்த்தால் என்னால் அடையாளம்
காட்ட இயலாது. மேலும் TV செய்திகளில் அவரின்
ஆட்சேபத்தைத்தான் சொன்னார்கள்.
3) CCTV வைக்கப்பட்ட இடம் என்பதாலேயே அது
பாதுகாக்கப்பட்ட இடம் ஆகாது. கழிப்பறைக்கு அருகில்
கூட CCTV உள்ளது. அதனால் கழிப்பறை பாதுகாக்கப்பட்ட
இடம் ஆகி விடுமா? என்னுடைய அலுவலகப் பணியில்
பல காலமாக PROTECTED AREA பகுதியில் வேலை
பார்த்தவன் நான். ஒரு ஸ்டோர் ரூமை கட்டுக்காவல்
அதிகம் தேவைப்படும் இடமாக வரையறுப்பது
என்ன வகை லாஜிக்?
4) திருமதி சம்பூர்ணம் பத்திரிகைகளுக்கோ
ஊடகங்களுக்கோ பேட்டி கொடுக்கும் உரிமையையோ
அருகதையோ இல்லாதவர். விதிகள் (RULES) அதை
அனுமதிக்கவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியின்
பகுதிச் செயலாளர் அல்ல, பேட்டி  கொடுப்பதற்கு.
5) ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்  என்பவர்
தேசத்தின் சக்கரவர்த்தி அல்ல. அரசு ஊழியர்கள் எல்லாம்
அவர்களின் கொத்தடிமைகள் அல்ல. இது மிகவும்
மோசமான நிலப்பிரபுத்துவ மனோபாவம்.இது முற்றிலும்
மார்க்சியத்துக்கு எதிரானது.
6)  ஒரு வேட்பாளர், அதுவும் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்
தம்மைக் கூறிக் கொள்பவர் அரசு ஊழியர்களை
தொழிலாளர்களாகப் பார்க்கக் கற்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு ஊழியரையும் தன் வீட்டு வேலைக்காரன்
என்று கருதுகிற ஜமீன்தாரிய மனப்போக்கை ஏற்க இயலாது.

7) மேற்கண்ட ஸ்டோர் ரூமில் ஏதோ  ராணுவ ரகசியங்கள்
இருந்தது போலவும் அதை அந்தப் பெண் அதிகாரி
அபகரித்துக் கொண்டது போலவும் பேசுவது  பேதைமை ஆகும்.

8) உள்ளக விசாரணை (Deptl inquiry) நடக்கட்டும். அவர்
குற்றவாளி என்றால் அரசு அவரை டிஸ்மிஸ் செய்யட்டும்.
எனக்கு ஆட்சேபணை இல்லை.

9) எந்த விவரமும் தெரியாமல், ஒரு  அரசு ஊழியர் மீது
வீண் பழி சுமத்துவதற்கென்று வரிந்து கட்டிக் கொண்டு
இறங்குவது அராஜகம் ஆகும்.

10) அரசு ஊழியர்கள்  அனாதைகள் அல்ல. அரசியல்வாதிகளின்
எடுபிடிகள் அல்ல.

11) ஒருவர் குற்றவாளிதான் என்பதை சாட்சியங்கள்தான்
தீர்மானிக்க வேண்டும். ஊழலில் ஊறிப்போன அரசியல்
கட்சிகளின் ஆதரவாளர்கள் போடும் கூச்சலை வைத்துக்
கொண்டு தீர்மானிக்க முடியாது.

12) அரசியல் கட்சிகளின் யோக்கியதையும் சந்தர்ப்பவாதமும்
மக்களுக்கு நன்கு தெரியும். வாங்குகிற காசுக்குக்
கூச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம்
கட்சிகளின் எடுபிடிகளுக்கு இருக்கலாம்; மக்களுக்கு இல்லை.

13)  படிவம் 17C என்பது ராணுவ ரகசியமோ வேட்பாளரின்
ரகசியமோ அடங்கிய ஆவணம் அல்ல. அது வெறும் Account of
votes recorded பற்றிய ஆவணம்தான். இதைப் பார்த்துக்
குறிப்பு எடுத்தார் என்று சொல்லும்போதே, அவர்
அதிகாரபூர்வமான அலுவலகப் பணியைத்தான்
பார்த்தார் என்பது உறுதியாகிறது. படிவம் 17C என்று
விஷயம் தெரியாதவர்களிடம் பூச்சாண்டி காட்டலாம்.
அதன் மூலம் ஒரு வேட்பாளரின் தேர்தல் வெற்றி வாய்ப்பின்
அணுவைக் கூட எவராலும் அசைக்க முடியாது.

14) எனவே வீண் கற்பனைகள் மனப் பிரமைகள்
ஆகியவற்றைத் தூர எறிந்து விட்டு, திறந்த மனதுடன்
விஷயங்களைப் பரிசீலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
------------------------------------------------------------------------         

தனியார் கடையில் ஜெராக்ஸ் எடுத்தாரா/ அல்லது
அலுவலகத்திலேயே எடுத்தாரா என்பதெல்லாம்
சிறுபிள்ளைத் தனமானது. இதெல்லாம் பதிலளிக்க
அருகதை உடைய விஷயம் அல்ல. இதில் எந்த விதி
மீறலும் கிடையாது. BSNL SIM வைத்திருப்பவர்களைத்
தவிர மற்ற அனைவரும் கிரிமினல்கள் என்று நான்
கூறினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?



        


      





    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக