திங்கள், 1 ஏப்ரல், 2019

தோழர் கார்முகில் அவர்களின்
தேர்தல் பங்கேற்பு நிலைபாடு
மார்க்சியத்துக்கு எதிரானதே!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
நக்சல்பாரி விவசாயிகளின் ஆயுதந் தாங்கிய எழுச்சியைத்
தொடர்ந்து CPI ML கட்சி 1969ல் ஆரம்பிக்கப் பட்டது.
சாறு மஜூம்தார் கட்சியின் முதல் பொதுச்செயலாளர் ஆனார்.
1970ல் கட்சியின் வேலைத்திட்டம் உருவாக்கப் பட்டது.

இந்தியத் தேர்தல் முறையையும் தேர்தலில் பங்கேற்பதையும்
வேலைத்திட்டம் ஏற்கவில்லை. புரட்சி நடந்து முடியும்
காலம் வரையிலும் தேர்தல் புறக்கணிப்பு என்பதே
கட்சியின் கொள்கையாக இருந்தது.

ஆக நக்சல்பாரி என்றாலே தேர்தல் புறக்கணிப்பு
தேர்தல் புறக்கணிப்பு என்றாலே நக்சல்பாரி
என்று ஆனது. பின்னாளில் நக்சல்பாரி இயக்கம்
பல குழுக்களாகப் பிரிந்தபோதிலும், எல்லாக்
குழுக்களும் தேர்தல் புறக்கணிப்பையே வலியுறுத்தின.

1990களில் சோவியத்தின் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய
நாடுகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பெரிய அளவிலான
அமைப்பு மாற்றத்தை (கட்சியின் அமைப்பு மாற்றத்தை)
வினோத் மிஸ்ரா தலைமையிலான லிபரேஷன் குழு
அறிமுகப் படுத்தியது. தலைமறைவுக் கட்சி, ஆயுதப்
படக்குழு ஆகியவை கைவிடப்பட்டன. நாடாளுமன்றத்
தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டு,  தேர்தலிலும்
போட்டியிட்டது லிபரேஷன் குழு.

ஆக முதன் முதலில் சோரம் போனது லிபரேஷன் குழுவே.
தொடர்ந்து பல குழுக்கள் சோரம் போவதற்கு
வரிசையில் காத்திருக்கின்றன.

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் தற்போது அனைவரின்
கவனத்தையும் கவர்கிறார் தோழர் கார்முகில்.
அவரின் TNML கட்சி இந்த 2019 தேர்தலில் காங்கிரஸ்
திமுக கூட்டணியை ஆதரிக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரும் கார்ப்பொரேட் முதலாளியான
தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னையில் பல்லக்குத்
தூக்கும் TNML பெரம்பலூரில் பிரபல கல்வித் தந்தையும்
கோடானுகோடி கொள்ளையடித்து ரூ 100 கோடி
நீதிமன்றத்தில் டெபாசிட்  செய்து ஜாமீன் பெற்ற
பாரிவேந்தர் என்னும் பச்சமுத்துவுக்கும் பல்லக்குத்
தூக்குகிறது.

வேலூரில் துரைமுருகனுடன் தொடர்புடைய இடங்களில்
வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய வைத்திருந்த
ரூ 30 கோடி பணம் பிடிபட்டுள்ளது. ஆக இந்தத் தேர்தலின்
மீது ஆளும் வர்க்கத்தினருக்கே நம்பிக்கை இல்லாத
நிலையில், கொள்கைகளைச் சொல்லி ஒட்டு வாங்க முடியும்
என்ற நம்பிக்கையை ஆளும் வர்க்கத் தலைவர்களே
இழந்து விட்ட நிலையில், திமுக கூட்டணியை
ஆதரிப்பது என்பது முழு முட்டாள்தனமான முடிவு.
இது மார்க்சியத்துக்கு எதிரான முடிவு.

இத்தேர்தல் முறை மீதான மக்களின் பிரமையைக்
கலைப்பதற்குப் பதிலாக அதன் மீது நம்பிக்கை
ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் கடைந்தெடுத்த
பிற்போக்குத் தனமே.

இது பாராளுமன்றத்துக்குப் புறம்பான போராட்டங்களின்
காலம். மக்கள் அரசியல் கட்சிகளின் மீது முற்றிலுமாக
நம்பிக்கை இழந்து, தாங்களே அரசை எதிர்த்துப்
போராட்டம் நடத்தி வருகிற காலம் இது.

1. ஜல்லிக்கட்டுப் போராட்டம் 2. மீத்தேன் எதிர்ப்பு நெடுவாசல்
போராட்டம் 3. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்
4. மணல்கொள்ளை எதிர்ப்புப் போராட்டம் ஆகிய
பல்வேறு போராட்டங்களில் எந்தவொரு அரசியல்
கட்சியும் மக்களால் அனுமதிக்கப் படவில்லை. மக்கள்
அரசியல் கட்சிகளின் மீது மொத்தமாக நம்பிக்கை
இழந்து நிற்பதையே இப்போராட்டங்கள் சுட்டிக்
காட்டுகின்றன.

இந்த நேரத்தில் முதலாளிய அரசியல் கட்சிகள் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தேர்தலில்
பெருமுதலாளித்துவ காங்கிரஸ் திமுக கூட்டணியை 
ஆதரிப்பது என்ற தோழர் கார்முகிலின் நிலைபாடு
பிற்போக்கானது; மார்க்சியத்துக்கு எதிரானது.

1970 வேலைத்திட்டத்தில் கூறப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு
என்பது முன் எப்போதையும் விட இப்போதுதான்
கச்சிதமாகப் பொருந்துகிறது. இந்த நேரத்தில் தோழர்
கார்முகில் அவர்களின் நிலைபாடு மக்களுக்கு
எதிரானது; மார்க்சியத்துக்கு எதிரானது.

மார்க்சிய லெனினியத்தைக் கைவிட விரும்பும்
கட்சிகள் CPI அல்லது CPM கட்சியில் சேர்ந்து
விடுவதே நல்லது.
*********************************************   





      
   
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக