செவ்வாய், 18 டிசம்பர், 2018

பொருள்முதல்வாதமும் மார்க்சியமும்!
பொருள்முதல்வாதத்தின் வயது 2500.
மார்க்சியத்தின் வயது 170.
பருப்பொருள் பற்றிய வரையறை சார்ந்து...
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது.
(Science is not class biased). பூர்ஷ்வா ரயில் என்றோ
பாட்டாளி ரயில் என்றோ எதுவும் கிடையாது.

பொருள்முதல்வாதம் என்பது முற்ற முழுக்க
அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
அறிவியலைச் சார்ந்தே அது பிறந்தது.
அறிவியலைச் சார்ந்தே காலந்தோறும் அது
வளர்ந்து வந்திருக்கிறது. பொருள்முதல்வாதமானது,
அந்தந்தக் காலக் கட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
நேர் விகிதப் பொருத்தத்தில் (directly proportional)
இருந்து வந்திருக்கிறது. இனி இருக்கவும் வேண்டும்.

பொருள்முதல்வாதத்தின் வயது என்ன? எவ்வளவு
குறைத்து மதிப்பிட்டாலும் 2500 இருக்கும். சரி,
மார்க்சியத்தின் வயது என்ன? 1848ல் தோன்றிய
மார்க்சியத்திற்கு இன்று 170 வயது. மார்க்சும்
எங்கல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதிய ஆண்டு 1848. இந்நூலை எழுதுவதற்கு
முன்பே மார்க்சும் எங்கல்சும் இணைந்து வேறு
சில நூல்களை எழுதி உள்ளனர். எனினும், கம்யூனிஸ்ட்
அறிக்கை எழுதப்பட்ட 1848ஆம் ஆண்டையே
மார்க்சியத்தின் பிறந்த ஆண்டாகக் கொள்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

மார்க்சியம் பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டில்
பொருள்முதல்வாதமே தொன்மை மிக்கது. அது
மார்க்ஸ் (1818-1883) எங்கல்சுக்கு(1820-1895) முந்தியது.
மார்க்சின் ஆசான் லுத்விக் பாயர்பாக்கிற்கும்
முந்தியது. மார்க்சியத்திற்கும் பல நூற்றாண்டுகள்
முந்தியது.

லுத்விக் பாயர்பாக் (Ludwig Feuerbach 1804-1872) பல
நூல்களை எழுதியுள்ளார். அவரின் தலைசிறந்த
படைப்பாகக் (magnum opus) கருதப்படுவது 1841ல்
எழுதப்பட்ட "கிறிஸ்துவத்தின் சாரம்"
(The Essence of Christianity) என்ற நூல்.

மார்க்ஸ் ஏங்கல்சை இந்த நூல் பெரிதும் கவர்ந்தது.
அவர்களின் சிந்தனை மீது ஆற்றல் மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தியது. "இந்தப் புத்தகத்தைப்
படித்த உடனே நாங்கள் பாயர்பாக்கின் சீடர்களாகி
விட்டோம்" என்கிறார் எங்கல்ஸ்.

"இந்தப் புத்தகத்தைப் படித்தால்தான், அது தரும்
விடுதலை உணர்வை ஒருவர் அனுபவிக்க முடியும்"
என்று புகழாரம் சூட்டுகிறார் எங்கல்ஸ்.
" கிறிஸ்துவத்தின் சாரம்" உள்ளிட்ட பல்வேறு
புத்தகங்களில் பாயர்பாக் முன்வைத்த
பொருள்முதல்வாதக் கருத்துக்களே மார்க்சியப்
பொருள்முதல்வாதத்தின் மூலத் தோற்றுவாய்.

மார்க்சியம் என்பது ஒரு "த்ரீ  இன் ஒன்" (three in one)
தத்துவம். இயங்கியல் பொருள்முதல்வாதம்,
அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்
என்னும் மூன்று உள்ளடக்கக் கூறுகளைக்
கொண்டதே மார்க்சியம் என்கிறார் லெனின்.
லுத்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தை
எடுத்துக் கொண்டு மார்க்சியத்தில் சேர்த்துக்
கொண்டார் மார்க்ஸ் என்கிறார் லெனின்.

இதன் பொருள் என்ன? பாயர்பாக்கின் பொருள்முதல்
வாதத்தைச் செழுமைப் படுத்திய பிறகே
மார்க்சியத்தில் சேர்த்துக் கொண்டார் மார்க்ஸ்
என்று பொருள். செழுமைப் படுத்துதல் என்றால்
என்ன? பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தில்
உள்ள தவறுகளைக் களைந்து, போதாமையை இட்டு
நிரப்பி, தேவையான இடங்களில் திருத்தம் செய்து
(addition, deletion and modification) பயன்படுத்தினார்
மார்க்ஸ் என்று பொருள்.

இது போலவே ஹெக்கலின் (Hegel 1770-1831)
இயங்கியலையும் எடுத்துக் கொண்டு
மார்க்சியத்தின் ஒரு கூறாக ஆக்கிக் கொண்டார்
மார்க்ஸ். இது குறித்து ஸ்டாலின்,
"Everybody knows that Hegel was the father of the dialectical
method.Marx purged and improved this method"' என்று கூறுகிறார்.
(பார்க்க: ஸ்டாலின் 1906-07ல் கூறியது).

சரி, மார்க்சியத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும்
உள்ள உறவு என்ன? மார்க்சியம் என்பது ஒட்டு
மொத்த மானுட விடுதலைக்கான தத்துவம்.
பொருள்முதல்வாதம் என்பது இயற்கை, பிரபஞ்சம்
ஆகியவை பற்றிய பொருளை முதன்மையாகக்
கொண்ட, கடவுளை மறுக்கிற, அறிவியல் வழிப்பட்ட
ஓர் உலகக் கண்ணோட்டம்.

கணித மொழியில் கறாராகச் சொல்வதானால்,
மார்க்சியத்தை ஒரு கணம் (set) என்று எடுத்துக்
கொண்டால், பொருள்முதல்வாதம் அதன்
உட்கணம் (sub set) ஆகும். (If Marxism were a set of collection
of theories, materialism would be its sub set).

பொருள்முதல்வாதம் ஒட்டு மொத்த  மானுடத்துக்கும்
சொந்தமானது. எந்த ஒரு அமைப்புக்கோ,
கட்சிக்கோ, இயக்கத்துக்கோ சொந்தமானது அல்ல.
லுத்விக் பாயர்பாக் ஆத்மா என்பதை
மறுப்பதற்கு முன்னாலேயே, அதுவும் 2000
ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆத்மாவை
மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம வாதம்"
(theory of no soul) ஆத்மா இல்லை என்று கூறும்
பொருள்முதல்வாதம் ஆகும். (பார்க்க; ராகுல
சாங்கிருத்தியாயன் எழுதிய "பௌத்தத்
தத்துவ இயல்"). புத்தர் யாரினும் மூத்த
ஆரம்ப காலப் பொருள்முதல்வாதி ஆவார்.

இந்தியத் தத்துவஞான வரலாற்றைப் படித்தால்,
இந்தியப் பொருள்முதல்வாதம் மேற்கத்தியப்
பொருள்முதல்வாதத்தை விட காத்திரமாகவும்
ஆழமாகவும் இருந்தது என்பது புலப்படும்.
மேற்கத்தியப் பொருள்முதல்வாதம் இரண்டாயிரம்
ஆண்டுகள் கழித்து அறிந்து கொண்டதை
இந்தியப் பொருள்முதல்வாதம் முன்னரே
சொல்லி இருந்தது என்பதும் கருதத் தக்கது.

எனவே நமது தாய்நாட்டின் செழுமையான
தத்துவஞான மரபின் மீது கால் பதித்து நின்று
கொண்டு, பொருள் பற்றிய வரையறையை
முழுமையாக்க நியூட்டன் அறிவியல் மன்றம்
முன்வருகிறது.


மார்க்சியத்துக்கு உள்ளும் மார்க்சியத்துக்கு
வெளியிலும் உள்ள சிந்தனையாளர்களால்
காலந்தோறும் பொருள்முதல்வாதம் புதுப்பிக்கப்
பட்டு வருகிறது. பாயர்பாக் முதல் மாவோ வரை  பொருள்முதல்வாதத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச்
செய்து இருக்கிறார்கள்.மார்க்சிய மூல ஆசான்கள்
ஐவரின் மறைவுக்குப் பின்னால்,
பொருள்முதல்வாதத்தைத் தொடர்ந்து
புதுப்பிப்பதில் ஸ்டீபன் ஹாக்கிங்
போன்ற விஞ்ஞானிகளுக்கும் பங்குண்டு.
--------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக