திங்கள், 17 டிசம்பர், 2018

வேலைநிறுத்த வாபசும் சிதம்பர ரகசியமும்!
----------------------------------------------------------------------------
தொழிற்சங்க வரலாற்றில் கணக்கற்ற போராட்ட
வடிவங்கள் உண்டு. கண்டன ஆர்ப்பாட்டம்,
தர்ணா, உண்ணாநிலைப் போராட்டம், ஊர்வலம்,
பேரணி, முற்றுகைப் போராட்டம் (ghero),
வேலைநிறுத்தம் என்று பல்வேறுபட்ட போராட்ட
வடிவங்களில் நாம் அனுபவம் பெற்றுள்ளோம்.

இவற்றுள் வேலைநிறுத்தம் என்பது உச்சகட்டமான
போராட்ட வடிவம் ஆகும்.  அதிலும்  அகில இந்திய
அளவிலான காலவரம்பற்ற போராட்டம் என்பது
பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட
ஒரு வேலைநிறுத்தத்தை, ஊழியர்கள் அதிகாரிகள்
என்னும் அனைத்துத் தரப்பினரின் எஃகுப் போன்ற
ஒற்றுமையைக் கட்டி, கடந்த டிசம்பர் 3, 2018 அன்று
நடத்தத் திட்டமிட்டு இருந்தோம்.  BSNLல் உள்ள
அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான
AUAB இதற்கு அறைகூவல் விடுத்து இருந்தது.

துரதிருஷ்டவசமாக  இந்த வேலைநிறுத்தம் வாபஸ்
பெறப்பட்டு விட்டது. ,நமது கோரிக்கைகள் ஏற்கப்படவே இல்லையே, இந்நிலையில் வேலைநிறுத்தம் ஏன்
வாபஸ் பெறப்பட்டது என்று ஊழியர்கள் கவலை
அடைந்துள்ளனர்.

ஒரு வேலைநிறுத்தம் என்பது தீர்மானகரமான ஒரு
நடவடிக்கை (decisive action). இது ஒட்டுமொத்தத்
தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியை
(collective bargaining capacity) பணயம் வைத்து நடைபெறும்
ஒரு தீவிரமான நடவடிக்கை. ஒட்டு மொத்தத்
தொழிலாளர்களும் ஒன்று திரண்டு, தங்களின்
கூட்டு பேர சக்தியை  வெளிப்படுத்தினால்
மட்டுமே ஒரு வேலைநிறுத்தத்தை நடத்த
முடியும். இது விளையாட்டு அல்ல.

மேலும், மற்றப் போராட்டங்களுக்கும் வேலைநிறுத்தத்திற்கும்
ஒரு பண்புரீதியான வேறுபாடு (qualitative difference) உண்டு.
வேலைநிறுத்தம் என்பது ஒரு concerted action ஆகும்;
அதாவது கூட்டு நடவடிக்கை ஆகும். ஊழியர்கள்
அனைவரும் கூடிச் சேர்ந்து மேற்கொள்ளும்
நடவடிக்கையே வேலைநிறுத்தம் ஆகும்.
இதன் பொருள் என்னவெனில், தனி ஒருவரால்
ஒரு வேலைநிறுத்தத்தை நடத்த முடியாது என்பதாகும்.
அனைவரும் கூடிச் சேராமல் ஒரு வேலைநிறுத்தம்
நடைபெற இயலாது.

உதாரணமாக நமது மாநிலச் செயலர் 
ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது concerted action அல்ல. இது
சட்ட மொழியில் individual action ஆகும்.நமது
நடத்தை விதிகளில், தொழிலாளர்கள் கூட்டு
நடவடிக்கையில் ,ஈடுபட்டால், அதாவது concerted actionல்
ஈடுபட்டால், அது ஒழுங்கு நடவடிக்கைக்கு
ஏதுவாகும் என்று கூறப்பட்டு உள்ளது. 

அச்சுறுத்தும்  சட்டங்கள், அடக்குமுறைகள்
இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஒரு
வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட
முனைகிறார்கள். நிச்சயம் கைமேல் பலனைத் தரும்
(result oriented) ஒரு நம்பகமான போராட்ட வடிவமே
வேலைநிறுத்தம் ஆகும்.

எனவே, ஒரு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டால்,
அதற்குரிய காரணங்கள் என்ன என்று அறிந்து
கொள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் உரிமை
உண்டு. அதோடு வாபஸ்  பெறப்பட்டதன் காரணம்
பற்றி அறிந்து கொள்ளும் ஆவலும், பிரச்சினைகளின்
தீர்வு என்ன என்ற அக்கறையும் உண்டு.

உலகெங்கும் தொழிலாளர்களின் மனநிலை
இதுதான். எனவே 3  வேலைநிறுத்தம் ஏன்
வாபஸ் பெறப்பட்டது, கோரிக்கைகளின் கதி என்ன
என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் கடமை
சங்கத் தலைமைக்கும் உண்டு.

வாபஸ் பெற்றது ஏன் என்பதற்கான உண்மையான
காரணத்தைக் கூறாமல், ஊழியர்களை இருட்டில்
ஆழ்த்தி வைத்திருப்பது சங்க நலனுக்கும்
ஊழியர் நலனுக்கும் எதிரானது.

டிசம்பர் 3 வேலைநிறுத்தம்  வாபஸ் பெற்ற
பிறகு, நிலைமை மூடுமந்திரமாகவும் புகை மூட்டமாகவும்
உள்ளது. வேலைநிறுத்தம் வாபஸ் என்ற முடிவில்
ஒரு வெளிப்படைத் தன்மை (transparency) இருக்க
வேண்டுமா இல்லையா? சிதம்பர  ரகசியங்கள்
தொழிற்சங்கத்திற்குத் தேவையற்றவை.
ஊழியர்களை மதித்து நடந்தது என்ன என்பதை
உள்ளது உள்ளபடி சங்கத் தலைமை சொல்ல
வேண்டும் என்பதே ஒவ்வொரு தொழிலாளியின்
எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை சங்கத்
தலைமை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்.
****************************************************
  
    


             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக