செவ்வாய், 11 டிசம்பர், 2018

தொழிற்சங்கம் என்பது ஒரு வெகுஜன அமைப்பு.
இது கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. ஒரு கம்யூனிஸ்ட்
கட்சியில் அக்கட்சியின் வேலைத்திட்டத்தை
(party programme) ஏற்பவர்கள் மட்டுமே சேர முடியும்.
ஆனால் ஒரு தொழிற்சங்கத்தில், கூலி அடிமை
முறைக்கு இலக்காகி மூலதனத்தால் சுரண்டப்படும்
ஒவ்வொருவரும் சேர முடியும்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிற்சங்கத்திலும்
இங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின்
அனுதாபிகள் உறுப்பினர்களாக இருப்பது இயல்பே.  
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் வேறு அரசியல்
கட்சிகளின் அனுதாபிகள் இடம்பெற முடியாது.
இவ்வாறாக ஒரு  தொழிற்சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும்
கட்டமைப்பு ரீதியாக வேறுபட்ட கட்டுமானத்தைக்
கொண்டுள்ளன. எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்கான
அமைப்பு விதிகளை ஒரு தொழிற்சங்கத்துக்குப்
பொருத்த இயலாது.

கம்யூனிஸ்ட் கட்சியானது ஜனநாயக
மத்தியத்துவத்தின் (democratic centralism)  அடிப்படையில்
செயல்படும். தொழிற்சங்கமானது தொழிற்சங்க
ஜனநாயகம் (trade union democracy) என்ற கோட்பாட்டின்
அடிப்படையில் செயல்படும். இதன் பொருள் என்ன?
ஒரு தொழிற்சங்கத்தில், தலைமையும் தலைமையில்
இல்லாத பிறரும் 51:49 என்ற விகிதத்தில்
இருந்தாலும் சரி, அல்லது 90:10 என்ற விகிதத்தில்
இருந்தாலும் சரி, பெரும்பான்மையானது
சிறுபான்மையான பிறரின் கருத்துக்கு
மதிப்பளித்துத்தான் சங்கத்தை நடத்த முடியும்.

மாறாக, மாற்றுக் குரல்களை எழவிடாமல் நசுக்கும்
முயற்சிகள் ஒரு தொழிற்சங்கத்தின் குரல்வளையை
நெறிக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை.
ஏனெனில் ஒரு தொழிற்சங்கத்தை உயிரோட்டமாக
வைத்திருப்பது தொழிற்சங்க ஜனநாயகமே. அதற்கு
எவ்விதத்தில் பங்கம் நேரிட்டாலும், அது
தொழிற்சங்க இயக்கத்தைப் பலவீனப்
படுத்துவதில்தான் சென்று முடியும்.

ஒரு தொழிற்சங்கத்தின் நிலைபாடுகளை, முடிவுகளை
விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு தொழிலாளிக்கும்
உண்டு. இது கேள்விக்கு அப்பாற்பட்ட உரிமை
(indisputable right). குறிப்பாக வேலைநிறுத்தம் போன்ற
விஷயங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தன்
கருத்தை சுதந்திரமாகச் சொல்லும் உரிமை
உண்டு. ஏனெனில் ஒரு வேலைநிறுத்தம் என்பது
அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டு பேர
சக்தியின் (collective bargaining capacity) மீது நடக்கும்
போராட்டம். எனவே ஒவ்வொரு தொழிலாளியும்
ஒரு வேலைநிறுத்தத்தின் மீது சர்வ சுதந்திரமாக
தனது கருத்தைக் கூற உரிமை உண்டு.

ஒரு வேலைநிறுத்தத்தின் மீது தொழிலாளர்கள்
இயல்பாகவும்  சுதந்திரமாகவும் தங்கள்
கருத்தைக் கூற உகந்த ஒரு சூழ்நிலையை
ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஏற்படுத்த வேண்டும்.
இதுவே ஒரு தொழிற்சங்கத்தின் கடமையாகும்.
இதற்கு மாறாக ஒரு வேலைநிறுத்தம் பற்றிய
விமர்சன ரீதியான கருத்துக்களை நசுக்க
முற்படுவது தொழிற்சங்க அதிகாரத்துவப்
போக்காகும் (trade union bureaucracy).

ஐரோப்பிய நாடுகளைப் போல் அல்லாமல்,
இந்தியா மிகவும் பன்மைத்துவமுள்ள ஒரு நாடு.
இங்கு எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரே
குரலில் பேச இயலாது. ஒரே அரசியல் கட்சியைச்
சார்ந்த வெவ்வேறு தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட
பிரச்சினையின் மீது வேறுபட்ட கருத்துக்களைத்
தெரிவிப்பதை நாம் அன்றாடம் காண்கிறோம்.
இதற்கு காங்கிரஸ் கட்சி மிகச் சிறந்த உதாரணம்.
திருநாவுக்கரசரும் இளங்கோவனும் வெவ்வேறு
சுருதிகளில் பேசுவதை நாம் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம்.

ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா கட்சிகளே
தங்களின் அணிகளுக்கு கருத்து சுதந்திரத்தை
உறுதி செய்யும்போது, பலதரப்பட்ட பிரிவினரும்
இணைந்துள்ள ஒரு வெகுஜன ஸ்தாபனமாகிய
தொழிற்சங்கத்தில் கருத்து சுதந்திரம்
பரிபூரணமாக இருக்க வேண்டாமா? அதை
மறுக்க இயலுமா?

எனவே ஒரு வேலைநிறுத்தம் பற்றிய, சங்கத்
தலைமையின் அணுகுமுறை முடிவுகள் மீது
கருத்துக்கூறவும் விமர்சிக்கவும் ஒவ்வொரு
தொழிலாளிக்கும் உரிமை உண்டு. இவ்வாறு
விமர்சிப்பதால், சங்கம் பலவீனம் அடையும்
என்பதோ, இடதுசாரி ஒற்றுமை பாதிப்படையும்
என்பதோ சுத்த மாய்மாலம் ஆகும்.

ஒரு தொழிற்சங்கத்தில் விமர்சன உரிமை
இருப்பதும், அதைப் பயன்படுத்தும் ஆற்றல்
உள்ளவர்களாக அச்சங்க உறுப்பினர்களை
வளர்த்தெடுப்பதும் சங்கத் தலைமையின்
கடமைகள் ஆகும். ஏனெனில் ஒரு வெற்றிகரமான தொழிற்சங்கத்தில். தலைமைக்கும்
உறுப்பினர்களுக்கும் இடையில்
நெருக்கமான உயிரோட்டமான உறவு
(close organic contact) இருக்க வேண்டும். விமர்சன
உரிமையும் அச்சமின்றி நிகழ்வுகள் மீது
கருத்துக்  கூறுவதுமே ஒரு சங்கத்தை
உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும். இல்லையெனில்
அச்சங்கம் நடைப்பிணமாகவே இருக்கும்.
*************************************************** 



               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக