செவ்வாய், 25 டிசம்பர், 2018

தீர்மானங்கள்
-------------------------
காலங்காலமாக மத்திய மாநில அரசுகள் வேளாண்மையைப்
புறக்கணித்தே வந்துள்ளன.மிகவும் பின்தங்கிய
நிலையிலான வேளாண் உற்பத்தியை நவீனப்
படுத்தவோ உற்பத்தியைப் பெருக்கவோ விவசாயிகளின்
வாழ்க்கைத் தரத்தை மேம்மடுத்தவோ அரசுகள்
உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நரசிம்மராவ் ஆட்சியின்போது உலகமயக்
கொள்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. தொழில் துறையின்
மீதான கவனக் குவிப்பும் வேளாண்மையை அடியோடு
புறக்கணித்தலுமே இக்கொள்கைகளின் சாரமாக
அமைந்தது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது
விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும்
என்று அறிவித்தார்.

உலகமயக் கொள்கைகள் வேளாண்மையை குழிதோண்டிப்
புதைத்தன. தற்சார்பு விவசாயம் என்பது முழுவதுமாக
முடிவுக்கு வந்தது. விதைகள் உரங்கள் பூச்சி மருந்துகள்
என வேளாண் இடுபொருட்கள் அனைத்துக்கும் விவசாயிகள்  ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய
அவலம் ஏற்பட்டது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
வீரிய வித்துக்களை அறிமுகம் செய்ததன் மூலம்
இந்திய விதைச் சந்தை முற்றிலுமாக ஏகாதிபத்தியச்
சார்பு கொண்டதாக ஆனது.

விவசாயிகளின் தற்கொலை ஒவ்வொரு மாநிலத்திலும்
தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகிப் போனது.
அரசின் பாரபட்சமான கொள்கைகளோடு, மழை வெள்ளம்
புயல் சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களும்
விவசாயிகளை மீண்டெழுந்து விடாதபடி நிரந்தரமாக
முடக்கிப் போட்டு விடுகின்றன.

அதே நேரத்தில்,  பெருந்தொழில் அதிபர்களால் மிகச்
சுலபமாக பல்லாயிரம் கோடிரூபாய்களை
வங்கியில் இருந்து கடனாகப் பெற .முடிகிறது. நாட்டின்
மூலதனத் திரட்சியானது தொழிலதிபர்களுக்காகத்
திறந்து விடப்படுகிறது. கடனைத் திருப்பிக் கட்டாமல்
தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிச் செல்வது
இங்கு வாடிக்கையாகி விட்டது. அதே நேரத்தில் டிராக்டருக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டாத விவசாயிகள்
தற்கொலை செய்து கொள்வதும் இயல்பான நிகழ்வாகி
விட்டது.

விவசாயத்தையும் விவசாயிகளையும் இந்தப் பேரவலத்தில்
இருந்து மீட்டெடுப்பது ஒன்றே அரசுகளின் முன்னுரிமை
கொண்ட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசுகளின்
வேளாண்மைக் கொள்கைகள் முற்றிலும் புரட்சிகரமான
விதத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்திய
வேளாண்மையானது முற்றிலும் அரசு ஆதரவுடன்
நடத்தப்பட வேண்டும். சுருங்கக் கூறின் வேளாண்மை
அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். வங்கிகள் அரசுடைமை
ஆக்கப்பட்டது போன்று, வேளாண்மையும் அரசுடைமை
ஆக்கப்பட்டு, நாட்டின் வேளாண்மையை அரசே
மேற்கொள்வதன் மூலமே இந்திய வேளாண்மை
தற்போதைய  நெருக்கடியில் இருந்து விடுதலை பெறும்.

இதைச் செய்யத் தவறினால், விவசாயிகள் விவசாயத்தைக்
கைவிட்டு பிழைப்புத்தேடி நகரங்களுக்குச் செல்ல
நேரிடும். விவசாய நிலங்கள் தரிசாகப் போடப்பட்டு
ரியல் எஸ்டேட் தரகர்களால் கைப்பற்றப்படும். இதன்
நிகர  விளைவாக உணவுப் பஞ்சம் ஏற்படும்.

இந்நிலையில் பின்வரும் தீர்மானங்களை இந்தப் பேரவை
முன்வைக்கிறது. இதை நிறைவேற்றித் தருமாறு
இந்த அவையை இப்பேரவை கேட்டுக் கொள்கிறது.

1) மத்திய மாநில அரசுகள் வேளாண்மைத் துறையின்
மீதான ஒரவஞ்சனைப் போக்கைக் கைவிட வேண்டும்.
வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள்,
பூச்சி மருந்துகள் ஆகியவற்றை அரசே நியாய விலைக்
கடைகளில் மலிவு விலையில் (subsidised rates)  வழங்க
வேண்டும்.

2) இதை நடைமுறைப்படுத்த மிகவும் பரவலாக ஒவ்வொரு
வட்ட ஒன்றிய அளவில் வேளாண் நியாய விலைக் கடைகளை
அரசே திறக்க வேண்டும்.

3) வேளாண் விளைபொருட்களுக்கான  சந்தையில்
இடைத்தரகர்ளின் தலையீடு ஒழிக்கப்படுவதை
அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். தேவையான
நிலைமைகளில் அரசே விவசாயிகளிடம் இருந்து
நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
தங்களால் விற்பனை செய்ய முடியாத பொருட்களை
விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையங்களில்
ஒப்படைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

4) மழை வெள்ளம் புயல் சுனாமி போன்ற இயற்கைப்
பேரிடர்களின்போது, விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும்
ஏற்படும் பாதிப்பை அரசு முற்றிலுமாக தனது பாதிப்பாக
ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதிப்புகளில் இருந்து
விவசாயத்தையும் விவசாயிகளையும் விடுவிப்பது
அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

5) இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு  கீழ வெண்மணியில்
நிலப்பிரபுக்களை எதிர்த்து நடந்த வர்க்கப் போராட்டத்தில்
உயிர்நீத்த போராளிகளுக்கு இப்பேரவை அஞ்சலி செலுத்துகிறது.
அவர்களின் தியாகம் வீண்போய் விடாமல் இன்றளவும்
நடைபெறும் வர்க்கப் போராட்டங்களுக்கும் சாதிய
ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும்  
ஒரு மகத்தான உந்துவிசையாக இருக்கிறது என்பதை
இப்பேரவை அடையாளம் காண்கிறது.

6) சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும்
நிலமற்ற விவசாயக் கூலிகள் விவசாயத்தை விட்டு
வெளியேறி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை
உறுதி செய்யும் விதத்தில், அகில இந்திய அளவில்
குறைந்தபட்சத் கூலி உத்தரவாதச் சட்டங்களை இயற்ற
வேண்டும் என்று இப்பேரவை மத்திய அரசை
வலியுறுத்துகிறது.   

மேற்கூறிய புதிய முன்முயற்சிகளை நிறைவேற்றும்
விதத்தில் மத்திய அரசின் வேளாண்மைக் கொள்கை
புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அனைத்துக் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்தகைய புதிய
வேளாண்மைக் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு இந்தப் பேரவை கேட்டுக்கொள்கிறது.
**************************************





     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக