வியாழன், 23 ஜூலை, 2020

இடஒதுக்கீடு என்றால் என்ன?
இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை 1902, ஜூலை 26 ல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகுமகராஜா.
சாகு மகாராஜா இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் பார்ப்பனர்கள் மற்ற சமஸ்தான மன்னர்கள் இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தந்து தொலைத்தால் என்ன செய்வது என அஞ்சினர். சமஸ்தான மன்னர்களிடம் இடஒதுக்கீடு திட்டத்தைப் பற்றி குறைகூறினர். மன்னர்களும் பார்ப்பனர்கள் குடைச்சல் கொடுத்தால் தாங்கமுடியாதே என்றும், பார்ப்பனரல்லாதார் இடஒதுக்கீடு கேட்டு போராடத்தில் இறங்கிவிடக்கூடாதே என்றும் கவலைப்பட்டனர். எனவே எப்படியாவது சாகு மகாராஜாவை மனம்மாற்றி இடஒதுக்கீட்டை கைவிட வைக்க சிலர் விரும்பினர். சங்லி எனும் சமஸ்தான மன்னர் பட்வர்தன் தன் பார்ப்பன வழக்கறிஞர் கண்பத்ராவ் அபயங்கர் என்பரை சாகு மகாராஜாவை கன்வின்ஸ் பண்ண அனுப்பினார். அபயங்கர் கோலப்பூர் சென்று சாகு மகாராஜாவை சந்தித்து "எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) ஏன் இத்தகு அநீதியை (பிற்பட்டோர் இடஒதுக்கீடு) இழைக்கிறீர்கள்?" என்று கேட்டார். இடஒதுக்கீட்டை கைவிடக் கோரிக்கை வைத்தார். சாகு பொறுமையாக அபயங்கள் சொல்வதைக் கேட்டார். பிறகு வாருங்கள் பேசிக்கொண்டே ஒரு முக்கிய இடத்துக்குக் செல்வோம் என வழக்கறிஞரை தன் குதிரைலாயத்திற்கு அமைத்துக் சென்றார். குதிரைகளுக்கு அது தீவனம் வைக்கும் நேரம். ஒவ்வொரு குதிரையின் வாயோடு தீவனம் வைக்கப்பட்ட கூடை பிணைக்கப்பட்டிருந்தது. அது அது அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. மகாராஜா எல்லா குதிரைகளின் முகத்தில் பிணைக்கப்பட்ட தீவனக் கூடைகளை கழட்டச்சொன்னார். பணியாளர்கள் உடன் கழட்டினர். இப்போது ஒரு விரிப்பை விரித்து அதில் தீவனத்தை கொட்டக் சொன்னார். பின் ஒரே நேரத்தில் குதிரைகளை அவிழ்த்துவிடச்சொன்னார். குதிரைகள் பாய்ந்து கொண்டு விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஓடின. வலிமையான குதிரைகளும் வளர்ந்த குதிரைகளும் பாய்ந்து ஓடி விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஆரம்பித்தன. நலிவுற்ற வலிமையற்ற குதிரைகள் தீவனத்தை உண்ண முயன்றும் வலிமையான குதிரைகள் நெட்டித் தள்ளியும் பின்னங்கால்களால் உதைத்தும் வலிமையற்றவையைத் துரத்தின.சிறிது நேரத்தால் நோஞ்சான் குதிரைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு ஒதுங்கி அமைதியாக நின்று தீவனத்தையே பார்த்தவண்ணம் இருந்தன. இதை எல்லாம் பார்ப்பன வழக்கறிஞர் அபயங்கர் பார்த்தார். இப்போது அபயங்கரிடம் சாகு மகாராஜா பேசத்தொடங்கினார். திரு.அபயங்கர், என்ன செய்யலாம் ? வலிமையற்ற குதிரைகளை சுட்டுக்கொன்றுவிடலாமா? அப்படி செய்வது சரியா? அதனால்தான் நான் எவ்வொரு குதிரைக்கும் அதற்கான தீவனத்தை அது மட்டுமே உண்ணும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த ஏற்பாடு இல்லாமல் இப்போது பார்த்தோமே அது போல் தீவனத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு அனைத்து குதிரைகளுக்கும் போட்டியை உருவாக்கினால் வலிமையான குதிரைதான் ஜெயிக்கும். வலிமை இல்லாதது பட்டினி கிடக்கும். இதற்கு மாற்றாக நான் எவ்வொரு குதிரைக்கும் உரிய தீவனத்தை உத்ரவாதப்படுத்தும் ஏற்பாட்டுக்குப் பெயர்தான் இடஒதுக்கீடு. இந்த விலங்குகளுக்கான ஏற்பாட்டை நான் என் குடிமக்களுக்கு செய்கிறேன். நீங்கள் (பார்ப்பனர்கள்) மனிதர்களில் சாதியை உருவாக்கி சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் காலங்காலமாக விலங்குகளைப்போல நடத்தி வந்துள்ளீர்கள். இப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்" என்றார். அபயங்கரால் எதுவும் பேசமுடியவில்லை. மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டார்.
(சாகு மகாராஜா பற்றி நான் எழுதி வரும் சிறு நூலின் ஒரு பகுதி)
Devikapuram Siva.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக